மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பாஸ்கா காலத்தின் 6-ஆம் ஞாயிறு
இரண்டாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
திருத்தூதர் பணிகள் 10: 25-26,34-35,44-48 | 1 யோவான் 4: 7-10 | யோவான் 15:9-17

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்












இயேசு என்ற அந்த அன்பின்‌ வடிவம்‌ நம்மைப்‌ பாவம்‌ என்ற தீயில்‌ இருந்து காப்பாற்ற நமக்காகப்‌ பரிகாரம்‌ புரிந்தது. பழைய ஏற்பாட்டிலே 'இருக்கின்றவராக இருக்கிறவர்‌ நானே” (வி.ப. 3:14) என்று மோசேயுக்கு ஆண்டவர்‌ தம்மை வெளிப்படுத்தினார்‌. ஆனால்‌ புதிய ஏற்பாட்டில்‌ அந்த உன்னத தேவன்‌ அன்பே (1 யோவா. 4:8) என்று வெளிப்படுத்தப்படுகிறார்‌.

கடவுள்‌ தன்‌ ஏக மகனை அனுப்பும்‌ அளவுக்கு உலகத்தின்‌ மீது அன்பு கொண்டார்‌. எனவே இந்தத்‌ தந்தையின்‌ அன்பின்‌ அவதாரம்தான்‌ ஆண்டவர்‌ இயேசு.

அந்த ஆண்டவர்‌ இயேசு தன்‌ சீடர்களை நோக்கி இரு உண்மைகளை வெளிப்படுத்துகிறார்‌.

  • இனி உங்களை நான்‌ ஊழியர்‌ என்று சொல்லேன்‌. உங்களை நண்பர்கள்‌ என்கிறேன்‌. ஏனெனில்‌ தந்‌தை எனக்கு வெளிப்‌படுத்தியதெல்லாம்‌ உங்களுக்கு அறிவித்தேன்‌. எனவே நீங்கள்‌ என்‌ நண்பர்களாய்‌ இருந்தால்‌ நான்‌ வெளிப்படுத்தினதை (உண்மை) எல்லாம்‌ மக்களுக்கு அறிவியுங்கள்‌ (யோவா. 15:15).
  • தன்‌ நண்பனுக்காக உயிரைக்‌ கொடுப்பதைவிட மேலான அன்பு யாரிடமும்‌ இல்லை. நான்‌ கட்டளை இட்டதை நீங்கள்‌ செய்தால்‌ நீங்கள்‌ என்‌ நண்பர்கள்‌ (யோவா. 15:13) என்றார்‌ இயேசு.

  • ஏன்‌ இந்த வார்த்தைகளை இவ்வளவு அழுத்தமாக நம்மிடம்‌ வைக்கிறார்‌ என்றால்‌ தான்‌ போதித்ததைச்‌ செய்து காட்டியவர்‌. நான்‌ உங்களுக்கு ஒரு புதிய கட்டளை கொடுக்கிறேன்‌. நான்‌ அன்பு செய்ததுபோல நீங்களும்‌ ஒருவரை ஒருவர்‌ அன்பு செய்யுங்கள்‌ என்றார்‌. ஏனெனில்‌ நமக்காகத்‌ தன்‌ உயிரையே கொடுத்தார்‌ (யோவா. 13:34).
முடிவுரை

உளவியல்‌ கருத்தரங்கு 30 இளம்‌ ஆண்‌, பெண்களுக்கு 3 நாட்கள்‌ நடத்தினேன்‌. 2-வது நாள்‌ உங்களுக்கு ஆழ்ந்த, உங்கள்‌ இரகசியங்களை ஒழிவு மறைவு இன்றி வெளிப்படுத்தும்‌ நண்பர்‌, நீங்கள்‌ அதிகமாக நேசிக்கும்‌ நண்பர்‌ யார்‌ என்று எழுதுங்கள்‌ என்றேன்‌. பலரும்‌ பலரது நண்பர்களைக்‌ குறிப்பிட்டு எழுதினார்கள்‌. இன்று இதே பரீட்சையை வைத்தால்‌ நீங்கள்‌ என்ன எழுதுவீர்கள்‌?

ஒருவர்‌ கூட நான்‌ எதிர்பார்த்த, நண்பரைக்‌ குறிப்பிடவில்லை. அது யார்‌ தெரியுமா?

அதுதான்‌ நமக்கு நாமே முதல்‌ நண்பர்‌.

உன்‌ மீது நீ அன்புகூர்வதுபோல உன்‌ அயலான்‌ மீதும்‌ அன்பு கூர்வாயாக (லூக்‌. 10:27)

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கடவுளின் குழந்தைகளுக்கு எது அழகு?

இன்றைய அருள்வாக்கின் மையக் கருத்து சகோதர அன்பு. நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை (யோவா 15:12) என்கின்றார் இயேசு.

பத்திரிகை ஒன்றில் வெளிவந்த நெஞ்சைத் தொடும் ஓர் உண்மைச் சம்பவம். அது ஓர் இரயில் பயணம். அந்த இரயில் நாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்டது. அந்த இரயிலில் பயணம் செய்தவர்களுள் வயதான இரண்டு தம்பதியரும் இருந்தனர்.

உறங்கும் நேரம் பிறந்தது. வயதான அந்தப் பெண் உறங்கச் செல்வதற்கு முன்னால் கணவரது கையை ஒரு நாடாவால் கட்டி மறுமுனையை தனது கையில் கட்டிக்கொண்டார். அப்படி அவர் செய்ததற்குக் காரணம் என்ன?

அவரது கணவர் ஒரு மன நோயாளி. அவர் மத்திய அரசுத் துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். ஆனால் எப்படியோ அவரது மனநிலை பாதிக்கப்பட்டு, அவர் ஒரு குழந்தையைப் போல் ஆனார். பாவம்! அவரது மனைவியைக் கூட அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அந்த மனைவிக்கு கணவரின் வாழ்விலே புதுமை நடக்கும் என்ற நம்பிக்கை!

நிகழ்ச்சியிலே வருகின்ற அந்தப் பெண் வாழ்ந்த வாழ்வுக்குப் பெயர்தான் அன்பு வாழ்வு! உறக்கத்தில்கூட நான் உங்களுக்கு உதவி செய்யக் காத்திருக்கின்றேன் என்று அவரது கணவருக்கு அவருடைய கையைக் கட்டியிருந்த நாடா வழியாக எடுத்துச்சொன்ன அந்த மனைவி ஓர் அன்பு மனைவி

அன்பிலே மூன்று வகையான அன்பு உண்டு :
1. நம்மை அன்பு செய்பவர்களை மட்டும் அன்பு செய்வது.
2. நம்மை அன்பு செய்யாதவரையும் அன்பு செய்வது.
3. நமது பகைவர்களையும் அன்பு செய்வது.

நம்மை அன்பு செய்பவர்களை மட்டும் அன்பு செய்வது எல்லாரும் செய்யக்கூடிய ஒன்று. தம்மை அன்பு செய்யாதவரையும் அன்பு செய்பவர்கள் புனிதர்கள். நமது பகைவர்களையும் அன்பு செய்வது இயேசுவின் அன்பு; அது நம்மை இயேசுவுக்குள் வாழவைக்கும் (இரண்டாம் வாசகம்). ஆள் பார்த்துச் செயல்படாத கடவுளைப் போல் (முதல் வாசகம்) வாழ முற்படுவதே கடவுளின் குழந்தைகளுக்கு அழகு.

மேலும் அறிவோம்:

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு (குறள் : 992).

பொருள் :
அன்புடையவராக வாழ்தலும் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவராகத் திகழ்தலும் பண்புடைமை என்று சான்றோர் போற்றும் நெறிமுறைக்கு உரிய இரண்டு நல்ல வழிகள் ஆகும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அன்பில் நிலைத்திருக்க வேண்டும்

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் பலர் விண்ணகம் சென்றனர், அங்கு அவர்கள் இந்துக்களையோ முகமதியர்களையோ அல்லது வேறு கிறிஸ்துவச் சபையினரையோ காணவில்லை, அதனால் அவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் விண்ணகத்தின் நடுவே ஒரு பெரிய குறுக்குச்சுவர் இருப்பதைக்கண்டு, அவர்கள் பேதுருவிடம், "இக்குறுக்குச்சுவரின் மறுபக்கம் வேறுயாராவது இருக்கிறார்களா?" என்று கேட்டனர், அதற்குப் பேதுரு, "ஆம், நீங்கள் யாரெல்லாம் விண்ணகத்திற்கு வரமாட்டார்கள் என்று நினைத்தீர்களோ அவர்களை யெல்லாம் இக்குறுக்குச் சுவரின் மறுபக்கம் உங்கள் கண்ணில் படாமல் வைத்திருக்கிறோம்" என்றார். ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தான் விண்ணம் செல்வார்கள் என்னும் தவறான கருத்தைக் கொண்டவர்கள் சிந்திப்பதற்காக உருவாக்கப்பட்ட கதை இது!

மீட்பு என்பது யூதர்களுக்கு மட்டும் உரித்தான தனி உடமை அல்ல; அது எல்லா இனத்தாருக்கும் உரிய பொது உடமை என்பது. இன்றைய முதல் வாசகத்தில் தெளிவாக உணர்த்தப்படுகிறது. கொர்னேலியு என்பவர் யூத இனத்தைச் சேராத பிற இனத்தவர், ஆனால் கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர். கடவுளுடைய ஆணையின் படி பேதுரு அவர் வீட்டிற்குச் சென்று மீட்பின் நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருந்தபோதே தூய ஆவியார் கொர்னேலியு மீதும் அவர் வீட்டிலிருந்த அனைவர் மீதும் இறங்கிவர, அவர்கள் அனைவரும் அயல்மொழிபேசி ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்தனர். திருமுழுக்குப் பெறுவதற்கு முன்னரே உறுதிப்பூசுதல் பெற்று விட்டனர்! இந்நிகழ்வு மூலம் பேதுரு அறிந்து, அறிவித்த உண்மை : "கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை. எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்" (திப 10:34).

மீட்படைய இயேசுவின் பெயரைத் தவிர வேறுபெயர் கிடையாது (திப 4:12) என்று ஆணித்தரமாக எடுத்துரைத்த பேதுரு, நல்மனம் கொண்ட அனைவரும் மீட்படைய இறைவன் வழிவகுத்துள்ளார் என்பதையும் அறிவித்துள்ளார். விண்ணகப் பேரின்பத்திற்கு எல்லா இனத்தவரும் அழைக்கப்பட்டுள்ளனர். விண்ணகத்தில் "யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன், அவர்கள் எல்லா நாட்டையும் குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார் திருத்தூதர் யோவான் (திவெ 7:9).

ஆவியானவர் தாம் விரும்பியபடி செயல்படுகிறார். அதாவது அவருடைய செயல்பாட்டை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது (யோவா 3:8), மேலும், "கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது" (2தீமோ 2:9), "இறைவன் மீட்பைத் திருமுழுக்கு என்னும் அருள் சாதனத்துடன் கட்டுண்டிருக்கச் செய்துள்ளார், ஆனால் அவரோடு தமது அருள்சாதனங்களால் கட்டுண்டவர் அல்லர்" என்று 'கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்லி' (எண் 257) குறிப்பிட்டுள்ளது நமது கவனத்தை ஈர்க்கின்றது. ஆம், கடவுளின் கரங்களை எவரும் கட்டுப்படுத்த முடியாது.

தங்களுடைய குற்றமின்றி கிறிஸ்துவையும் திருச்சபையையும் அறியாதவர்கள், நேரிய உள்ளத்துடன் மனச்சான்றின் குரலைக்கேட்டு. கடவுளுடைய திருவுளத்தை நிறைவேற்றினால், அவர்களும் இறையருளால் மீட்புப் பெறமுடியும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. இரண்டாம் வத்திக்கான் வங்கம் (திருச்சபை, எண் 18) எங்கெல்லாம் உண்மையும் நன்மையும் காணப்படுகிறதோ அவை அனைத்துமே உண்மைக்கும் நன்மைக்கும் காற்றாகிய கடவுளிடமிருந்தே வருகிறது என்பதை ஏற்று, பிறசமயத்தாரோடு நல்லுறவை வளர்ப்பது காலத்தின் கட்டாயமாகும்.

ஒருமுறை ஒரு சிறுவனிடம், "இந்துக்கள் விண்ணகம் செல்வார்களா?" என்று நான் கேட்டதற்கு, அச்சிறுவன், "நிச்சயமாகச் செல்வார்கள். ஏனென்றால், நாம் கிறிஸ்துவை அறிந்திருந்தும் கெட்டவர்களாக இருக்கின்றோம், ஆனால் இந்துக்கள் கிறிஸ்துவை அறியாதிருந்தும் நல்லவர்களாக இருக்கிறார்கள்" என்றான். அவன் சொன்னது எனக்கு வியப்பாக இருந்தது.

இந்துக்கள் மீட்படையலாம்; கிறிஸ்துவர்கள் மீட்படையாது போகலாம், புனித அகுஸ்தீனாரின் கூற்றை மேற்கோள்காட்டி இரண்டாம் வத்திக்கான் சங்கம் பின்வருமாறு கூறுகிறது, "திருச்சபையில் இணைந்திருந்தும், அன்பில் நிலைத்திராது, 'உள்ளத்தாலன்றி', 'உடலால் மட்டும் அதன் மடியில் தவழ்கின்றவர்கள் மீட்படைவதில்லை (திருச்சபை, எண் 14).

எனவே நாம் திருமுழுக்குப் பெற்றிருக்கிறோம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் மீட்படைய முடியாது. திருச்சபையில் இருந்தால் மட்டும் போதாது, அன்பில் நிலைத்திருக்க வேண்டும். சென்ற ஞாயிற்றுக்கிழமை நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியின் தொடர்ச்சியான இன்றைய நற்செய்தியில் தம் ஆண்டவர் அன்பை வலியுறுத்துகின்றார், "என் அன்பில் நிலைத்திருங்கள்... நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை" (யோவா 15:10,12)

இன்றைய இரண்டாவது வாசகத்திலும் திருத்தூதர் யோவான் பிறரன்பை முன்னிலைப்படுத்துகிறார். அன்பு செய்யாதவர்கள் கடவுளை அறியமுடியாது. ஏனெனில் அன்பே கடவுள் (1 யோவா 4:7-8). 7).

தெரு நடுவில் கீழே விழுந்து கிடந்த ஊனமுற்ற ஒருவரை மற்றொருவர் தூக்கிவிட்டு, அவருக்குப் பணமும் கொடுத்து உதவினார். ஊனமுற்றவர் தன் கண்களில் கண்ணீர் மல்க அவரிடம், "நீங்கள் இயேசு ஆண்டவரா?" என்று கேட்டார். அதற்கு அவர், “நான் இயேசு ஆண்டவர் அல்ல; ஆனால் அவரைப் பின்பற்றும் சீடர்களில் ஒருவர் நான்" என்றாம். இவ்வாறு தான் நாம் இக்காலத்தில் இயேசுவின் அன்பு நற்செய்தியின் சாட்சிகளாகத் திகழ வேண்டும்.

கடவுள் நமது அன்பிற்காகக் காத்திராமல், அவரே முதன் முதல் நம்மை அன்பு செய்து, நமது பாவங்களுக்குக் கழுவாயாகத் தமது மகனை அனுப்பினார், அவ்வாறே நாமும் பிறருடைய அன்பிற்காகக் காத்திராமல், பிறரை அன்பு செய்ய முன்வருவோம். ஏனெனில் கிறிஸ்துவின் பேரன்பு நம்மை ஆட்கொண்டு, நம்மை உந்தித் தள்ளுகிறது (2 கொரி 5:14).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஒரு மெளன அலறல்

கருச்சிதைவுக்கு எதிராக எழுதிய மனித உயிரின் மாண்பு பற்றிய ஆங்கில நூல் “The silent Scream" அதாவது "ஒரு மௌன அலறல்” கவிதை நயம், கற்பனை வளம் நிறைந்த, ஆனால் நெஞ்சத்தை முள்ளாக உறுத்தும், நெருப்பாகப் பொசுக்கும் ஒரு மெளன அலறல். அதில் இப்படி ஒரு சில வரிகள்.

“உலகில் பிறப்பெடுக்கும் ஒவ்வொரு மனித உயிரும் சிறப்பான ஒரு செய்தியைச் சொல்ல, சிறப்பான ஒரு பாடலை இசைக்க சிறப்பான ஓர் அன்பைப் பகிர வருகிறது. அதற்குத் தாயின் கருவறையே கல்லறையாகிற போது, அல்லது தவிர்க்க இயலாத சூழல் காரணமாகப் பிறந்ததும் குப்பைத் தொட்டியோ முட்புதரோ அதற்குப் புகலிடமாகிற போது மனிதன் சொல்கிறான்: “கடவுளே, உனது சிறப்பான அந்தச் செய்தி எனக்கு வேண்டாம், சிறப்பான அந்தப் பாடல் வேண்டாம், சிறப்பான உமது அன்பு வேண்டாம்" என்று,

"கொலை செய்யாதே" என்கிறது ஐந்தாம் கட்டளை. ஏன்? உயிர் இறைவனுக்கு உரியது. அதை எடுக்க எவருக்கும் உரிமையில்லை என்பதால் மட்டுமா? அன்பு வேண்டாம் என்ற உறவின் முறிவால் இல்லையா?

திருமுழுக்கு மட்டும் போதாது இறைவனுக்கு உகந்தவர்களாக அன்பில் நிலைப்பது இன்றியமையாதது. அதுவும் "என் அன்பில் நிலைத்திருங்கள் என்கிறார் இயேசு.

“எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்” (1 தெச.5:16) இது நமக்காகக் கிறிஸ்து வழியாகக் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் என்கிறார் திருத்தூதர் பவுல். “உள்ள மகிழ்ச்சியே மனிதரை வாழ வைக்கிறது. அகமகிழ்வே மானிடரின் வாழ்நாளை வளரச் செய்கிறது" (சீராக்.30:22) மகிழ்ச்சியின் தேவையை வலியுறுத்தும் வசனம் இது!

அன்பு ஒன்றே மகிழ்வைத் தரும். மனநிறைவைத் தரும். "என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்” (யோவான் 15:11) என்கிறார் இயேசு. மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமாயின் அவர் சொல்வது: “நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்து இருப்பதுபோல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்" (யோவான் 15:10).

இயேசு குறிப்பிடும் கட்டளை என்ன? “நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” (யோவான் 13:34) இயேசு தன் இரத்தத்தால் முத்திரை யிட்டுத்தந்த புதிய கட்டளை. புதிய உடன்படிக்கை இவ்வன்பின் தனித்தன்மை .

''தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை (யோவான் 15:13) அன்பின் ஆழத்தை உணர்த்த இயேசு நட்பை எடுத்துக்காட்டாகக் கையாளுகிறார். ''உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு இது நட்புக்கு வள்ளுவர் தரும் இலக்கணம். ஆனால் இயேசு அதற்கும் மேலே சென்று "நண்பர்களுக்காக உயிர் கொடுத்தல்” என்பதை முன்வைக்கிறார்.

இயேசு சொன்னது போலவே நமக்காக உயிரைக் கொடுத்தார். நாம் அவரது நண்பர்கள் என்பதற்காகவா? பாவிகள், பகைவர்கள் என்பதால் அன்றோ ! ''நாம் பாவிகளாய் இருந்த போதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்'' (உரோமை 5:8). பகைவர்களையும் நண்பர்களாகக் கருதியன்றோ உயிரைக் கொடுத்தார்!. அந்த அன்புக்கு கைமாறாக நாமும் உயிர்த்தியாகம் செய்ய வேண்டும் என்று கேட்கவில்லை. மாறாக “நான் கட்டளையிடுவது எல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாக இருப்பீர்கள்" (யோவான் 15:14) என்றார்.

பலனை எதிர்பாராமல் பிறரை அன்பு செய்ய வேண்டும் என்பதுதான் அவருடைய கட்டளை. நீ என்னை அன்பு செய்தால் நான் உன்னை அன்பு செய்வேன் என்று சொல்பவன் மனிதன். நீ என்னை அன்பு செய்யாவிட்டாலும் உன்னைத் தேடிவந்து அன்பு செய்வேன் என்பவர் இறைவன். (2 கொரி.5:14,15).

பத்துக் கட்டளைகளின் சாரமாக இரண்டு கட்டளைகள் நமக்குத் தரப்பட்டுள்ளன. இரண்டு கட்டளைகளுக்குமே அடிப்படை அன்புதான். அன்பை விதைப்போம். அன்பை அறுவடை செய்வோம்.

"நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்''. (யோவான் 15:14)

இன்றைய மனிதனின் மன நிலை? பிறர் ஆணையிடப் பணிவதா? இதைச் செய் அதைச் செய்யாதே என்று பிறர் கட்டளை தந்து என் வாழ்க்கையை வழிப்படுத்துவதா? விடுதலை, சுதந்திரம், மக்களாட்சி என்ற உணர்வில் வளரும் தலைமுறையில்லவா இது!

கட்டளைகள் எல்லாம் வாழ்வின் வளத்தையும் நலத்தையும் நோக்கமாகக் கொண்டவை. வாழ்க்கையைத் தடையோட்டமாக்கி குறுக்கே தடைகளை வைத்து அவற்றில் மனிதன் தடுக்கித் தட்டுத் தடுமாறி விழுவதைப் பார்த்து மகிழ்பவர் அல்ல நம் கடவுள்.

இறைக் கட்டளைகளை எல்லாரும் கடைப்பிடித்தால் ஊர் எப்படி இருக்கும்! உலகம் எப்படி இருக்கும்! கற்பனை செய்து பாருங்கள். உங்கள் ஊரில் ஒருவர்கூடப் பொய் பேசுவதில்லை, பொறாமைப் படுவதில்லை, திருடுவதில்லை, பிறர் பொருளுக்கு ஆசைப்படுவதில்லை. பிறர் வளர்ச்சி கண்டு வயிறு எரிவதில்லை. எல்லாரும் எல்லாரையும் தன்னலமின்றி அன்பு செய்கிறார்கள்... இப்படிக் கூட ஓர் ஊர் இருக்குமா என்று நினைக்காதீர்கள். சும்மா கற்பனை செய்து பாருங்கள். அந்த ஊர் எப்படி இருக்கும்? அங்கே காவல் நிலையம் இருக்குமா? சிறைச்சாலை இருக்குமா? மருத்துவமனை இருக்குமா? அவைகள் எல்லாம் கடவுள் படைத்த அற்புத உலகில் மனிதனால் படிந்த கறைகளின் அடையாளங்கள்!

“கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை ” (தி.ப.10:34). பொதுமைப் பண்பு வாய்ந்த அன்பை அடிப்படையாகக் கொண்ட புதியதொரு சமுதாயமாக விளங்குவதே, விளங்க வேண்டியதே திருச்சபை.

“அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள் அவர்களே கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை. ஏனெனில் கடவுள் அன்பாய் இருக்கிறார்”. (1 யோவான் 4:7,8).
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

சிறந்த அன்பு


நிகழ்வு

அமெரிக்காவில் சாம், ஜாண்சன் என்ற இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். ஒருநாள் இவர்கள் இருவரும் பாஸ்டன் நகருக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். வழியில் இருவரும் ஒரு பெரிய விபத்தில் சிக்க, சாம் பலத்த காயமடைந்தான்; ஜாண்சனோ பார்வையை இழந்தான். பின்னர் இருவரும் ஒரு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுச் சிகிச்சைக்காகத் தனித்தனிப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டார்கள். சிகிச்சையின்பொழுது சாமிற்கு ஏற்கெனவே இரத்தப் புற்றுநோய் இருந்ததால், அவன் பிழைப்பது மிகவும் கடினம் என்று மருத்துவர் கை விரித்தார். இன்னொரு பக்கம் ஜாண்சன் பார்வையின்றியே வாழவேண்டும் என்று மருத்துவர் அவனிடம் கூறினார்.

நாள்கள் நகர்ந்தன. தான் பிழைப்பது மிகவும் கடினம் என்பதை உணர்ந்த சாம், தனக்குச் சிகிச்சை அளித்து வந்த மருத்துவரை அழைத்து, “நான் இறந்த பிறகு என்னுடைய கண்களை என் நண்பன் ஜாண்சனுக்குப் பொருத்தி விடுவிடுங்கள்” என்றான். மருத்துவரும் அதற்குச் சரியென்று ஒப்புக்கொண்டார்; ஆனால் ஜாண்சன், ‘தன் நண்பன்தான் விரைவில் சாகப் போகிறானே...! அவனை எதற்குப் பார்க்கவேண்டும்?’ என்று அப்படியே இருந்துவிட்டான். சில நாள்களில் சாம் இறந்தான். அவன் இறந்ததும், அவனுடைய கண்கள் ஜாண்சனுக்குப் பொருத்தப்பட, ஜாண்சன் மீண்டுமாகப் பார்வை பெற்றான். அந்நேரத்தில் அவனுக்கு சாம் இறந்த செய்தியானது சொல்லப்பட்டது. உடனே அவன் சாமின் அடக்கச் சடங்கில் கலந்துகொள்ள அவனுடைய வீட்டிற்குச் சென்றான். அங்கு ஜான்சனிடம் ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது. அது சாம் இறப்பதற்கு முன்பாகத் தன் கைப்பட எழுதியது. அதில், “என் விழிகளை என் இறப்பிற்குப் பிறகு உனக்குத் தர உள்ளேன். அதற்கான ஒப்புதல்தான் இந்தக் கடிதம்” என்ற வரிகள் எழுதப்பட்டிருந்தன. அதை வாசித்ததும், ஜாண்சன் இப்படியொரு நண்பனை, அவன் இறப்பதற்கு முன்பாகப் பார்ப்பதற்குத் தவிர்த்துவிட்டேனோ’ என்று மனம் வருந்தி அழுதான்.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற சாம் தன் கண்களையே தன் நண்பன் ஜாண்சனுக்குக் கொடுத்து, நட்பிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தான். நற்செய்தியில் இயேசு, “தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை” என்று சொன்னதோடு அல்லாமல், நமக்காகத் தம் உயிரையும் தந்து, உண்மையான நட்பிற்கு இலக்கணமாகத் திகழ்கின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

நல்ல நண்பர்கள் அடுத்தவரை உயர்வாக எண்ணுவார்கள்!

இயேசு கிறிஸ்து தன் சீடர்களோடு சேர்ந்து இறுதி இராவுணவை உண்கின்றபொழுது, அவர்களோடு பேசுகின்ற வார்த்தைகளின் ஒரு பகுதிதான் இன்றைய நற்செய்தி வாசகமாகும். இதில் இயேசு தன் சீடர்களிடம், “.....உங்களை நான் நண்பர்கள் என்றேன்” என்கிறார்.

பொதுவாக யூத இரபிகள் தங்களுடைய சீடர்களை அடிமைகள் அல்லது பணியாளர்கள் என்று கருதி, அவர்களை அவ்வாறு நடத்துவார்கள். இயேசுவோ இதற்கு முற்றிலும் மாறாக, தன் சீடர்களை நண்பர்கள் என்கிறார். இயேசு இவ்வாறு சொன்னது மட்டுமல்லாமல், தன் தந்தையிடமிருந்து கேட்டவை அனைத்தையும் அவர்களுக்கு அறிவிக்கின்றார். பழைய ஏற்பாட்டில், ஆபிரகாம் கடவுளின் நண்பர் என அழைக்கப்பட்டார் (2 குறி 20: 7; யாக் 2: 23) அவர் கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்ததாலேயே அவருக்குக் இத்தகைய பேறு அளிக்கப்பட்டது. நற்செய்தியில் இயேசு, “நான் கட்டளையிடுவதை எல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்” என்கிறார். அப்படியெனில், இயேசு கட்டளையிட்டதை நாம் செய்தால், அவரது நண்பர்களாக நாம் இருப்போம் என்பது உறுதி.

நட்பிற்கு அழகே யாரையும் தாழ்வாகக் கருதாததுதான். ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிலும் சரி, மக்களிலும் சரி யாரையும் தாழ்வாக கருதவில்லை. மாறாக எல்லாரையும் தனது அன்பிற்குரியவர்களாகவே கருதினார். இன்றைய முதல் வாசகத்தில் தூய ஆவியார் பிற இனத்தைச் சார்ந்த கொர்னேலியுவின்மீது இறங்கி வருகின்றார். இது கடவுள் யாரையும் தாழ்வாகக் கருவதுவதில்லை. மாறாக, தமது அன்பிற்குரியவராக, உயர்வாகக் கருதுகின்றார் என்பதற்குச் சான்றாக இருக்கின்றது. ஆகவே, இயேசுவின் நண்பர்களாக இருக்கும் நாம் யாரையும் தாழ்வாகக் கருதாமல், உயர்வாகக் கருத முயற்சி செய்வோம்.

நல்ல நண்பர்கள் அடுத்தவர் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென விரும்புவார்கள்.

ஆண்டவர் இயேசு தன் சீடர்களைப் பணியாளர்களாகக் கருதாமல், நண்பர்களாகக் கருதி, அவர்களை உயர்வாக நடத்தினார் என்று பார்த்தோம். இயேசு தம் சீடர்களை உயர்வாக நடத்தியது மட்டுமல்லாமல், அவர்கள் மகிழ்வோடு இருக்கவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு அன்புக் கட்டளை கொடுக்கின்றார். “என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை நான் உங்களிடம் சொன்னேன்” என்ற இயேசுவின் வார்த்தைகள் இதற்குச் சான்றாக இருக்கின்றான.

இன்றைக்கு எத்தனை பேர் தங்களுடைய நண்பர்கள் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றார்கள் என்று தெரியவில்லை! ஆனால், இயேசு தம் நண்பர்கள் அதாவது, சீடர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றார். அதற்காக அவர்களுக்கு அன்புக் கட்டளையைக் கொடுக்கின்றார். எமர்சன் என்ற அறிஞர் இவ்வாறு கூறுவார்: “நாமே நண்பராக இருப்பதுதான் நண்பரைச் சம்பாதிக்க ஒரே வழி.” இயேசு நல்ல நண்பராக இருந்தார்; மட்டுமல்லாது தன் நண்பர்கள் மகிழ்ந்திருந்த அன்புக் கட்டளை கொடுத்தார். நாமும் இயேசுவைப் போன்று நல்ல நண்பர்களாக இருப்போம்.

நல்ல நண்பர்கள் அடுத்தவருக்காக உயிரையும் தருவார்கள்.

ஒருமுறை சீன ஞானியான மாவோபி என்பவர் மாதுளம்பழத்தைக் கத்தியால் வெட்டிக்கொண்டிருக்க, அவரருகே வந்த ஒருவர், “இந்த மாதுளம்பழத்தின் விதைகளைப் போல எது மிகுதியாக இருக்கவேண்டும்?” என்று கேட்டதற்கு அவர், “நம்பிக்கையான நண்பர்கள்”என்று பதிலளித்தார். ஆம், நமக்கு நம்பிக்கையான நண்பர்கள் மிகுதியாக இருக்கவேண்டும். ஏனெனில், அவர்களே நம்முடைய வாழ்க்கையை முழுமையானதாக மாற்றுவார்கள்.

ஆண்டவர் இயேசு நல்ல, நம்பிக்கையான நண்பராக விளங்கினார். எப்படியெனில், “தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்து அன்பு யாரிடமும் இல்லை” என்று சொன்னது மட்டுமல்லாமல், அதைச் செய்தும் காட்டினார். இவ்வுலகில் நேர்மையாளர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கலாம்; ஆனால், நாம் பாவிகளாக இருந்தபொழுது கிறிஸ்து – அவருடைய நண்பர்களாகிய – நமக்காகத் தம் உயிரையும் கொடுத்தார். (உரோ 5: 7-8). இவ்வாறு இயேசு உண்மையான அன்பிற்கும் நட்பிற்கும் இலக்கணமாகத் திகழ்கின்றார்.

நண்பர்களுக்கு உயிரைக் கொடுக்கும் அளவுக்கு ஒருவர் கிடைப்பது அரிது. இயேசு நமக்காகத் தம் உயிரைக் கொடுத்து நல்ல நண்பராகத் திகழ்வதால், அவரது நண்பர்களாக நாம் இருக்க, இன்றைய முதல் வாசகத்தில் யோவான் சொல்வது போல், ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோம். அதன்மூலம் அவரது உண்மையான நண்பர்களாவோம்.

சிந்தனை
‘நண்பனோடு இருளில் செல்வது, தனியாக வெளிச்சத்தில் செல்வதைக் காட்டிலும் மேன்மையானது’ என்பார் ஹெலன் கெல்லர். எனவே, நமக்கு நல்ல நண்பராக இருக்கும் இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவரது உண்மையான நண்பர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வாக்குறுதிகள் நம் வாழ்வில் மிகவும் இன்றியமையாதவை.

'நாளை காலையில் நான் 6 மணிக்குத் துயில் எழுவேன்' என்று எனக்கு நானே சொல்லும் சிறிய வாக்குறுதி தொடங்கி, 'இன்பத்திலும் துன்பத்திலும் உடல்நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாயிருந்து' அல்லது 'என் தல ஆயருக்கு நான் என் கீழ்ப்படிதலையும் வணக்கத்தையும் வாக்களிக்கிறேன்' என்று திருமணம் மற்றும் அருள்பணி நிலையில் ஒருவர் மற்றவருக்குக் கொடுக்கும் வாக்குறுதி வரை, நாம் வாக்குறுதிகள் கொடுத்துக்கொண்டே இருக்கின்றோம். இன்னொரு பக்கம், தேர்தல் வாக்குறுதிகள், விளம்பரங்களின் வாக்குறுதிகள், நிறுவனங்களின் வாக்குறுதிகள் என நம்மை வாக்குறுதிகள் சூழ்ந்துகொண்டே இருக்கின்றன. நம் விவிலியத்திலும் இறைவன் மனுக்குலத்திற்குக் கொடுத்த நிறைய வாக்குறுதிகள் பரவிக் கிடக்கின்றன. எடுத்துக்காட்டாக, இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து வழிநடத்திய ஆண்டவராகிய கடவுள், அவர்கள் செங்கடலைக் கண்டு மலைத்து நின்றபோது, 'நீங்கள் சும்மாயிருங்கள். ஆண்டவராகிய கடவுள்தாமே உங்களுக்காகப் போரிடுவார்!' என்ற வாக்குறுதி தருகின்றார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவும் செய்கின்றார்.

வாக்குறுதிகள் நமக்கு மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகின்றன:

(அ) வாக்குறுதிகள் வழியாகவே நாம் நம்பிக்கையில் வளர்கிறோம். எடுத்துக்காட்டாக, 'இன்பத்திலும் துன்பத்திலும் உடல்நலத்திலும் நோயிலும்' என்று ஒரு மனைவி தன் கணவருக்கு வாக்குறுதி கொடுப்பதால், கணவனுக்கு அந்த மனைவிமேல் நம்பிக்கை வருகிறது. தன்னிடம் உள்ள அனைத்தையும் அவர் மனைவியோடு பகிர்ந்துகொள்ள முன்வருகிறார்.

(ஆ) வாக்குறுதிகள் நமக்கு எதிர்நோக்கைத் தருகின்றன. 'ஆறு நாள்களில் சிகப்பழகு!' அல்லது 'மின்னலைப் போன்ற வெண்மை' என்ற வாக்குறுதிகளை நிறுவனங்கங்கள் தர, அந்நிறுவனங்களின் அழகுசாதன மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை நான் வாங்கிப் பயன்படுத்துகின்றேன். என் முகம் சிவக்கும் என்பதும், என் ஆடை வெண்மையாகும் என்பதும் என்னுடைய எதிர்நோக்காக இருக்கிறது.

(இ) வாக்குறுதிகள் வழியாகவே நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்கின்றோம். எடுத்துக்காட்டாக, ஒரு வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்குத் தன் சேவையை வாக்களிக்கிறது. அந்த நிலையில் வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே ஒரு பரஸ்பர உறவு தொடங்குகின்றது. வியாபாரம் மட்டுமே இதன் இலக்காக இருந்ததாலும் உறவு நிலை வளர்வதற்கும் இது இடம் தருகிறது.

கடந்த வாரம் தன்னைத் திராட்சைக் கொடியாகவும், தன் சீடர்களை அதன் கிளைகளாகவும் உருவகம் செய்த இயேசு இன்று அன்புக் கட்டளை பற்றிப் பேசுகின்றார். இன்றைய நற்செய்தியை இயேசுவின் மூன்று வாக்குறுதிகள் என நாம் எடுத்துக்கொள்ளலாம்:

(அ) நான் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன் (15:9)

(ஆ) நான் உங்களை நண்பர்கள் என அழைக்கிறேன் (15:15)

(இ) நான் உங்களைத் தேர்ந்து கொண்டேன் (15:16).

இந்த மூன்றும் இயேசுவின் முன்னெடுப்புகளாக உள்ளன. மேலும் இவை மேலிருந்து கீழ்நோக்கியதாக உள்ளன.

(அ) நான் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன்: அன்பு.

'தந்தை தன்னை அன்பு செய்கிறார் எனவும், தந்தை தன்னை அன்பு செய்வது போல தன் சீடர்களை தான் அன்பு செய்வதாகவும்' சொல்கிறார் இயேசு. அத்தோடு நிறுத்தவில்லை அவர். 'நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ளவேண்டும்!' என அதைக் கட்டளையாகவும் ஆக்கிவிடுகின்றார். ஆக, மேலிருந்து வருகின்ற அன்பை நாம் நமக்குக் கீழ்நோக்கி செலுத்த வேண்டும். அன்பில் இந்த பரிமாணம் நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த ரெசிப்ரோசிட்டி தவறும்போது அன்பு மறைகின்றது. தொடர்ந்து சொல்கிறார்: 'என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும், உங்கள் மகிழ்ச்சி நிலைத்திருக்கவும் இவற்றை உங்களிடம் சொன்னேன்!' (15:11). எவற்றை? 'அன்பு செய்வதை!' ஆக, அன்பை நாம் எப்படி அளவிடுவது? அன்பு தரும் மகிழ்ச்சியை வைத்தே.

(ஆ) நான் உங்களை நண்பர்கள் என அழைக்கிறேன்: நட்பு.

'தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட' என்கிறார் இயேசு. அன்பில் நிலவும் இரண்டு நிலைகளைத்தான் இங்கே சொல்கின்றார்: (1) பணியாளர் நிலை, (2) நண்பர் நிலை. பணியாளர் நிலையில் நிலையில் ஒருவர் மேலிருப்பார். மற்றவர் கீழிருப்பார். மேலிருப்பவர் கொடுத்துக் கொண்டிருப்பார். கீழிருப்பவர் பெற்றுக்கொண்டிருப்பார். ஆனால் நண்பர் நிலையில் இரண்டு பேரும் ஒரே தளத்தில் இருப்பார். இருவரும் கொடுத்துக்கொள்வர். வாங்கிக்கொள்வர்.

(இ) நான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்: உரிமை.

இயேசுவின் வார்த்தைகள் அன்பில் துலங்கும் உரிமையைச் சுட்டிக்காட்டுகின்றன. இந்த உரிமை எங்கிருந்து வருகிறது? நாம் மற்றவரையும், மற்றவர் நம்மையும் தேர்ந்துகொள்வதில்தான். தேர்ந்து கொள்வது என்பது உரிமையாக்கிக்கொள்வது. பணியாளருக்குரிய அடிமைத்தனத்தோடு அல்ல. மாறாக, நண்பருக்குரிய கட்டின்மையோடு. அன்பில் நாம் மற்றவர்களை உரிமையாக்கிக்கொள்கின்றோம். மற்றவர்களுக்கும் உரிமையாகின்றோம். இந்த உரிமையின் நோக்கம் என்ன? கனி தருவது! கனி என்றால் என்ன? மரத்தின் உச்சகட்ட வளர்ச்சி தான் கனி. இலை - பூ - காய் என தொடரும் மரத்தின் பயணம் கனியில் முற்றுப்பெற்றுவிடுகிறது. கனிதான் மரத்தின் நோக்கம். ஆக, அன்பில் கனி என்று சொல்லும்போது, அன்பில் வளர்ச்சி வேண்டும் என்பதையே இயேசுவின் வார்த்தை சொல்கின்றது.

நம் வாழ்வில் பல நேரங்களில் நம்மை அறியாமல் தளர்ந்து போகின்றோம். நம் இருத்தலால் யாருக்கும் பயன் இல்லை என்று புலம்புகிறோம். செய்வதற்கு ஒன்றும் இல்லை எனக் கலங்குகிறோம். பேசுவதற்கு யாரும் இல்லை என வருந்துகிறோம். பிறர் நம்மைக் கண்டுகொள்ளவில்லை என்றும், பிறர் நம்மைத் தாழ்வாக நடத்துகின்றனர் என்றும் கூட அழுகின்றோம். இந்த இடத்தில் இயேசுவின் முதல் வாக்குறுதி நமக்கு இன்னும் முக்கியம் ஆகிறது. அவர் நம்மை அன்பு செய்கிறார். இந்த உறுதிப்பாடு நம் வாழ்வில் பல உச்சங்களை நாம் தொட உதவும். இயேசுவுக்கு அவருடைய வாழ்வில் இக்கட்டான சூழல்கள் மற்றும் எதிர்ப்புகள் வந்தபோது அவருக்கு உறுதுணையாக இருந்தது அன்பு உணர்வே. திருமுழுக்கின்போது, 'நீரே என் அன்பார்ந்த மகன்' (காண். லூக் 3:22) என்று ஒலிக்கக் கேட்ட தந்தையின் குரல் அவருடைய உள்ளத்தில் ஒலித்துக்கொண்டே இருந்ததால், மற்றவர்கள் அவரை அன்பு செய்யாத சூழலிலும் தந்தையின் அன்பை அவர் உணர்ந்துகொண்டே இருந்தார். இதையொட்டியே புனித பவுலும், 'சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ எதையும் நம்மைக் கடவுளின் அன்பிலிருந்து பிரிக்க முடியாது' (காண். உரோ 8:37-38) என்கிறார்.

ஆண்டவர் நம்மேல் காட்டும் அன்பு நண்பர் நிலையில் இருக்கின்றது. ஆனால், பல நேரங்களில் நாம்தான் பணியாளர் நிலையிலேயே இருக்க விருப்பம் கொள்கிறோம். எனக்குத் தெரிந்த இல்லம் ஒன்றில், தன் வீட்டு வேலைக்காரர் ஒருவரின் மகனை வீட்டு உரிமையாளர் தன் மகனாகத் தத்தெடுத்துக்கொண்டார். ஆனால், இறுதி வரை அந்த மகன் அவருடைய வேலைக்காரனாக இருந்தானே தவிர, மகனாக இருக்க அவனால் இயலவில்லை. இளைய மகன் எடுத்துக்காட்டிலும் (காண். லூக் 15:11-32) நாம் இப்படிப்பட்ட ஒரு நிலையைத்தான் பார்க்கிறோம். இளைய மகன் தன் தந்தையின் வேலைக்காரனாக இருக்க விரும்பினான். மூத்த மகன் இறுதி வரை தன் தந்தையின் இல்லத்தில் வேலைக்காரனாகவே இருந்தான். இருவருமே தங்களுடைய மகனுக்குரிய உரிமையையும் பேற்றையும் மறந்துவிட்டனர். இயேசு இன்று நம்மை நண்பர்கள் என அழைக்கின்றார். நம் நிலையை உயர்த்துகின்றார். அப்படி என்றால், நம் எண்ணத்தில் உயர்வு வேண்டும். பணியாளர் அல்லது வேலைக்கார மனநிலையை விடுத்து, நட்பு நிலையைப் பற்றிக்கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக, தேர்ந்துகொள்தல். பலவற்றிலிருந்து சிறப்பான ஒன்றாக இறைவன் நம்மைத் தேர்ந்துகொண்டுள்ளார். நாம் ஒன்றைத் தேர்ந்துகொள்ளும் முன் நிறைய யோசிக்கிறோம், ஆய்வு செய்கிறோம், கேள்வி கேட்கிறோம். இறைவன் அந்த அளவுக்கு நம் ஒவ்வொருவர்மேலும் அக்கறை எடுத்துள்ளார். இதன் நோக்கம் என்ன? கனி தருதல், நற்செயல்கள் செய்தல். இன்றைய முதல் வாசகத்தில், தேர்ந்துகொள்ளப்பட்ட பேதுரு புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கும் நோக்குடன் கொர்னேலியு இல்லத்திற்குச் செல்கின்றார். திருத்தூதுப் பணியில் அவர் கனி தருகின்றார். கொர்னேலியுவின் இல்லத்தில் குடியிருந்த புறவினத்தார்மேல் ஆண்டவராகிய கடவுள் தன் தூய ஆவியாரை அனுப்பி அவர்களைத் தேர்ந்துகொள்கின்றார். இரண்டாம் வாசகத்தில், 'கடவுள் நம்மீது முதலில் அன்பு கொண்டார்' என்று சொல்வதன் வழியாக, மனுக்குலம் பெற்றுள்ள தேர்ந்த நிலையை முன்வைக்கின்றார் யோவான்.

இறுதியாக, இன்றைய பதிலுரைப் பாடலில் (காண். திபா 98), 'இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார்' என ஆண்டவரின் வாக்குப் பிறழாமை குறித்துப் பாடுகின்றார் ஆசிரியர்.

வாக்குறுதகளில் பிறழாத நம் இறைவனின் வாக்குறுதிகளைப் பெற்றுள்ள நாம், எனக்கு நானே அல்லது நான் பிறருக்கு வழங்கும் வாக்குறுதிகளில் உறுதியாய் இருந்தால் எத்துணை நலம்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறைஉறவில் நிலைத்திருப்போமா?

வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த தன் தந்தையிடம், மகளானவள் பாசத்தோடு வந்து அமர்ந்து தனக்குப் பிடித்தமான ஒரு பொருளை வாங்கித்தருமாறு கேட்டாள். உடனே தந்தை தன் மகளை பாசத்தோடு அணைத்து "நான் சொல்வது போல நீ செய்தால் தான் வாங்கித் தருவேன் "என்றார். உடனே "சொல்லுங்கப்பா" என்று ஆர்வத்தோடு கேட்ட மகளிடம் "அப்பா அம்மா சொல்வதைக் கேட்டு நல்ல பிள்ளையாக இருக்கணும். நல்லா படிச்சு முதல் மதிப்பெண் வாங்கணும். எப்பவும் அப்பாவோட செல்ல பிள்ளையா இருக்கணும். அப்படி இருந்தால் உனக்குபிடித்ததை நான் செய்வேன் " என்றாராம். வேகமாக சிரித்த முகத்துடன் தலையாட்டினாள் மகள்.

ஆம். அன்புக்குரியவர்களே நாம் எல்லோருமே நமது தாய் தந்தையரிடமிருந்து இவ்வகை அனுபவங்களைப் பெற்றிருப்போம். நம்மை நல்வழிப்படுத்தவும் நாம் வாழ்வில் முன்னேறவும் அவர்கள் தங்கள் அன்புக் கட்டளைகளாலும் அறிவுரைகளாலும் இன்றுவரை நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது நாம் மறுக்க முடியாத ஒரு உண்மை. இத்தகைய ஒரு தந்தைக்குரிய மனநிலையில் தான் இயேசுவும் " என் கட்டளைகளைக் கடைபிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்" எனக் கூறுகிறார்.

அன்றைய இஸ்ரயேல் மக்கள், ஆண்டவர் மோசே வழியாக அளித்த கட்டளையைக் கடைபிடிப்பதில் கருத்தாய் இருந்தனர். ஏனேனில் அக்கட்டளைகளை அவர்கள் இறைவனோடு கொண்டுள்ள உறவில் நிலைத்திருக்க உதவக்கூடிய வழிமுறையாய்க் கருதினர்.

புதிய இஸ்ரயேலராகிய நாமும் இறைவனோடு உள்ள உறவில் நிலைத்திருக்க இயேசு அழைக்கிறார். இயேசு அதற்கான வழிமுறையையும் நமக்கு வகுத்துத் தருகிறார். அன்பு வாழ்வே அவ்வழிமுறை.

இன்றைய இரண்டாம் வாசகத்திலும் அன்பைப் பற்றி தூய யோவான் எடுத்துரைக்கிறார்.

அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செய்வோரும் கடவுளிடமிருந்தே வருகின்றனர். அவ்வாறெனில் நாம் கடவுளோடு அன்புறவில் நிலைத்திருந்தால் மட்டுமே சக மனிதருக்கும் அன்பு செலுத்த முடியும். சக மனிதருக்கு அன்பு செலுத்த வேண்டுமென்பது தான் இயேசு நமக்குத் தரும் கட்டளை. இக்கட்டளையை நிறைவேற்றி நாம் அன்புறவில் வாழும் போது நமது வாழ்வு கனிகொடுப்பதாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும், அமைதி நிறைந்ததாகவும் இருக்கும். நாமும் கடவுளோடு உள்ள உறவில் ஆழப்பட முடியும். எனவே இறையுறவில் நிலைத்திருக்க அன்பு வாழ்வு வாழ்வோம். அதற்கான இறையருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்
அன்பு இறைவா நாங்கள் உமதன்புக் கட்டளையைக் கடைபிடித்து உம்மோடும் பிறரோடும் உறவில் வளர்ந்து அதில் நிலைத்திருக்க வரம் தாரும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

சொன்னதை செய்து அவரின் சொந்தமாவோம்…

திருஅவையிலே யாரெல்லாம் திருத்தந்தையாகப் பொறுப்பேற்கிறார்களோ அவர்கள் அனைவரும் மூவேளை செபவுரை ஆற்றுவதும், மக்களுக்காய் செபிப்பதும் வழக்கம். நம்முடைய இன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஐந்து மாதங்களுக்கு முன் அதாவது, ஜனவரி 25 ஆம் தேதி இந்த மூவேளை செபவுரையை நிகழ்த்தினார். அதில் சிறப்பாக ஒருவரின் ஆன்மா இளைப்பாற்றிக்காக செபிக்க அழைப்பு கொடுத்தார். திருத்தந்தை பிரான்சிஸ் பொறுப்பேற்ற நாள் தொடங்கி அவரின் அணுகுமுறையே வித்தியாசமாக இருந்தது. புலம் பெயர்ந்தோர், அகதிகள், வீடற்றோர், சிறைக்கைதிகள் ஆகியோர் மீது அவர் காட்டும் அன்பும், கரிசணையும் மிகப் பெரியது. ஆனால் இவ்வளவு கருணையோடு பார்க்க விரும்பிய அவரை கலங்க வைத்தது நைஜீரிய நாட்டு வீடற்ற 46 வயது மிக்க எட்வின் என்பவரின் இறப்பு. புனித பேதுரு சதுக்கத்திலிருந்து சில மீட்டர் தூரத்தில் வீடற்று, கடும் குளிரில் நடுங்கி இறந்த எட்வின் என்பவருக்காகத் தான் திருத்தந்தை சிறப்பாக செபிக்க சொன்னார். புறந்தள்ளப்பட்டவராக, அனாதையாக, அரவணைப்பின்றி, அன்பு செய்ய ஆளின்றி இறந்த அவரின் ஆன்மாவுக்கு இறைவன் நித்திய இளைப்பாற்றியைக் கொடுக்க வேண்டுமாய் செபிப்போம் என்று அழைப்பு கொடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். இந்த செய்தியை வத்திகான் செய்தி குறிப்பிலிருந்து வாசித்த பின்பு எனக்குள் எழுந்தது ஒரே ஒரு கேள்விதான்: உயிர்த்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மிடத்தில் சொன்னதை நாம் செய்கிறோமா?

இறைஇயேசுவில் இனியவர்களே,

மனித வாழ்வின் ஒவ்வொரு பக்கங்களும் யாருவது ஒருவர் சொல்கின்ற சொற்களால், செய்கின்ற செயல்களால், எண்ணுகின்ற எண்ணங்களால் நிரம்பி வழிகின்றன. நாம் ஒரு காரியத்தை செய்கிறோம் என்றால், அது நம்மால் யோசித்து செய்யப்படுவதைவிட மற்றவர்களால் சொல்லிச் செய்யப்படும் செயலாகவே பல நேரங்களில் நாம் பார்க்கின்றோம். மனிதர்கள் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு, அதற்கேற்ப வாழ கற்றுக்கொண்ட நாம் ஏன் இறைவனின் வார்த்தைகளுக்கேற்ப நம் வாழ்வை அமைத்துக்கொள்ளவில்லை என்று சிந்திக்க அழைப்பு கொடுக்கின்றது பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு. இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்மிடத்தில் எழுப்புகின்ற ஒரே ஒரு கேள்வி இதுதான்: நீங்களும், நானும் இறைவன் சொன்னதை செய்கிறோமா? இல்லையா? நமக்காய் தன்னுடைய இன்னுயிரை கல்வாரி மலையிலே கையளித்த இயேசு கிறிஸ்து தன் உயிர்ப்பின் பின்பாக பல இடங்களில் தன் உயிர்ப்பின் மாட்சியை அனுபவமாக தன் திருத்தூதர்களுக்கு கொடுக்கிறார். “இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார்” (யோவான் 20:21), “பின்னர் அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள் நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைக்கொள்” என்றார்” (யோவான் 20: 27) இவ்வாறாக, இயேசு தன் சீடர்களுக்கு பல்வேறு உயிர்ப்பின் காட்சிகள் வழியாக தன்னை வெளிப்படுத்தி, வதந்திகளுக்கு மத்தியில் உயிர்த்த ஆண்டவராய் நான் இருக்கிறேன் என்ற புரிதலை வழங்கி பல்வேறு விதமான சிந்தனைகளை தன் சீடர்கள் மூலமாக நமக்கு வழங்கியுள்ளார். அத்தகைய போதனையின் ஒரு பகுதியாக இன்றைய நற்செய்தி பகுதி அமைந்துள்ளது. யோவான் நற்செய்தி 15ஆம் அதிகாரம் முழுவதையுமே நாம் செய்ய வேண்டிய கடமையைச் சுட்டிக்காட்டும் பகுதி என்று கூறினால் அது மிகையாகாது. இயேசு தன் உயிர்ப்பிற்கு பின்பாக சீடர்களைப் பல வகைகளில் தேற்றிய பின் ஆற்றிய அன்புரைகளை அவர்கள் கடைபிடிக்கவும், அவர்கள் வழியாக பெற்றுக்கொண்ட நாமும் கடைபிடித்து வாழ வேண்டுமென்பதே இறைமகன் இயேசு கிறிஸ்து இன்றைய நாளில் நமக்கென வழங்குகின்ற இறைச்செய்தியாக இருக்கின்றது.

முதல் வாசகத்திலே, திருத்தூதர் பணிகள் நூலிலே கொர்னேலியு என்னும் மனிதர் பேதுருவை எதிர்கொண்டு போய் அவர் காலில் விழுந்து வணங்குகிறார். அப்போது பேதுரு ‘எழுந்திடும், நானும் ஒரு மனிதன்தான்’ என்று சொல்கிறார். இது வெறும் சாதாரண வாக்கியம் கிடையாது. இதில் ஆழ பொருள் பொதிந்து உள்ளது. “இயேசு சீமோனை நோக்கி: அஞ்சாதே, இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” (லூக் 5:10) என்று இயேசு சொன்ன வார்த்தைக்கு வாழ்வு கொடுப்பதாய் அமைந்துள்ளது. சற்று ஆழமாக யோசித்து பாருங்கள். யார் ஒருவரை நாம் ஆழமாக நம்புவோம். யார் ஒருவர் சொல்வதைக் கேட்போம்? யார் பேசுவதை செயல்பாட்டில் காட்ட விழைவோம்? யார் ஒருவர், சொன்னதை செய்கிறாரோ அவரையே நாம் மதிப்போம். அவருக்குத்தான் மரியாதை கொடுப்போம். அவரைப் பற்றித்தான் மற்றவாpடத்தில் உயா;வாக பேசுவோம். இது வாழ்வின் எதார்த்தம். இதுதான் பேதுருவின் வாழ்விலும் நடக்கிறது. கடவுள் ஆள்பார்த்து செயல்படுபவர் கிடையாது. எல்லா மக்களினத்தையும் ஒன்று சோ;ப்பவர் கடவுள் என நம்புங்கள் என்று நம்பிக்கையைப் பறைசாற்றும் பேதுரு, தூய ஆவியின் துணையால் அனைவரும் பரவசப்பேச்சு பேசுவதையும், கடவுளைப் போற்றி பெருமைப்படுத்துவதையும் குறித்து மகிழ்கிறார். காரணம் ஒன்றே ஒன்றுதான்: அவர்கள் கடவுள் சொன்னதை அப்படியே செய்தார்கள். எனவே அவர்கள் கடவுளின் ஆவிக்குரிய செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். திருமுழுக்கு பெறுகிறார்கள். இறைவனுக்கு உகந்த வாழ்வு வாழ்கிறார்கள். ஆண்டவர் சொன்னதை நிறைவேற்றும் புனித பேதுருவையும் அவர்கள் தங்களோடு தங்குமாறு பணிக்கிறார்கள்.

இரண்டாம் வாசகத்திலும் மற்றுமொரு கடவுளின் செயல்பாடு கட்டளையாக நமக்கு கொடுக்கப்படுகின்றது. அதுதான் ‘அன்பு செய்தல்’. கடவுளிடமிருந்து பிறந்தவர்கள் நிச்சயம் அன்புச் செய்வார்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். நம் பாவங்களுக்காய் கழுவாயாக தந்தையாம் இறைவன் தன் மகனையே நமக்காய் அனுப்பியுள்ளார் என்பதையும் புரிந்து கொள்கிறார்கள். அப்படியென்றால், உயிர்த்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மில் எதிர்பார்ப்பது நாம் அனைவரும் மற்றவாpடம் எவ்வித நிபந்தனையும் இன்றி அன்புச் செய்ய வேண்டுமென்பதுதான். இது இன்றைய உலகில் நடைபெறுகிறதா? அன்புக் கட்டளை கொடுத்து, அன்பு செய்யுங்கள் என்று சொன்ன இறைவனின் கட்டளையை நாம் முழுவதுமாக கடைப்பிடிக்கிறோமா? சிந்திக்க வேண்டும். இன்று நாம் வாழும் சமூகத்தில் காணப்படும் அன்பை ஐந்து வகைகளில் பிரித்து பார்க்க விரும்புகின்றேன்:

1. முகதுதிக்கான அன்பு
2. காரியத்திற்கான அன்பு
3. காயப்படுத்தும் அன்பு
4. புகழைச் சம்பாதிக்க உதவும் அன்பு
5. கைகழுவும் அன்பு

ஆனால் இவையெல்லாம் ஆண்டவர் குறித்து காட்டிய அன்பு கிடையாது. இதைத்தான் இணைச்சட்டப் புத்தகம் 6:5இல் “உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடு, உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவாpடம் அன்புகூர்வாயாக!” என்று பார்க்கின்றோம். இத்தகைய முழுமையான அன்பைத்தான் கடவுளும் நமக்கு கட்டளையாகக் கொடுத்தார். ஆனால் அதிலிருந்து தவறி நிற்கின்றோம். ஆண்டவர் சொன்னதை செய்யாமல் வாழ்கிறோம் என்ற சிந்தனை தெளிவாக வழங்குகிறது யோவான் முதல் திருமுகம். இறைஇயேசுவில் பிரியமானவர்களே, இன்றைய நற்செய்தி இன்னும் சற்று ஆழ்ந்து நம்மை யோசித்து பார்க்க வழியமைத்து கொடுக்கின்றது. ஆண்டவர் சொன்னதை செய்யாத மக்களாக நாம் வாழ்கிறோம் என்பதை சோதித்து பார்க்கவும், நம் வாழ்வை மாற்றியமைத்து புதுப்பித்துக் கொள்ளவும் பாதை காட்டுகிறார் நற்செய்தியாளர் யோவான். யோவான் நற்செய்தி 15ஆம் அதிகாரம் 9 முதல் 17 வரை உள்ள இறைவார்த்தைகள் பின்வரும் இயேசுவின் கட்டளைகளை உள்ளடக்கிய பகுதியாக இருக்கின்றது: 1. அன்பு செய்தல், 2. இணைந்திருத்தல், 3. பணியாளராய் வாழ்தல், 4. நண்பருக்குரிய நிலை பெறுதல், 5. மகிழ்ச்சியாய் வாழ்தல், 6. அறிவித்ததை அனுபவித்து ஏற்றுக்கொள்ளுதல், 7. கனிதருதல், 8. தரும் கனியில் நிலைத்திருத்தல், 9. கேட்பதைப் பெற்றுக்கொள்ளுதல், 10. செவிசாய்த்தல். இவையனைத்துமே ஆண்டவர் நமக்கென சொன்ன காரியங்கள், செயல்பாடுகள். இவற்றை யார் ஒருவர் தன் வாழ்வில் கடைப்பிடிக்கிறார்களோ அவர்கள் ஆண்டவரின் சொந்தமாய் வாழ்கிறார்கள் என்பது இன்றைய ஞாயிறு நமக்கு வழங்கு உன்னதமான செய்தி. இதை செய்தவர்களும், செய்யாதவர்களும் விவிலியத்தில் காணப்படுகின்றனர். செய்தவர்கள் இறைவனின் சொந்தங்களாகவும், செய்யாதவர்கள் இறைவனை விட்டு அகன்று வாழும் மக்களாயும் இருக்கின்றனர்.

படைத்தவனின் பந்தமாய் வாழ பயிற்றுவிக்கப்பட்ட நம் முதல் பெற்றோர் ஆதாமும், ஏவாளும் தொடக்கநூலிலே சொன்னதை செய்யாமல், சாத்தானுக்கு அடிபணிந்ததால் அவர்கள் இறைவனின் சொந்தம் என்ற நிலையிலிருந்து தவறிப்போனார்கள். இதைத்தான் தொ.நூ 3:10, 11இல் இவ்வாறாக வாசிக்கின்றோம்: “உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே நான் ஒளிந்து கொண்டேன், என்றான் மனிதன். நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ? என்று கேட்டார்”. இது நம் முதல் பெற்றோர் கடவுள் சொன்னதை செய்யாமல் இருந்த நிலை. நம் மீட்புக்காய் தன் இன்னுயிரை அளித்த இயேசுவும், இவ்வுலகிற்கு தாயாகும் பேற்றினை பெற்ற அன்னை மரியாவும், கடவுள் கனவில் சொன்னதை நம்பி பயணித்த புனித ளோசேப்பும் கடவுள் சொன்னதை அப்படியே கேட்டார்கள்.

யோவான் 4: 34 - இயேசு அவர்களிடம், என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும், அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு
லூக்கா 1: 38 - நான் ஆண்டவரின் அடிமை; எம் சொற்படியே எனக்கு நிகழட்டும்
மத்தேயு 1:24 - யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.
மேற்சொன்ன இம்மூன்று இறைவார்த்தைகளுமே ஆண்டவர் சொன்ன வார்த்தைகள். அதை அம்மூவருமே எவ்வித மறுப்புமின்றி கடைப்பிடித்தனர். ஆண்டவரின் சொந்தமாய் மாறினர். நாமும் இன்றைய நாளிலே ஆண்டவர் சொன்ன எல்லாவற்றையும் கருத்தாய் கடைப்பிடித்து கடவுளின் கரம் பிடித்து நடக்கவும், இறைவனின் சொந்தமாய் மாறவும் தொடர்ந்து செபிப்போம். இறையாசீர் பெறுவோம்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு