தூய்மையாக்கும் அருமருந்து இயேசுவின் இரத்தமே!

சகோதரர். சூசையப்பன் - புதுவாழ்வு ஊழியம் - சென்னை மையம்.

Blood of Jesus
"அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்." 1யோவான் 1:7 ஆக எல்லாப் பாவத்தினின்றும் இரத்தம் நம்மைத் தூய்மைப்படுத்த வேண்டுமானால் அதற்கு ஓரே ஒரு நிபந்தனை உண்டு. பகை எனும் இருளிலிருந்து விலகி நட்புறவு என்னும் ஒளியில் வாழ வேண்டும். "அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவுக் கொண்டிருப்போம்." 1யோவான் 1:7 ஆக அப்போது தான் இயேசுவின் இரத்தம் தம் பணியை ஆற்றமுடியும்

மின்சாரம் இருந்தாலும் மின்விளக்குச் சரியான நிலையில் இருந்தாலும் இவற்றை இணைக்கும் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டிருந்தால் மின்விளக்கு எரியாதே! அதே போன்று தான் உறவுப்பாலம் சரியாக இருந்தால் தான் இயேசுவின் இரத்தம் செயலாற்றி நமது பாவத்தைக் கழுவித் தூயதாக்க முடியும்.

இயேசுவின் இரத்தம் செயலாற்றும் முறையும், அதன் பணிகளையும் விவிலியம் பல இடங்களில் எடுத்துரைக்கின்றன. அவற்றில் சில இங்கே குறிப்பிடப்படுகின்றன.

  • கிறிஸ்து இரத்தம் சிந்தித் தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம். எபேசியர் 1:7
  • சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழித் தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார். கொலோ 1:20
  • தந்தையாம் கடவுளின் முன்னறிவின்படி, இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியவும், அவரது இரத்தத்தால் தூய்மையாக்கப்படவும் நீங்கள் தூய ஆவியால் இறைமக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். 1பேதுரு 1:2
  • இரத்தம் சிந்தி மனிதருடைய பாவத்துக்குக் கழுவாய் ஆகுமாறு இயேசுவைக் கடவுள் நியமித்தார். அவரிடம் நம்பிக்கைக் கொள்வோருக்காகவே அவ்வாறு செய்தார். கடவுள் கடந்த காலத்தில் மனிதர் செய்தப் பாவங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். இவ்வாறு மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் முறையை அவர் காட்டினார். உரோ.3:25
  • உன்னைப் பொறுத்தமட்டில் உன்னோடு நான் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை முன்னிட்டு, சிறைப்பட்டிருக்கும் உன்னைச் சார்ந்தோரை நீரற்றப் படுகுழியிலிருந்து விடுவிப்பேன். செக்கரியா 9:11

நீரற்றப் படுகுழியிலிருந்து விடுவித்து இறைவன் நன்மை உயிருள்ள நீராம் தூய ஆவியால் வழி நடத்துவார்.

எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தில் மட்டுமே பல இடங்களில் இயேசுவின் இரத்தத்தின் ஆற்றல் எடுத்துரைக்கப்படுகிறது.

  • ஊனும் இரத்தமும் கொண்ட அப்பிள்ளைகளைப் போல் அவரும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்து விட்டார். எபிரேயர் 2:14
  • வாழ்நாள் முழுவதும் சாவுபற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டிருந்தவர்களை விடுவித்தார். எபிரேயர் 2:15
  • ஆனால் கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூ ய்மைப்படுத்துகிறது! எபிரேயர் 9:14
  • உண்மையில் திருச்சட்டத்தின்படி ஏறக்குறைய எல்லாமே இரத்தத்தினால் தூய்மையாக்கப்படுகின்றன. இரத்தம் சிந்துதல் இன்றிப் பாவமன்னிப்பு இல்லை. எபிரேயர் 9:22

இயேசுவின் இரத்தமே எல்லா மனிதப் பாவத்தையும் மீட்க முடியும்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்