மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

தவக்காலம் 3ஆம் ஞாயிறு
2-ஆம் ஆண்டு

இன்றைய வாசகங்கள்:-
விடுதலைப் பயண நூல் 20:1-17 | 1கொரிந்தியர் 1:22-25 | யோவான் 2:13-25

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


என்‌ தந்தையின்‌ இல்லம்


அன்பார்ந்தவர்களே!

இன்றைய நற்செய்தியில்‌ நாம்‌ கண்ட நிகழ்ச்சியின்‌ வாயிலாக இயேசு அனுப்பப்பட்டவர்‌ என்பதை நாம்‌ கண்டு கொள்ளுகிறோம்‌. அலங்கோலமாக வியாபாரக்‌ கூடம்‌ போன்று காட்சி அளித்த தன்‌ தந்தையின்‌ இல்லத்தைக்‌ கண்டதும்‌ இயேசு அங்கிருக்கும்‌ வியாபாரிகளைக்‌ கடிந்துகொண்டு, அதிகாரத்தோடு அவர்களை விரட்டுகின்றார்‌. தந்தையின்‌ இல்லமாகிய அந்த ஆலயத்தின்‌ புனிதத்தைக்‌ கெடுக்கக்‌ கூடியது எதுவாக இருந்தாலும்‌ அதைக்‌ கண்டித்தார்‌. அவரது அதிகாரத்தைப்‌ பார்த்து, நீதான்‌ அனுப்பப்பட்டவர்‌ என்றால்‌ எங்களுக்கு ஒரு அடையாளம்‌ காட்டு என்று யூதர்கள்‌ கேட்டபோது, அவர்களின்‌ வெளிவேடத்தைக்‌ கண்ட இயேசு இந்த ஆலயத்தை இடித்து விடுங்கள்‌. மூன்றே நாளில்‌ கட்டி விடுகிறேன்‌ என்று மறைமுகமாகத்‌ தான்‌ மரித்து உயிர்க்கப்‌ போவதை வெளிப்படுத்துகிறார்‌.

வியாபாரம்‌ செய்வோர்‌ மக்களை ஏமாற்றி உண்மை தெய்வத்தையும்‌, சகோதர அன்பையும்‌ மறந்ததால்தான்‌ இயேசு அவர்களை கடிந்துகொள்ளுகிறார்‌. இதே கருத்தைத்தான்‌ இன்றைய முதல்‌ வாசகம்‌ நமக்குத்‌ தருகிறது. அடிமைத்தனத்தில்‌ இருந்த இஸ்ரயேல்‌ மக்கள்‌ தங்களை மீட்டு வந்த உயிருள்ள இறைவனை விட்டு விட்டு, 10 கட்டளைகளையும்‌ கடைப்பிடிக்க மறந்து, நன்றி கெட்டவர்களாக மாறினார்கள்‌ என்பதை எடுத்துரைக்கிறது. இன்றும்‌ நம்மில்‌ பல பேர்‌ அவ்வாறே இறைவன்‌ நமக்குத்‌ “தந்த கட்டளையை மறந்து நம்‌ கடமையில்‌ தவறி விடுகிறோம்‌. இறைவன்‌ தந்த 10 கட்டளைகள்‌ ஒரே நாணயத்தின்‌ இரு பக்கங்கள்‌ போல இரண்டு கட்டளைகளில்‌ அடங்குகிறது. இந்த இரண்டு கட்டளைகளும்‌ நாணயத்தின்‌ இரு பக்கங்கள்‌ போல உள்ளன. அதாவது இறைவனை அன்பு செய்கிறேன்‌ எனக்‌ கூறிக்‌ கொண்டு தன்‌ சகோதரனை வெறுப்பவன்‌ பொய்யன்‌ (1 யோவா. 4:20). எவ்வாறு நம்மைத்‌ துன்புறுத்தியவர்களை நேசிக்க முடியும்‌? நடைமுறையில்‌ இது மிகவும்‌ கடினம்தான்‌. ஆனால்‌ இந்த சகோதர அன்பில்தான்‌ இறையன்பு மிளிர்கிறது.

நமது உள்ளம்‌ என்னும்‌ ஆலயத்தில்‌ இறைவன்‌ குடி கொள்ளத்‌ தயாராக உள்ளார்‌. இந்த தவக்காலம்‌ நம்மைத்‌ தகுந்த முறையில்‌ தயாரிக்க ஏற்ற காலம்‌. நம்‌ வானகத்‌ தந்தையை அன்பு செய்ய வேண்டுமெனில்‌ நம்‌ சகோதரர்களுக்குச்‌ சேவை செய்து அன்பு செய்ய வேண்டும்‌. எனவே நம்மைப்போல பிறரையும்‌ நேசிக்க நம்‌ வானகத்‌ தந்‌தை நம்‌ உள்ளம்‌ என்னும்‌ ஆலயத்தில்‌ நிறைவாகத்‌ தங்கிட நம்மைத்‌ தகுந்த முறையில்‌ இந்த தவக்காலத்தில்‌ தயார்‌ செய்வோமாக.

ஆண்டவர்‌ வாழும்‌ இல்லம்‌ நம்‌ உள்ளமாக இருக்கின்றபடியால்‌ நம்‌ ஒவ்வொருவருடைய உள்ளமும்‌ இறைவன்‌ வாழும்‌ ஆலயமாகும்‌. ஆண்டவர்‌ நம்‌ உள்ளத்திலே உறைகின்றபடியால்‌ நாம்‌ ஒவ்வொருவருமே ஆண்டவராகின்றோம்‌. எனவே ஆலயத்திற்கு வருகின்றவரெல்லாம்‌ ஆண்டவராகவே மாறிட முயற்சி எடுப்போம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பாவங்களின் இருப்பிடம் சுயநலம்

இயேசு - அவர் மிகவும் அன்பானவர்.
அவர் - அழுதால் அரும்புதிரும்
அண்ணாந்தால் பொன்னுதிரும்
சிரித்தால் முத்துதிரும்
வாய் திறந்தால் தேன் சிதறும்
அவர் இருக்கும் இடத்திலே
காலையிலே பூபாளம் ஒலிக்கும்
மதியத்திலே கல்யாணி ஒலிக்கும்
இரவினிலே நீலாம்பரி ஒலிக்கும்
அவர் கண்ணுக்குள் கங்கை உண்டு!
கைக்குள் காவிரி உண்டு!
இதயத்துக்குள் இமயம் உண்டு!

இப்படிப்பட்ட இயேசு இன்றைய நற்செய்தியிலே சாட்டை பின்னி. கோயிலில் வியாபாரம் செய்பவர்களை துரத்துவதைப் பார்க்கின்றோம்.
தன் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கின்றவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார் (மத் 5:22) என்றவர் இங்கே சினங்கொள்வதை, கோபப்படுவதைப் பார்க்கின்றோம். பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத் 11:28) என்ற இயேசுவை, மக்களைத் துரத்தும் இயேசுவாக இன்று சந்திக்கின்றோம்.
சினத்திலே இரண்டு வகை : பாவமான சினம், பாவமில்லாத சினம். சுயநலத்திற்காகக் கோபப்பட்டால் அது பாவமான சினம்; பிறர்நலத்திற்காகக் கோபப்பட்டால் அது பாவமில்லாத சினம். அனைத்துப் பாவங்களின் இருப்பிடமாகத் திகழ்வது சுயநலம்; அனைத்துப் புண்ணியங்களுக்குத் தாயாக விளங்குவது பிறர் நலம்.

இதோ பாவமான கோபத்திற்கு விவிலியத்திலிருந்து இரு உதாரணங்கள்:
நல்ல சமாரியர் உவமையையும் (லூக் 10:25-37) காணாமற்போன மகன் உவமையையும் (லூக் 15:11-32) நமக்குத் தந்த கருணை முகில் இயேசு இடியாக மாறி வியாபாரிகள் மடிமீது விழுவதை இங்கே காண்கின்றோம்.
கோயிலில் வியாபாரம் செய்பவர் மீது கோபப்பட்டது போல நீதிக்கும், அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும் (உரோ 14:17) எதிராகச் செயல்பட்ட சில பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர், ஏரோதியர் மீது இயேசு சினங்கொண்ட நேரங்கள் உண்டு (மாற் 3:1-6).
இந்த இடத்திலே, இயேசுவைப் போல நாமும் சினம் கொள்ளலாமா? கோபப்படலாமா? என்ற கேள்வி நம்மில் பலரது மனத்திலே எழுந்து மறையலாம்.
இந்தக் கேள்விக்கு புனித பவுலடிகளார் பதில் கூறுகின்றார். சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தெளியட்டும். அலகைக்கு இடம் கொடாதீர்கள் (எபே 4:26-27) என்கின்றார்.
காயினையும், அவன் காணிக்கையையும் கடவுள் கனிவுடன் கண்ணோக்கவில்லை. ஆகவே காயின் கடும் சினமுற்றான். கடவுள் அவனைப் பார்த்து, நீ ஏன் சினமுற்றாய்? என்று கேட்டார் (தொநூ 4:5-7). காயினின் கோபம், அவனுடைய தம்பி ஆபேல்மீது கொண்டிருந்த பொறாமையிலிருந்து பிறந்த பாவமாகும்.
காணாமற்போன மகன் உவமையில், மூத்த மகன் சினமுற்று விருந்து நடந்துகொண்டிருந்த வீட்டிற்குள் புக விருப்பமின்றி நின்றான் (லூக் 15:28). அவனது சினம், கோபம் அவனது சகோதரன்மீது அவன் கொண்டிருந்த வெறுப்பிலிருந்து பிறந்தது.
இப்படி பொறாமையிலிருந்து, வெறுப்பிலிருந்து, பாவத்திலிருந்து, சுயநலத்திலிருந்து பிறக்கும் சினத்திற்கு, கோபத்திற்கு கிறிஸ்தவ மறையில் இடமே கிடையாது.
இயேசுவிடம் நின்று நிலவிய கோபம் சுயநலத்திலிருந்து பிறந்தது அல்ல; அது பிறர் நலத்திலிருந்து பிறந்தது; அவர் அவரது தந்தையின் மீது கொண்டிருந்த மாறாத அன்பிலிருந்து பிறந்தது (யோவா 2:16).

ஆகவே பிறர் நலத்திற்காக, பிறரன்புக்காக, நீதிக்காக, அமைதிக்காக, மகிழ்ச்சிக்காக, இறையரசின் மதிப்பீடுகளுக்காக நாம் கோபப்பட வேண்டும். சினம் கொள்ள வேண்டிய நேரத்திலே நாம் சினம் கொள்ளவில்லை என்றால், நாம் கடமையில் தவறிய பாவத்தைப் புரிந்தவர்களாகிவிடுகின்றோம்.
பத்துக் கட்டளைகள் (முதல் வாசகம்) கேள்விக் குறிகளாகும் போது நாம் கோபப்படலாம்; குழந்தைக்கு வைத்திருக்கும் பாலை பூனை குடிக்க நினைத்தால் பூனையின் மீது கோபப்படலாம்; பாமரர்கள் ஏமாற்றப்பட்டால், ஏமாற்றுகிறவர்கள் மீது கோபப்படலாம்.
எப்போது சினம் கொள்ளலாம், எப்போது சினம் கொள்ளக்கூடாது என்பதை அறிந்துகொள்ள போதிய ஞானத்தை (இரண்டாம் வாசகம்) இறைவனிடம் கேட்டு மன்றாடுவோம். மேலும் அறிவோம்

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை (குறள் : 310).

பொருள் : வரம்பு கடந்த கோபம் கொள்பவர் உயிரோடு இருந்தாலும் இறந்தவராகவே கருதப்படுவார்! கோபத்தை முழுமையாக நீக்கியவர் பற்றற்ற துறவிக்கு ஒப்பாவார்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஒரு வீட்டிற்கு நான் சென்றபோது, அவ்வீட்டில் டோனி என்ற ஒரு சிறுவன் தட்டிலிருந்த உளுந்தவடைகளைத் தின்றுகொண்டிருந்தான். நான் அவனிடம், 'இதுவரை எத்தனை வடைகள் தின்றாய்?' என்று கேட்டதற்கு அவன் ஏழு என்று பதில் சொன்னான். நான் அவனிடம், 'அருள் அடையாளங்களே ஏழுதான்; நிறுத்திக்கொள்' என்று சொன்னேன், அவன், 'என்ன பாதர் பத்துக்கட்டளைகளை மறந்துவிட்டீர்களே!' என்று கேட்டபோது வீட்டிலிருந்த அனைவரும் சிரித்தனர், அச் சிறுவன் வேடிக்கையாகச் சொன்னதில் ஓர் ஆழமான உண்மை பொதிந்துள்ளது. வழிபாட்டில் ஏழு அருள் அடையாளங்களைக் கொண்டாடிவிட்டு வாழ்க்கையில் பத்துக் கட்டளைகளை மறந்துவிடுகிறோம்.

இன்றைய உலகம் பத்துக்கட்டளைகளைக் கடைப்பிடிக்க மறந்துவிட்டதால்தான், காமம். குடிவெறி, களியாட்டம், கொலை, கொள்ளை, இலஞ்சம், ஊழல், பாலியல் பலாத்காரம், சிசுக்கொலை முதலிய பாதகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள் ளன. இன்றைய உலகை அழிவிலிருந்து பாதுகாக்கப் பத்துக்கட்டளைகள் தேவை. தனி மனிதருடைய நலனுக்காகவும் பொது நலனுக்காகவும் தான் கடவுள் பத்துக் கட்டளைகளைக் கொடுத்தார் (முதல் வாசகம்). பத்துக்கட்டளைகள் உறவை மையமாகக் கொண்டுள்ளன. முதல் மூன்று கட்டளைகள் கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே நிலவும் உறவைப் புனிதப்படுத்துகின்றன. எஞ்சியுள்ள ஏழு கட்டளைகளும் மனிதருக்கும் மனிதருக்குமிடையே நிலவும் உறவைப் புனிதப் படுத்துகின்றன, பத்துக்கட்டளைகள் வாழ்வு தரும் வார்த்தைகள், "ஆண்டவரே முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" (பதிலுரைப்பாடல், யோவா 6:68), முடிவில்லா வாழ்வடைய பத்துக்கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்படி இயேசு பணக்கார இளைஞனிடம் கூறினார் (மத் 19:16-19),

பத்துக்கட்டளைகள் உடன்படிக்கை என்னும் மோதிரத்தில் பதிக்கப்பட்ட வைரக்கற்கள், சீனாய் உடன்படிக்கையின் வெளிப்பாடே பத்துக்கட்டளைகளாகும். எனவே, பத்துக்கட்டளைகளை மீறுவது வெறும் பாவம் மட்டுமன்று; உடன்படிக்கையை மீறுவதாகும், கிறிஸ்து பத்துக் கட்டளைகளை அழிக்காமல் அதை நிறைவு செய்தார் (மத் 5:17) கொலை செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது, கொலையின் காரணமான கோபத்தையும் தவிர்க்க வேண்டும் (மத் 5:21-22). விபச்சாரம் செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது, விபச்சாரத்திற்குக் காரணமான காம இச்சையுடன் கூடிய பார்வையையும் தவிர்க்க வேண்டும் (மத் 5:27-28). ஒரு நோயைக் குணப்படுத்த வேண்டுமென்றால். அந்நோயின் மூலகாரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

"நோய்நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும்
வாய்நாடி, வாய்ப்பச் செயல்" (குறள் 948)

கட்டளைகளை வெறும் எழுத்து வடிவத்தில் கடைப்பிடிப்பது பரிசேயரின் ஒழுக்கம். ஆனால், கட்டளைகளை அவற்றின் உள் நோக்கம் அறிந்து கடைப்பிடிப்பது கிறிஸ்துவ ஒழுக்கமாகும். முந்தைய ஒழுக்கம் சாவையும், பிந்தைய ஒழுக்கம் வாழ்வையும் விளைவிக்கும். எழுதப்பட்ட சட்டத்தால் விளைவது சாவு: தூய ஆவியால் விளைவது வாழ்வு (2 கொரி 3:6). எனவே, பத்துக் கட்டளைகளை கிறிஸ்து தமது மலைப்பொழிவில் விளக்கியதற்கு ஏற்ப அவற்றைக் கடைப்பிடிப்பது நமது முதன்மையான கடமையாகும், பழைய உடன்படிக்கை கற்களில் எழுதப்பட்டது. ஆனால் புதிய உடன்படிக்கையோ மனித இதயத்தில் எழுதப்பட்டது (எரே 31:33). புதிய உடன்படிக்கையின் இணைப்பாளரான கிறிஸ்து கொண்டு வந்தது புதிய வாழ்வு, புதிய ஆலயம், புதிய வழிபாடு, புதிய கட்டளை. இன்றைய நற்செய்தியில் இயேசு எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தி, தாமே புதிய ஆலயம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

ஒரு சிலருக்கு ஆலயம் என்றாலே ஒருவகையான ஒவ்வாமை நோய் வந்துவிடுகிறது. ஒருவர் ஆலயத்திற்குச் செல்வதில்லை. காரணம் கேட்டதற்கு, அவர் சொன்ன பதில் : "என் மனைவியை முதன் முதல் ஆலயத்தில்தான் பார்த்தேன். இவ்வளவு மோசமான ஒரு பெண்ணை ஆலயத்தில் எனக்குக் காட்டிய அந்த ஆண்டவன் முகத்தில் ஆயுள் முழுவதும் முழிக்கமாட்டேன்! "பாவம் கசப்பான அனுபவம். இத்தகைய கசப்பான அனுபவங்களால் ஒருசிலர் ஆலயம் செல்வதில்லை. இது தவறான முடிவாகும். ஏனெனில், நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னதி! கிறிஸ்து ஆலயத்தையோ ஆலய வழிபாட்டையோ எதிர்க்கவில்லை. அவருடைய பெற்றோர்கள் ஆண்டு தோறும் பாஸ்கா விழாவிற்கு எருசலேம் ஆலயத்திற்குச் சென்றனர். இயேசுவும் பன்னிரண்டு வயதில் எருசலேம் ஆலயத்திற்குச் சென்றார், ஆலயத்தை அவருடைய தந்தையின் இல்லமென்றார் (லூக் 2:41-42, 49). ஆனால் ஆலயத்தைத் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்துவதை அவர் எதிர்த்தார். செபவீடாகிய கடவுளின் இல்லத்தைச் சந்தையாகவும் (யோவா 2:16), கள்வர் குகையாகவும் (மாற் 11:17) மாற்றப்படுவதை அவர் வன்மையாகக் கண்டித்தார்.

நாத்திகர்கள் ஆத்திகர்களிடம், "கடவுளை மற, மனிதனை நினை' என்று சொல்லுமளவிற்கு இன்று ஆலயமும் ஆலய வழிபாடும் தரம் தாழ்ந்து, தறிகெட்டுச் சென்றுக்கொண்டிருக்கிறது. ஆலயங்கள் வாணிபக் கூடமாகக் காட்சியளிக்கின்றன. திருத்தலங்களில் பணம் மையப்படுத்தப்படுகிறது.

குழந்தை இயேசுவின் கையில் என்ன இருக்கின்றது? என்று சிறுவர்களை நான் கேட்டபோது அவர்கள் உண்டியல் பெட்டி என்றார்கள்.
குழந்தை இயேசுவின் திருத்தலப் பங்குத் தந்தையிடம் நான் சிரித்துக் கொண்டே குழந்தை இயேசுவை வயசுக்கு வர விடமாட்டார்களா? என்று கேட்டதற்கு அவரும் சிரித்துக்கொண்டே குந்த இயேசு வயசுக்கு வந்துவிட்டால் வருமானம் போய்விடும். என்றார். ஆலய வழிபாட்டில் பண ஆதிக்கம் செலுத்தாமல், பக்தி நெறி ஆதிக்கம் செலுத்த வேண்டும். நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தீமையா?... சீறி

தாவோசு என்பது தனி மாநிலம். மலைப் பகுதி, அங்கே உலகப் பொருளாதார மாநாடு (World economic forum) ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் நடைபெறும். World economic forum என்பது ஒரு மிகப் பெரிய கழகம். உலகின் தலைசிறந்த தலைவர்கள், தொழிலதிபர்கள், அறிவியல் அறிஞர்கள் இவர்களை ஒன்று கூட்டி உலக அளவில் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும், வழிகாட்டும் மாபெரும் மன்றம் அது. 819 உலகக் கம்பெனிகள் இதில் உறுப்பினர்கள். Everybody who is somebody இந்த ஆண்டுக் கூட்டத்துக்கு வருவார்கள். 1994 ஆம் ஆண்டில் இந்தியாவின் மீது வெளிச்சமிட்டு நம்நாட்டின் பொருளாதாரக் கொள்கை மாற்றங்களைக் கவனித்து அன்றைய இந்தியப் பிரதமர் நரசிம்மராவை இறுதிக் கூட்டத்தில் பேச அழைத்திருந்தார்கள்.

அப்பொழுது நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் வீசல்லின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அவர் சொன்னார்: ''உண்மைக்கு எதிரி பொய் அல்ல, நன்மைக்கு எதிரி தீமை அல்ல. முன்னேற்றத்துக்கு எதிரி பிற்போக்கு அல்ல. எல்லாவற்றுக்குமே ஒரு பொது எதிரி உண்டு. அதுதான் அலட்சியப் போக்கு (Indifference). அதுவே நமது மிகப் பெரிய எதிரி. பணக்காரர்கள் ஏழைகளை அலட்சியப்படுத்துவது, முன்னேற்ற நாடுகள் பின்தங்கிய நாடுகளை அலட்சியப்படுத்துவது... எந்தப் பாவத்திலும் பொது அம்சம் இந்த அலட்சியம்” அருமையான உன்னதமான பேச்சு! ஒருவன் அலட்சியமாக இருக்கவில்லை என்பதை அவனுடைய சினம் - சீற்றம் - சீறி எழும் ஆவேசம் வெளிப்படுத்தும்.

ஒரு சிற்றூரை ஒட்டிய முட்புதரில் ஒரு பாம்பு நடமாடியது. அந்த வழியாகப் போவோர் வருவோரையெல்லாம் கடித்துத் துன்புறுத்து - வதாகப் பரவலாக ஒரு பேச்சு. ஒருநாள் முனிவர் ஒருவர் அந்தப் பாம்மைப் பார்த்தார். ''ஏன் இப்படிக் கடித்து மக்களைத் துன்புறுத்துகிறாய்? உன் இயல்பைக் கொஞ்சம் மாற்றி எவருக்கும் தீங்கு செய்வதை விட்டுவிடு" என்று முனிவர் கேட்டுக் கொள்ள அந்தப் பாம்பும் பணிந்தது.

சில நாட்களுக்குப் பின் மீண்டும் முனிவர் அந்த வழியே வந்தார். அந்தப் பாம்மைப் பார்த்தார். பரிதாபமாக இருந்தது. அதன் உடம்பு முழுவதும் இரத்தக் காயங்கள். குற்றுயிராய் நகரக் கூட முடியாத படி கிடந்தது. "என்ன ஆச்சு?" என்று கேட்டதற்கு, அந்தப் பாம்பு முணங்கியது: ''நீங்கள் சொன்னபடி நடந்ததற்கு எனக்குக் கிடைத்த பரிசு இது. நான் கடிப்பதில்லை என்று கண்டதும் கண்டவன் எல்லாம் கல்லெறிந்து காயப்படுத்திவிட்டுச் செல்கிறான். அதைக் கேட்ட முனிவர் கோபத்தோடு சொன்னார்: "கொத்த வேண்டாம் என்றுதானே சொன்னேன் குமுறக் கூடாது என்றேனா? தீங்கு இழைக்காதே என்றுதான் சொன்னேன் . தீங்கு இழைப்பதைக் கண்டு நீ சீறி எழுந்திருக்க வேண்டாமா?

பொய்மை காணும் போது கோபம் வேண்டும். தீமை எதிர்ப்படும் போது கோபம் வேண்டும். அநீதி ஆட்சி செய்யும் போது கோபம் வேண்டும்.

எருசலேம் ஆலயம் கள்வர் குகையானபோது, வணிகக் கூடமான போது இயேசுவுக்குக் கோபம் வந்தது. கைக்குச் சாட்டை வந்தது. சிறுமை கண்டு பொங்கினார். சீறி எழுந்தார். ஆலயம் என்பது ஆண்டவனின் உறைவிடம். மனிதனும் இறைவனும் சந்தித்து உறவாடும் ஆன்மீக அனுபவத்தளம். உலகக் கடமைகள், பொறுப்புகள், தடைகள், சவால்கள் இவற்றிற்கிடையே சிக்கித் தவிக்கும் மனிதனுக்குத் தாயின் மடியில் தலை சாய்ப்பது போல ஒரு சுக அனுபவம் தரும் புனித தலம். சமத்துவம், சகோதரத்துவம் என்ற இறையாட்சி விழுமியங்கள் மணம் பரப்பும் மலர்த்தோட்டம்.

ஆலயம் இருப்பது இறைவழிபாட்டுக்காக, இறை நம்பிக்கையை வளர்ப்பதற்காக, வழிபாடுகள் நம்மை வாழ்வு மாற்றங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக. அந்த நோக்கம் நிறைவேறாத போது வாழ்வு வேறு வழிபாடு வேறு என்று ஒன்றுக்கு ஒன்று பொருந்தாத நிலையில் “உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன். உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் எனக்கு விருப்பமே இல்லை" (ஆமோசு 5:21) என்று வெறுப்பை உமிழ்கின்றார் இறைவன்.

இயேசு வெகுண்டெழுந்தது தந்தையின் இல்லத்தைச் சந்தை யாக்குகிறார்களே என்பதற்காக மட்டுமா? கடவுளின் பெயரால் ஏழைகளின் வயிற்றில் அடித்து அநியாயமாக அவர்களைத் துன்புறுத்தியதற்காக "நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக! (ஆமோசு 5:24) என்ற வேட்கையில் இயேசுவின் கோபம் தகுதியான முறையில் வெளிப்படுத்திய நியாயமான உணர்வு.

கோபப்படுவது யாருக்கும் எளிது. ஆனால் சரியான நபர் மீது சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான நோக்கத்துடன் சரியான வழியில் கோபப்படுவது அவ்வளவு எளிதல்ல. மூன்று வகையான கோபம் பற்றி தந்தை மைக்கிள் ஜெயராஜ், சே.ச. குறிப்பிடுகிறார். ) அகச்சினம் (தன்னையே கடிந்து கொள்வது) 2. புறச்சினம் (பிறர்மீது கோபம் கொள்வது) 3. அறச்சினம் (ஒடுக்கப் பட்டோருக்கு ஆதரவாக அநீதி கண்டு சீறி எழுவது). அறச்சினம் பிறர் நலத்தில் பிறக்கும் அன்பின் வெளிப்பாடு. சமுதாய அக்கறையின் சின்னம். விடுதலை வாழ்வின் ஆணிவேர்.

கோபம் ஓர் உந்து சக்தி. கோபம் கொடிது என்று கூறினும் கோபம் கனலைப் போன்று பலனளிக்க வல்ல எரிசக்தி. எனினும் ''சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள். பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும்” (எபே.4:26)

கோபம் உள்ள இடத்தில் குணமிருக்கும் என்பார்கள் - ஏதோ கோபமும் குணமும் மாறுபட்டதுபோல. கோபமே குணமாகலாம் என்பது இயேசுவின் வெளிப்பாடு - நிலைப்பாடு.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கழுவப்பட வேண்டிய மனங்கள்!

தன்னையே சுத்தம் செய்துகொள்வது மனிதர்களின் அடிப்படைத்

தேவைகளில் ஒன்று. மனிதர்கள் மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ள இயற்கையும், தன்னைத் தானே சுத்தம் செய்துகொள்வதை நாம் அறிவோம். தன்னையே சுத்தம் செய்துகொள்ளும் இயற்கையை மீண்டும் குப்பையாக்குவதில் மனிதர்களாகிய நம் பங்கு மிக அதிகம் என்பதையும் வெட்கத்துடன், வேதனையுடன் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.

'சுத்தப்படுத்துதல்' என்பது தவக்காலத்தின் மைய இலக்குகளில் ஒன்று. புறத் தூய்மையைவிட, அகத் தூய்மையை வலியுறுத்தும் காலம், தவக்காலம். இத்தருணத்தில், இயேசு எருசலேம் கோவிலைச் சுத்தம்செய்யும் நிகழ்வு, இன்றைய நற்செய்தியாகத் (யோவா. 2:13-25) தரப்பட்டுள்ளது. 'இயேசு கோவிலைத் தூய்மையாக்குதல்' என்ற இந்நிகழ்வு, நான்கு நற்செய்திகளிலும் சொல்லப்பட்டுள்ளது (மத். 21:12-17; மாற். 11:15-19; லூக். 19:45-48; யோவா. 2:13-22). 'கோவிலைத் தூய்மையாக்குதல்' என்ற சொற்றொடரைக் கேட்டதும், ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வருகிறது:

தென் ஆப்ரிக்கா, இனவெறியில் மூழ்கியிருந்த காலம் அது. கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு கோவிலில் நுழைய முயன்றார். அருகிலிருந்த ஒரு காவல்துறை அதிகாரி, அவரைத் தடுத்து நிறுத்தி, "நில்! வெள்ளையினத்தவர் மட்டுமே இக்கோவிலுக்குள் நுழையமுடியும். நீ உள்ளே போகக்கூடாது!" என்று கூறினார். கறுப்பின மனிதர் அவரிடம், "ஐயா, நான் இந்தக் கோவிலைச் சுத்தம் செய்யவே போகிறேன்" என்று கூறினார். உடனே, அந்தக் காவல்துறை அதிகாரி, "அப்படியென்றால் நீ உள்ளே போகலாம். ஆனால், அங்கு நீ செபித்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தால், பின்னர், உனக்குத் தொல்லைதான்!" என்று எச்சரித்து உள்ளே அனுப்பினார்.

நமது ஆலயங்கள், கோவில்கள், மசூதிகள் மற்றும் யூத தொழுகைக்கூடங்கள் ஆகியவை, முன்னெப்போதும் தேவைப்படாத அளவு சுத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது. நரேந்திர மோடியைப் போல பல்வேறு அரசியல்வாதிகள், கோவில்களை நாடக மேடைகளாக்கி, அதன் வழியே, தங்களையே தெய்வங்களாக விளம்பரப்படுத்தும் அவல முயற்சிகளை நாம் அறிவோம். வழிபாட்டுத் தலங்களைப் பயன்படுத்தி, பிரிவினை, வன்முறை, மோதல்கள் போன்ற உணர்வுகளை வளர்த்துவருவது நமக்கு வேதனையைத் தருகிறது. இவ்வாறு, நமது வழிபாட்டுத் தலங்களில் அளவுக்கு அதிகமாக ‘குப்பைகளை’ குவித்துள்ளோம். இத்தகையைச் சூழலில், இயேசு எருசலேம் கோவிலை சுத்தப்படுத்திய நிகழ்வு நமக்கு சில பாடங்களைக் கற்றுத்தர முடியும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியே சித்திரிக்கப்பட்டுள்ள இயேசுவின் உருவம் நமக்குள் உருவாக்கும் உணர்வுகளிலிருந்து நம் பாடங்களைத் துவங்குவோம். இயேசு, கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்; அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், “இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்” என்று கூறினார். (யோவான் 2:14-16) இந்த வரிகளில் சித்திரிக்கப்பட்டுள்ள இயேசு நமக்குள் நெருடல்களை உருவாக்குகிறார்.

இந்த ஞாயிறையும் சேர்த்து, தவக்காலத்தின் முதல் மூன்று ஞாயிறு வழிபாட்டிலும் இயேசுவை வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு கோணங்களில் சந்தித்துவருகிறோம். தவக்காலத்தின் முதல் ஞாயிறு, பசியோடு, களைப்போடு இருந்த இயேசுவை, நாம் பாலைநிலத்தில் சந்தித்தோம். இரண்டாவது வாரம், தோற்றமாற்றம் அடைந்து, ஒளிவெள்ளத்தில் தோன்றிய இயேசுவை, நாம் மலைமீது சந்தித்தோம். மூன்றாவது ஞாயிறான இன்று, இயேசுவை, எருசலேம் கோவிலில் சந்திக்கிறோம். கோபக்கனல் தெறிக்க, சாட்டையைச் சுழற்றும் இந்த இயேசு, நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார்.

தவக்காலத்தின் மூன்று ஞாயிறுகளிலும் நாம் சிந்தித்த இக்காட்சிகளை ஓவியங்களாகப் பார்த்திருக்கிறோம். இந்த மூன்று ஓவியங்களில், பாலை நிலத்திலும், மலைமீதும் நாம் சந்தித்த இயேசுவை, கோவில்களில் பீடமேற்ற தயங்கமாட்டோம். ஆனால், எருசலேம் கோவிலில் சாட்டையைச் சுழற்றி வியாபாரிகளை விரட்டும் இயேசுவின் ஓவியத்தை, நம் ஆலயங்களில் வைத்து வழிபடமுயுமா என்பது பெரும் கேள்விக்குறிதான். பொதுவாக, கோவில்களில் நாம் பீடமேற்றும் இயேசுவின் திரு உருவங்கள், சாந்தம் நிறைந்த உருவங்கள், வெற்றிவாகை சூடிய உருவங்கள், அல்லது சிலுவையில் துன்புறும் உருவங்கள். கிறிஸ்தவ மறையின் துவக்ககாலத்தில், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவும் சவாலாக இருந்தார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் அடியார் இவ்வாறு கூறுகிறார்: நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. (1 கொரி. 1:23-24)

இந்த மூன்று நிகழ்வுகளில், மற்றோர் அம்சத்தையும் நாம் சிந்திப்பது பயனுள்ள முயற்சி. பாலைநிலம், மலை, கோவில் ஆகிய மூன்று இடங்களும் இறைவனைச் சந்திக்கக்கூடிய இடங்கள் என்பது நமக்குத் தெரிந்த உண்மை. இவற்றில், பாலைநிலத்திலோ, மலையிலோ, இறைவனை, நாம் தேடிச்செல்ல வேண்டும். அவ்வளவு எளிதில் நம் கண்களுக்கு அவர் தெரிவதில்லை. இறைவனை எளிதில் காண்பதற்கென மனிதர்கள் உருவாக்கிய இடம்தான், கோவில். அந்தக் கோவிலுக்குச் சென்ற இறைமகனாகிய இயேசு, அங்கு, இறைவனைக் காணமுடியாததால், கோபமுற்று, சாட்டையைக் கையில் எடுக்கிறார்.

கோவிலுக்குச் சென்றால் நாம் தூய்மை பெறலாம் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால், இங்கோ, இயேசு, கோவிலைத் தூய்மைப்படுத்துகிறார். இஸ்ரயேல் மக்களின் உயிர்நாடியாக விளங்கிய எருசலேம் கோவிலில், இயேசு, ஏன் கோபத்துடன் நடந்துகொண்டார் என்பதன் காரணத்தைப் புரிந்துகொள்வது பயனளிக்கும். எருசலேம் கோவிலில், அன்று நடந்த நிகழ்வுகளுக்கும், இன்று நம் திருத்தலங்களில் காணும் பல நிகழ்வுகளுக்கும் நெருங்கிய ஒப்புமைகள் இருந்தால், நாம் கேள்விகளை எழுப்பவும், பதில்களைத் தேடவும் கடமைப்பட்டுள்ளோம். எருசலேம் கோவிலைச் சந்தையாக மாற்றியவர்களை, சாட்டை கொண்டு விரட்டியடித்த இயேசு, இன்று, நம் கோவில்களுக்கு வந்தால், என்ன நினைப்பார், எப்படி நடந்துகொள்வார் என்பதைச் சிந்தித்துப்பார்க்க, இந்த ஞாயிறு, நமக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.

யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார் (யோவான் 2: 13) என்று இன்றைய நற்செய்தி துவங்குகிறது. இஸ்ரயேல் மக்கள் அனைவரும் பாஸ்கா விழாவையொட்டி எருசலேமுக்குச் செல்லவேண்டும், அந்த ஆண்டுக்குரியக் காணிக்கையை, கோவிலில் செலுத்தவேண்டும். இது இஸ்ரயேல் மக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டளை. இயேசுவும் ஒரு யூதருக்குரிய கடமைகளை நிறைவேற்ற கோவிலுக்குச் சென்றார். அங்கு சென்றவர், அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார்.

ஏற்கனவே, 12 வயது சிறுவனாக, முதல்முறை, எருசலேம் கோவிலுக்குச் சென்றபோது, அங்கு அவர் கண்ட ஒரு சில காட்சிகள், அவரைப் பாதித்திருக்க வேண்டும். அதன்பின், ஒவ்வோர் ஆண்டும், அவர் அங்கு சென்றபோதெல்லாம், அவர் உள்ளத்தை வேதனையும், கேள்விகளும் நிறைத்திருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் அந்த வேதனைகளுக்கும், கேள்விகளுக்கும் விடைதேடி வந்த இயேசு, இன்று தானே விடையாக மாறத் துணிந்தார்.

இயேசுவுக்குள் இத்தனைக் கேள்விகளும் வேதனைகளும் உருவாகக் காரணம் என்ன? ஏழைகளும், பிற இனத்தாரும் அடைந்த துன்பங்கள். இயேசு, ஓர் எளியக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், ஏழை யூதர்கள் அடைந்த வேதனைகளை, அவரும் அடைந்திருப்பார். இறைவனைக் காணும் ஆர்வத்தோடு, வறியோர், ஆண்டு முழுவதும் சிறுகச் சிறுகச் சேமித்து, எருசலேம் கோவிலுக்கு சென்றபோது, அவர்கள் அங்கு சந்தித்தப் பிரச்சனைகள் பல. ஆண்டவனுக்குக் காணிக்கை செலுத்தவேண்டும் என, ஆண்டு முழுவதும், தங்கள் வீடுகளில், கண்ணும் கருத்துமாய், அவர்கள் வளர்த்து வந்த ஆடு, மாடு, புறா போன்ற காணிக்கைகளைக் குருக்களிடம் கொண்டு சென்றபோது, அந்தக் காணிக்கைகளில் ஏதாவது ஒரு குறை கண்டனர் குருக்கள். குறையுள்ள காணிக்கைகளை அவர்கள் ஏற்க மறுத்தனர். சரியான காணிக்கையைச் செலுத்தவில்லையெனில், கடவுள் அவர்களைப் புறக்கணித்துவிடுவார் என்ற அச்சத்தை, வறியோர் மீது, குருக்கள் திணித்தனர். எனவே, அந்த ஏழைகள், கோவிலில், அநியாய விலைக்கு விற்கப்பட்ட ஆடு, மாடு, புறா இவற்றை வாங்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். ஆண்டு முழுவதும் அவர்கள் சேமித்து வைத்த பணமெல்லாம் ஒரு காணிக்கை வாங்குவதற்கே பற்றாமல் போயிற்று.

அடுத்ததாக, கோவிலுக்குச் செலுத்தவேண்டிய காணிக்கைப் பணமும் பிரச்சனைகளை எழுப்பியது. இஸ்ரயேல் மக்கள், அன்றாட வாழ்வில் பயன்படுத்திய நாணயம், உரோமைய நாணயம். அந்த நாணயத்தில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்ததால், அதைக் கோவில் காணிக்கையாகச் செலுத்தக்கூடாது. எனவே, காணிக்கை செலுத்தும் அனைவரும், கோவில் சந்தையில் இருந்த நாணயம் மாற்றுமிடங்களில், தாங்கள் சேமித்து வைத்திருந்த உரோமைய நாணயங்களைக் கொடுத்து, கோவிலுக்கு ஏற்ற நாணயங்களை வாங்கவேண்டும். இந்த வர்த்தகத்திலும் ஏழைகள் அதிகம் ஏமாற்றப்பட்டனர். எருசலேம் கோவிலில் நடந்த காணிக்கைப் பொருட்களின் வியாபாரம், நாணயம் மாற்றும் வியாபாரம் அனைத்திலும், கோவில் குருக்களுக்குப் பங்கு இருந்தது.

நாணயமற்ற முறையில், நாணய மாற்றங்கள் நிகழும் வேளைகளில், ஏழைகள் துன்புறுவது, அன்று மட்டுமல்ல, இன்றும் தொடரும் கொடுமை. சில ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் நரேந்திர மோடியால் நடத்தப்பட்ட பணமுடக்கம் என்ற கொடுமை, வறியோரை எவ்வளவு தூரம் வாட்டியது என்பதை அறிவோம். அதே நேரம், கோடீஸ்வரக் கொள்ளையர்கள் அதே மோடியின் ஆசியுடன் அனுபவித்துவரும் சலுகைகளும் ஏராளம். நிச்சயம், இயேசுவை, மீண்டும் சாட்டையை எடுக்கத் தூண்டும் எதார்த்தங்கள் இவை. வருகிற தேர்தல் கண்ணியமான, நேர்மையான முறையில் நடைபெற்றால், இந்திய பாராளுமன்றம் என்ற கோவிலிலிருந்து, இயேசுவின் சாட்டையடி, கொள்ளையர்களை விரட்டும் என்ற நம்பிக்கையுடன் வேண்டுவோம்.

வறியோர், ஆண்டு முழுவதும் காத்திருந்து, கஷ்டப்பட்டு பணம் சேர்த்து, இறைவனைக் காண எருசலேம் கோவிலுக்குச் சென்றால், அங்கு இறைவனைக் காண இத்தனைத் தடைகள் இருந்தன. தாங்கள் காணவிழைந்த இறைவன், தங்களது ஒருவருட சேமிப்பையெல்லாம் தாண்டி, ஒவ்வோர் ஆண்டும் உயர, உயர விலகிச் செல்கிறாரே என்ற தவிப்பு, வறியோர் மனதை ஆக்கிரமித்தது. இறைவனின் இல்லத்தில், அவரது கண் முன்பாகவே இத்தனை அக்கிரமங்கள் நடக்கின்றனவே என்று, ஆயிரமாயிரம் ஏழைகளும், நேரிய மனத்தவரும் வெந்து, புழுங்கிக் கொண்டிருந்தனர்.

அதே வேதனை, அதே புழுக்கம், யூதர் அல்லாத பிற இனத்தவருக்கும் இருந்தது. எருசலேம் கோவிலில் வியாபாரங்கள் நடந்ததெல்லாம் கோவிலின் வெளிச் சுற்றில். இந்த வெளிச்சுற்று, பிற இனத்தவர் முற்றம் (The Court of the Gentiles) என்று அழைக்கப்பட்டது. பிற இனத்தவர், இந்த வெளிச்சுற்றில் மட்டும் நின்று இறைவனைத் தரிசிக்க அனுமதி உண்டு. இந்த வெளிச் சுற்றில், கடைகள் கூடிவிட்டதால், கடவுள் காணாமல் போய்விட்டார். சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்காதக் கதையாய், இறைவனைக் காண ஆவலாய் வந்திருந்த பிற இனத்தவர், இறைவனைக் காணமுடியாமல், ஏமாற்றம் அடைந்தனர். அவர்களுக்கெனக் குறிக்கப்பட்டிருந்த வெளிச்சுற்றை ஆக்கிரமித்திருந்த சந்தையைக் கண்டு, இறைவன் மீதே ஓரளவு வெறுப்பை வளர்த்துக்கொண்டு வீடு திரும்பவேண்டிய நிலைக்கு, பிற இனத்தவர் தள்ளப்பட்டனர்.

ஏழைகளையும் பிற இனத்தவரையும் வாட்டியெடுத்த வேதனைகள், இயேசுவையும் வாட்டியெடுத்தன. இந்த வேதனை, கோபமாக வடிவெடுத்தது. ஏழை யூதர்களும், பிற இனத்தவரும் கடவுளைச் சந்திக்க முடியாதபடி, ஒரு சந்தையாக, கள்வரின் குகையாக மாற்றப்பட்டிருந்த கோவிலைச் சுத்தம் செய்ய முடிவெடுத்தார் இயேசு.

பாஸ்கா விழா காலத்தில், எருசலேம் கோவிலுக்கு ஒரு இலட்சம் பக்தர்களாகிலும் வந்தனர் என்பது, விவிலிய ஆய்வாளர்களின் கணிப்பு. அந்த ஒரு இலட்சம் பேருக்குத் தேவையான ஆடு, மாடு, புறா என்ற காணிக்கைகள், கோவிலில் குவிந்திருக்க வேண்டும். தனியொரு மனிதராய், இந்த வியாபாரக் கோட்டையைத் தகர்க்கத் துணிந்த இளையவர் இயேசுவின் மனம், சாதாரண மனம் அல்ல..
இயேசு, எருசலேம் கோவிலில் செய்த அந்தப் புரட்சியை நாம் ஒரு புதுமையாகவே பார்க்கவேண்டும். அவ்வளவு பெரிய ஒரு நிறுவனத்தை எப்படி தனியொரு மனிதர் தலைகீழாக மாற்றத் துணிந்தார்? எப்படி அந்த நேரத்திலேயே, அவர் கொல்லப்படாமல் தப்பித்தார்? என்பதெல்லாம் புதுமையே. இந்தப் புதுமையை எண்ணிப்பார்க்க, திருஅவை, இன்று ஒரு வாய்ப்பை நமக்கு அளித்துள்ளது.

கோபக்கனல் தெறிக்க, இயேசு, அந்த வர்த்தகக் கோட்டையைத் தாக்கியபோது, அவர் எந்த அதிகாரத்தில் இவற்றைச் செய்கிறார் என்ற கேள்வி எழுந்தது. இயேசு அந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், “இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்” (யோவான் 2: 19) என்ற சவாலை அவர்கள் முன் வைத்தார் என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். 46 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட ஆலயத்தை, மூன்றே நாட்களில் கட்டியெழுப்புவதாக இயேசு சொன்னதை, குழந்தைத்தனமான சவாலாக நாம் பார்க்கலாம்; அல்லது, கடவுளால் மட்டுமே செய்துமுடிக்கக்கூடிய ஓர் அற்புதச் செயலாகவும் கருதலாம். இயேசு கூறிய அந்தக் கோவில் அவரது உடல் என்றும் யோவான் தன் நற்செய்தியில் கூறுகிறார் - அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார் (யோவான் 2: 21).

இறைவனுக்கே விலைகுறித்து, வர்த்தகக் கோட்டையாக மாறிய எருசலேம் கோவில், வரலாற்றில் இரு முறை தரைமட்டமாக்கப்பட்டது. இன்றும், அந்தக் கோவில், மோதல்கள் பல உருவாக ஒரு காரணமாக இருந்து வருகிறது. இதற்கு மாறாக, முற்றிலும் தகர்க்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் உடல் என்ற கோவிலை, கடவுள், மூன்று நாட்களில் மீண்டும் கட்டியெழுப்பினார். இந்தக் கோவில், இருபது நூற்றாண்டுகளைக் கடந்து, உறுதியுடன் நிமிர்ந்து நிற்கிறது. இந்தக் கோவிலில் வியாபாரங்கள் கிடையாது, கடவுளை விலை பேசமுடியாது, வெளிச் சுற்று, உள்சுற்று என்ற பாகுபாடுகள் கிடையாது, வறியோர், செல்வந்தர், பாவி, புண்ணியவான், யூதர், பிற இனத்தவர், ஆண், பெண் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரும் உள்ளே வரலாம். இறைவனை, எந்தத் தடையும் இல்லாமல், கண்ணாரக் கண்டு நிறைவடையலாம்.

பாகுபாடுகள் ஏதுமற்ற இறைமக்களின் சமுதாயம் என்ற அழகிய கோவில்கள் உலகெங்கும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம். மதத்தையும், கடவுளையும் மூலதனமாக்கி நடைபெறும் ஓட்டு திரட்டும் நாடகங்கள், அரசியல் வர்த்தகங்கள் அனைத்திலிருந்தும், உலகை, இறைவன் தூய்மையாக்க வேண்டும் என்று செபிப்போம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

சிலுவையின் புதிய பொருள்

இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கும் தங்களுக்கும் உள்ள நெருக்கத்தின் அடையாளமாகக் கருதிய இரு பெரும் அமைப்புகளை மாற்றி, சிலுவையை முன்மொழிகிறார் இயேசு.

முதல் அமைப்பு, பத்துக் கட்டளைகள். ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களைத் தம் சொந்த இனமாகத் தேர்ந்தெடுத்து அவர்களோடு சீனாய் மலையில் ஏற்படுத்திய உடன்படிக்கையின்போது வழங்கப்பட்டவை பத்துக் கட்டளைகள். இவற்றை இரு கட்டளைகளாகச் சுருக்குகிற இயேசு, ‘இறையன்பு, பிறரன்பு’ என மொழிகிறார் (காண். லூக் 10). தொடர்ந்து, தம் சீடர்களுடைய பாதங்களைக் கழுவுகிற நிகழ்வில், புதிய கட்டளையாக அன்புக் கட்டளையை முன்மொழிகிறார் இயேசு (காண். யோவா 13:34). ஒருவர் மற்றவரை அன்பு செய்வதே மொத்தக் கட்டளைகளின் நோக்கம் என சட்டங்கள் பற்றிய புரிதலுக்குப் புதிய விளக்கம் தருகிறார் இயேசு.

இரண்டாவது அமைப்பு, எருசலேம் கோவில். எதிரிகள் அனைவரையும் வெற்றிகொண்டு ஆண்டவர் தருகிற ஓய்வை அனுபவித்த தாவீது அரசர் ஆண்டவராகிய கடவுளுக்கு ஒரு கோவில் கட்ட விழைகிறார். தாவீதுடன் உடன்படிக்கை செய்துகொள்கிற ஆண்டவராகிய கடவுள் அவரோடு உடன்படிக்கை செய்துகொள்கிறார். சாலமோன் தமக்குக் கோவில் கட்டுவார் என அறிவிக்கிறார். சாலமோன் மிகப் பெரிய கோவிலைக் கட்டி எழுப்புகிறார். ஆண்டவருடைய பெயர் குடியிருக்கும் கோவில் மக்கள் நடுவில் கடவுளுடைய பிரசன்னத்தை உணர்த்தியது. பாபிலோனிய அடிமைத்தனத்தின்போது எருசலேம் ஆலயம் தரைமட்டமாக்கப்படுகிறது. பாரசீகப் பேரரசர் இஸ்ரயேல் மக்களை விடுவிக்கிறார். செருபாபேலின் தலைமையில் இரண்டாம் கோவில் கட்டி எழுப்பப்படுகிறது. இந்த இரண்டாவது கோவிலை பெரிய ஏரோது புதுப்பிக்கிறார். இக்கோவிலையே இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தூய்மைப்படுத்துகிறார்.

இயேசு கோவிலைத் தூய்மையாக்கும் நிகழ்வை நற்செய்தி வாசகத்தின் இறுதியில் – இயேசுவின் பாடுகளுக்கு முன்னர் – பதிவு செய்கிறார்கள் ஒத்தமைவு நற்செய்தியாளர்கள். இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்திய நிகழ்வு அவருடைய பாடுகள் உடனடியாகத் தொடங்குவதற்கான காரணமாக இருக்கிறது. யோவான் நற்செய்தியாளரோ, தன் நற்செய்தியின் தொடக்கத்திலேயே இந்நிகழ்வைப் பதிவு செய்கிறார். இவரைப் பொருத்தவரையில் பழைய கோவிலை மாற்றிவிட்டு, தம்மையே புதிய கோவிலாக முன்வைக்கிறார் இயேசு.

கடவுளையும் மனிதர்களையும் இணைக்கிற கோவில், காலப் போக்கில் பண்டப் பரிமாற்று இடமாக மாறுகிறது. கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே தூரம் உண்டாகிறது. இயேசு இத்தகைய கோவிலை மாற்றி, அந்த இடத்தில் தம்மை வைக்கிறார். இயேசுவின் உடலே கோவிலாக மாறுகிறது.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இக்கருத்துருவை எடுத்துக் கையாளுகிறார். இயேசு தம் உயிர்ப்பின் வழியாக அனைவரையும் அவருடன் இணைததுக்கொள்கிறார். இயேசுவின் உடல் வழியாக நாம் அனைவரும் கடவுளுக்கு அருகில் செல்கிறோம்.

இவ்வாறாக, இஸ்ரயேல் மக்களின் இரு பெரும் அடையாளங்களை – பத்துக் கட்டளைகள், எருசலேம் கோவில் – மாற்றுபவராக வருகிறார் இயேசு.

(அ) பத்துக் கட்டளைகள் என்னும் அடையாளம் மாறுவதற்கான காரணங்கள் எவை?

(1) பத்துக் கட்டளைகள் காலப் போக்கில் மனிதப் பாராம்பரிய விதிமுறைகளாக மாறி – ஏறக்குறைய 613 – மக்களை அடிமைப்படுத்தத் தொடங்கின.
(2) சட்டங்கள் வழியாக மனித மாண்பு பேணப்படுவதற்குப் பதிலாக சட்டங்கள் வழியாக மனித மாண்பு மீறப்பட்டது.
(3) சட்டங்கள் சுட்டிக்காட்டுகிற கடவுளைப் பற்றிக்கொள்வதை விடுத்து, சட்டங்களை மட்டுமே பற்றிக்கொண்டார்கள் மக்கள்.

(ஆ) கோவில் என்னும் அடையாளம் மாறுவதற்கான காரணங்கள் எவை?

(1) கோவில் என்பது வழிபடுகிற இடம் என்ற நிலை மாறி, வியாபாரம் செய்யும், பண்டங்களை மாற்றிக்கொள்ளும் இடம் என்ற நிலை உருவானது.
(2) கோவில் சார்ந்த சடங்குகள் அதிகம் முக்கியத்துவம் தரப்பட்டதே அன்றி, கோவிலில் உள்ள கடவுளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.
(3) கோவில் அரசியல் தளமாக மாறிவிட்டது.

மெசியாவின் வருகையின்போது பத்துக்கட்டளைகளும் கோவிலும் மாற்றம் பெறும் என்பது ரபிக்களின் பாடம். மெசியாவாக வருகிற இயேசு, பத்துக்கட்டளைகளையும் கோவிலையும் தம் சிலுவையில் மாற்றிப் போடுகிறார்.

இரண்டாம் வாசகத்தில், சிலுவை என்ற அடையாளத்தை முன்மொழிகிற பவுல், ‘அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாகவும் இருக்கிறது. ஆனால், அழைக்கப்பட்டவர்கள் யூதரானாலும் கிரேக்கரானாலும் அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்’ என எழுதுகிறார்.

நாம் பயன்படுத்தும் சிலுவை என்னும் அடையாளத்தில் இரு திசைகள் உள்ளன. ஒன்று, மேல் நோக்கியது. இரண்டு, சமன் நோக்கியது. சிலுவையின் மேல் நோக்கிய பகுதி கடவுளோடும், சமன் நோக்கிய பகுதி ஒருவர் மற்றவரோடும் இணைக்கிறது. மேல்நோக்கிய பகுதியை கோவில் என்ற அடையாளத்தோடும், சமன் நோக்கிய பகுதியை பத்துக் கட்டளைகள் என்னும் அடையாளத்தோடும் நாம் இணைத்துக்கொண்டால், இயேசுவையே புதிய ஆலயமாகவும், அவர் வழங்கிய புதிய கட்டளையை நம் வாழ்வின் படிப்பினையாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய ஞாயிறு நமக்கு வழங்கும் செய்தி என்ன?

(அ) வெறும் அடையாளங்களைக் கொண்டிருப்பதால் – பத்துக் கட்டளைகள், கோவில் – நாம் கடவுளோடும் ஒருவர் மற்றவரோடும் நெருக்கமாகிவிட முடியாது. இவை குறித்துக் காட்டுபவற்றையும் முன்மொழிபவற்றையும் பின்பற்ற வேண்டும்.

(ஆ) சிலுவை என்னும் அடையாளத்தை நாம் இந்நாள்களில் தியானித்துக் கொண்டாடுகிறோம். சிலுவை என்னும் அடையாளத்தின் வழியாக இயேசு பழைய அடையாளங்களை மாற்றுகிறார். சிலுவை குறித்துக்காட்டுகிற அன்பு, தற்கையளிப்பு, தியாகம் போன்றவை நம் வாழ்வாக வேண்டும்.

(இ) கடவுளோடும் ஒருவர் மற்றவரோடும் நெருக்கமாக மாறுவதற்கு இத்தவக்காலத்தில் நாம் எடுக்கும் முயற்சிகளை ஆய்ந்து பார்த்தல் நலம்.

‘ஆண்டவரே, நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன’ எனக் கடவுளைப் பற்றிக்கொள்ள முன்வருவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறைவனுக்கு முதலிடம் தருவோமா!

தவக்காலத்தின் மூன்றாம் வாரத்தில் நாம் இருக்கிறோம். இன்றைய நாளின் வாசகங்கள் நமது வாழ்வில் ஆண்டவருக்கு கொடுக்கும் இடமென்ன, அவருக்கு நாம் அளிக்கும் மதிப்பென்ன என்ப தை உணர்ந்தறிய நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

ஒரு முறை நான் ஒரு நற்செய்தி பெருவிழா கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அக்கூட்டத்திலே நற்செய்தி பகிர வந்தவர் சிறந்த பாடகர். அவர் புதிதாக ஒரு ஒலிநாடாவை வெளியிட்டு அதை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார். அந்த குறிப்பிட்ட நாளில் வாங்குவோர்க்கு அதை பாதி விலையில் கொடுப்பதாக அறிவித்தார். செபம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்த வேளையில் பலர் பாதியில் எழுந்து எங்கோ சென்று வருவதை நான் கவனித்தேன். எங்கே செல்கிறார்கள் எனப் பார்க்கும் போது அவர்கள் அந்த ஒலிநாடாவை வாங்கச் செல்வதைக் கவனித்தேன். வழிபாட்டை விட குறைந்த விலையில் ஒலிநாடா வாங்குவது அவர்களுக்கு பெரியதாகத் தெரிந்தது.எனக்கு வருத்தம் கலந்த வியப்பு உண்டானது. கடவுளுக்கு எந்த இடம் என் வாழ்வில் என நானும் யோசிக்க ஆரம்பித்தேன்.

ஆம். நண்பர்களே ....இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் மோசே வழியாக வழங்கிய திருச்சட்டம் பற்றிய விவிலியப் பகுதியை நாம் தியானிக்கிறோம். கடவுள் மோசே வழியாக தன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை என்பதை தெள்ளத்தெளிவாக விளக்குகிறார். இதன்மூலம் கடவுளுக்கு நம் வாழ்வில் முதன்மையான இடத்தை நாம் கொடுக்க வேண்டும் என்பதை நாம் உணர்கிறோம். கடவுளுக்கு முதன்மையான இடமும் பிறர் மேல் நீதியான அன்பும் நம் வாழ்வை நல்வழிப்படுத்தும் என்பதை வலியுறுத்தவே பத்து கட்டளைகளை கடவுளே நமக்குத் தந்தார்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு கோவிலில் வியாபாரம் செய்பவர்களை விரட்டிய நிகழ்வு தரப்பட்டுள்ளது. இதன் மூலம் கடவுளுக்குரிய இடத்தையும் நேரத்தையும் அவருக்காக முழுமையாய் நாம் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அதற்கு இடையூறாக இருக்கும் அனைத்தையும் நாம் நம் வாழ்விலிருந்து விரட்டி அடிக்க வேண்டும் என்பதையும் இயேசு கற்பிக்கிறார்.

நம்மையே நாம் இறைசந்நிதியில் சோதித்தறிய முற்படுவோம். இறைவனுக்குரிய இடத்தை அவருக்கு கொடுத்தால் நம் வாழ்வு செழிப்புறும். மாறாக நம் பலவீனங்களுக்கும் உலக நாட்டங்களுக்கும் தந்தால் நமது வாழ்வு சந்தையாகிவிடும். இதை உணர்ந்து தேவையற்ற அனைத்தையும் விரட்டியடித்து ஆண்டவரை நம் அகத்தில் முதன்மையாய் அமர வைப்போம்.

இறைவேண்டல்

இறைவா! வேறு எதுவும் எங்களை ஆட்டிப்படைக்காமல் இருக்க எம் வாழ்வில் உள்ள தேவையற்ற அனைத்தையும் அகற்றியருளும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser