மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

இயேசுவின்‌ விண்ணேற்றப்‌ பெருவிழா
2-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
திருத்தூதர் பணிகள் 1:1-11 | எபேசியர் 4:1-13 | மாற்கு 16:15-20

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


இயேசுவின்‌ விண்ணேற்றப்‌ பெருவிழா

வார்த்தை மனு உருவானார்‌. நம்மிடையே குடிகொண்டார்‌. இது கிறிஸ்து பிறப்பு விழாக்‌ கொண்டாட்டம்‌. மனு உரு எடுத்த வார்த்தை மகிமையானார்‌. இது உயிர்ப்புப்‌ பெருவிழாக்‌ கொண்டாட்டம்‌. ஆனால்‌ மகிமையான மனுஉ௫ மீண்டும்‌ வார்த்தையானார்‌. இதுதான்‌ விண்ணேற்பு விழாக்‌ கொண்டாட்டம்‌. ஆம்‌ இந்த மாபெரும்‌ விண்ணேற்பு விழாவைத்தான்‌ இன்று தாயாகிய திருச்சபை நினைவு கூர்கிறது இன்றைய வழிபாட்டிலே.
கதை
மறைக்கல்வி வகுப்பிலே ஆசிரியர்‌ மாணவர்களிடம்‌ விண்ணகம்‌ செல்ல விரும்புகிறவர்கள்‌ கைகளை மேலே உயர்த்துங்கள்‌ என்று கேட்டார்‌. ஒரு மாணவனைத்‌ தவிர மற்ற மாணவர்கள்‌ கைகளை மேலே உயர்த்தினார்கள்‌. தம்பி! உனக்கு விண்ணகம்‌ செல்ல விருப்பம்‌ இல்லையா என்று ஆசிரியர்‌ கேட்டபோது, எனக்கு விருப்பம்தான்‌, ஆனால்‌ எங்க. அப்பா மறைக்கல்வி முடிந்தவுடன்‌ நேரா வீட்டிற்கு வரும்படி கண்டிப்பாகச்‌ சொல்லிவிட்டார்‌ என்றான்‌. எல்லோருக்கும்‌ சிரிப்பு.
நிகழ்ச்சி
நமக்கும்‌ விண்ணகம்‌ செல்ல விருப்பம்‌ என்றாலும்‌ இந்த மண்ணகத்தை விட்டுப்‌ போக விருப்பம்‌ இல்லை. அன்னை தெரெசா இறக்கும்‌ வேளையில்‌ அவரது ஏழைக்‌ குழந்தைகள்‌ அம்மா எங்களை அனாதையாக விட்டு விட்டு ஏன்‌ விண்ணகம்‌ செல்கிறீர்கள்‌. அங்கே ஏழைகள்‌ இல்லையம்மா என்று சொல்லி அழுதார்களாம்‌.
கிறிஸ்து விண்ணகம்‌ செல்லாமல்‌ எப்போதும்‌ இம்‌ மண்ணகத்தில்‌ வாழ்ந்து பணிபுரிந்திருக்கலாம்‌. ஆனால்‌ தந்தையின்‌ திருவுளப்படி எல்லாம்‌ நிறைவேற்றி அவர்‌ விண்ணகம்‌ சென்றுவிட்டார்‌. அவர்‌ விண்ணகம்‌ சென்றது இம்மண்ணக துன்பங்களிலிருந்து தப்பித்துக்‌ கொள்வதற்காக அல்ல. மாறாக மகிமையின்‌ நிலையை அடைவதற்காக. ஆனால்‌ இன்றைய இரண்டாம்‌ வாசகத்தில்‌ தூய பவுல்‌ எபேசியருக்கு கூறுவதுபோல, இயேசுவே உடலுக்குத்‌ தலையாக இருக்கிறார்‌. எனவே தலையாகிய கிறிஸ்துவோடு, அவரது உடலாகிய திருச்சபையைப்‌ பிரிக்க இயலாது. எனவே நம்‌ தலையாகிய கிறிஸ்து அடைந்த அதே விண்ணக மகிமையில்‌ அவரது உடலாகிய நாம்‌ பங்கு பெறுவது உறுதியாகிவிட்டது (எபே. 1:22-23). விண்ணகம்‌ சென்ற கிறிஸ்து மீண்டும்‌ மண்ணகம்‌ திரும்புவார்‌ என்பதைத்‌ திருத்தூதர்‌ பணியில்‌ இயேசு அறிவிக்கிறார்‌. அவர்‌ மீண்டும்‌ வருவார்‌ (தி. பணி 1:11), எனவேதான்‌ திருப்பலியில்‌ எனக்காக மரித்தார்‌, எனக்காக உயிர்த்தார்‌. . எனக்காக மீண்டும்‌ வருவார்‌ என விசுவாச அறிக்கையாகவும்‌, நாங்கள்‌ நம்பியிருக்கும்‌ பேரின்ப வாழ்வையும்‌ - எம்‌ மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின்‌ வருகையையும்‌ மகிழ்ச்சியுடன்‌ எதிர்பார்த்திருக்கிறோம்‌ என்றும்‌ திரும்பத்‌ திரும்ப செபிக்கிறோம்‌. ஆனால்‌ மகிமையோடு மனுமகனாகிய இயேசு தன்‌ மணவாட்டியாகிய திருச்சபையைத்‌ திரும்ப அழைக்க வருமுன்‌ நம்மிடம்‌ மிக முக்கிய ஒரு பணியை விட்டுச்‌ சென்றிருக்கிறார்‌.
உலகமெங்கும்‌ சென்று படைப்பிற்கெல்லாம்‌ நற்செய்தியை பறைசாற்றுங்கள்‌ (மாற்‌. 16:15). திருச்சபையானது இந்தப்‌ பணியில்‌ தனித்து இயங்கவில்லை. கிறிஸ்துவே உடனிருந்து செயலாற்றுகிறார்‌. ஆண்டவரும்‌ உடனிருந்து செயல்பட்டு, நிகழும்‌ அடையாளங்களால்‌ அவர்களுடைய வார்த்தையை உறுதிப்‌ படுத்தினார்‌ (மாற்‌. 16:20). எனவேதான்‌ இயேசு உறுதியான ஒரு வாக்குறுதியைத்‌ தந்துள்ளார்‌. உலகம்‌ முடியுமட்டும்‌ எந்நாளும்‌ உங்களோடு இருப்பேன்‌ (மத்‌. 28:20) என்று. எனவே அவரது கரங்களாக, அவரது குரலாக இருந்து செயல்பட நம்மை அழைக்கிறார்‌. அன்று ஆதித்‌ திருச்சபையிலே திருத்தூதர்களும்‌, சீடர்களும்‌, தாங்கள்‌ கண்டதையும்‌, கேட்டதையும்‌, தொட்டு உணர்ந்ததையும்‌ மற்றவருக்குத்‌ துணிவுடன்‌ அறிவித்தார்கள்‌. அதுதான்‌ நற்செய்தி. இன்று நாம்‌ அறிவிக்கும்‌ நற்செய்தி என்ன?
முதலாவதாக, இறைவனுக்கு நன்றி கூறி தான்‌ பெற்ற கொடைகளுக்கு, ஆண்டவரைப்‌ புகழ்வதால்‌ அவரது திருவார்த்தையைச்‌ செபிப்பதால்‌, வாசிப்பதால்‌ நற்செய்திக்குச்‌ சான்று பகர முடியும்‌.
இரண்டாவதாக, உன்‌ வாழ்வில்‌ இறைவன்‌ தரும்‌ கொடை களையும்‌, சந்தர்ப்பச்‌ சூழ்நிலைகளையும்‌ கொண்டு, இயேசுவின்‌ பிரசன்னம்‌, அவரது அன்பு, அவரது வாழ்வு போன்றவைகளைக்‌ கொண்டு மற்றவரை உற்சாகப்படுத்தியும்‌, பாராட்டியும்‌ மற்றவரோடு பகிர்ந்தும்‌, செவிமடுத்தும்‌, ஆறுதல்‌ படுத்தியும்‌ நீ சாட்சியாக இருக்க முடியும்‌.
மூன்றாவதாக, உன்‌ வாழ்வில்‌ உயிர்த்த இயேசு, மக்கள்‌ மூலமாக, நிகழ்ச்சிகள்‌ மூலமாக உன்னைத்‌ தொட்டதை மற்றவருக்குத்‌ தெரிவிப்பதால்‌ நீ சாட்சியாக வாழ முடியும்‌.
முடிவுரை
ஒரு சிறு தொழிலக நிர்வாகி ஒருவருக்கு வேலை கொடுக்கும்படி சிபாரிசு கடிதம்‌ எழுதி அனுப்பினேன்‌. பல பேர்‌ நேர்முகத்‌ தேர்வுக்கு வந்தாலும்‌ நான்‌ அனுப்பிய மனிதருக்கு மட்டும்‌ வேலை கிடைத்தது. எனவே தொலைபேசியில்‌ நன்றி கூற எடுத்தேன்‌. ஆனால்‌ அந்த நிர்வாகி சொன்ன வார்த்தைகள்‌ என்னைச்‌ சிந்திக்க வைத்தன. அவர்‌ ஓர்‌ இந்து. பாதர்‌! இவர்‌ ஒரு நல்ல, சிறந்த கத்தோலிக்கர்‌ என எழுதி இருந்தீர்கள்‌. அதற்காகவே வேலை கொடுத்தேன்‌. ஏனெனில்‌ உங்கள்‌ : பைபிள்‌ போதனையோடும்‌ மனசாட்சியோடும்‌ அவர்‌ நடப்பார்‌ என நம்புகிறேன்‌ என்றார்‌. ஆம்‌ இந்த நம்பிக்கையைப்‌ பிறரில்‌ உண்டாக்கத்தான்‌ இயேசு, அவர்‌ வரும்வரை நம்மை அனுப்புகிறார்‌
நீங்கள்‌ கிறிஸ்துவோடு உயிர்‌ பெற்று எழுந்தவர்களானால்‌ மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்‌ (கொலோ. 3:1). வாழ்வளிக்கும்‌ இயேசு தோன்றும்பொழுது நீங்களும்‌ அவரோடு மாட்சிமை பொருந்தியவராய்த்‌ தோன்றுவீர்கள்‌ (கொலோ. 3:4).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கடவுளால் ஆகாதது ஒன்றுமில்ல.

விண்ணகம் எழுந்து செல்வதற்கு முன் இயேசு கிறிஸ்து அவரது சீடர்களுக்கும், உலக மக்களுக்கும் ஓர் அருமையான இரகசியத்தை வெளிப்படுத்திச் சென்றார். அது என்ன இரகசியம்? நம்பிக்கைக்கொள்வோர் மீட்பு பெறுவர் என்பதுதான் அது.

பழைய ஏற்பாட்டில் நோவா வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்டது நம்பிக்கையினால்! ஆபிரகாம் நம்பிக்கை கொண்டோரின் தந்தையாகியது நம்பிக்கையினால்! செங்கடல் இரண்டாகப் பிரிந்தது நம்பிக்கையினால் ! வானத்திலிருந்து மன்னா பொழிந்தது நம்பிக்கையினால்! கற்பாறை இரண்டாகப் பிளந்தது நம்பிக்கையினால்! புதிய ஏற்பாட்டில் மரியா கடவுளின் தாயானது நம்பிக்கையினால்! யோசேப்பு நேர்மையாளரானது நம்பிக்கையினால் நோயாளிகள் உடல் நலம் பெற்றது நம்பிக்கையினால்! பாவிகள் பாவமன்னிப்புப் பெற்றது நம்பிக்கையினால்! இறந்தவர் உயிர்பெற்று எழுந்தது நம்பிக்கையினால்!

ஆம். உலகத்தை எல்லா துன்ப துயரங்களிலிருந்தும் விடுவித்து அதற்கு மீட்பளிக்கும் ஆற்றல் நம்பிக்கைக்கு உண்டு!

அமைதியான நதியினிலே ஓடம்! அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்! காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்! அந்தக் கரைதான் நம்பிக்கை

இப்படிப்பட்ட நம்பிக்கையை நமது உள்ளத்திற்குள்ளும், இல்லத்திற்குள்ளும் ஊற்றிக்கொள்வோம். முனிவர் ஒருவர் ஒரு வெற்றுப்பானையை அவரது சீடர்கள் முன்னால் வைத்துவிட்டு, அவரது சீடர்களைப் பார்த்து, இதற்குள் என்ன இருக்கின்றது? என்று கேட்டார். சிலர், ஒன்றுமில்லை என்றார்கள். சிலர், இதற்குள் காற்று இருக்கின்றது என்றார்கள்

முனிவர், காற்று இருக்கின்றது என்று சொன்னவர்களைப் பாராட்டிவிட்டு, இதற்குள் இருக்கும் காற்றை வெளியே எடுக்க முடியுமா? என்று கேட்டார்.

எல்லா சீடர்களும், முடியாது என்றார்கள். முனிவரோ, முடியும் என்றார். எப்படி? என்று சீடர்கள் கேட்டார்கள். அதற்கு முனிவர், இந்தப் பானைக்குள்ளே தண்ணீரை ஊற்றினால், இதற்குள்ளிருக்கும் காற்று வெளியேறிவிடும் என்றார்.

தூய ஆவியாரின் துணையோடு (முதல் வாசகம்) நம்பிக்கையை, அதாவது கடவுளின் வல்லமையால் ஆகாதது ஒன்றுமில்லை (இரண்டாம் வாசகம்) என்ற எண்ணத்தை நமது இல்லத்திற்குள்ளும். உள்ளத்திற்குள்ளும், மனத்திற்குள்ளும் ஊற்றிக்கொள்வோம்! அப்போது நாம் அனைவரும் மீட்கப்பட்டவர்களாய் நிலா போல உலா வருவோம்.

மேலும் அறிவோம் :

செயற்கரிய செய்வார் பெரியர் ; சிறியர்
செயற்கரிய செய்கலா தார் (குறள் : 26).
பொருள் :
பிறரால் செய்வதற்கு அரிய பெருமைதரும் நல்ல செயல்களை நிறைவேற்றுபவர் பெரியவர் என்று பாராட்டப்படுவர். சிறுமையான செயல்களை மட்டுமே செய்து பெருமையான நற்பணிபுரியாதவர் சிறியவர் ஆவர்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

விண்ணகம் செல்ல...

மறைக்கல்வி வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம், “விண்ணகம் செல்ல விரும்புவர்கள் கைகளை மேலே உயர்த்துங்கள் " என்று கேட்டார், ஒரு மாணவனைத் தவிர மற்ற எல்லா மாணவர்களும் கைகளை உயர்த்தினர். கையை உயர்த்தாத மாணவனிடம், "ஏப்பா, உனக்கு விண்ணகம் செல்ல விருப்பம் இல்லையா?” என்று ஆசிரியர் கேட்டபோது, அவன், "விண்ணகம் செல்ல எனக்கு விருப்பம் தான்; ஆனால், இன்று பள்ளி முடிந்தவுடன் வேறு எங்கும் போகாமல் நேராக வீட்டிற்கு வரும்படி எங்கப்பா சுன்ண்டிப்பாய்ச் சொல்லியிருக்கிறார் " என்றான், நமக்கு விண்ணகம் செல்லப் பிரியம் என்றாலும், இந்த மண்ணகத்தை விட்டுப் போகப்பிரியமில்லை!

அன்னைத் தெரசா இறக்கும் வேளையில், அவரிடம் ஏழைக்குழந்தைகள், "அம்மா! எங்களை அனாதைகளாக விட்டுவிட்டு விண்ணகம் செல்லாதீர்கள், அங்கே நீங்கள் சேவை செய்ய ஏழைகள் இல்லை" என்று சொல்லி அழுதார்களாம்!

கிறிஸ்து விண்ணகம் செல்லாமல், எப்போதும் இம் மண்ணகத்தில் வாழ்ந்து மக்களுக்குப் பணிபுரிந்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் அவர் ஏன் விண்ணகம் சென்றார், "அவர் விண்ணகம் சென்றது இம்மண்ணகத் துன்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அல்ல; நம் முதல்வரும் தலைவருமான அவர் சென்ற அதே விண்ணகத்திற்கு, அவருடைய சீடர்களாகிய நாமும் செல்வோம் என்னும் நம்பிக்கையை வளர்ப்பதற்காகவே" என்று இன்றைய திருப்பலியின் நன்றியுரையில் திருச்சபை தெளிவாக எடுத்துரைக்கின்றது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், திருச்சபை கிறிஸ்துவின் உடலென்றும், அவரே அவ்வுடலுக்குத் தலையாய் இருக்கிறார் என்றும் கூறுகிறார் (எபே 1:22-23) எவ்வாறு தலையிலிருந்து உடலைப்பிரிக்க இயலாதோ, அவ்வாறே தலையாகிய கிறிஸ்துவிடமிருந்து அவரது உடலா கிய திருச்சபையைப் பிரிக்க இயலாது. எனவே, நம் தலையாகிய கிறிஸ்து அடைந்த அதே விண்க மகிமையில் அவரது உடலாகிய நாமும் பங்கு பெறுவது. உறுதியாகிவிட்டது.

விண்ணகம் சென்ற கிறிஸ்து மீண்டும் மண்ணகம் திரும்புவார் என்று இன்றைய முதல் வாசகத்தில் வானதூதர்கள் சீடர்களுக்கு அறிவிக்கின்றனர் (திப 1:11). அவர் மீண்டும் வருவார் என்பது எவ்வளவு உறுதியானதோ, அவ்வளவு உறுதியற்றது அவர் எப்போது வருவார் என்பது. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை அறியமுயல்வது ஆணவம் மட்டுமல்ல, இறை நிந்தையுமாகும். ஏனெனில், கடவுள் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது நமக்கு உரியது அல்ல (திப 1:7) என்று இயேசுவே குறிப்பிட்டுள்ளார்.

உலகின் முடிவைப் பற்றியும் கிறிஸ்துவின் இரண்டாவது வருகையைப் பற்றியும் கத்தோலிக்கத் திருச்சபை போதிய அளவு வலியுறுத்துவதில்லை என்று ஏனைய சபைகள் சுமத்தும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, ஏனெனில், ஒவ்வொரு திருப்பலியிலும் "நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும், எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்" என்று திருச்சபை ஓயாது ஓதிக்கொண்டிருக்கிறது!

ஆடிமாதத்தில் பலத்த காற்று வீசுகிறது. ஏனென்றால், ஆடிமாதத்தில் புதிய தம்பதியர்களைப் பிரித்து விடுகின்றனர். அவ்வாறு பிரிக்கப்பட்ட தம்பதிகள் ஒருவர் மற்றவரை நினைத்து ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர். அவர்களுடைய ஏக்கப் பெருமூச்சு தான் பலத்த காற்றாக மாறிவிடுகிறதாம்!

திருச்சபை என்னும் மணமகளும் தனது மனமகனாகிய கிறிஸ்து எப்போது திரும்புவார் என்று எண்ணி எண்ணி ஏக்கப் பெருமூச்சு விடுகின்றது. தொடக்கக் காலக் கிறிஸ்துவர்கள் அடிக்கடி "மாரனாத்தா", அதாவது, "ஆண்டவரே வருக!" என்று கூவி அழைத்தனர் (1கொரி 16:22), விவிலியத்தின் இறுதிவாக்கியம்' "ஆண்டவராகிய இயேசுவே வாரும்" (திவெ 22:20)

தன் கணவர் தன்னை விட்டுப்பிரிந்து வீடு திரும்பிவராத நிலையில் "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப் பிரிந்த கணவர் இன்னும் வீடு திரும்பலை." என்று சோகத்துடன் பாடும் மனைவியைப் போல் இராது, திருச்சபை தன்னிடம் கிறிஸ்து ஒப்படைத்துள்ள மீட்புப்பணியை முழு மூச்சுடன் ஆற்றிக் கொண்டிருக்கிறது.

இன்றைய நற்செய்தி உணர்த்தும் உண்மைகள் பின்வருமாறு:

  1. விண்ணகம் செல்லுமுன் கிறிஸ்து, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவிக்கும் பொறுப்பைத் திருச்சபையிடம் ஒப்படைத்துள்ளார், கிறிஸ்துவே நற்செய்தியின் முதலும் முடிவுமாவார், ஒவ்வொரு சீடரும் கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அறிவிக்கும் திருத்தூதராவார்.
  2. முழு மனிதனையும் குணமாக்கும் பணி திருச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் சீடர்கள் பேய்களை ஒட்டலாம்; நோய்களைக் குணமாக்கலாம்; பயமின்றிப் பாம்பைக் கையால் பிடிக்கலாம்; கொடிய நஞ்சையும் அருந்தலாம், அதாவது, சீடர்களால் மேற்கொள்ள முடியாத தடைகளோ தீயசக்திகளோ இவ்வுலகில் எதுவுமில்லை .
  3. திருச்சபை தனது மீட்புப் பணியில் தனித்து இயங்கவில்லை, கிறிஸ்துவே திருச்சபையில் உடனிருந்து செயலாற்றுகிறார். "ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழும் அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப் படுத்தினார்” (மாற் 16:20).

திருச்சபை எவ்வளவுக்கு விண்ணக வாழ்வை எதிர்பார்க்கிறதோ, அவ்வளவுக்கு இம்மண்ணக மாந்தரின் முன்னேற்றத்திற்காக அது உழைக்க அழைக்கப்பட்டுள்ளது. மண்ணசு நலன்களில் அக்கறை கொண்டு, விண்ணக நலன்களை விருப்பமுடன் நாடவேண்டும். "பாச்சி பாச்சி” என்று அழுத குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாததால் "பூச்சி பூச்சி" என்று சொல்லி அக்குழந்தையை ஏமாற்றியதுபோல், தாயாகிய திருச்சபை விண்ணக வாழ்வைச் சுட்டிக்காட்டிவிட்டு மண்ணக வாழ்வை இருட்டடிப்புச் செய்யக்கூடாது. "உமது அரசு வருக!

எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்." எனவே மண்ணக வாழ்வையும் விண்ணக வாழ்வையும் பிரிக்காமல் இரண்டையும் ஒருங்கிணைத்து வாழக் கற்றுக் கொள்வோமாக!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வாழும்‌ போதே மறுமைக்கு வசதி செய்து கொள்வோம்‌

1917ம்‌ ஆண்டு மே 13ம்‌ நாள்‌. நண்பகல்‌ வேளை. போர்த்துக்கல்‌ நாட்டில்‌ ஃபாத்திமா என்ற சிற்றூருக்கருகில்‌ லூசியா, ஜெசிந்தா என்ற இரு சிறுமிகளும்‌ ஃபிரான்சிஸ்‌ என்ற சிறுவனும்‌ கண்ட காட்சி. உடல்‌ எல்லாம்‌ ஒளிக்கதிர்‌ பாய, வார்த்தைக்கோ வருணனைக்கோ அடங்காத வனப்போடு தோன்றிய அந்த அழகுப்‌ பெண்மணியிடம்‌ - அன்னை மரியாவிடம்‌ - அச்சிறுவருள்‌ சற்று மூத்தவளான லூசியா உரையாடிக்‌ கேட்ட கேள்விகளும்‌ பெற்ற பதில்களும்‌:

“நீங்கள்‌ எங்கிருந்து வருகிறீர்கள்‌?”
“நான்‌ மோட்சத்திலிருந்து வருகிறேன்‌.”
“உங்களுக்கு நாங்கள்‌ என்ன செய்ய வேண்டும்‌?”
“தொடர்ந்து ஆறுமாதம்‌ ஒவ்வொரு மாதமும்‌ 13ம்‌ நாள்‌ இதே நேரம்‌ இதே இடத்துக்கு வர வேண்டும்‌”.
“நான்‌ மோட்சத்துக்குப்‌ போவேனா?”
“ஆம்‌ நீ போவாய்‌”
“ஜெசிந்தா?” “அவளும்‌ போவாள்‌”,
“பிரான்சிஸ்‌?'” “அவனும்‌ போவான்‌, ஆனால்‌ அதற்கு முன்‌ அவன்‌ சிறிது ஆழமாக செபிக்க வேண்டும்‌”.

இது நடந்து முடிந்த சில மாதங்களுக்குப்‌ பிறகு திருப்பயணிகள்‌ ஃபிரான்சிஸிடம்‌ கேட்ட கேள்விகள்‌!
“தம்பி எதிர்காலத்தில்‌ நீ என்ன செய்யப்‌ போகிறாய்‌?”
“தச்சுத்‌ தொழிலில்‌ ஈடுபாடா?” “இல்லை”.
“பட்டாளத்தில்‌ பணியா?” “இல்லை”.
“மருத்துவ மேற்படிப்பா?”” “இல்லை”.
“குருவாக ஆசையா?” “இல்லை”.
“திருப்பலி நிறைவேற்ற, பாவ சங்கீர்த்தனம்‌ கேட்க, கோவிலில்‌ செபிக்க இதையெல்லாம்‌ நீ விரும்பவில்லையா?”
“விரும்பவில்லை, குருவாக விருப்பமில்லை.”
“அப்போ, நீ என்னதான்‌ செய்யப்‌ போகிறாய்‌?”
“நான்‌ இறக்க வேண்டும்‌. மோட்சத்துக்குப்‌ போக வேண்டும்‌”.
அத்தனை சிறிய வயதில்‌ அந்தப்‌ பிஞ்சு மனதில்‌ இத்தனை ஆசைகள்‌ - விண்ணகம்‌ செல்ல வேண்டும்‌, கடவுளைச்‌ சென்றடைய வேண்டும்‌ என்று!

பிறந்த 40ஆம்‌ நாள்‌ ஆலயத்தில்‌ அர்ப்பணம்‌. அந்த அர்ப்பண நிறைவில்‌ உயிர்த்த 40ஆம்‌ நாள்‌ ஒலிவமலையில்‌ விண்ணேற்றம்‌. இயேசு விண்ணேறிச்‌ சென்றது இரண்டு காரணங்களுக்காக:

1. நமக்கென ஓர்‌ உறைவடத்தைத்‌ தயார்‌ செய்ய: “என்‌ தந்‌தை வாழும்‌ இடத்தில்‌ உறைவிடங்கள்‌ பல உள்ளன... நான்‌ போய்‌ உங்களுக்கு இடம்‌ ஏற்பாடு செய்தபின்‌, திரும்பி வந்து உங்களை என்னிடம்‌ அழைத்துக்‌ கொள்வேன்‌... (யோவான்‌ 14:2,3).
வாழ்க்கை என்பதே ஒரு பயணம்‌. நாமெல்லாம்‌ வழிப்போக்கர்கள்‌. “ஏனெனில்‌ நிலையான நகர்‌ நமக்கு இங்கு இல்லை. வரப்போகும்‌ நகரையே நாம்‌ நாடிச்‌ செல்கிறோம்‌” (எபி.13:14).

2. தந்தையிடம்‌ நமக்காகப்‌ பரந்து பேச “தம்‌ வழியாகக்‌ கடவுளிடம்‌ வருபவரை, அவர்‌ முற்றும்‌ மீட்க வல்லவராய்‌ இருக்கிறார்‌. அவர்களுக்காகப்‌ பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர்‌ வாழ்கிறார்‌” (எபி.7:25) “ஒருவர்‌ பாவம்‌ செய்ய நேர்ந்தால்‌ தந்தையிடம்‌ பரிந்து பேசுபவர்‌ ஒருவர்‌ நமக்கு இருக்கிறார்‌. அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து (1 யோ.2;1).

நற்செய்தி ஊழியர்‌ ஒருவர்‌, 'இன்ன நாளில்‌ இறப்பு' என்று எழுதுவதை விடுத்து 'இன்ன நாளில்‌ விண்ணேற்பு' என்று கல்வெட்டில்‌ பொறிப்பதில்‌ தனி ஆறுதல்‌ காண்பாராம்‌. நம்பிக்கையாளருக்கு சாவு என்பது அறியாத உலகை நோக்கிய இருண்ட பயணம்‌ அல்ல. மகிமைக்கான வாசல்‌. நாம்‌ சாகும்‌ போது நம்‌ உடல்தான்‌ புதைக்கப்‌படுகிறது. ஆன்மா? அது விண்ணேறிச்‌ செல்கிறது. அதனால்தான்‌ பவுல்‌ சொல்வார்‌: “நாம்‌ காண்பவற்றின்‌ அடிப்படையில்‌ அல்ல, நம்பிக்கையின்‌ அடிப்படையிலேயே வாழ்கிறோம்‌. இவ்வுடலை விட்டு அகன்று ஆண்டவரோடு குடியிருக்கவே விரும்புகிறேன்‌. எனவே நாம்‌ இவ்வுடலில்‌ குடியிருந்தாலும்‌ அதிலிருந்து குடிபெயர்ந்தாலும்‌ அவருக்கு உகந்தவராய்‌ இருப்பதே நம்‌ நோக்கம்‌” (2 கொரி. 5:7-9)

விண்ணக வாழ்வுக்கான உரிமைப்‌ பேற்றை திருமுழுக்கின்‌ வழியாகவே பெற்றோம்‌. நம்‌ நன்மைத்தனத்தின்‌ பொருட்டு அல்ல, இந்த அரிய பேற்றினை இறைவன்‌ நமக்குக்‌ கொடுத்தது அவரது எல்லையற்ற இரக்கத்தினால்‌ மட்டுமே!

எப்படியாவது மோட்சத்துக்குச்‌ சென்று விட முடிவெடுத்தான்‌ ஒருவன்‌. அதற்கான வழியைத்‌ தேடி அலைந்தான்‌. துறவு வாழ்வைத்‌ தழுவினால்‌ பேரின்ப வீட்டை அடைய முடியும்‌ என்ற முடிவுக்கு வந்தான்‌. துறவு வாழ்வு கடினமானது என்றனர்‌ பலரும்‌. இருப்பினும்‌ துறவு வாழ்வைக்‌ கடைப்பிடிக்க இயலாது என்று உணர்ந்தும்‌ தனக்குத்தானே சமாதானம்‌ சொல்லிக்‌ கொள்கிறான்‌: “நான்‌ இப்போது துறவியாகி விட்டேன்‌. இது மோட்சத்தில்‌ ஒரு கால்‌ வைத்து விட்டதற்குச்‌ சமம்‌. துறவு வாழ்வை என்னால்‌ முற்றிலும்‌ வாழ முடியா விட்டாலும்‌, நான்‌ மோட்சம்‌ போவது உறுதி”.

இந்த மனிதனைப்‌ போலவே நம்மில்‌ பலர்‌ இருக்கிறோம்‌. திருமுழுக்குப்‌ பெற்றதனாலேயே மோட்சத்திற்குப்‌ பயணச்சீட்டு வாங்கி விட்டதாக நினைக்கிறோம்‌. ஆனால்‌ மாட்சி பெற்ற இயேசுவின்‌ மனிதத்‌ தன்மையோடு, நமது மனிதத்‌ தன்மையும்‌ ஐக்கியமாகவில்லையென்றால்‌ நம்‌ பயணச்சீட்டு செல்லாமல்‌ போய்விடும்‌.

கங்கைக்‌ கரையில்‌ இருந்த அந்த அரசில்‌ விந்தையான ஒரு வழக்கம்‌. பட்டத்து யானை மாலை போட்டு அரசனைத்‌ தேர்ந்தெடுக்கும்‌. 'அவன்‌ ஐந்து ஆண்டுகள்‌ ஆட்சி செய்வான்‌. பின்‌ அவனை அக்கரையில்‌ உள்ள காட்டில்‌ கொண்டு போய்‌ விட்டுவிடுவார்கள்‌. அங்கே தன்னந்தனியாய்‌ பட்டினி கிடந்து மடிய வேண்டியதுதான்‌. ஐந்து ஆண்டுகள்‌ ஆனந்த அனுபவம்‌, முடிவில்‌ அலறி அழுது புலம்புவது. வாடிக்கையாக நடப்பது இது.

ஆனால்‌ ஒருமுறை அக்கரை செல்லப்‌ படகேறிய அரசன்‌ பாடிக்‌ கொண்டு மகிழ்ச்சியாக இருந்தான்‌. அவனால்‌ எப்படி ஆனந்தமாக இருக்க முடிகிறது என்று அமைச்சன்‌ வியந்து கேட்டபோது “என்னோடு வந்து பார்‌” என்றான்‌ அந்த முன்னாள்‌ மன்னன்‌. கூடச்‌ சென்று பார்த்த போது அங்கே காடுகள்‌ இல்லை, மாட மாளிகை, செல்வச்‌ செழிப்பு! அரசனாக இருந்த போதே அவன்‌ செய்து கொண்ட முன்னேற்பாடுகள்‌.

இம்மையில்‌ இன்பம்‌ துய்க்கும்‌ போதே மறுமைக்கும்‌ வசதி செய்து கொள்வது எவ்வளவு அறிவுடைமை!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஆண்டவரின் விண்ணேற்றம், அன்னை தினம்

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவைச் சிறப்பிக்கும் இந்த ஞாயிறு, மே மாதம் இரண்டாம் ஞாயிறு என்பதால், அன்னை தினமும் கொண்டாடப்படுகின்றன. இவ்விரு விழாக்களும், மனதை உயர்த்தும் அற்புத எண்ணங்களை நமக்கு வழங்குகின்றன.

முதலில், ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா நமக்கு வழங்கும் எண்ணங்களை அசைபோடுவோம். "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" (மாற்கு 16:15), என்று, இன்றைய நற்செய்தியில் இயேசு விடுத்த கட்டளையும், "உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" (தி.பணிகள் 1:8) என்று இன்றைய முதல் வாசகத்தில் அவர் வழங்கிய உறுதி மொழியும், இவ்விழாவின் உயிர் நாடியாக விளங்கும் இரு கருத்துக்கள். நற்செய்தியைப் பறைசாற்றுவதும், கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருப்பதும், கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளம்.

வாழ்வால் சாட்சி பகராமல், வார்த்தைகளைக் கொண்டு, நற்செய்தியைப் பறைசாற்றும் பெரிய திட்டங்களைச் செயல்படுத்த விழைவோருக்கு, சவால் விடுக்கும் வண்ணம் அமைந்துள்ள, ஒரு பாரம்பரியக் கதை இதோ:
இயேசு விண்ணேற்றம் அடைந்தபின் நிகழ்ந்ததாய்ச் சொல்லப்படும் கற்பனைக் கதை இது. இயேசு விண்ணகம் சென்றதும், தலைமைத்தூதர் கபிரியேல் அவரைச் சந்தித்தார். "உங்கள் பணியைத் திறம்பட முடித்துவிட்டீர்கள். உலகில் உங்கள் நற்செய்தியைத் தொடர்ந்து பரப்புவதற்கு என்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள்?" என்று கேட்டார்.
"என்னுடையப் பணியைத் தொடரும்படி ஒரு சில மீனவர்களிடமும், வரி வசூலிப்பவர்களிடமும் சொல்லியிருக்கிறேன்" என்று இயேசு சொன்னதும், கபிரியேல் தூதர் அவரிடம், "யார்... அந்தப் பேதுரு, தோமா, இவர்களைப்பற்றி சொல்கிறீர்களா? அவர்களைப் பற்றித்தான் உங்களுக்கு நன்கு தெரியுமே... ஒருவர் உங்களைத் தெரியாது என்று மறுதலித்தார், மற்றொருவர் உங்களை நம்பவில்லை. இவர்களை நம்பியா இந்த மாபெரும் பணியை ஒப்படைத்தீர்கள்? கட்டாயம் வேறு சில நல்ல திட்டங்கள் உங்கள் எண்ணத்தில் இருக்கும், அப்படித்தானே?" என்று கேட்டார்.
இயேசு அவரிடம் அமைதியாக, "நற்செய்திப் பரப்பும் பணியை, இவர்களை நம்பியே நான் ஒப்படைத்துள்ளேன். இவர்களைத்தவிர, என்னிடம் வேறு எந்தத் திட்டமும் கிடையாது" என்று பதிலளித்தார்.

இருபது நூற்றாண்டுகளைத் தாண்டி, நற்செய்தி, இன்றும், இவ்வுலகில் உயிரோடு வாழ்ந்துவருகிறது என்றால், இன்றும் அர்த்தம் உள்ளதாக இருக்கிறது என்றால், அதற்குக் காரணம், நற்செய்தியை, தங்கள் அறிவுத்திறன் கொண்டு, சொல்லாற்றல் கொண்டு போதித்தவர்களோ, அவர்கள் பயன்படுத்திய விளம்பர வழிகளோ அல்ல. மாறாக, நற்செய்தியும், அதன் மையமான இயேசுவும்தான் காரணம். இயேசுவுக்கும், அவரது நற்செய்திக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், போதிப்பவரின் புகழுக்கும், அவர் பயன்படுத்தும் வார்த்தை வித்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட வேளைகளில், நற்செய்தி தடைபட்டது என்பதை, கிறிஸ்தவ வரலாறு, மீண்டும், மீண்டும், நமக்குச் சொல்லித்தருகிறது.

நற்செய்தியைப் பறைசாற்றவும், இயேசுவின் சாட்சிகளாய் இருக்கவும் நமக்கு அழைப்பு விடுக்கும் விண்ணேற்ற பெருவிழாவன்று, நற்செய்தியை தங்கள் வாழ்வாக்கிய அசிசி நகர் பிரான்சிஸ், அன்னை தெரேசா போன்ற புனிதர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். அவர்கள், தங்கள் வாழ்வால் போதித்த நற்செய்தியே, இவ்வுலகில் பெரும் மாற்றங்களை உருவாக்கியுள்ளன என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இன்றைய முப்பெரும் விழாவின் அடுத்த இரு திருநாள்கள், அன்னையரை மையப்படுத்தியவை. நற்செய்தியை தங்கள் வாழ்வின் வழியே பறைசாற்றியப் புனிதர்களின் வரிசையில், முதலிடம் பெறுபவர், அன்னை மரியா. அந்த அன்னையை மையப்படுத்தி கொண்டாடப்படும் பல திருநாள்களில் ஒன்று, மே 13ம் தேதி நாம் சிறப்பிக்கும், பாத்திமா அன்னை திருநாள். அந்த அன்னையின் பிம்பங்களாக, இவ்வுலகில் வலம்வரும் நமது அன்னையரையும், இன்று நன்றியோடு எண்ணிப் பார்க்க, மே மாதத்தின் 2ம் ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் அன்னை தினம் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

அன்னைக்கென வருடத்தின் ஒரு நாளை அர்ப்பணிக்கும் எண்ணத்தை 19ம் நூற்றாண்டில் வித்திட்டவர், சமூக ஆர்வலரும், கவிஞருமான Julia Ward Howe. இவர் 1870ம் ஆண்டு சக்திவாய்ந்த ஒரு கவிதையை எழுதினார். Mother's Day Proclamation, அதாவது, "அன்னைதின அதிகாரப்பூர்வ அறிவிப்பு" என்ற பெயரில் அவர் வெளியிட்ட கவிதை, உலகெங்கும் அன்னை தினத்தைக் கொண்டாடும் எண்ணத்திற்கு வித்திட்டது. இக்கவிதை விவரிக்கும் தாய்மைப் பண்புகள் நமது இன்றைய உலகிற்கு மிகவும் தேவையான பாடங்களைச் சொல்லித் தருகின்றன. அன்னை, அல்லது, அம்மா என்றதும், வீட்டுக்குள், அடுப்படியில் முடங்கிக்கிடக்கும் பெண்ணாக, அவர்களை எண்ணிப்பார்த்த காலத்தைக் கடந்து, சமுதாயத்தில் நல்ல முடிவுகளை எடுக்க, குறிப்பாக, உலக அமைதியை முன்னிறுத்தி, முடிவுகள் எடுக்க, பெண்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும்; அவர்களது மென்மை கலந்த உறுதி, உலகின் பிரச்சனைகளைத் தீர்க்கும் என்று, 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இக்கவிதை முழங்குகிறது. அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் எழுதப்பட்ட அக்கவிதை இதோ:

மகளிரே, இன்று எழுந்து நில்லுங்கள்! இதயமுள்ள மகளிரே, எதிர்த்து நில்லுங்கள்!
உங்களது திருமுழுக்கு, தண்ணீரால் நடந்திருந்தாலும், கண்ணீரால் நடந்திருந்தாலும் சரி... இப்போது எழுந்து நில்லுங்கள், எதிர்த்து நில்லுங்கள்.
உறுதியாகச் சொல்லுங்கள்: “வாழ்வின் மிக முக்கியமானக் கேள்விகளுக்கு, விடைகளைத் தீர்மானிக்கும் உரிமையை, குடும்பத்துடன் சிறிதும் தொடர்பற்ற நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்.
சண்டைகளில், உயிர்களைக் கொன்று குவித்த கொலை நாற்றத்துடன் வீடு திரும்பும் கணவர்கள், எங்கள் ஆரவார வரவேற்பையும், அரவணைப்பையும் பெறுவதற்கு, நாங்கள் இணங்கமாட்டோம்.
பிறரன்பு, கருணை, பொறுமை என்று நாங்கள் சொல்லித்தரும் பாடங்களை மாற்றி, அவற்றிற்கு எதிரான பாடங்களைச் சொல்லித்தரும் நிறுவனங்களிடம் எங்கள் குழந்தைகளை ஒப்படைக்க மாட்டோம்.
ஒரு நாட்டைச் சார்ந்த பெண்களாகிய நாங்கள், மற்றொரு நாட்டைச் சார்ந்த பெண்கள் மீது கனிவு கொண்டவர்கள். எனவே, எங்கள் மகன்கள், அப்பெண்களின் மகன்களைக் காயப்படுத்த விடமாட்டோம்.”

அன்னையரின் ஒருமித்த தீர்மானங்களை, இவ்வாறு, தெளிவுடன் வெளியிடும் இவ்வறிக்கை, தொடர்ந்து, அமைதிக்காக ஏங்கி, ஒவ்வொரு நாளும் அலறும் பூமித்தாயுடன், அன்னையரின் குரல்களை இணைக்கிறது.
நிர்மூலமாக்கப்பட்ட இந்தப் பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் ஓர் ஓலம், எங்கள் குரல்களுடன் இணைகிறது. அது சொல்வது இதுதான்: "ஆயுதங்களைக் களையுங்கள்! ஆயுதங்களைக் களையுங்கள்! உயிர் குடிக்கும் வாள் ஒருநாளும் நீதியை நிலைநாட்டும் தராசு ஆகாது!" என்பதே, பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் அந்த ஓலம்.

போர்க்கள அழைப்பைக் கேட்டு, தங்கள் நிலங்களையும், தொழிற்சாலைகளையும் விட்டுச் சென்றுள்ள ஆண்களைப் போல், பெண்களும், தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறட்டும். போரில் ஈடுபடும் ஒவ்வொரு நாட்டிலும் நல்ல முடிவுகள் உருவாக, பெண்களும், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறட்டும். போரில் இறந்தோரை நினைவுகூர, அவர்களுக்காக அழுது புலம்ப, பெண்கள் ஒன்று சேரட்டும். இந்த மனிதக் குடும்பம் அமைதியில் வாழ்வதற்குரிய வழிமுறைகளை, பெண்கள் கலந்து பேசட்டும். உலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை பெண்கள் இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.

ஜூலியா அவர்கள் எழுதிய கவிதை, இன்றும் நம்மைச் சூழ்ந்துள்ள அவலங்களை, ஆபத்துக்களைக் கூறுகின்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, அண்மையில், இரு கொரிய நாடுகளின் அரசுத்தலைவர்கள் ஒருவரையொருவர் சந்தித்தது, ஓரளவு நம்பிக்கையை தந்துள்ளது. இருப்பினும், சிரியாவில் நிகழ்வதாய் சொல்லப்படும் வேதியல் போர், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல், உலகின் அனைத்து நாடுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்கள் போன்ற செய்திகள், நமது அமைதியையும், நம்பிக்கையையும் குலைக்கின்றன.

சண்டைகளில் உயிர்களைக் கொன்று குவித்த கொலை நாற்றத்துடன் வீடு திரும்பும் கணவர்கள் என்று, இக்கவிதையில் சித்திரிக்கப்பட்டுள்ள காட்சி, நமக்கு வேதனை தருகிறது. ஆனால், கொலை நாற்றத்துடன் வீடுதிரும்பும் ஆண்களின் எண்ணிக்கை, உலகில் பெருகிவருகிறது என்ற உண்மை, நம் வேதனையை ஆழப்படுத்துகிறது. கண்மூடித்தனமான வெறியுடன், தீவிரவாதக் குழுக்கள் உருவாக்கிவரும் கொலை நாற்றத்தைப் போக்க, அரசுகள் மேற்கொள்ளும் இராணுவ முயற்சிகள் தகுந்த பதில்தானா என்று தெரியவில்லை. பழிக்குப் பழி என்ற தீயை, மன்னிப்பு என்ற மழையே தணிக்கமுடியும். அப்போதுதான், இந்தக் கொலை நாற்றம் இவ்வுலகிலிருந்து நீங்கும். மன்னிப்பு மழையைச் சுமந்துவரும் கருணை மேகங்களாக இவ்வுலகில் வலம்வருவது, அன்னையரே என்பதை, யாரும் மறுக்கமுடியாது.

ஜூலியா அவர்கள் எழுதிய கவிதையின் இறுதி வரிகள் இன்று நாம் கொண்டாடி மகிழும் அன்னை தினத்தையும், பாத்திமா அன்னை திருநாளையும் இணைக்க உதவியாக உள்ளன. உலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை பெண்கள் இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.
உலகின் மேல் அதிகாரமான, ஆணவமான சீசரின் உருவம், பதியப் பதிய, மென்மேலும் போர்களாலும், வன்முறைகளாலும் இந்த உலகம் சிதைந்து வருகிறது என்பதை நன்கு அறிவோம். சீசரின் உருவைப் பதிப்பதற்குப் பதிலாக, அன்பான, ஆறுதலான கடவுளின் உருவைப் பதிப்பது எப்படி என்பதை, அன்னை மரியா, தான் வாழ்ந்த காலத்தில் மட்டும் சொல்லித் தரவில்லை. அவர் விண்ணகம் சென்றபின்பும், பல இடங்களில் தோன்றி, இந்தச் செய்தியைப் பகிர்ந்தார். சிறப்பாக, பாத்திமா நகரில் அவர் தோன்றியபோது, உலகைச் சூழ்ந்திருந்த போரைக் குறித்தும், உலக அமைதிக்காக மக்கள் செபங்களை எழுப்ப வேண்டும் என்பது குறித்தும், சிறப்பான செய்திகளைக் கூறினார். அன்னை மரியா கூறிய அச்செய்தி, பாத்திமா அன்னை திருநாளன்று, மீண்டும் ஓர் அழைப்பாக ஒலிக்கிறது.

பல்வேறு போர்களால், போராட்டங்களால் தொடர்ந்து காயப்பட்டு வரும் நமது உலகிற்கு, தாய்மை, பெண்மை ஆகிய குணமளிக்கும் குணங்கள் அதிகம் தேவைப்படுகின்றன. எனவே, இன்று நாம் கொண்டாடும் அன்னை தினம், வாழ்த்து அட்டைகள், மலர் கொத்துக்கள் என்று, வெறும் வியாபாரத் திருநாளாக மாறிவிடாமல், நம் ஒவ்வொருவரிலும் உள்ள தாய்மையை வெளிப்படுத்தும் ஒரு நாளாக, அதன் வழியாக, உலகின் அமைதிக்கு உறுதியான அடித்தளமிடும் ஒரு நாளாக இருக்க வேண்டுமென்று, சிறப்பாக வேண்டிக்கொள்வோம். அமைதியின் மன்னராம் கிறிஸ்துவுக்கு சாட்சிகளாக வாழ்வதன் வழியே, நாம் நற்செய்தியைப் பறைசாற்றுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தெய்வீக தூண்டுதல்‌ ஒரு நேர்மறை நிகழ்வு

விண்ணேற்றம்‌ என்பது இயேசு உயிர்தெழுந்த இறைவனின்‌ மாட்சியை அடையும்‌ நிகழ்வினைக்‌ குறிக்கும்‌ சொல்‌ ஆகும்‌. இந்த நிகழ்வை நாம்‌ மாற்‌ 16:15-20; திப 1:6-11 ஆகிய பகுதிகளில்‌ காண்கிறோம்‌. விவிலியக்‌ குறிப்புகள்‌ இந்த நிகழ்வை ஒரு தெய்வீகத்‌ தூண்டுதலால்‌ நடைபெற்றது என்று உறுதி செய்கின்றன. இந்தத்‌ தெய்வீக தூண்டுதல்‌ ஒரு நேர்மறை நிகழ்வாக கருதப்படுகிறது.

பழைய எற்பாட்டில்‌ விண்ணேற்றம்‌ என்பது ஏனோக்கு (தொநூ 5:23-24), எலியா (2அர 2) இருவருக்கு மட்டுமே சொல்லப்பட்டது. ஏனோக்கின்‌ விண்ணேற்றத்தை உடல்‌ மாற்றம்‌ எனக்‌ குறிப்பிடுகிறார்கள்‌. ஆனால்‌ உண்மையில்‌ இயேசுவின்‌ விண்ணேற்றம்‌ அவரின்‌ சீடர்களுக்கு நிகழ்ந்த பெரிய உண்மை. இயேசுவின்‌ உயிர்ப்பானது இறப்பைவென்று கடவுளின்‌ மாட்சியை வெளிப்படுத்தும்‌ ஒரு நிகழ்வு. இயேசுவின்‌ வாழ்வு பூமியில்‌ தொடங்கி விண்ணேற்றம்‌ அடையும்போதுதான்‌ நிறைவேறும்‌ என்று சுட்டிக்காட்டுகிறது. இது கடவுளின்‌ வெளிப்படாக இருக்கிறது. தன்‌ சீடர்களுக்கு வழங்கிய இறுதி அன்புக்‌ கட்டளை: “நீங்கள்‌ போய்‌ எல்லா மக்களினத்தாரையும்‌ சீடராக்குங்கள்‌”'. இயேசுவிடமிருந்து இந்த இறுதிக்‌ கட்டளையைப்‌ பெற்ற நாம்‌ அனைவரும்‌ நற்செய்தியைப்‌ பறைசாற்றும்‌ சீடர்களாக வாழ அழைக்கப்படுகிறோம்‌.

இயேசுவின்‌ விண்ணேற்ற நிகழ்வு: ஏன்‌ ?, எதற்காக? என்கிற தேடலுக்கான மூன்று பதிலைத்‌ தருகிறது.
1) இயேசுவின்‌ மண்ணக வாழ்வின்‌ நிறைவு
2) திருத்தூதர்கள்‌ இறையாட்சிப்‌ பணியை தொடங்குவதற்கான அழைப்பு
3) இறைவனின்‌ தொடர்‌ உடனிருப்பை உறுதி செய்வதற்கான அழைப்பு

இதையே இன்றைய நற்செய்தி விண்ணேற்றமடைந்த பின்‌ நடந்த நிகழ்வுகளாக சுட்டிக்காட்டுகிறது. சீடர்கள்‌ புறப்பட்டு நற்செய்தியைப்‌ பறைச்சாற்றினர்‌. ஆண்டவரும்‌ உடனிருந்து அவர்கள்‌ மூலம்‌ வல்லசெயல்களை ஆற்றினார்‌. விண்ணேற்றத்தை எளிதாகப்‌ புரிந்துகொள்ள ஆரஞ்சுப்‌ பழரசம்‌ தயாரிக்கிறோம்‌ என வைத்துகொள்வோம்‌. பழரசம்‌ வந்தவுடன்‌ ஆரஞ்சு மறைந்துவிடுகிறது. ஆரஞ்சு மறைந்துவிட்டாலும்‌ பழரசம்‌ நம்‌ கைகளில்‌ உள்ளது. நாம்‌ செய்யவேண்டிதெல்லாம்‌ ஆரஞ்சு பேய்விட்டதே என வருந்தாமல்‌, அது பழரசமாக நம்‌ கைகளில்‌ இருக்கிறதே என்று மகிழ்ந்து பருகி ஊட்டம்‌ பெறுவதுதான்‌. ஆண்டவரின்‌ விண்ணேற்றம்‌ அவரை நம்புவோருக்கும்‌, அவரது பணியைத்‌ தொடர்ந்து ஆற்றுவோருக்கும்‌ ஊட்டம்‌ தரும்‌ அருமருந்து !

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கடவுளின் தொடர் உடனிருத்தல்

எப்படி விண்ணேற்றம்? என்று கேட்பதை விடுத்து, ஏன் விண்ணேற்றம்? என்று கேட்டால் விண்ணேற்றப் பெருவிழாவின் பொருள் தெரிந்துவிடும்.

விண்ணேற்றம் இயேசுவின் வாழ்வில் மூன்று நிலைகளில் அர்த்தம் பெறுகின்றது:

1. தன் மண்ணக பணிவாழ்வு முடிந்து, இன்று தன் தந்தையின் இல்லம் திரும்புகின்றார் (காண். பிலி 2:3-6). மனுவுருவாதல் என்னும் வட்டம் விண்ணேற்றத்தில் நிறைவுபெறுகிறது.

2. தன் சீடர்களிடம் தன் பணியை ஒப்புவிக்கின்றார். தன் இறையரசுப் பணியைத் தொடர்ந்தாற்ற அவர்களுக்குக் கட்டளையிடுகின்றார். விண்ணேற்றம் ஒரு பிரியாவிடை நிகழ்வு. விவிலியத்தில் உள்ள பிரியாவிடை நிகழ்வுகளில் மூன்று மட்டுமே மிக நீளமானவை: இஸ்ரயேலின் குலமுதல்வர் யாக்கோபு (தொநூ 49-50), திருச்சட்டம் வழங்கிய மோசே (இச 33-34), புதிய இஸ்ரயேலின் நம்பிக்கை மற்றும் திருச்சட்டத்தின் நிறைவாம் இயேசு (திப 1:1-11). இந்த மூன்று பிரியாவிடைகளும் நான்கு கூறுகளைக் கொண்டுள்ளன: அ) ஆசியுரை, ஆ) பிரிவு, இ) பார்த்தவர்களின் பதில் மற்றும் ஈ) கீழ்ப்படிதல் அறிக்கை. இயேசு கைகளை உயர்த்தி ஆசீர் அளிக்கும் நிகழ்வும் முதல் ஏற்பாட்டு நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகவே அமைகின்றது (லேவி 9:22, சீஞா 50:20-21). ஆசியளித்தல் தரும் மகிழ்ச்சி லூக்கா நற்செய்தியின் முதல் மற்றும் இறுதி நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது (1:56, 2:20,43,45, 24:9,33, 8:13, 15:7,10). இயேசுவின் சீடர்கள் மகிழ்ச்சியோடு ஆலயம் திரும்பி இறைவனைப் புகழ்கின்றனர்.

3. துணையாளராம் தூய ஆவியானவரை அவர்கள்மேல் அனுப்புவதாக வாக்குறுதி தருகின்றார் (திப 1:4-5).


இயேசுவின் உயிர்ப்பைப் போலவே, அவரின் விண்ணேற்றமும் ஒரு நம்பிக்கையின் மறைபொருளே. ‘நம்பிக்கை’ என்ற இந்த ஒற்றைச் சொல்லை நீக்கிவிட்டால், இந்த நிகழ்விற்கும் நமக்கும் தொடர்பே இல்லை. ‘விண்ணேற்றம் என்னும் நம்பிக்கையை’ நாம் எப்படி வாழ்வாக்குவது? விண்ணேற்றம் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?
விண்ணேற்றம் திருத்தூதர்களுக்குச் சொன்ன செய்தி என்ன?

    இன்றைய முதல் வாசகத்தில், லூக்கா பதிவு செய்வது போல, அவர்கள் எருசலேமை விட்டு நீங்குதல் கூடாது. மேலும், அவர்கள் கடவுளது வல்லமை பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் சாட்சியாக இருப்பார்கள். இயேசு பணியை நிறுத்திய இடத்திலிருந்து திருத்தூதர்கள் தங்கள் பணியைத் தொடங்க வேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் மாற்கு நற்செய்தியாளரும் அப்படியே பதிவிடுகிறார்: ‘இயேசு விண்ணேற்றம் அடைந்த பின்னர் அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர்.’

    விண்ணேற்றம் நமக்குச் சொல்லும் செய்தி என்ன?

    (அ) இயேசுவின் உடனிருப்பு. ‘கடவுள் நம்மோடு’ என்று இறங்கி வந்தவர், ‘கடவுள் நமக்காக’ என்று ஏறிச்செல்கின்றார். அவர் நம்மை விட்டு நீங்கிவிடவில்லை. இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில், புனித பவுல், ‘எங்கும் நிறைந்திருக்கும்படி எல்லா வானுலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்ற அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார்’ என எழுதுகிறார். ஆக, ஆண்டவர் எப்போதும் எங்கும் நிறைந்திருக்கிறார். அவர் தன் உடனிருப்பை பல்வேறு நபர்கள் வழியாகவும், திருஅவையில் உள்ள தன் இருத்தலின் வழியாகவும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றார்.

    (ஆ) இயேசுவின் செயல்பாடு. நற்செய்தி வாசகத்தில், ‘ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்’ என மாற்கு பதிவு செய்கின்றார். ‘உடனிருப்பு’ என்பது இருத்தல் என்றால், ‘செயல்படுதல்’ என்பது இயக்கம். ஆண்டவர் செயல்படுகின்றார். எப்படி? நம் செயல்கள் வழியாக. நம் செயல்கள் அவருடைய செயல்களாக இருந்தால் அவர் அவற்றை உறுதிப்படுத்துகின்றார். அவற்றுக்குச் சான்றாக நிற்கின்றார். எளியோரைத் தூக்கி விடுவதில், உள்ளம் உடைந்தோரைக் குணமாக்குவதில், ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்வதில், வாழ்வின் சின்னஞ்சிறிய நிகழ்வுகளில் அவர் நம்மோடு செயல்படுகின்றார்.

    உடனிருப்பு மட்டும் இருந்து செயல்படுதல் இல்லை என்றால், அடுத்தவர் நமக்குச் சுமையாகி விடுவார். செயல்படுதல் மட்டும் இருந்து உடனிருப்பு இல்லை என்றால், அடுத்தவர் நம் எண்ணத்தை விட்டு எளிதாக மறைந்துவிடுவார். இரண்டும் இணையும்போது, அங்கே வல்ல செயல் (அரும் அடையாளம்) நடக்கிறது: பேய்கள் ஓட்டப்படுகின்றன. புதிய மொழிகள் பேசப்படுகின்றன. பாம்புகள் கைகளால் பிடிக்கப்படுகின்றன. கொல்லும் நஞ்சு தீங்கிழைப்பதில்லை. நலமற்றவர்கள் மேல் கைகள் வைக்கப்பட்டவுடன் அவர்கள் நலம் பெறுகின்றனர்.

    ஆக, ‘உடனிருப்பும்’ ‘செயல்படுதலும்’ ஆண்டவர் நமக்குத் தருகின்ற செய்தி. மறைதல் என்றால் இறைமை. இதையே பவுலும், ‘நாங்கள் காண்பவற்றை அல்ல, நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை. காணாதவை என்றும் நிலைத்திருப்பவை’ (காண். 2 கொரி 4:18) என எழுதுகின்றார். காணக்கூடிய நிலையில் இருந்த இயேசு திருத்தூதர்களின் பார்வையிலிருந்து மறைகின்றார். நிலையற்ற தன்மையிலிருந்து நிரந்தரத்திற்கு இயேசு கடந்து செல்கின்றார்.

    காண முடியாத நிலைக்குக் கடந்து செல்லும் அனைவரும் நிரந்தரத்திற்குக் கடந்து செல்கின்றனர். இனி இவர்கள் காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டவர்கள். எனவே, இவர்களால் எந்தக் காலத்திற்குள்ளும் எந்த இடத்திற்குள்ளும் இனி நுழைய முடியும்.

    ஆகையால்தான், உயரே ஏறுகின்ற ஆண்டவர் குறித்து, ‘அல்லேலூயா’ பாடி அக்களிக்கின்றார் திருப்பாடல் ஆசிரியர் (காண். 47).

    இறுதியாக, ‘எங்கள் கண்கள் முன்பாக இயேசு எடுத்துக்கொள்ளப்பட்டார்’ எனக் கூறும் முதல் வாசகம், அதே கண்களை நாம் இந்த உலகத்தின்மேல் பதிக்கவும், ‘கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறும் அளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம்’ என்று சொல்லும் இரண்டாம் வாசகம், விண்ணேற்றம் என்பது நாம் அடையும் நிறைவு என்றும், இன்றே நம் எண்ணங்களும் செயல்களும் முதிர்ச்சி பெற்று மேன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் ஊக்கம் தருகிறது.

    ஆண்டவரின் உடனிருப்பும், செயலாற்றுதலும் இன்றும் என்றும் நம்மோடு!

    மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

    இறை மாட்சியில் அகமகிழ வேண்டுமா!

    நம்முடைய திருஅவையில் எத்தனையோ புனிதர்கள் வாழ்ந்துள்ளனர். புனிதர்கள் அனைவருமே வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. மாறாக நம்மைப் போல சாதாரண மனிதர்களாக வாழ்ந்தவர்கள். ஆனால் இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்காக எல்லாவற்றையும் அர்ப்பணத்தோடு ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தவர்கள். நற்செய்தியை தங்களுடைய சொல்லாலும் செயலாலும் பறைசாற்ற முழு ஈடுபாட்டோடு அனைத்துத் துன்பங்களையும் ஏற்றவர்கள். எனவேதான் அவர்களால் மிகச்சிறந்த நற்செய்திப் பணியைச் செய்ய முடிந்தது. துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல் மனத் துணிவோடும் இறை நம்பிக்கையோடும் தங்கள் வாழ்வில் பயணித்தவர்கள். எனவேதான் கடவுள் துன்பத்தை அடைந்த புனிதர்களுக்கு இறைமாட்சியில் பங்குகொள்ள வாய்ப்பினை வழங்கினார்.

    புனித அல்போன்சா அவர்களின் வாழ்வை எடுத்துப் பார்த்தோமென்றால் அவருடைய வாழ்வில் அதிகமான துன்பங்களையும் நோய்களையும் பெற்றார். ஆனால் அவர் மனம் தளராமல் துன்பம் வேண்டாம் என்று சொல்லவில்லை. மாறாகத் துன்பத்தை எதிர்கொள்ளக் கூடிய ஆற்றலை இறைவனிடம் வேண்டினார். எனவே தான் அவரால் இறைமாட்சியைத் தன் வாழ்வில் அனுபவிக்க முடிந்தது.

    இயேசு விண்ணேற்ற பெருவிழாவை இன்றைய நாளில் கொண்டாடி மகிழ்கின்றோம். இந்தப் பெருவிழா துன்பத்தின் வழியில்தான் இறைவனின் மாட்சி இருக்கின்றது என்ற ஆழமான சிந்தனையை வழங்குகின்றது. இயேசுவின் துன்பத்தைக் கண்ட சீடர்கள் அச்சமும் கலக்கமும் அடைந்தனர். இயேசுவை பின்பற்றினால் தங்களுக்கும் துன்பம்தான் வரும் என்று யூதர்களுக்கு அஞ்சி நடுங்கினர். ஆனால் இயேசு துன்பத்தை வென்று இறந்து உயிர்த்தெழுந்து இறை மாட்சியை வெளிப்படுத்தினார். இந்த இறைமாட்சியின் உச்சகட்டமாக விண்ணேற்றம் அடைந்தார். இயேசுவின் விண்ணேற்றத்திற்கு அவருடைய சீடர்கள் தான் சாட்சிகள். இயேசுவின் துன்பத்தைக் கண்ட சீடர்கள் இயேசுவின் விண்ணேற்றத்தைக் கண்ணால் கண்டு இறை மாட்சியை அனுபவித்தனர். இயேசுவின் மீது ஆழமாக நம்பிக்கை கொண்டு அவரின் நற்செய்தி மதிப்பீடுகளை உலகெல்லாம் அறிவிக்கும் மிகச்சிறந்த கருவிகளாக மாறினர்.

    இன்றைய நற்செய்தி வாசகத்தில் "உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் " என்ற அன்புக் கட்டளையை விண்ணேற்றத்திற்கு முன்பாக இயேசு தம் அன்புச் சீடர்களுக்கு வழங்கினார். சீடர்களும் இயேசுவின் வார்த்தையின்படி உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றினார்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுகின்றவர்களுக்கு திருமுழுக்கு வழங்கி மீட்பின் கனியைச் சுவைக்க வழிகாட்டினார்கள். இந்த உலகை வாட்டி வதைத்த பல்வேறு நோய்களை இயேசுவின் பெயரால் குணமாக்கினார்கள். இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்டி அநீதியை விரட்டினார்கள். பல்வேறு அரும் அடையாளங்கள் வழியாக இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்குச் சான்று பகர்ந்தார்கள். இத்தகைய சாட்சியமுள்ள நற்செய்தி பணிக்கு சீடர்களுக்கு ஊக்கம் தந்தது இயேசுவின் விண்ணேற்பு.

    இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழா நம்மையும்இயேசுவைப் பின்பற்றிய சீடர்களை போலச் சான்று பகரக்கூடிய வாழ்வு வாழ அழைப்பு விடுக்கின்றது. திருமுழுக்கு பெற்ற நாம் ஒவ்வொருவரும் உலகெங்கும் நற்செய்தி பறைசாற்றவும் நம்பிக்கை கொண்டோருக்கு திருமுழுக்கு வழங்கவும் இயேசுவின் பெயரால் நோய்களையும் பேய்களையும் ஓட்டவும் அழைக்கப்பட்டுள்ளோம். இத்தகைய சான்று பகரக்கூடிய வாழ்வு வாழ நாம் இயேசுவோடு இருக்கவேண்டும். இயேசுவோடு இருக்கும்பொழுது நம் வாழ்வில் துன்பங்களும் சோதனைகளும் வேதனைகளும் வரும். ஆனால் நாம் அவற்றைக் கண்டு துவண்டுவிடாமல் துணிச்சலோடு செயல்பட அழைக்கப்பட்டுள்ளோம். துன்பத்தைக் கண்டு துவண்டுவிடாமல் இயேசு என்னோடு இருக்கிறார் என்று முழுமையாக நம்புகின்ற பொழுது, நிச்சயமாக நாம் இறைமாட்சியை நம் வாழ்வில் அனுபவிக்க முடியும்.

    மேலும் இறைமாட்சி அனுபவிக்க இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு நல்ல சிந்தனையைக் கொடுக்கின்றது. "நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள் " என்று திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதப்பட்ட திருமடலில் சுட்டிக்காட்டியுள்ளார். நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் வாழுகின்ற பொழுது நிச்சயமாக நம் வாழ்வில் துன்பங்களும் இடையூறுகளும் வரும். ஆனால் அவற்றை இயேசுவின் மனநிலையோடு ஏற்றுக்கொண்டு நம்முடைய நம்பிக்கை வாழ்வில் நிலைத்திருக்கும் பொழுது நாம் வாழ்வில் இறை மாட்சியை அனுபவிக்க முடியும். எனவே இன்றைய நாளில் இயேசுவின் நற்செய்தி மதிப்பீடுகளின் பொருட்டு நம் அன்றாட வாழ்வில் வருகின்ற துன்பங்களையும் இடையூறுகளையும் அன்போடு ஏற்றுக் கொள்வோம்.அப்பொழுது கடவுள் நம்மோடு இறுதிவரை உடனிருந்து இறை மாட்சியில் பங்குகொள்ள உதவி செய்வார்.

    இறைவேண்டல் :

    வல்லமையுள்ள ஆண்டவரே! உம் திருமகன் இயேசுகிறிஸ்து விண்ணேற்றம் அடைந்த நாளில் நாங்களும் அவரிடம் எங்கள் உள்ளத்தை ஒப்புக்கொடுத்து வேண்டுகின்றோம். எங்கள் வாழ்வில் துன்பங்கள் வந்தாலும் அவற்றைக் கண்டு துவண்டுவிடாமல் இறுதிவரை உம் திருமகன் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு இறை மாட்சியில் பங்குகொள்ளத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

    மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
    ser