மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

தவக்காலம் 3 ஆம் ஞாயிறு மறையுரை 1-ஆம் ஆண்டு

இன்றைய வாசகங்கள்:-
விடுதலைப் பயணம் 17:3-7 | 2 உரோமையர் 5: 1-2, 5-8 | யோவான் 4: 5-42

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



இறைவன் இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து மோசே வழியாகத் தேனும் பாலும் பொழியும் கானான் தேசத்தில் கொண்டு வந்து சேர்த்துக் காப்பாற்ற விரும்பினார். அதற்காகச் செங்கடலை இரண்டாகப் பிளந்து வழிநடத்திக் கொண்டு வந்தார். பசியாக இருந்தவர்களுக்கு வானத்திலிருந்து மன்னாவைப் பொழிந்தார். ஆனால் குடிக்கத் தண்ணீர் கிடைக்கவில்லையே என்பதற்காக இந்த மக்கள் மோசேயுக்கு எதிராக எழுந்தனர். அவரைக் கல்லால் எறிந்து கொல்லும் அளவுக்கு மக்கள் மோசேயைக் கொடுமைப் படுத்தினார்கள். ஆனால் கடவுள் அந்த மக்களை அவர்கள் பாவத்திற்காக தண்டிக்க விரும்பவில்லை. மாறாகப் பாறையை உடைத்து தண்ணீர் வெளிப்படச் செய்து அவர்களின் தாகத்தைத் தீர்த்தார் (வி.ப. 17:6). கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை (லூக். 1:37) என்ற வானதூதர் கபிரியேலின் கூற்றுப்படி, ஒன்றும் நடக்காது என்று நினைத்த மக்கள் மத்தியில் கடவுளால் எல்லாம் கூடும் என்பதைக் கடவுள் காண்பித்தார்.

இப்படிப்பட்ட அன்பே உருவான கடவுள் ஒரு நாள் மனிதரோடு நேருக்கு நேர் மனித உருவில் பேச விரும்பினார். இதைக் குறித்துதான் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலில் (எபி. 1:1) அதன் ஆசிரியர் பற்பல முறையிலும், பல வகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாட்களில் தன் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார் என்பது நிறைவு பெறுவதை இன்றைய நற்செய்தி நன்றாகப் படம் பிடித்துக்காட்டுகிறது.

இயேசு கடவுளின் அன்பின் உருவம். கடவுள், எவரும் அழியாமல் நிலை வாழ்வு பெறும் பொருட்டுத் தன் மகனையே அளிக்கும் அளவுக்கு உலகின் மீது அன்புகூர்ந்தார் (யோவா. 3:16) என வாசிக்கிறோம். கங்கையும் காவிரியும் இணைந்தாலும் அவை கடவுளின் கருணைக்கு ஈடாகாது. அன்புதான் இன்ப ஊற்று. அன்புதான் உலக மகாசக்தி. கோழி தன் குஞ்சுகளை இறக்கைக்குள் ஒன்று சேர்ப்பதுபோல (லூக். 13:34) தன் மக்களை ஒன்று சேர்க்க வந்த தந்தையின் அன்பின் வடிவம்தான் இயேசு.

இன்றைய நற்செய்தி இயேசுவின் அன்புக்குச் சான்று பகர்கிறது. சமாரியர்கள் என்றாலே, ஒதுக்கப்பட்டவர், தீட்டுப்பட்டவர் என்று புறம்பாக்கி வைக்கப்பட்ட சமுதாயம். எனவே எந்த யூதரும் சமாரியர்களோடு உறவு கொள்வதும் இல்லை, பேசவும் கூடாது. இந்த நிலையில், தன் சமூகத்தில் மனிதப் பிறப்பு எடுத்த இயேசு முதல் எந்த ஒரு யூதனும் சமாரியருடன் பேசுவது கூடாது. இரண்டாவது ராபி எனப்படும் இயேசு ஒரு சமாரியப் பெண்ணுடன் பேசுவது பெருங்குற்றம். ஏன்! ஆறு ஆடவருடன் வாழ்க்கை நடத்திய ஒரு சமாரிய விபச்சாரியுடன் பேசுவது என்பது மாபெரும் குற்றம். ஆனால் இயேசுவோ பட்டப் பகலில் மதிய வேளையில் இந்த சமாரியப் பெண்ணோடு உரையாடல் நடத்துகிறார். இவள் ஒரு சமாரியப் பெண் அதுவும் பெரும் பாவி என்று தெரிந்தும் அவளை வெறுக்கவில்லை, புறக்கணிக்கவும் இல்லை. அவளைச் சபிக்கவும் இல்லை. மாறாக ஓர் அன்பான உரையாடல் வழியாக, ஆற்றுப்படுத்துதல் வழியாக அவள் மனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகின்றார். அவளிடத்தில் உறைந்து கிடந்த சாதி, மத, சட்ட ரீதியான, ஒழுக்கக் கேடான தடைகளையெல்லாம் ஒவ்வொன்றாக வெளியே கொண்டுவர, முழுவதும் திருந்தியவளாய் தண்ணீர் மொள்ள வந்ததை மறந்து, குடத்தைக் கிணற்றங்கரையிலே விட்டு விட்டு, ஜீவ ஊற்றாம் இயேசுவை இதயத்தில் ஏந்தி ஊருக்குள் சென்று இயேசுவைப் பற்றிய உண்மையை அறிக்கையிடுகின்றாள்.

ஒரு நல்ல குடம், ஒரு கீறல் விழுந்த குடம். ஒரு தொழிலாளி தினமும் இரு குடங்களையும் தூரத்தில் இருக்கும் கிணற்றில் உள்ள நல்ல தண்ணீரைத் தோளில் சுமந்து ஊருக்குள் கொண்டு வந்து காசு பெறுவது வழக்கம். ஒரு குடம் நிறைய இருப்பதால் முழுமையாகப் பணம் கிடைத்தது. ஆனால் இன்னொரு குடம் கீறல் இருந்ததால் தண்ணீர் சுமந்து வரும் வழியெல்லாம் வழிந்து குறைந்த குடமாக இருந்ததால் பணமும் குறைவாகக் கிடைத்தது. அவன் நடந்து வரும் பாதையோ ஒரு முதலாளியின் இடமாகும். ஒருநாள் கீறல் விழுந்த குடம் இந்த தொழிலாளியைப் பார்த்து, ஐயா! என்னால் ஒரு பயனுமில்லையே! வரும் வழியெல்லாம் தண்ணீரை ஒழுக விட்டு உங்களுக்குப் பணம் சம்பாதித்துத் தர முடியாதவராகி விட்டேனே! என்னைத் தூக்கி எறிந்துவிடுங்கள் என்றது. அப்போது அந்தத் தொழிலாளி சொன்னான், நீ உடைந்த உதவாக்கரை என்று எண்ணாதே, வரும் வழியெல்லாம் செழிப்புடன் பூத்துக் குலுங்க வைத்துள்ளாய். இதனால் முதலாளி எனக்குப் பரிசு தரக் காத்திருக்கிறார் என்றார் அந்தத் தொழிலாளி. ஆம்! இப்படி உடைந்த, ஒன்றுக்கும் உதவா நிலையில் ஓடி ஒளிந்த மோசேயை ஆண்டவர் தேர்ந்தெடுத்து இஸ்ரயேல் மக்களை வழிநடத்தவும், தாகத்தைத் தீர்க்க பாறையை உடைத்து தண்ணீர் வழங்கவும் சித்தமானார். ஊர் அறிய, நாடறிய விபச்சாரி என்று பெயர் எடுத்த சமாரியப் பெண் என்றுமே தாகம் தீராத ஊற்றைக் கண்டேன் என அறிவித்தாள்.

அந்த உண்மையான ஊற்று, உயிருள்ள நீர், நம் ஆண்டவர் இயேசு. யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும், குடிக்கட்டும் (யோவா. 7:37) என்கிறார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இயேசுவே எப்பொழுதுமே உண்மை பேசிய உமது மனத்தை
எனக்குக் கடனாகத் தாரும்

இயேசுவின் காலத்தில் பாலஸ்தீன நாட்டை அல்லது இஸ்ரயேலை மூன்று பகுதிகளாகப் பிரித்திருந்தார்கள். வடக்கே கலிலேயா, தெற்கே யூதேயா கலிலேயாவுக்கும், யூதேயாவுக்கும் நடுவே சமாரியா இருந்தது. அந்தச் சமாரியா பகுதியில் சிக்கார் என்னும் ஊர். அந்த ஊரிலே ஈசாக்கின் மகன் யாக்கோபு அவருடைய மகன் யோசேப்புக்குக் கொடுத்த கிணறு இருந்தது. ஒருமுறை நான் புண்ணிய பூமிக்குச் சென்றபோது இந்தக் கிணற்றின் கரைக்குச் சென்றிருக்கின்றேன். இந்தக் கிணற்று நீரை நான் குடித்திருக்கின்றேன். இஸ்ரயேல் நாட்டிலேயே இந்தக் கிணற்றின் தண்ணீர்தான் மிகவும் சுவையானது. இந்தக் கிணற்றுக்கு அந்த ஊர்ப்பெண்கள் தண்ணீர் எடுக்க வருவார்கள். அவர்களில் ஒருத்தி மாபெரும் பாவி. அந்தப் பாவியைச் சந்திப்பதற்காக ஊதாரிப் பிள்ளை உவமையில் வரும் ஊதாரிப் பிள்ளைக்காக காத்திருந்த தந்தையைப் போல இயேசு காத்திருந்தார். யாருக்காக இயேசு காத்திருந்தாரோ அந்தப் பெண் வந்தாள்.

அவள் 5 ஆண்களோடு குடும்பம் நடத்தியவள். இயேசுவைச் சந்தித்தபோது அவள் ஆறாவது ஆணோடு வாழ்ந்துகொண்டிருந்தாள்.

தண்ணீர் எடுக்க வந்தவளிடம் இயேசு, பெண்ணே, நான் உனக்கு தாகமே எடுக்காத தண்ணீரைத் தருகின்றேன் என்றார். அவர் தாகமே தராத தண்ணீர் என்று குறிப்பிட்டது வரங்களையும் கனிகளையும் தரும் ஆற்றல்மிக்க தூய ஆவியாரையே.

அந்தப் பாவியோ, அப்படிப்பட்ட தண்ணீரை எனக்கு உடனே தாரும் என்றாள். இயேசுவோ, நான் தருகின்றேன். ஆனால் முதலில் நீ போய் உன் கணவரை அழைத்து வா என்றார். அவள் நினைத்திருந்தால் அவள் யாரோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தாளோ அவனை அழைத்து வந்து இவர்தான் என் கணவர் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அவள் இயேசுவிடம் பொய் சொல்ல விரும்பவில்லை.

அவள் ஒரு பெரிய பாவியாக இருந்தாலும் அவளிடம் உண்மையைச் சொல்லும் குணம் இருந்தது. எனக்குக் கணவரென்று யாருமில்லை என்று கூறிவிட்டாள். இயேசுவுக்கு உண்மை என்றால் மிகவும் பிடிக்கும். பிலாத்து இயேசுவைப் பார்த்து, நீ எதற்காக இந்த உலகத்தில் பிறந்தாய்? என்று கேட்டான். அதற்கு இயேசு, உண்மைக்குச் சான்று பகரவே, சாட்சி சொல்லவே, நான் உலகத்தில் பிறந்தேன் (யோவா 18:37-38) என்றார்.

ஆக, இயேசு பிறந்தது உண்மையை எடுத்துரைக்க. இயேசு வளர்ந்தது உண்மையை எடுத்துரைக்க, இயேசு இறந்தது உண்மையை எடுத்துரைக்க, இயேசு உயிர்த்தது உண்மையை எடுத்துரைக்க. ஆகவே, உண்மை என்றால் இயேசுவுக்கு மிகவும் பிடிக்கும்.

சமாரியப் பெண் பெரிய பாவியாக இருந்தாலும், அவளிடம் உண்மை பேசும் குணமிருந்ததால் இயேசு அவளுடைய பாவங்களையெல்லாம் மன்னித்து அவளுக்கு முதல் நற்செய்தியாளர் என்னும் பட்டத்தை அளித்தார். முதன் முதலில், இயேசுதான் மெசியா. இயேசுதான் கிறிஸ்து. இயேசுதான் ஆண்டவர் என்பதை உலகுக்கு அறிக்கையிட்டவள் அந்தச் சமாரியப் பெண்தான்.

அவள் சொன்ன உண்மைக்கு முன்னால் அவள் செய்த பாவங்களெல்லாம் ஒன்றுமில்லாமல் போயின. இது தவக்காலம். இந்த தவக்காலத்தில் நாம் இயேசுவிடமிருந்து பாவ மன்னிப்பு பெற ஓர் அருமையான வழி நீங்களும் நானும் உண்மை பேச முன் வருவதாகும். இயேசு உண்மை விரும்பியாக இருப்பதால் பொய் சொல்கின்றவர்களை அவர் ஒருபோதும் ஆசிர்வதிப்பதில்லை.

இதோ இந்த உண்மையை எடுத்துச்சொல்ல கதை ஒன்று! காட்டுக்குள் விறகு வெட்டி ஒருவன் விறகு வெட்டிக்கொண்டிருந்தான். அவன் விறகு வெட்டிக்கொண்டிருந்த இடத்திற்குப் பக்கத்தில் ஓர் ஆழமான கிணறு! கை நழுவி கோடரி கிணற்றுக்குள் விழுந்தது! செய்வதறியாது கலங்கிநின்ற விறகு வெட்டியின் முன்னால் கடவுள் தோன்றினார்! கடவுள் விறகு வெட்டியைப் பார்த்து. என்ன பிரச்சினை? என்றார்! விறகு வெட்டி நடந்ததைச் சொன்னான்! நான் உனக்கு உதவி செய்கின்றேன் எனச் சொல்லி, கடவுள் முதலில் ஒரு தங்கக் கோடரியை எடுத்துக்காட்டினார். விறகுவெட்டி, இது இல்லை என்று சொல்லிவிட்டான்! பிறகு வெள்ளிக் கோடரி ஒன்றைக் கடவுள் எடுத்துக் காட்டினார். இதுவும் என்னுடையது இல்லை என்று சொல்லிவிட்டான். கடவுள் மூன்றாவதாக இரும்புக்கோடரி ஒன்றை எடுத்துக் காட்டினார். விறகு வெட்டி, இதுதான் என்னுடையது என்றான். கடவுளோ. நீ உண்மை பேசியதால், தங்கக் கோடரியையும், வெள்ளிக் கோடரியையும் உனக்குப் பரிசாகத் தருகின்றேன் என்று சொல்லி, தங்கக் கோடரியையும், வெள்ளிக் கோடரியையும் விறகு வெட்டியிடம் கொடுத்து மறைந்துவிட்டார். உண்மை பேசுகிறவர்களைக் கடவுளுக்கு மிகவும் பிடிக்கும்.

இயேசு மலைப் பொழிவிலே (மத் 5:37) நீங்கள் பேசும்போது ஆம் என்றால் ஆம் என்று இருக்கட்டும், இல்லை என்றால் இல்லை என்று இருக்கட்டும்; இதைத்தவிர மற்ற அனைத்தும் சாத்தானிடமிருந்து வருகின்றன என்று கூறுகின்றார்.

ஆம். இயேசு நாம் எப்பொழுதும் உண்மையைப் பேச வேண்டும் என்று விரும்புகின்றார். உண்மையைப் பேசுகின்றவர்களின் பாவங்கள் அனைத்தையும் அவர் மன்னிக்கத் தயாராக இருக்கின்றார்.

யோவா 8:1-11-இல் பாவத்தில் பிடிபட்ட பெண், தான் ஒரு பாவி என்ற உண்மையை ஏற்றுக்கொண்டதால் அவளுக்குப் பாவ மன்னிப்புக் கிடைத்தது.

லூக் 19:1-10-இல் சக்கேயு தான் பாவி என்ற உண்மையை ஏற்றுக்கொண்டதால் அவனுக்குப் பாவ மன்னிப்பு கிடைத்தது.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதற்குப் பெயர்தான் பொய் !

இந்தத் தவக்காலத்திலே பொய்யைத் தவிர்த்து உண்மைக்கு முதலிடம் கொடுப்போம்! அப்போது நமது பாவங்கள் செந்தூரம் போல சிவப்பாக இருந்தாலும் இயேசு அவற்றைக் கழுவி வெண்பனியிலும் நம்மை வெண்மையாக்குவார்.

இன்று இதுவே நமது மன்றாட்டாக இருக்கட்டும்: எங்கும். எப்பொழுதும், எதிலும் உண்மையைப் பேசிய இயேசுவே! உமது மனத்தை சற்றுக் கடனாகத் தாரும்! நாங்கள் உம்மிடம் வரும்போது அதை உம்மிடம் திருப்பிக் கொடுத்துவிடுகின்றோம். ஆமென்.
மேலும் அறிவோம்:

தன்நெஞ்(சு) அறிவது பொய்யற்க : பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும் ( குறள் : 293).

பொருள் : தன் உள்ளத்தில் தெளிவாகத் தெரிந்த உண்மையை மறைத்துப் பொய் சொல்லக் கூடாது! அவ்வாறு பொய் பேசினால் பின்னர் அவன் நெஞ்சே அவனைக் குற்றம் சாட்டித் துன்புறுத்தும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

காதலர் இருவர் ஓர் ஆழமான கிணற்றுக்குள் பேசிக் கொண்டிருந்தனர், ஏன்? என்று அவர்களைக் கேட்டதற்கு, "எங்கள் காதல் ஆழமான காதல்" என்றனர். யோவான் நற்செய்தி மிகவும் ஆழமான நற்செய்தி. மற்ற ஒத்தமை நற்செய்தியாளர்களைவிட யோவான் நற்செய்தி கிறிஸ்துவின் தனித்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இத்தனித்தன்மையை இந்த ஆண்டு தவக்கால மூன்று ஞாயிறுகளும் மையப்படுத்துகின்றன.

சமாரியப் பெண்ணுடன் கிறிஸ்து உரையாடி, "வாழ்வு தரும் தண்ணீர் நானே" (காண்: யோவா 4:10) என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார் (தவக்காலம் 3-ஆம் ஞாயிறு), பிறவியிலேயே பார்வையற்ற ஒருவர்க்குப் பார்வை அளித்து, "நாளே உலகின் ஒளி" (யோவா 9:5) என்ற உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார் (தவக்காலம்.) 4-ஆம் ஞாயிறு). இலாசரைக் கல்லறையிலிருந்து உயிர்த்தெழச் செய்து, "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே" (யோவா 11:25) என்னும் மாபெரும் உண்மையை உயர்த்திப் பிடிக்கிறார் (தவக்காலம் 5-ஆம் ஞாயிறு). எனவே கிறிஸ்துவின் தனித்தன்மையை உணர்த்துவதே யோவான் நற்செய்தியின் குறிக்கோள். இந்தப் பின்னணியை மறந்து மறையுரை ஆற்றுவது யோவானின் நற்செய்தியைப் பிரதிபலிக்காது; அது நுனிப்புல்லை மேய்வதாகும்.

இன்றைய முதல் வாசகத்தில் பாலைதிலத்தில் தண்ணீர் கேட்டு முறையிட்ட இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் பாறையிலிருந்து தண்ணீர் கொடுக்கிறார். கிறிஸ்துவே அந்தப் பாறை (1 கொரி 10:4) என்று விளக்கம் கூறுகிறார் பவுல். விவிலியம் முழுவதுமே கிறிஸ்துவையே மையமாகக் கொண்டுள்ளது. அவருக்கு வெளியே ஒன்றுமில்லை. சமாரியப் பெண் படிப்படியாக கிறிஸ்து யார் என்ற முழு உண்மையை அறிகிறார். முதல் நிலையில் அவர் கிறிஸ்துவை "ஐயா” என்று அழைக்கிறார்; அவரைச் சாதாரண மனிதராக, ஒரு யூதனாகப் பார்க்கிறார். இரண்டாம் நிலையில் அப்பெண் கிறிஸ்துவை "ஓர் இறைவாக்கினராகக் காண்கிறார்" (யோவா 4:19), மூன்றாம் நிலையில் அவர் அவரை "மெசியாவாக" இனம் காண்கிறார் (யோவா 4:29). இறுதி நிலையில் அவரும் மற்றச் சமாரியரும் கிறிஸ்துவை "உலசு மீட்பராக"க் (யோவா 4:42) கண்டு ஏற்றுக் கொள்கின்றனர்.

சமாரியப் பெண்ணுடன் கிறிஸ்து நடத்திய உரையாடல் மறைக்கல்வி முறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கிறிஸ்து யார் என்பதைப் படிப்படியாக உணர்த்துவதே மறைக்கல்வியின் இலக்கு. கிறிஸ்துவை “உலக மீட்பராக" ஏற்றுக் கொள்வதற்கு வழிவகுப்பதே மறைக்கல்வியின் இறுதிப்பயன். திருச்சபை எந்தவொரு கோட்பாட்டியலையும் முன்வைக்காமல், கிறிஸ்து என்ற ஆளை முன்வைக்கிறது.

மனமாற்றம் அடைந்த சமாரியப் பெண் ஓர் ஊர் முழுவதையும் கிறிஸ்துவிடம் கொண்டுவந்த ஒரு நற்செய்திப் பணியாளராக உருவெடுக்கின்றார். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையுடன் செயல்படுகின்றார். உண்மையான மறைக்கல்வி, மறைக்கல்வி பயிலுகின்றவர்களிடம் நற்செய்திப்பணி ஆர்வத்தையும் உருவாக்க வேண்டும். இல்லையென்றால், அது முழுமையான மறைக்கல்வி ஆகாது.

சமாரியப் பெண் சுற்றி வளைத்துக் கொண்டு கிறிஸ்துவுடன் விவாதிக்கின்றார்; சாதிப்பிரச்சினை, வழிபாடு, ஆலயம் ஆகிய பலவற்றைப் பற்றி கிறிஸ்துவுடன் பேசித் தன்னைப் பற்றி ஒன்றுமே கூறவில்லை. கிறிஸ்து அவருடைய அந்தரங்க வாழ்வைச் சுட்டிக் காட்டுகின்றார். "உம் கணவரைக் கூட்டிக்கொண்டு வாரும்" (யோவா 4:16) என்று கூறி அப்பெண் தன்னுணர்வு பெறச் செய்கின்றார். அந்நிமிடமே அவர் புதுப்பிறவி எடுக்கின்றார். புதுப்படைப்பாக மாறுகிறார். கிறிஸ்துவின் உரையாடல் அப்பெண்ணின் வாழ்வை மாற்றியது. இன்று விவாதம் செய்யப் பலர் உள்ளனர்; ஆனால் உரையாடல் நடத்தத்தான் ஆள்கள் இல்லை!

ஓர் இளைஞன் தன்னுடைய 'பேண்ட்' பின்பக்கம் கிழிந்திருந்ததால் சட்டையை வெளியேவிட்டு அந்தக் கிழிசலை மறைப்பான். முன்பக்கம் சட்டை கிழிந்திருந்தால் சட்டையைப் ''பேண்ட்'க்குள்ளே விட்டு அந்தக் கிழிசலை மறைப்பான். ஒருமுறை அவனுடைய 'பேண்ட்' பின்னாலும் சட்டை முன்னாலும் கிழிந்து போய்விட்டது. பின்பக்கம் சட்டையை வெளியேவிட்டு 'பேண்ட்ஸின்' கிழிசலையும், முன்பக்கம் சட்டையை 'பேண்ட்ஸ்'க் குள்ளே விட்டுச் சட்டையின் கிழிசலையும் மறைத்தான்.

அவ்வாறே நமது வாழ்க்கையின் கிழிசல்களை மூடி மறைக்கின்றோம்; பல்வேறு மூடிகளை அணிந்து மிகத் திறமையுடன் நடிக்கிறோம். மற்றவர்களைப் பற்றியும் மற்றக் காரியங்களைப் பற்றியும் விமர்சனம் செய்கின்றோம். இவ்வாறு திசை திருப்பும் யுக்தியைக் கையாளுகின்றோம். சமாரியப் பெண்போல் நமது உண்மை நிலையை என்று ஏற்றுக்கொள்கின்றோமோ அன்றுதான் நமது மனமாற்றம் தொடங்கும். மற்றவர்களுடைய குற்றத்தை நாம் காண்பது போன்று நமது குற்றத்தையும் கண்டால் நமக்குத் தீமை எதுவும் வராது.

"ஏதிலார் குற்றம்போல் நம்குற்றம் காண்கிற்பின்
தீதுஉண்டோ மன்னும்உயிர்க்கு" (குறள் 190)

இறுதியாக நாம் கடவுளை எந்த இடத்தில் (சமாரியாவில் அல்லது எருசலேமில்) வழிபடுகின்றோம் என்பது முக்கியமல்ல; மாறாக உள்ளார்ந்த வழிபாடு நடத்துவதே முக்கியம் என்ற உண்மையைக் கிறிஸ்து சமாரியப் பெண் வழியாக நமக்கு வெளிப்படுத்துகின்றார். *கடவுளை அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்" (யோவா 4:23).

நெஞ்சமே கோவில் நினைவே சுகந்தம் அன்பே
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே-தாயுமானவர்.

நெஞ்சத்தைக் கோவிலாக்கி, நினைவை மல்லிகையாக்கி, அன்பை மஞ்சள் நீராக்கிக் கடவுளை வழிபடும் காலம் எக்காலம்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தண்ணீர்! தண்ணீர்!

அன்னை தெரசாவின் அன்புப் பணியை அடையாளப்படுத்தும் வகையில் அன்னை நிறுவிய கன்னியர் இல்லங்களில் பளிச்செனக் கண்ணில் படுபவை இரண்டு ஆங்கில வரிகள். 1) இல்ல முகப்பில் “Let us do something beautiful for God” கடவுளுக்காக ஏதாவது அழகானது செய்வோம். இது அவரது துறவுப் பயணத்துக்கான இலக்கு! 2) சிற்றாலயத்தில் பாடுபட்ட திரு உருவம். அதன் அருகில் ““I thirst” தாகமாய் இருக்கிறது. இது அவரது அருள் பணிக்கான உந்து சக்தி

கல்வாரியின் "தாகமாய் இருக்கிறது" (யோ.19:28) - இயேசு வாழ்நாளெல்லாம் கொண்டிருந்த தாகத்தின் கொடுமுடி. இயேசுவின் அன்பர்களது வாழ்வுக்கும் பணிக்கும் உந்துதலும் அர்த்தமும் உணர்வும் நிறைவும் தரும் எழுச்சி முழக்கம்.

தாகம் கொடியது. நீரில்லா வறட்சி கொடியது. (ஆமோ.8:11) "மனிதர் மட்டுமல்ல, செடி கொடிகளும் 'தண்ணீர் தண்ணீர்' என்று தாகத்தினால் கதறுகின்றன. தண்ணீர் தேவைப்படுகிற போது வினாடிக்கு 10இலட்சம் வீதம் மிக உயர் அதிர்வெண்களைக் கொண்ட ஒலியை எழுப்புகின்றன” என்று விவசாய நிபுணர் ஹாம்லின் ஜோன்ஸ் தன் ஆராய்ச்சியில் தெளிவுபடுத்துகிறார் (தினமணி 1989 ஜூன் 3) தண்ணீர் இல்லாத போது பூமி காய்ந்து வெடித்துப் பிளக்கிறது - மனித உதடுகள் கூடத்தான்.

"தண்ணீர்! தண்ணீர்1 இது தமிழ்த்திரைப்படத்தில் அத்திப்பட்டு மக்களின் தாகக் குரல் மட்டுமல்ல. பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களின் முணுமுணுப்பாக எழுந்த முறையீடும் கூட. இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து விடுவித்து எப்படியெல்லாம் வழிநடத்தினார் இறைவன்! அத்தனையும் மறந்து குடிக்கத் தண்ணீர் கிடைக்கவில்லை என்பதற்காக மோசேக்கு எதிராக முறுமுறுத்து எழுந்தனர். பாவம், "மோசே ஆண்டவரிடம் இந்த மக்களோடு நான் என்ன செய்வேன்? இன்னும் கொஞ்சம் போனால் என்மேல் கல்லெறி வார்களே' என்று கதறினார்" (வி.ப.17:4). அது மட்டுமல்ல, கடவுள் அவர்கள் நடுவே இருக்கிறாரா இல்லையா என்று சந்தேகப்படத் தொடங்கினார் (வி.ப.17:7)

ஆனால் கடவுள் அந்த மக்களை அவர்கள் பாவத்துக்காகத் தண்டிக்கவில்லை. மாறாகப் பாறையிலிருந்து நீர் ஊற்றெடுக்கச் செய்து அவர்களின் தாகத்தைத் தணித்தார். தாகத்தைத் தீர்த்தது மட்டுமல்ல, இறைவனின் உடனிருப்பையும் உணர்த்தியது. "கிறிஸ்துவே அப்பாறை" (1 கொரி.10:4) என்கிறார் திருத்தூதர் பவுல்.

இந்தத் தண்ணீர்ப் பிரச்சனையை வைத்தே ஆன்மீகத்தாகப் பிரச்சனையை எழுப்பித் தீர்வு காணும் இயேசுவின் அற்புதச் செயல் வியப்புக்குரியது!

"குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்" (யோ.4:8) என்று சமாரியப் பெண்ணை இயேசு கேட்டது தனது தாகத்தைத் தணித்துக் கொள்ளவா? அவர் தண்ணீர் பருகினாரா? ஆன்மதாகத்தின்முன் அவரது உடல்தாகம் எப்பொழுதோ பறந்துவிட்டது. தொலைந்த ஆடுகளைத் தேடும் பண்பு, உயர்ந்தவனோ, தாழ்ந்தவனோ, புனிதனோ பாவியோ, ஆணோ, பெண்ணோ, மனித மாண்புடன் செயல்படும் தீரம், தனக்கு உணவும் பானமும் தந்தையின் திருவுளமே என்ற உறுதிப்பாடு. போன்ற வழக்கமான கருத்துக்களுக்கிடையே இழையோடும் எண்ணம் தாகம் தீர்க்கும் “வாழ்வு தரும் தண்ணீர்” பற்றியது.

அந்தச் சமாரியப் பெண்ணின் ஆன்மா வறண்டு காய்ந்து வெடித்துக் கிடந்தது. அவளது ஆன்மதாகம் நொடிக்கு நொடி மிக உயர் அதிர்வெண்களைக் கொண்ட ஒலியை எழுப்பியது. அது மற்ற மனிதர்களின் காதில் விழவில்லை. இறைமகன் இயேசுவின் மென்மை யான செவிகளில் எதிரொலித்தது. அவளது ஆன்மீகத் தேவையை உணர்ந்தார். ஆற்றுப்படுத்தும் கலையை அற்புதமாக வெளிப்- படுத்தினார்.

"நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது. நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்" (யோ.4:14) என்று இயேசு சொன்னதன் உட்பொருளை அவள் உணாரவில்லை. அதன் சொற்பொருளை மட்டுமே எடுத்துக் கொண்டாள். "வாழ்வு தரும் தண்ணீர்”. இயேசு தரும் வெளிப்பாட்டை, இறை ஞானத்தை, தெய்வீக உயிரோட்டத்தைக் குறிக்கும்.

"யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும். என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்... அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடும்'' என்ற இயேசுவின் கூற்று, அது தூய ஆவியைக் குறித்தே சொன்னது என்ற நற்செய்தியாளர் யோவானின் விளக்கம் ஒப்பீட்டுச் சிந்தனைக்குரியது (யோ.7:37-39). இந்த வாழ்வு தரும் தண்ணீரைப் பெற்றதன் அடையாளமே சமாரியப் பெண்ணின் மனமாற்றம்.

சமாரியப் பெண்ணைப் பொருத்தவரை அவள் வழியாகவே கடவுளை நோக்கி ஒரு சாலை அமைக்கிறார் இயேசு. சுய தரிசனம் நிச்சயமாகத் தெய்வ தரிசனத்தில் கொண்டு போய் நிறுத்தும்

 
		தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை 
		தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் 
		தன்னை அறியும் அறிவை அறிந்தபின் 
		தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே. - திருமூலர்
		

நம்மைப் பற்றி நாம் அறிந்திருப்பது, நம்மைப் பற்றிப் பிறர் அறிந்திருப்பது, தம்மைப் பற்றி இறைவன் அறிந்திருப்பது. மூன்றையும் தெரிந்து கொள்ளும் போது முழுமையாகத் தெரிந்து கொள்கிறோம்.

என்று சமாரியப் பெண் மனம் மாறினாளோ, அன்று தன்னையே முழுமையாகப் புரிந்து கொண்டாள் - தனது தனி வாழ்வு பற்றி, தனது இனத்தைப் பற்றி, தனது சமயத்தைப் பற்றி. என்று தன்னைப் புரிந்து கொண்டாளோ அன்று ஆண்டவனையும் அறிந்து கொள்கிறாள் - சாதாரண யூதராக என்று தொடங்கி அவரை மெசியாகவாக, உலக மீட்பராக. இயேசுவின் சாட்சியாகவும் மாறுகிறாள்.

சுயதரிசனமும் தெய்வ தரிசனமும் நம் தாகத்தைத் தணிக்கும், பிறர் தாகத்தைத் தீர்க்கப் பணிக்கும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இயேசுவும் சமாரியப் பெண்மணியும்

2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு நாடு, பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அவ்வேளையில் உருவான சகதி வெள்ளத்திலிருந்து ஓர் இளம்பெண் வெளியேறிய நிகழ்வு, (Woman escapes raging mudslide in Peru) தலைப்புச் செய்தியானது.

தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், தண்ணீரும், சகதியும் இணைந்து வெள்ளமெனப் பாய்ந்து செல்கின்றன. இந்தச் சகதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட, Evangelina Chamorro Diaz என்ற இளம்பெண், கையில் அகப்பட்ட மரக்கிளை ஒன்றை இறுகப்பற்றி, சகதியிலிருந்து வெளியேறி வந்தார். (Sky News)

பாய்ந்து செல்லும் தண்ணீரில் எதிர் நீச்சல் அடிப்பதே பெரும் சவால். இந்தப் பெண், சுழன்று செல்லும் சகதியில் எதிர் நீச்சல் அடித்து வெளியேறியது அவரது உடல், உள்ள வலிமையை பறைசாற்றுகிறது. இழுத்துச் செல்லும் சகதியின் சக்திக்கு, தன்னைக் கையளித்துவிடாமல், எதிர் நீச்சலடித்து, போராடி, கரைசேர்ந்த, 32 வயது நிறைந்த Evangelina அவர்கள், இன்றைய ஞாயிறு சிந்தனைக்கு அடித்தளமிடுகிறார்.

இவ்விளம்பெண்ணின் பெயர், முதலில், நம் கவனத்தை ஈர்க்கிறது. Evangelina என்ற பெயரின் பொருள், 'நற்செய்தி'. சகதியிலிருந்து மீண்டெழுந்த இவ்விளம்பெண், இன்னும் பல ஆண்டுகள், ஒரு நற்செய்தியாக வாழ்வார் என்பதை நாம் எதிர்பார்க்கலாம். சகதியிலிருந்து வெளியேறி, நற்செய்தியாக வாழும் Evangelina அவர்கள், இன்றைய நற்செய்தியில் (யோவான் 4: 5-42) நாம் சந்திக்கும் சமாரியப் பெண்ணை நினைவுக்குக் கொணர்கிறார்.

இயேசுவின் காலத்தில், ஆணாதிக்கச் சமுதாயத்தில், ஒரு பெண்ணாக, சமாரியப் பெண்ணாக வாழ்வதென்பது, கடுமையான எதிர் நீச்சல்தான். அதிலும், இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள பெண், ஐந்து கணவர்களுடன் வாழ்ந்தபிறகு, ஆறாவது மனிதரோடு வாழ்பவர். அவரை இந்நிலைக்கு உள்ளாக்கியது, அவருடன் வாழ்ந்த ஆண்களா அல்லது, அவரது சொந்த முடிவா என்பது தெரியவில்லை. ஆனால், பொதுவாக, நம் சமுதாயத்தில், முடிவெடுக்கும் நிலையில் பெண்கள் இல்லையெனினும், அவர் மீது பழிகள் சுமத்தப்படுவதை நாம் அறிவோம். மதம், நன்னெறி, ஊர் கட்டுப்பாடு என்ற பல அளவுகோல்களின் அடிப்படையில், ஊரிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட இப்பெண் மீது, கண்டனச் சேறு எப்போதும் வீசப்பட்டிருக்கவேண்டும்.

இன்றைய நற்செய்தியின் அறிமுக வரிகளில், "அப்போது ஏறக்குறைய நண்பகல்" (யோவான் 4:6) என்ற குறிப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தப்பெண், தன் சொந்த ஊரிலேயே, எவ்வளவு தூரம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் என்பதை, நற்செய்தியாளர் யோவான் இந்த சிறு குறிப்பின் வழியே உணர்த்துவதாக, ஒருசில விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர்.

எந்த ஊரிலும், பெண்கள், காலையில், சிறு, சிறு குழுக்களாக, பல கதைகள் பேசியபடி கிணற்றிற்குச் சென்று, நீர் எடுத்து வருவது வழக்கம். இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் இப்பெண்ணோ, நண்பகலில் நீர் எடுக்கச் செல்கிறார். காரணம் என்ன? அவரும், மற்றவர்களோடு காலை நேரத்தில் நீர் எடுக்கச் சென்றிருப்பார். ஆனால், அவ்வேளையில், மற்ற பெண்கள், அவரைப்பற்றி ஏளனமாகப் பேசி, கண்டனத் தீர்ப்புக்கள் வழங்கியிருப்பர். நடத்தை சரியில்லாத அவர், அந்தக் கிணற்றில் நீர் எடுத்தால், கிணற்று நீரே தீட்டுப்பட்டுவிடும் என்று சொல்லி அவரை மற்ற பெண்கள் தடுத்திருக்கக்கூடும். ஏனைய பெண்கள் விடுத்த கண்டனக் கணைகளால் காயப்படவேண்டாம் என்ற நோக்கத்தில், அவர், ஆள் நடமாட்டம் அதிகமில்லாத நண்பகல் வேளையில் தண்ணீர் எடுக்கச் சென்றிருப்பார். தான் வாழும் சமுதாயம், தன்மீது வாரியிறைத்த சேற்றையும், சகதியையும் கழுவமுடியாமல் வாழ்ந்துவந்த அப்பெண்ணை, அச்சகதியிலிருந்து மீட்டு, நற்செய்தியை அறிவிப்பவராக மாற்றுகிறார், இயேசு. இந்த அற்புதத்தை, இன்றைய நற்செய்தியாக நாம் பகிர்ந்துகொள்கிறோம்.

உயிர்ப்புத் திருவிழாவை நோக்கி, நாம் தவக்காலப் பயணத்தை மேற்கொண்டுள்ளோம். இந்த உயிர்ப்புப் பெருவிழாவுடன் தொடர்புடைய மூன்று அடையாளங்கள் - தண்ணீர், ஒளி, வாழ்வு. இந்த ஞாயிறன்றும், இதைத் தொடரும் இரு ஞாயிறுகளிலும், இம்மூன்று அடையாளங்களை வலியுறுத்தும் நற்செய்தி வாசகங்கள் நமக்குத் தரப்பட்டுள்ளன. இயேசு, சமாரியப் பெண்ணைச் சந்திப்பதும், தண்ணீர் குறித்து பேசுவதும், இந்த வாரம் தரப்பட்டுள்ள நிகழ்ச்சி (யோவான் 4: 5-42). பார்வை இழந்த ஒருவருக்கு, இயேசு, பார்வை வழங்குவதும், ஒளியைக் குறித்துப் பேசுவதும், அடுத்த வாரம் நாம் வாசிக்கும் நற்செய்தி (யோவான் 9: 1-41). இறந்த இலாசரை உயிர்ப்பித்து, வாழ்வைப் பற்றி இயேசு பேசுவது, மூன்றாம் வாரம் தரப்பட்டுள்ள நற்செய்தி (யோவான் 11: 1-45).

மேலும், தவக்காலத்தின் உயிர் நாடியான மாற்றம் என்ற கருத்து, இந்த மூன்று நிகழ்வுகளிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சமாரியப் பெண்ணின் நெறி பிறழ்ந்த வாழ்விலும், அவர் கொண்டிருந்த இறை நம்பிக்கையிலும் மாற்றம் நிகழ்கின்றது. பார்வை இழந்தவர், தன்னை குணமாக்கியவர் யார் என்பதை அறியாமலேயே அவர் மீது நம்பிக்கை கொண்டு, அவரை, பரிசேயர்களுக்கு முன் உயர்த்திப் பேசுகிறார். பின்னர், இயேசுவைச் சந்தித்ததும், முழு நம்பிக்கையுடன் அவரிடம் சரணடைகிறார். மூன்றாவது நிகழ்வில், உயிரிழந்து, புதைக்கப்பட்ட இலாசர், மீண்டும் உயிர் பெற்றெழும் உன்னத மாற்றம் நிகழ்கிறது.

சமாரியப் பெண்ணிடம் மாற்றங்களை உருவாக்க, இயேசு தேர்ந்தெடுத்த பள்ளிக்கூடம்... ஒரு கிணற்று மேடு. அதுவும், யூதர்களின் வெறுப்புக்கும், ஏளனத்திற்கும் உள்ளான சமாரியர் வாழ்ந்த பகுதியில் இருந்த ஒரு கிணற்று மேடு. ஆச்சரியங்களைத் தருவதில் இயேசுவை மிஞ்ச, இனி ஒருவர் பிறந்துதான் வரவேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. யோவான் நற்செய்தியில் இன்று நாம் சந்திக்கும் இயேசு, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்... சொல்லப்போனால், அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார். ஒரு சராசரி யூதர் செய்யக்கூடாத பல செயல்களை இயேசு துணிந்து செய்கிறார். பல நூறு ஆண்டுகள், பகைமை, பிரிவு, பிளவு ஆகிய உணர்வுகளில் ஊறிப்போயிருந்த யூதர், சமாரியர் என்ற இரு குலத்தவரின் பிரதிநிதிகளாக, இயேசுவும், சமாரியப் பெண்ணும், கிணற்றடியில் சந்திக்கின்றனர்.

இயேசு அந்தச் சமாரியப் பெண்ணிடம் வலியச்சென்று "குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்" (யோவான் 4:8) என்று கேட்கிறார். வெகு எளிதாக, மேலோட்டமாக ஆரம்பமான இந்த உரையாடல், வெகு ஆழமான உண்மைகளைத் தொடுகின்றது. நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து உரையாடல்களிலும், யோவான் நற்செய்தி 4ம் பிரிவில் இயேசுவுக்கும், சமாரியப் பெண்ணுக்கும் இடையே நிகழும் இந்த உரையாடல்தான் மிக நீளமானது. இந்த உரையாடலின் முடிவில், ஊரால் ஒதுக்கப்பட்டிருந்த ஒரு பெண், அந்த ஊரையே இயேசுவின் பாதம் கொண்டு வந்து சேர்த்த பெருமையைப் பெறுகிறார். இறைவனைப்பற்றிப் பேச, யாருக்கு, சிறிதும் தகுதியில்லை என்று உலகம் ஒதுக்கிவைத்ததோ, அவர்களே, இயேசுவை உலகறியச் செய்த தலைசிறந்த சாட்சிகள் ஆயினர் என்பதை, விவிலியமும், திருஅவை வரலாறும், மீண்டும், மீண்டும் கூறியுள்ளன.

இந்த நற்செய்திப் பகுதி, இன்றைய உலகில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளைக் குறித்து சிந்திக்க அழைக்கிறது. கிணற்று மேட்டில் நடக்கும் ஓர் உரையாடல் இது. கிணற்று மேடு, டீக்கடை, ஊரின் நடுவே உள்ள ஆலமரத்தடி என்று, வெகு சாதாரண, வெகு எளிய இடங்களில், சமுதாயம், அரசியல், வாழ்வின் அடிப்படைத் தத்துவங்கள் அலசப்படுவது, நமக்கெல்லாம் தெரிந்ததுதான். மிகச் சாதாரணமான இவ்விடங்களில் இறைவனைப் பற்றியப் பாடங்களையும் கற்றுக்கொள்ளலாம் என்பதை, கிணற்று மேட்டில் நடக்கும் உரையாடல் வழியே, இயேசு, இன்று நமக்கு உணர்த்துகிறார்.

அடுத்ததாக, தன் தாகத்தை தணிக்க தண்ணீர் கேட்கும் இயேசுவிடம் சமாரியப் பெண், யூதர்களுக்கும், சமாரியருக்கும் இடையே நிலவும் பாகுபாடுகளை நினைவுறுத்துகிறார். தவித்த வாய்க்குத் தண்ணீர் தருவதிலும், சமுதாயப் பிரிவுகள் குறுக்கிடுவதை, இந்த உரையாடல் தெளிவாக்குகிறது.

தண்ணீரைப்பற்றி பேசும்போது, நெருடலான பல எண்ணங்கள் மனதில் அலைமோதுகின்றன. இறைவன் தந்த அற்புதக் கொடைகளில் ஒன்றான தண்ணீரை, பல வழிகளில் நாம் சீரழித்துள்ளோம். தண்ணீர் தொடர்பாக மனித சமுதாயம் இழைத்துள்ள பல குற்றங்களில், சமுதாயத்தைப் பிரிக்கும் ஓர் ஆயுதமாக தண்ணீரை நாம் மாற்றியுள்ளோம் என்பதே, நமது பெரும் குற்றம். சாதிக்கொரு கிணறு, குளம் என்று நாம் உருவாக்கிய அவலம், இன்றும் பல இடங்களில் தொடர்கின்றது.

தண்ணீரை மையப்படுத்தி வேறு வகையான பிரிவுகள் இன்று உருவாகியுள்ளன. தண்ணீர், ஒரு பொருளாதார முதலீடு என்பதை உணர்ந்துள்ள பல செல்வர்கள், தண்ணீரைத் தனியுடைமையாக்கி வரும் கொடூரம் பெருகிவருகிறது. தவித்த வாய்க்குத் தண்ணீர் தந்த நம் பண்பாடு குறைந்து, மறைந்து, தண்ணீரைக் காசாக்கும் வியாபாரம் வளர்ந்து வருகிறது. இந்த வியாபாரத்தால், தண்ணீர், 'நீலத் தங்கமாய்' (Blue Gold) மாறி வருகிறது.

தண்ணீர் இவ்வுலகினர் அனைவருக்கும் உரிய சொத்து என்பதை நினைவுறுத்த, ஐ.நா. நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும், மார்ச் 22ம் தேதியை, உலகத் தண்ணீர் நாள் என்று சிறப்பிக்கிறது. இந்த நாளையொட்டி, நியூ யார்க் நகரில் மார்ச் 22 முதல் 24 முடிய ஐ.நா. நிறுவனத்தில் தண்ணீர் கருத்தரங்கு பன்னாட்டளவில் நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில் மக்களின் நலனை முன்னிறுத்தும் முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி பல சமுதாய அமைப்புகள் போராடி வருகின்றன. அவற்றில், Avaaz என்ற அமைப்பு, உலக மக்களின் பொதுசொத்தான நதிகளைக் காப்பதற்கு உலக மக்கள் இணைந்து விண்ணப்பிக்க வேண்டும் என்ற போராட்டத்தை நடத்திவருகிறது.

பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆலைகளிலிருந்து வெளியாகும் அமிலம் கலந்த கழிவுகளால் உலகில், நைல், கங்கை, அமேசான் போன்ற மாபெரும் நதிகள் சிறிது, சிறிதாக இறந்துவருகின்றன. அதேபோல், இந்நதிகள், வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களின் குப்பைத் தொட்டிகளாகவும் மாறி வருகின்றன. இந்தப் போக்கை தடுத்து நிறுத்தவில்லையெனில் இன்னும் 2 ஆண்டுகளில், உலகின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பேர் தண்ணீரின்றி தவிக்கும் நிலை உருவாகும் என்ற காரணத்தை முன்னிறுத்தி, நதிகளைக் காக்கும் போராட்டத்தின் குரல் ஐ.நா. கருத்தரங்கில் ஒலிக்க வேண்டும் என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் மற்றொரு காந்தி என்ற புகழுக்குரியவரும், இயற்கையைப் பாதுகாக்கப் பல வழிகளிலும் போராடி, 2021ம் ஆண்டு தன் 94 வயதில் இறையடி சேர்ந்த பசுமை பரட்சி வீரருமான சுந்தர்லால் பகுகுணா அவர்களின் கூற்று நினைவில் கொள்ளவேண்டிய ஒன்று: "முதல், இரண்டாம் உலகப் போர்கள் ஐரோப்பிய நாடுகளின் தீராதப் பேராசை பசியால் உருவாயின. மூன்றாம் உலகப் போரென்று ஒன்று வந்தால், அது நீரைப் பங்கிடுவது குறித்துதான் எழும்." தண்ணீரை ஒரு பிரிவினை ஆயுதமாகப் பயன்படுத்துவோருக்கும், தனியுடமைத் தங்கமாகப் பாவிக்கும் சுயநலச் செல்வந்தர்களுக்கும், சமாரியக் கிணற்றடியில் நடத்திய ஒரு பாடத்தின் வழியாக, இயேசு சாட்டையடி வழங்குகிறார்.

இறைவனின் கொடையான தண்ணீரை, சாதி, இனம், பொருளாதாரம் என்ற கூறுகளில் பிரித்துள்ளது போதாதென்று, இறைவனையும், பல காரணங்களுக்காக, பிரித்து, கூறுபோடும் மடமை முயற்சிகளில் மனித சமுதாயம் ஈடுபட்டுள்ளது என்பதையும், இயேசு, இன்றைய நற்செய்தியில் சுட்டிக்காட்டுகிறார். இறைவனைத் தொழுவதற்கு, மலைகளையும், எருசலேம் புனித நகரையும், தேடாதீர்கள் என்று கூறும் இயேசு, தொடர்ந்து அந்த சமாரியப்பெண்ணிடம் கூறும் அழகிய எண்ணங்கள் இன்றைய நற்செய்தியில் பதிவாகியுள்ளன:

இயேசு சமாரியப் பெண்ணிடம், “அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்... உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்” என்றார். (யோவான் 4: 21,23-24)

இறைவனைச் சிறைப்படுத்தும் இலக்கணங்கள் அனைத்தும் இன்றைய நற்செய்தியில் அழிக்கப்படுகின்றன. அதேபோல், மனிதர்கள்மீது நாம் சுமத்தும் பாகுபாடுகள், முத்திரைகள் எல்லாம் அழிக்கப்படுகின்றன.

மனிதர்கள் வகுத்த வரம்புகளைத் தாண்டிய, உண்மை இறைவனை உள்ளத்தில் கண்டு, அவரை உள்ளத்தில் வழிபடுவதற்கு இந்தத் தவக்காலம் நமக்கு உதவட்டும்.

அதேபோல், தவித்த வாய்க்குத் தண்ணீர் தருவதிலும் பிளவுகளை வளர்த்துவரும் நம் சமுதாயம், பாகுபாடுகளைத் தாண்டி, உயிருள்ள ஊற்றான இறைவனைப் பருகவும் இந்த தவக்காலம் நமக்கு உதவுவதாக.

சமுதாயம் உருவாக்கியுள்ள பெண்ணடிமைத்தனம் என்ற சகதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் பெண்கள், இறை நம்பிக்கை என்ற கிளைகளைப் பற்றி, இந்த சகதி வெள்ளத்திலிருந்து வெளியேறுவதற்குத் தேவையான துணிவைப் பெறவேண்டும் என்று மன்றாடுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

முதல் வாசகப் பின்னணி (வி.ப. 17:3-7)

'மன நிறைவு என்பது மனிதனுக்கு எட்டாக்கனி' என்பது பழமொழி. இஸ்ரயேல் மக்களுக்குப் பாலைவனப்பயணம் சலிப்பை தந்தது. அதன் விளைவாக மோயீசனுக்கு எதிராய் முணுமுணுக்க தொடங்கினர் இஸ்ரயேல் மக்கள். தான் தேர்ந்து கொண்ட இனம் எகிப்தில் அடிமைத்தனத்தில் அல்லல்படுகிறது. அழிந்து போய்விடக் கூடாது என்று மோயீசன் தலைமையில் அவர்களை அற்புதமாக மீட்டு செங்கடலை பிளந்து கடந்து பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு அழைத்து வருகிறார் இறைவன். வந்த வழி- யெல்லாம் பாலைவனத்தில், மன்னாவும், காடைகளும் இருந்தன. இவை மக்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தின. ஆண்டவரை சோதித்து மோயீசனுக்கு எதிராய் முணுமுணுக்கத் தொடங்கி விட்டனர். ஆனால் ஆண்டவரின் பரிவு அவர்களோடு இருந்தது.

இரண்டாம் வாசகப் பின்னணி (உரோ. 5:1-2,5-8)

உரோமை மக்களை விசுவாசத்தில் ஊக்குவிக்க, தூய பவுல் இந்த மடலை எழுதுகிறார். இந்த மடல் ஆழ்ந்த இறையியல் கருத்துக்களைக்கொண்டது. கிறிஸ்தவ விசுவாசத்தை கொடையாக கொண்டு பாவத்திற்கும் வேதனைக்கும் மத்தியில் இறைவனுக்கு ஏற்புடையவராக வாழும்போது அளவிட முடியாத ஆண்டவரின் அன்பை கொடையாகப் பெறுவோம். ஏனென்றால் தன் ஒரே பேரான மகனை, பாவத்தில் வாழும் மனித இனத்தின் மத்தியில் இறைவன் அனுப்பினார். அவரது இரத்தத்தின் வழியாய் நம்மை மீட்டு தம் கொடைகளால் நம்மை நிரப்புகிறார்.

நற்செய்தி வாசகப் பின்னணி (யோவான் 4:5-42)

தடைகளை உடைத்தெறிகிறார் இயேசு. இன்று, நேற்று ஏற்பட்ட பகை உணர்வு அல்ல. ஆதியிலே இருந்து உறவுகள் அறுந்து போயிற்று. யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும், எப்போதும் பகைமை- தான். கி.மு. 722-இல் பிரிந்த உறவை "மாதே கொஞ்சம் குடிக்க நீர் கொடு!" என்ற வார்த்தையின் மூலம் இறையாட்சி அனைவருக்கும் உரியது என்பதை இயேசு உறுதிப்படுத்துகிறார். யார் இந்த சமாரியர்கள்? யூதர்களால் வெறுக்கப்பட்டு தரம் தாழ்த்தப்பட்டு, யூத சமுதாயத்தில் முன்னுரிமை மறுக்கப்பட்டு, யூத மறையை பட்டும் படாமல் பின்பற்றி, பிற தெய்வங்களை வழிபட்ட மக்கள்தான் இந்தச் சமாரியர்கள். இவர்களுக்கு இயேசுவின் சந்திப்பினால் வாழ்வு பிறக்கிறது. இறை இரக்கம் வெளிப்படுத்தப்படுகிறது.

மறையுரை

நண்பகல் வேளையில் பெண்ணொருத்தி தண்ணீர் கொண்டு செல்லக் கிணற்றருகே வருகிறாள். குடத்தை கீழே வைத்தாள். இயேசு அவளிடம், "தாகம், கொஞ்சம் குடிக்க தண்ணீர் கிடைக்குமா?" என்று கேட்டார்.

தாகத்தில் இருக்கிறோம். தவக்காலத்தில் நடைபயில... இயேசு சமாரிய பெண்ணைச் சந்தித்து பேசிய நிகழ்வை, தாய் திருச்சபையானது நமக்கு நற்செய்தியாகக் கொடுத்திருக்கிறது. ஒரு முறை அல்ல. இரண்டு முறை அல்ல. எத்தனை முறை மனதில் அசை போட்டாலும் அத்தனை முறையும் புதிய புதிய அர்த்தங்களை கொடுக்கும் நற்செய்தி பகுதி இது. கல்விக் கூடம் கிணற்றருகே நடக்கிறது. இறைவனின் இரக்கம் என்பதே பாடம். இறைவன் நம்மீது தாகமாய் இருக்கிறார். நாம் அவர்மேல் தாகமாய் இருக்கிறோமா?

தாகம்: எத்தனை எத்தனை தாகங்கள் இந்த உலகத்தில்! நாம் கிராமங்களில் கூடப் பார்த்திருப்போம். கூரை வீடு, குழந்தைகள் வயிறு நிரம்ப ஓடாய் போன மனைவி, இலையுதிர் காலத்தில் கீழே விழுகின்ற சருகுகள் மாதிரிப் பிள்ளைகள் இருந்தாலும் என்றாவது விடிவு வராதா என்ற தாகம். கல்யாணம், நல்ல மனைவி, மாப்பிள்ளை அமைய வேண்டும் என்று ஏங்கி கொண்டு இருக்கும் தந்தை தாய்மார்களின் தாகம். வேலை வாய்ப்பு தேடிய தாகம், தாகங்கள்! எத்தனை எத்தனை தாகங்கள்! ஆனால் இன்றைய நற்செய்தியில் வரும் தாகம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத தாகம். இன்றைய நற்செய்தியை சற்று அலசிப் பார்ப்போம். இயேசுதான் முதலில் விவாதத்தைத் தொடங்கி வைக்கிறார். தண்ணீர் எடுக்கக் கிணத்தருகே வரும் பெண்மணியிடம், "தாகமாயிருக்கிறது, கொஞ்சம் தண்ணீர் கொடு" என்று கேட்கிறார். அதைத் தொடர்ந்து நிகழும் நிகழ்வுகளாக நற்செய்தியாளர் யோவான் சமாரிய பெண்ணின் தாகத்தை மூன்று நிலைகளில் கோடிட்டு காட்டுவதை நாம் அறியலாம்.

1. முதல் நிலை

அடிப்படை நிலை, இயற்கை தாகம். இயேசு 'நான் கொடுக்கும் தண்ணீரை குடிக்கும் எவருக்கும் தாகமே எடுக்காது. நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறும்' என்றார். இதைக்கேட்ட சமாரிய பெண் 'இவர் தரும் தண்ணீரைக் குடித்தால் தாகம் எடுக்காது, நாமும் இந்த வேகாத வெயிலில் இவ்வளவு தூரம் தண்ணீர் எடுக்க வரவேண்டியதில்லை' என்று நினைத்திருக்கலாம் என்பது விவிலிய அறிஞர்களின் கருத்து. தாகம் ஒரு உடலின் தேவை.

2. இரண்டாம் நிலை

இது உறவின் தாகம். சமாரிய பெண் அந்த இடத்தை விட்டு ஓட வேண்டும் என்று நினைக்காமல் அவர் அருகே வந்து உரையாடுகிறார். 'போய் உன் கணவனைக் கொண்டு வா' என்றார். இயேசு சமாரியரின் முறைகேடான வாழ்வை சாடுகிறார்.

"அவள் என் மாமிசத்தின் மாமிசம். என் எலும்புகளின் எலும்பு" என்று ஆதாம் ஏவாளைப்பார்த்து சொன்னார். 'கணவன் தன் மனைவியோடு கூடி வாழ்வான். இருவரும் ஒரே உடலாய் இருப்பார்கள். கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்' என்ற விவிலிய வார்த்தைகளை இயேசு மறைமுகமாக நினைவுபடுத்தினார். இதனால் உறவின் தாகம் தீர்ந்தது. சமாரிய பெண் ஊருக்கு ஓடிச் சென்று எல்லோருக்கும் இயேசுவைப் பற்றி சொன்னாள். 'அவரை சந்தித்தேன், விவாதித்தேன், தாகம் தீர்ந்தது' என்றாள்.

சமாரிய பெண் தனது தவறான உறவுகளை உணர்ந்து உண்மையான உறவுகளைப் புதுப்பித்ததால் அவளது உறவு தாகம் தீர்ந்தது. இன்று நமது தாகத்தை தீர்க்க இயேசு தாகமாய் இருக்கிறார். பிரச்சினை என்ன என்று பார்த்தால், தாகத்தை நாம் உணராதது- தான். நாமும் நம்முடைய தவறான உறவு முறைகளை உணராமல் இருப்பதால்தான் இறைவன் மீது நமக்கிருக்கும் உண்மையான தாகத்தை உணர முடியவில்லை. இதை உணர்ந்து உறவு முறைகளை சரி செய்ய ஆலயம் செல்வது, திருப்பலியில் பங்கு கொள்வது, குடும்ப செபம் சொல்வது, விவிலியம் வாசிப்பது, செபமாலை சொல்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்.

3. மூன்றாம் நிலை

இது ஒரு ஆன்மீக தாகம். சமாரிய பெண்ணின் உடல் தாகம் தீர்ந்தது, உறவின் தாகம் தீர்ந்தது, அடுத்த நிலையை கடந்து செல்கிறாள். அவளின் ஆன்ம தாகம் ஆழமாக வெளிப்படு- கிறது. 'ஐயா நீர் ஒரு இறைவாக்கினர் என்று கண்டு கெண்டேன். எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டார்கள். ஆனால் நீங்கள் எருசலேமில் வழிபட வேண்டும் என்று சொல்கிறீர்கள்' என்றாள். அதற்கு இயேசு 'இனி ஓரெப் மலையிலோ எருசலேம் மலையிலோ வழிபடமாட்டீர்கள். ஆவியிலும் உண்மையிலும் வழிபடுவீர்கள்' எனக் கூறி தெளிவு தருகிறார். எனவே நாம் நமது உள்ள ஆலயங்- களில் ஆவியிலும் உண்மையிலும் இடைவிடாமல் வழிபட்டால் உடலின் தாகம், உறவுகளின் தாகம், ஆன்மீக தாகம் அனைத்தும் நிறைவுபெறும்.

பிற மறையுரைக் கருத்துக்கள்

1. இயேசு சமாரிய பெண் உள்ளத்தில் இருந்த ஆவியின் தீமை களாம், பயம், கவலை, குற்றப்பழிவுணர்வு, தாழ்வு மனப்பான்மை. இவைகளை களைந்தார். இயேசுவின் சீடத்தியாக மாறினார். மகிழ்ச்சியின் நற்செய்தியாம் இயேசுவை தன் இன மக்களுக்கு அறிவித்தார். பலரையும் இயேசுவிடம் அழைத்து வந்தார்.
2. சமாரியப் பெண்ணின் உள்ளம் கடவுளைத்தேடும் உள்ளமாக இருந்ததால், இயேசுவை அவள், 'ஐயா, இறைவாக்கினர், மெசியா' என்று மூன்று நிலைகளில் ஏற்றுக்கொள்கிறாள். நமது விசுவாச வாழ்வில் கூட நோயில் குணப்படுத்துபவராக, துன்பத்தில் தேற்று- பவராக, தனிமையின் தோழனாக, வறுமையில் வழங்குபவராக, இதயத்தின் தேவனாகப் பலநிலைகளில் அவரை ஏற்றுக்கொள்கிறோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தவக் காலம் மூன்றாம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி இயேசுவுக்கும் சமாரியப் பெண்ணுக்கும் இடையே நிகழ்ந்த நீண்ட உரையாடலைக் கொண்டுள்ளது. இதைப் பல்வேறு கோணத்தில் விளக்கலாம் என்றாலும் இங்கு இப்பகுதி வழி இயேசுவைப் பற்றிய எத்தகைய புரிதலை அளிக்க யோவான் விழைகின்றார் எனும் கண்ணோட்டத்தில் காண்போம். அதற்கு முன் சில பின்னணித் தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.

பின்னணி

இன்றைய நற்செய்திப் பகுதி (யோவா 4:5-42), யோவா 2:1-4:54 எனும் நீண்ட பகுதியின் உட்பகுதியாகும். யோவா 2:1-12ல் இயேசுவின் முதல் அருளடையாளத்தின் வழி இயேசுவின் தாய் இயேசுவின் வார்த்தைகளை ஏற்று அவரது முதல் சிடரானபிறகு, யோவா 2:13-3:36ல் யூதர்கள் இயேசுவுக்குத் தந்த பதில்மொழி விவரிக்கப்படுகின்றது. அதைத் தொடர்ந்து வரும் இன்றைய நற்செய்திப்பகுதி (யோவ 4:1-42) சமாரியர்கள் இயேசுவின் போதனைக்குத் தந்த மறுமொழி விவரிக்கப்படுகின்றது. இதைத் தொடர்ந்து வரும் பகுதியில் (யோவா 4:43-54) அரசு அலுவலர் மகன் நலம்பெரும் நிகழ்வின் வழியாகப் பிற இனத்தார் இயேசுவின் போதனைக்குத் தரும் மறுமொழி விவரிக்கப்படுகின்றது.

அமைப்பு

இன்றைய நற்செய்தி யூதர் அல்லாதவர்கள் இயேசுவுக்கு தரும் மறுமொழி எனும் கண்ணோட்டத்தில் மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகின்றது: வச 1-15, 16-30, 39-42. இவற்றின் நடுவே இயேசு சீடர்களுக்குத் தன் உணவு பற்றியும், சிடர்களின் போதனைப் பணியைப் பற்றியும் கூறுவது சேர்க்கப்பட்டுள்ளது. இனி இயேசு சமாரியப் பெண்ணிடம் நிகழ்த்திய உரையாடலை மட்டும் மையப்படுத்தி அது தரும் கிறிஸ்தியல் உண்மைகளைக் காண முயல்வோம்.

1. உரையாடலின் முதல் பகுதி (யோவா 4:1-15)

இந்தப் பகுதியில் தாகம், கிணறு, கொடை, வாழ்வு தரும் தண்ணீர் ஆகிய கருத்துகளைப் பற்றி இயேசுவும் சமாரியப் பெண்ணும் இருவேறு தளங்களிலிருந்து விவாதிப்பதைக் காண் கின்றோம். இப்பகுதியை மேலும் பின்வருமாறு பிரிக்கலாம்.
வச. 1-6 - பொது முன்னுரை.
வச. 7-9 இயேசு உரையாடலைத் தொடங்குகிறார். சமாரியப் பெண் ஆச்சரியத்துடன் இயேசுவைக் கேலி செய்கின்றார்.
வச. 10-14 - இயேசு உரையாடலைத் தண்ணீர் பற்றியத்திலிருந்து கடவுளின் கொடை பற்றித் திருப்புகிறார். அப்பெண் குழப்பத்தில் ஆழ்கின்றார்.
வச. 15 - அப்பெண் சாதாரண தண்ணீர், அதை மொள்ள மேற்கொள்ளும் பயணம் எனும் தளத்திலிருந்து பேசுகின்றார்.
இந்தப் பகுதிக்கான முன்னுரையில் நற்செய்தியாளர் சமாரியாவின் சிக்கார் எனும் ஊர்ப்பகுதியில் “யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலம் மற்றும் அங்கிருந்த கிணற்றண்டை” நிகழ்ச்சியை அமைக்கின்றார் (காண். தொநூ 48:22; 33:19; யோசு 24:32). தனது நீண்ட பயணத்தில் நண்பகல் வேளையில் இயேசு அங்குச் சிறிது அமர்கின்றார். சீடர்கள் ஊருக்குள் உணவு வாங்கப்போயிருக்க, அங்கு நீர் மொள்ளவந்த சமாரியப் பெண்ணிடம் தன் உரையாடலைத் தொடங்குகின்றார்.

தண்ணீர் கொடும்

இயேசு தனது உரையாடலை ஒரு கட்டளை அல்லது வேண்டுகோளுடன் தொடங்குகின்றார். அவரின் தண்ணீர் கேட்கும் செயல் அவள் பெண் என்பதாலும், அதுவும் சமாரியப் பெண் என்பதாலும் அவளுக்கு ஆச்சர்யத்தைத் தருகின்றது. எனவே அப்பெண்ணின் பேச்சு அவரைக் கேலி செய்வதாகவும் அமைகின்றது.

வாழ்வுதரும் தண்ணீரும், கடவுளின் கொடையும்

இயேசு அப்பெண்ணின் கேள்விக்கும் கேலிக்கும் பதில் கூறாமல் உரையாடலை 1. கடவுளுடைய கொடை மற்றும் வாழ்வு தரும் தண்ணீர் பற்றியும், 2. தண்ணிர் கேட்பவர் யார் என்பது பற்றியும் திருப்புகின்றார். இயேசுவுக்கும் அப்பெண்ணுக்கும் நடக்கும் இந்த உரையாடலின் முதல் பகுதி (வச. 1-15) கடவுளுடைய கொடை மற்றும் வாழ்வு தரும் தண்ணிர் பற்றிப் பேசுகின்றது. உரையாடலின் இரண்டாம் பகுதி (வச. 16-30) தண்ணீர் கேட்பவர் யார் என்பதைப் பற்றி விளக்குகின்றது.

உரையாடலின் முதல் பகுதியில் சமாரியப் பெண் சாதாரண நீர், கிணறு, தண்ணீர் மொள்ள பயன்படும் பொருள்களைப் பற்றி (வச. 11) சிந்தித்துக் கொண்டிருக்க இயேசு என்றுமே தாகம் எடுக்காத தண்ணிரை (வச. 14), ஒருவருள் பொங்கி எழும் ஊற்றாக, நிலைவாழ்வு தரும் தண்ணீரை கொடுக்க வந்ததாகக் கூறி விவாதத்தை ஓர் உயர் தளத்திற்கு கொண்டு செல்கிறார். ஆனால் இந்த உரையாடலின் முதல் பகுதி முடிகின்றபோது அப்பெண்ணும் இன்னும் சாதாரண நிலையிலே, அத்தண்ணீர் தனக்குக் கிடைத்தால்தான் மீண்டும் மீண்டும் இங்கு வரத் தேவையிருக்காது எனும் நிலையிலேயே சிந்திக்கின்றார். ஆனால் முதலில் அவரை ‘நீர் யூதர்' (வச9) என்று அழைத்துக் கேலி பேசியவர் இப்போது அவரை 'ஐயா' (வச. 15) என மதிப்புடன் அழைக்கின்றார். இது, அவரது இதயம் இயேசுவின் பால் சிறிது திறந்ததைக் குறிக்கின்றது.

2. உரையாடலின் இரண்டாம் பகுதி (வச. 16-30)

“நீர் போய் உம் கணவரை இங்கே கூட்டிக்கொண்டு வாரும்" (வச.16) எனும் கட்டளையோடு உரையாடலின் இரண்டாம் பகுதி தொடங்குகின்றது. இங்கு “இயேசு யார்” என்பதே விவாதத்தின் மையப் பொருளாய் அமைகின்றது. இப்பகுதியை மேலும் மூன்று பகுதிகளாகப் பின்வருமாறு பிரிக்கலாம்.

வச. 16-19 இயேசுவின் கட்டளை, அப்பெண் இயேசுவின் அடையாளத்தைப் பற்றிய (இறைவாக்கினர்) விவாதத்தைத் தொடங்கி வைக்கிறார்.

வச. 20-26 அப்பெண் விவாதத்தை வழிபாடு பக்கம் திருப்பு கின்றார். இயேசு உண்மை வழிபாடு என்ன என விளக்குகின்றார். இறுதியில் விவாதத்தைக் கிறிஸ்து எனும் மெசியா என்பதன் பக்கம் திருப்புகின்றார்.

வச. 27-30- சீடர்களின் வருகை, அப்பெண் ஊருக்குள் சென்று இயேசு “மெசியாவாக இருப்பாரோ!” என அறிவிக்கின்றார். இங்கு அப்பெண்ணின் கணவர்கள்பற்றிப் பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும், அப்பெண் அவரை இறைவாக்கினர் என்று கண்டு கொண்டதிலிருந்து இயேசு அவரது அந்தரங்க பாவ வாழ்வை அறிந்து வெளிப்படுத்தினார் (நத்தானியேல் நிகழ்வுபோல, யோவ 1:48) எனக் கொள்வதே முறையாகும். இதுமுதல் அப்பெண்ணின் இதயம் இயேசுவின்பால் அதிகம் திறக்கின்றது. 'யூதர்' (வச9) என்று கேலி பேசியவர், 'ஐயா' என மதிப்புத் தந்தவர் (வச. 11, 15, 19) இறுதியில் அவரைக் கிறிஸ்து எனப்படும் மெசியா (வச. 25,29) என ஏற்றுக் கொள்கின்றார். இவ்வாறு அப்பெண்ணின் கண்ணோட்டத்தில் இயேசுவைப் பற்றிய அடையாளமும் மதிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக மாறுகின்றது, உயர்கின்றது.

ஒன்று, இயேசு இந்தத் தனது அடையாளங்களின் வரிசையின் (யூதர், ஐயா, இறைவாக்கினர், கிறிஸ்து எனப்படும் மெசியா) உச்சமாக, தான் யார் என்பதை தாமாக வெளிப்படுத்துகின்றார். “உம்மோடு பேசும் நானே அவர்” (வச. 26). இந்தச் சொற்றொடர் “கிறிஸ்து எனப்படும் மெசியா நான்" என இயேசு கூறுவதாகக் கொள்ளலாம். மற்றது, விப 3:14ன் பின்னணியில் 'இருக்கிறவராக இருக்கிறவர் நாமே' என இறைவனாக வெளிப்படுத்துவதாகவும் கொள்ளலாம். இந்த நீண்ட நிகழ்வினூடே இயேசு உண்மையில் யார் என்பது படிப்படியாக வெளிப்படுவதோடு, அச்சமாரியப் பெண் இதைப் படிப்படியாக அறிந்துகொண்டு அவரை மெசியா வாக ஏற்றுக்கொள்வதோடு மனமாற்றமும் பெறுகின்றார். இத்தகைய மனமாற்றத்திற்கே நாம் இத்தவக்காலத்தில் அழைக்கப் படுகின்றோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு முதல் ஆண்டு

முதல் வாசகம் : விப 17 : 3 - 7

பாலைவனத்தில் இஸ்ரயேலரின் முறையீட்டுக்குச் செவிமடுத்து, இறைவன் அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி வழி, துன்ப துயரங்களின் மத்தியில் இறைவன் நம்மோடு இருக்கிறார்; எனவே நாம் கலங்க வேண்டியதில்லையென்று அறிவுரை கூறப்படுகிறது.

இஸ்ரயேலர் முறுமுறுப்பு

பாலைவனப் பயணம் இஸ்ரயேலுக்கு ஒரு முறுமுறுப்புத் தலமாகவே அமைந்து உள்ளது. மீண்டும் மீண்டும் அவர்கள் ஆண்டவரைச் சோதித்தனர். 'நாங்கள் எதைத்தான் குடிப்போம்?' என்று கூறி, மக்கள் மோசேவுக்கு எதிராக முறுமுறுத்தனர் (விப 15: 24, 17:2); எகிப்தின் உணவுப் பொருட்களை நினைத்து, "இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் மோசேவுக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர்”(16 : 2-3). எதிரிகளின் போர்ப் பலத்தைக் கண்டு "எல்லோரும் மோசேவுக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர்" (எண் 14 : 2). ஆம், இறைவன் தம் பொருட்டுச் செய்த அனைத்து நற்செயல்களை, சிறப்பாக அடிமைத்தனத்திலிருந்து அவர் தந்த விடுதலையை மறந்து முறுமுறுக்கின்றனர். நாம் ஒன்றும் அவர்களிலிருந்து மாறுபடவில்லை. சிறுசிறு அசௌகரியங்களுக்காக நாம் முறையிடுவதில்லையா? கடவுளுக்கு எதிராக முறுமுறுத்துப் பேசியது இல்லையா? "எதை உண்போம், எதைக் குடிப்போம்? எதை உடுப்போம்!" (மத் 6: 31) என்பதிலேதான் நம் நேரமும் காலமும் கழிகின்றனவா? அல்லது பராமரித்துப் பாதுகாக்கும் இறைவனிடம் நம்பிக்கை வைத்து, துன்பங்களை எதிர்த்து வீறுநடை போடக் கற்றுக்கொண்டுள்ளோமா?

மோசே பரிந்து பேசல்

விடுதலைப் பயணத்தை ஆண்டவரின் தலைமையிலே முன்நின்று நடத்திய மோசே, மக்களின் முறுமுறுப்புக் கண்டு மனம் தளர்ந்து விடவில்லை. தன் சொந்தத் திறமையிலும் பலத்திலும் நம்பிக்கை வைக்கவில்லை. மாறாக, அவ்விடுதலைப் பயணத்தின் தலைவரிடமே சென்று வேண்டுகிறார். மோசே இங்கே ஒரு “குரு”வாக மாறுகிறார் எனலாம் (திபா 99:6). மக்களுடைய முறுமுறுப்புகளைச் செபமாக மாற்றி இறைவனிடம் எடுத்துக் கூறுகிறார். மக்களுக்கும் இறைவனுக்கும் இடையிலே இருந்துகொண்டு மக்களுடன் இறைவனையும், இறைவனிடம் மக்களையும் இணைக்கும் பாலமாக அமைகிறார். நமது அழைப்பு இறைவனுக்கும் மக்களுக்கும் இடையே பாலம் கட்டுவதில் அமைய வேண்டாமா? பிறருக்காக, துன்புறுவோர், நோயாளிகள் பாவிகளுக்காக இறைவனிடம் பரிந்து பேசுகிறோமா? தவக்காலத்தில் சிறப்பாகப் பாவிகளுக்காக ஒறுத்தல் முயற்சிகள், தியாகங்கள், செபங்கள் செய்வோமா?

ஆண்டவரின் உதவி

முறையிட்ட மக்களைத் தண்டிக்கவில்லை இறைவன். மாறாக, மோசேயின் செபத்தைக் கேட்டுப் புதுமை வழி மக்களுக்கு உதவுகிறார். “பாறையை அடி; மக்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும்” (17:6) என்கிறார். அவ்வாறே நடக்கிறது. என்னே இறைவனின் கருணை? என்னே அவரின் பரிவு? ஆம், நாமும் பாறையை அடிக்கத் தயங்கக் கூடாது. ஆணவமும் தற்பெருமையும் நம்மில் தலைதூக்கி நிற்கின்றனவா? “பாறையை அடி”; கல்லான உள்ளமும் கரையாத இதயமும் உடையவர்களாய் வாழ்கிறோமா? "பாறையை அடி”; பாவத்திலே உழன்று உழன்று பரிதவிக்கின்றோமா? "பாறையை அடி”; நம் வாழ்விலே அன்பின்மை, அநீதி தலை விரித்தாடுகின்றனவா? "பாறையை அடி”. ஆம் இதுதான் ஆண்டவர் நமக்குக் கூறுவது. “அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகராதா?" நம்பிக்கையோடு ஆண்டவரிடம் வேண்டுவோம். மழைபோல் வருவதையெல்லாம் பனியாக மாற்றும் இறைவன் நம் இயலாமையிலிருந்து நம்மை விடுவிப்பார். நம் வாழ்வின் பாறைகளை இறை உதவியோடு அடிப்போமா?

ஆண்டவரை ஏன் சோதிக்கிறீர்கள்? நீ அந்தப் பாறையை அடி.

இரண்டாம் வாசகம் உரோ 5:1-2, 5-8

குற்றம் செய்த நம்மைத் தண்டியாது, மன்னித்து, இறைவன் மீண்டும் தன்னுடன் இணைத்துக்கொள்ளுகிறார். விசுவாசத்தால் ஒருவன் இறைவனுக்கு ஏற்புடையவன் ஆகின்றான். இறைவனது அன்பிற்கு ஆளாகி அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆன்மா அனுபவிக்கும் அருட்கொடைகளை பவுலடியார் விளக்குகிறார்

.

ஏற்புடைமை சமாதானத்தை அளிக்கிறது

பாவம் நம்மை இறைவனிடமிருந்து பிரிக்கிறது. முறிந்த உறவைச் சரி செய்து நம்மை இறைவனுடன் இணைப்பவர் இயேசு. "ஏனெனில் அவரே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தம் உடலில் ஏற்றத் துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து அவர்களை ஒன்றுபடுத்தினார்... சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார்" (எபே 2: 14 -16). இறைவனுக்காகப் படைக்கப்பட்ட மனிதன் அவருடன் இணைந்து வாழாதபொழுது நிம்மதியற்றவனாய் நிலை குலைந்து திரிகிறான். எனவேதான் புனித அகுஸ்தினார் கூறினார்: “எங்கள் ஆன்மா, இறைவா உமக்காகப் படைக்கப்பட்டது. உம்மைக் கண்டடையும்வரை அதற்கு நிம்மதியில்லை.” இறைவனுடன் இணைந்து வாழும்பொழுது அயலானுடனும் அன்புகொண்டு வாழ்கிறான். தெய்வத் திருமகன் இவ்வுலகிற்கு வந்ததே நம்மை இறைவனுடன் சமாதானம் செய்து வைக்கவே ஆகும். அவரது தொண்டர்களாகிய நாமும் சமாதானத் தூதுவர்களாக விளங்க வேண்டும். "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்" (மத் 5:9).

நம்பிக்கையின் நாயகன் இறைவன்

ஏற்புடைமையின் மற்றொரு பயன் நம்பிக்கையாகும். மனிதர்மீது வைக்கும் நம்பிக்கை நமக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம்; இறைவன் மீது நாம் வைக்கும் நம்பிக்கை ஒரு நாளும் வீண் போகாது. ஏனெனில் அவர் நம்மை ஏமாற்றமாட்டார். இறைவன் மக்கள்மீது கொண்டுள்ள மாறாத அன்பே நமது நம்பிக்கையின் அடிப்படை. "நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்" (திபா 91:2).

"கடவுளின் மாட்சியில் பங்குபெறுவோம் என்னும் எதிர்நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது. அது மட்டுமல்ல; துன்பங்களைத் தாங்கிக்கொள்வதிலும் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம் (2). பெருமை பாராட்ட இடமில்லை என்று கூறிய பவுலடியார் (3:27; 4:2) இங்குப் பெருமை கொள்ள வேண்டும் என்று கூறும்பொழுது, தம் சொந்த ஆற்றலை நம்பி அன்று தனக்கு அப்பாற்பட்ட ஆற்றலில் நம்பிக்கை வைத்தே (8:11) பெருமைப்பட வேண்டும் என்கிறார். "என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது" என்ற அன்னையின் பாடலும் சிந்தனைக்குரியது. நம்பிக்கை பொறுமைக்கு வித்திடுகிறது; துன்ப வேளையில் மனத்திடனைத் தருகிறது. இறைவனை நம்பி அஞ்சாது வாழ்கின்றேனா?

இறையன்பு

இறைவன் நம்மீது கொண்டுள்ள அன்பு அளவற்றது. கடவுளே நமக்கு முதலில் அன்பு செய்ததால் நாமும் அன்பு செய்வோமாக என்கிறார் யோவான் (1 யோவா 14: 19). இறையன்பு தன்னையே மறப்பது; தன்னையே தருவது. படைப்பிலும், பாதுகாப்பிலும், மீட்பிலும் வெளிப்படுவது. தன்னையே தந்துவிட்டது போல், பக்தனும் தனக்கே உரிமை என்று எண்ணுவது; எனவே தன்னைத் தவிர வேற்றுக் கடவுளிடம் எவரும் செல்வதை வெறுப்பது. ஆண்டவருடைய திருப்பெயர் ‘வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காதவர்'; ஆகையால் அவர் எரிச்சலுள்ள கடவுள் (விப 34 : 11). கிறிஸ்துவின் இறப்பு இறையன்பின் உச்ச கட்டம். “தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" (யோவா 15: 13) என்று கூறிய கிறிஸ்து, தன் நண்பர்களுக்காக அன்று, கடவுளையே எதிர்த்துக் கலகம் செய்த பாவிகளுக்காக, தன் பகைவர்களுக்காக இறந்தார் என்றால் இத்தகைய அன்பினை அளந்தறிய முடியாது. "நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்" (9-10). என் அன்பை எப்படி எண்பிக்கிறேன்?

இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம்.

நற்செய்தி : யோவா 4: 5-42

யோவான் நற்செய்தியில் மட்டுமே காணப்படும் இந்நிகழ்ச்சி மிகவும் பொருள் பொதிந்த ஒன்று. தவக்காலத்தில் மனமாற்ற அழைப்புக்கு ஏற்ற ஒரு வாசகம் இது. அன்று சமாரியப் பெண்ணோடு உரையாடிய இயேசு, இன்றும் நம்மோடு உறவாடி உயிருள்ள நீரை நமக்கு வழங்குகிறார். ஏற்றுக்கொள்ள நாம் தயாராயிருக்கிறோமா?

உயிருள்ள நீர்

இயேசு அளிக்கும் நீர் தாகத்தைத் தணிக்கும் நீர் (4:14); உயிருள்ள நீர் (4 : 11); அது கடவுளே அளிக்கும் கொடை (4: 10). முடிவில்லாத வாழ்வை அளிக்கும் நீர் (4:14). இந்நீர் ப.ஏ.இல் இறைவன் மக்களுக்களிக்கும் நல்வாழ்வைக் குறிக்கும்: "வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது; உமது ஒளியால் யாமும் ஒளிபெறுகின்றோம்" (திபா 36:9). “மீட்பருளும் ஊற்று களிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள்" (எசா 12:3; 55:1). அல்லது இறைவனே அளிக்கக்கூடிய ஞானத்தைச் சுட்டும்; 'ஞானமாகிய நீரைப் பருக அளிக்கும்" (சீஞா 15: 3). என்னைக் குடிப்பவர்கள் மேலும் தாகம் கொள்வார்கள் (சீஞா 24:21). பு.ஏ. இல் இந்நீர் தூய ஆவியாரையே குறிக்கும் : "என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்... அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்... தம்மிடம் நம்பிக்கை கொண்டிருப்போர் பெறப்போகும் தூய ஆவியைக் குறித்தே அவர் இவ்வாறு சொன்னார்" (யோவா 7:37-39). ஆம், இறைவாழ்வை, இறைஞானத்தை, இறை ஆவியாரை அபரிமிதமாக நமக்குத் தரும்படி இயேசுவிடம் வேண்டுவோம். "ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்" (4:15).

உயிருள்ள வழிபாடு

செபம் அல்லது வழிபாடு என்பது நம்மிடமுள்ள இறைத்தன்மை நமக்கு அப்பாலுள்ள இறைத் தன்மையோடு உறவாடுவது எனலாம். இதைப் பவுலடியார், "எதற்காக எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது. தூய ஆவியார் தாமே சொல் வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்து பேசுகிறார்" (உரோ 8:26) என்பார். "அந்த ஆவியினால் நாம் 'அப்பா, தந்தாய்' எனக் கூப்பிடுகிறோம்” (உரோ 8: 15) என்பதும் உண்மை. “கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்" (யோவா 4:24) என்று இயேசு குறிப்பிடுவது நமது செபங்கள் தூய ஆவியாரால் தூண்டப்பட்டு இயேசுவின் பெயரிலே (“உண்மை”) நடத்தப்பட வேண்டும் என்பதாகும். “நீங்கள் என் பெயரால் கேட்பதை எல்லாம் செய்வேன்" (யோவா 14:13); நீங்கள் தந்தையிடம் என் பெயரால் கேட்பதெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்" (15:16; 16: 24-26) என்ற சொற்களிலும் இவ்வுண்மையே வெளிப்படுகிறது. எனவே நமது செபங்கள், வழிபாடுகள், இறைவனை மையமாக வைத்து இறைவனிலே செயல்பட வேண்டும். புனிதர்களின் பக்தி முயற்சிகள், நவநாட்கள், கொண்டாட்டங்கள் இப்புனிதர்களை இறைவனுக்கும் நமக்கும் நடுவிலே நிறுத்தி, நம்மை இறைவனிடமிருந்து திசை திருப்பிவிடக் கூடாது. இவ்வகையிலே நமது பக்தி முயற்சிகளைச் சோதித்துப் பார்ப்பது நல்லது. இறைவனிலே துவக்கி, இறைவனிலே தொடர்ந்து, இறைவனிலே முடிவு பெறும் வழிபாடே உண்மை வழிபாடு, உயிருள்ள வழிபாடு "ஆவியிலும் உண்மையிலும்" செய்யப்படும் வழிபாடு.

விசுவாச வளர்ச்சி

நம் விசுவாச வாழ்வைப் பொறுத்தமட்டில் நம்மில் பலர் இன்றும் பால்குடி மறவாச் சிறுவர்களாகவே இருக்கிறோம். நம் உடல், உள்ள வளர்ச்சியோடு நாம் விசுவாசத்திலும் வளர வேண்டும். முதலில் இயேசுவை வெறும் யூதனாகக் கண்ட சமாரியப்பெண் (4:9), பின் அவரை ஒரு பெரியவராக, ஆசிரியராக "ஐயா" என்றும் அழைக்கும் நிலையிலே காண்கிறாள் (4:11. 15). இன்னும் பிறகு அவரை ஓர் இறைவாக்கினராகக் காண்கிறாள் (4:19). இறுதியாக அவரே மெசியா, கிறிஸ்து என்பதை உணர்கிறாள் (4:25-29); உணர்ந்து அவருக்குச் சாட்சியம் பகர்கின்றாள் (4:25, 39 - 42). அவளுடைய விசுவாச சாட்சியம் சமாரியர் இயேசுவை “உலக மீட்பர்” என்று ஏற்றுக்கொள்ளச் செய்கிறது (4:42). நமது விசுவாசமும் இம்முறையில் வளர்ச்சியடைய வேண்டும்.

நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஒன்றுபட்டு, ஒன்றுபடுத்தும் பெண்ணினமாய்

மனுதர்மத்தாலும், அது உருவாக்கிய வருணாசிரமக் கோட்பாட்டாலும் விளைந்த சாதி என்னும் சீர்கேட்டைத் தூக்கிப் பிடிக்கும் சமூகத்திலிருந்து வருபவர்கள் நாம். தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, தெருவில் நடமாடக் கூடாது, தண்ணீர் கேட்டால் கூட கொட்டாங்குச்சியில் ஊற்ற வேண்டும் என்பன போன்ற இழிவான செயல்பாடுகளை நாம் பார்த்திராவிட்டாலும், ஒரு காலத்தில் இந்தச் சமூகத்தில் இவையெல்லாம் இருந்துள்ளன என்பது உண்மை. இயேசுவின் கால யூதச் சமூகமும் இப்படித்தான் இருந்தது. இந்தியப் பெருவெளியில் சூத்திரர்கள் என்று எவ்வாறு பலர் ஒதுக்கி வைக்கப்பட்டார்களோ, அவ்வாறே அன்று சமாரியர்கள் என்ற பெயரால் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்.

கிமு 722இல் நிகழ்ந்த அசீரியப் படையெடுப்புக்குப் பின், வேற்றின மக்களோடு வாழ வேண்டிய சூழலுக்கு யூதர்கள் பலர் தள்ளப்பட்டனர். தாங்கள் விரும்பியோ, விரும்பாமலோ, வேற்றினத்தாரோடு திருமண உறவிலும் இணைந்தனர். இத்தகையோர் யூத இனத்தூய்மையைத் தீட்டுப்படுத்தியதாகக் கூறி, சமாரியர்கள் என ஒதுக்கப்பட்டனர். இவர்களுள் ஒருவரிடம் நிலைவாழ்வு பற்றி இயேசு விவாதிப்பதே இன்றைய நற்செய்தி. இயேசுவின் மனிதப் பிறப்பே வேற்றுமைகளை, பிரிவினைகளை, வேறுபாடுகளை அழித்து ஒற்றுமையை உருவாக்குவதுதான் என்ற செய்தியை இன்றைய நற்செய்தி ஆழமாக விதைக்கின்றது. இருவகையான ஒற்றுமைகளை இயேசு விதைப்பதை நாம் பார்க்கலாம்.

  1. சமூக ஒற்றுமை: 'இறைவா, என்னை ஒரு பன்றியாகவோ, பெண்ணாகவோ, ஒரு பிறவினத்துச் சமாரியனாகவோ படைக்காமல் யூதனாகப் படைத்தமைக்காக உமக்கு நன்றி' என்று ஒவ்வொரு நாளும் யூதர்கள் செபிப்பார்களாம். அந்த அளவுக்கு வேற்றுமை உணர்வு அவர்களது இரத்தத்தில் ஊறியிருந்தது. இந்தப் பின்னணியில், நாம் பார்க்கின்ற பெண் சமாரியர் என்பதாலும், பெண் என்பதாலும் இருநிலைகளில் அடக்குமுறைகளுக்கு ஆளானவர். வாழ்வு தரும் தண்ணீரை ஒரு சமாரியப் பெண்ணுக்குத் தருவதாக வாக்களிப்பதன் வழியாக, இந்த வேற்றுமையை இயேசு வேரறுகின்றார்.
  2. ஆன்மீக ஒற்றுமை: யூதர்களுக்கும், சமாரியர்களுக்கும் இருந்த மற்றொரு வேற்றுமை இறைவழிபாடு தொடர்பானது. ஆபிரகாம் முதன்முதலில் வழிபாடு செய்த கெரிசிம் மலையே வழிபாட்டுக்கு உகந்தது என்பது சமாரியப் பார்வை. தாவீதின் நகராக உருவாக்கப்பட்ட எருசலேம் அமைந்துள்ள சீயோன் மலையே வழிபாட்டுக்கு உகந்தது என்பது யூதப் பார்வை. ஒரு யூதரான இயேசு, இரு மலைகளையும் தாண்டி ஆவியிலும் உண்மையிலும் வழிபடுவதன் முக்கியத்துவத்தை விளக்குவதன் வழியாக, ஓர் ஆன்மீக ஒற்றுமையை, வழிபாட்டு ஒற்றுமையை விதைக்கின்றார்.

இயேசுவின் மனிதப் பிறப்பே பிரிவினையை அகற்றி, ஒற்றுமையை உருவாக்குவதுதான். கீழ்ப்படியாமை என்னும் பாவத்தால் பிளவுபட்டு நின்ற மனிதத்தைத் தன் இறப்பினால் இணைத்தவர் அவர். “அவரே இரு இனத்தாரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரைத் தம் உடலில் ஏற்றக் காயங்களால் தகர்த்தெறிந்தார்” எனச் சான்று பகர்கின்றார் புனித பவுல். இயேசுவின் இறப்பினால் இணைந்த நாம், இன்று இணைந்து இருக்கின்றோமா ? இணைப்புகளை உருவாக்குகின்றோமா? சமூகத்திலும் ஆன்மீகத்திலும் பிரிவினைகளை நாம் உருவாக்கிக் கொண்டே இருந்தால், அந்தப் பிரிவினைகளைச் சரிசெய்ய இன்னும் எத்தனை முறை இயேசு இறக்க வேண்டும்?

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

"தாகம் தீர்க்கும் வாழ்வுத் தண்ணீர்"

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே! தவக்காலப் பயணத்தில் நாம் மூன்றாம் வாரத்தில் அடி எடுத்து வைக்கிறோம். முதல் வாரம் இயேசுவின் 'சோதனை', இரண்டாம் வாரம் 'உருமாற்றம்' பற்றிச் சிந்தித்தோம். இன்று நாம் 'தாகம்' பற்றிச் சிந்திக்கப் போகிறோம். உடல் தாகத்தைத் தணிக்கக் கிணற்று நீரைத் தேடி வந்த ஒரு பெண், தன் ஆன்ம தாகத்தைத் தணிக்க வந்த 'வாழ்வுத் தண்ணீரை' (இயேசுவை) எப்படிக் கண்டடைந்தாள் என்பதே இன்றைய நற்செய்தியின் சாரம்.

1. தாகம் கொண்ட கடவுள் (The Thirsty God)

இயேசு சமாரியப் பெண்ணிடம், "எனக்குக் குடிக்கத் தண்ணீர் கொடு" என்று கேட்கிறார். அகில உலகையும், அதில் உள்ள நீர்நிலைகளையும் படைத்த கடவுள், ஒரு மனிதப் பெண்ணிடம் தண்ணீர் கேட்கிறார். இது வியப்பாக இல்லையா?

➤ இயேசுவின் தாகம் உடல் சார்ந்தது மட்டுமல்ல; அது ஆன்மாக்கள்மீதான தாகம். ஒரு பாவியின் மனமாற்றத்திற்காகக் கடவுள் தாகத்தோடு காத்திருக்கிறார் என்பதை இது காட்டுகிறது.
நமக்குச் சொல்லும் பாடம்: நாம் கடவுளைத் தேடுவதை விட, கடவுள் நம்மைத் தேடி வருகிறார். நம்முடைய அன்பிற்காக அவர் தாகத்தோடு காத்துக் கொண்டிருக்கிறார்.

2. கிணற்று நீரும் - வாழ்வுத் தண்ணீரும்

அந்தப் பெண் உலகத் தாகத்தைத் தணிக்கக் குடத்தோடு வருகிறாள். ஆனால் இயேசு அவளுக்கு நிலையான வாழ்வு தரும் 'அருள்' எனும் தண்ணீரைத் தருகிறார்.

➤ நம் வாழ்விலும் பல தாகங்கள் உள்ளன: பணத் தாகம், புகழ்த் தாகம், அதிகாரத் தாகம். இவையெல்லாம் 'கிணற்று நீரைப்' போன்றது. குடிக்கக் குடிக்க மீண்டும் தாகம் எடுக்கும்; ஒருபோதும் திருப்தி தராது.
➤ ஆனால் இயேசு தரும் அருள், நம் இதயத்தின் ஆழமான ஏக்கங்களைத் தணிக்கும். அவரே நம் வாழ்வின் உண்மையான திருப்தி.

3. குடத்தை விட்டுச் சென்ற பெண் (Leaving the Jar)

இயேசுவை மெசியாவாக அடையாளம் கண்டுகொண்ட அந்தப் பெண் செய்த மிக முக்கியமான செயல்: "தன் குடத்தை அங்கேயே விட்டுவிட்டு ஊருக்குள் ஓடினாள்." அந்த 'குடம்' அவளது பழைய வாழ்வின் அடையாளம். தன் பாவச் சுமைகளையும், உலக ஆசைகளையும் அந்த ஊற்றின் அருகே விட்டுவிட்டு, இயேசுவின் செய்தியைச் சொல்ல ஓடுகிறாள்.

நமக்குச் சொல்லும் பாடம்: இந்தத் தவக்காலத்தில் நாம் எதை விட்டுவிடப் போகிறோம்? நம்முடைய கோபம், பொறாமை, தீய பழக்கங்கள் எனும் 'குடங்களை' இயேசுவின் சிலுவையடியில் விட்டுவிட்டு, புதிய மனிதர்களாக மாற வேண்டும்.

4. பாரபட்சமற்ற அன்பு

யூதரான இயேசு, தீண்டத்தகாதவராகக் கருதப்பட்ட சமாரியப் பெண்ணிடம் பேசுகிறார். அவளது ஐந்து கணவர்களைப் பற்றிய அவமானகரமான உண்மையைத் தெரிந்தும், அவளைத் தண்டிக்காமல் அவளுக்குக் கண்ணியம் அளிக்கிறார்.

நடைமுறைச் சிந்தனை: நாம் பல நேரங்களில் மற்றவர்களை அவர்கள் செய்யும் பாவத்தை வைத்துத் தீர்ப்பு வழங்குகிறோம். ஆனால் இயேசு மனிதர்களை நேசிக்கிறார். நம் பங்குச் சமூகத்தில் நாம் ஒருவரை ஒருவர் வெறுக்காமல், பாரபட்சமின்றி அன்பு செய்ய அழைக்கப்படுகிறோம்.

பங்கு மக்களுக்கான நடைமுறைச் செயல்பாடுகள் (Practical Points):

1. உள்நோக்கிப் பார்த்தல்: என் ஆன்மாவின் தாகம் எது? பணமா? பகட்டா? அல்லது இறைவனா? சிந்திப்போம்.
2. மன்னிப்பு: அந்தப் பெண்ணின் கடந்த காலத்தை இயேசு மன்னித்தது போல, நாமும் நம்மைப் புண்படுத்தியவர்களை இந்த வாரம் முழுமனதோடு மன்னிப்போம்.
3. சான்று பகிர்தல்: சமாரியப் பெண் ஊர் மக்களிடம் போய் இயேசுவைப் பற்றிச் சொன்னது போல, நாம் நம்முடைய சொல்லாலும் செயலாலும் இந்த வாரம் ஒருவருக்காவது கிறிஸ்துவின் அன்பைக் காட்டுவோம்.

முடிவுரை: அன்பு மக்களே! "தாகமாய் இருப்பவர் என்னிடம் வரட்டும்" என்று இயேசு அழைக்கிறார். பாறையிலிருந்து தண்ணீர் வரவழைத்து இஸ்ரயேலரின் தாகத்தைத் தணித்த இறைவன் (முதல் வாசகம்), இன்று நற்கருணை வழியாக நம் ஆன்மத் தாகத்தைத் தணிக்கிறார். நம்முடைய பழைய குடங்களை உடைப்போம்; வாழ்வு தரும் தண்ணீரைச் சுவைப்போம். இந்தத் திருப்பலி நம் ஆன்மத் தாகத்தைத் தணிப்பதாக அமையட்டும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு