மனம் திரும்புதல்

ஜெயமேரி-செல்வி - சென்னை24

turn back to God1.யோவான் 8:1-10, 2.லூக்கா 7:36-50, 3.யோவான் 4:1-30, 4.லூக்கா 19:1-10 இவை போல இன்னும் எத்தகையோ நிகழ்வுகளை விவிலியத்தில் படிக்கிறோம். புனிதர்களும் அப்படியே. இவர்கள் எல்லாம் மனம் மாறியவர்கள். இன்று பேசப்படுபவர்கள். காரணம் செய்தப் பாவத்தை விட்டு மனம் திரும்பிய பின் அந்தப் பாவத்தை மீண்டும் செய்யவில்லை. இன்று நாமும் தினந்தோறும் திருப்பலி வழியாய், விவிலியத்தின் வழியாய் இயேசுவை அறிகிறோம். உணர்கிறோம். மனம் மாறுகிறோமா?

நாம் கொலை, கொள்ளைப் போன்ற பெரிய பாவம் செய்யவில்லை என்றாலும் அதற்கு ஒப்பான பொருளாசை, கோபம், வெறுப்பு, பகைமை, முணுமுணுப்பு என்று ஏதாவது ஒன்றை நாம் செய்து கொண்டு தான் இருக்கிறோம். அதிலிருந்து நாம் முற்றிலுமாக வெளியில் வந்தாக வேண்டும். அதுக்குத் தான் தவக்காலம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் நாம் இயேசு கிறிஸ்துவின் பிள்ளைகள். அவர் சாயலாக, பாவனையாக உருவாக்கப்பட்ட மக்கள். அவருடைய சொந்த உரிமைக் குடிமக்கள். அவரைப்போல இருக்க வேண்டும்.

கோபம் ஏன் வருகிறது? ஒரு மனிதனிடம் இது நடக்கணும் என்று எதிர்பார்க்கிறோம். அது நடக்கவில்லையென்றால் கோபப்படுகிறோம். ஆத்திரப்படுகிறோம். ஏன் எனில் நாம் மனிதர்களையே நம்பி இருக்கிறோம். ஆனால் ஆண்டவர் (எரேமியா17:5) மனிதர்களை நம்புகிறவன் சபிக்கிப்பட்டவன் என்கிறார். யாக்கோபு 4:2,3 சொல்லப்பட்டது போல ஆசைப்படுவதும், கேட்பதுவும் கிடைக்கவில்லை. காரணம் தீயஎண்ணத்தோடு கேட்கிறோம். நமக்கு வேண்டும் என்று விரும்பும்போது அடுத்தவர் வாங்கிவிட்டால் அதை எப்படியாவது அல்லது கடன்பட்டாவது வாங்க விரும்புவது தான் பிரச்சனையாக மாறுகிறது.

பாருக் 2:5-10 ஆண்டவருடைய குரலுக்குப் பணிந்து நடக்காமல் பாவம் செய்கிறோம். அதனால் துன்பம் வருகிறது. அதை உணர்ந்து மனம் மாறி ஆண்டவர் முன் மனம் மன்றாடவில்லை. அவர் குரலுக்குச் செவிசாய்ப்பதில்லை. கட்டளைகளைக் கடைப்பிடிப்பதும் இல்லை. ஏன் நம்மிடம் எதிர்பாக்கிறார் ஆண்டவர்? எசாயா 43:4 அவரது கண்ணுக்கு நாம் விலையேறப் பெற்றவர்களாக இருக்கிறோம் என்ற போது அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் மனமாற்றம் வரவில்லையெனில் எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும் அவருக்கு! கொலே 1:20 இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் அனைத்தும் அவரோடு ஒப்புரவாகவும் கடவுள் திருவுளம் கொண்டார். நாம் எப்பொழுதும் மனம் மாறுவோம் பிலி2:5 இயேசு கிறிஸ்துவுக்கு இருந்த மனநிலையில் வாழுவோம். எரேமியா 15:6 இரக்கம் காட்டிச் சலித்துபோன ஆண்டவரை மீண்டும் மீண்டும் சலிப்படையும்படி செய்யவேண்டாம்.

(2குறிப்பேடு 6: 26, 36-40) அன்று சாலமோன் மக்களுக்காக மன்றாடினர். இன்று நமக்காக மன்றாட நாம் மட்டும் தான். நமக்கும் ஆண்டவருக்கும் மட்டுமே எல்லாம். நமக்காக இயேசு இரத்தம் சிந்தினர், அதில் எந்த மாற்றமும் இல்லை. நாம் ஒவ்வொரு முறைப் பாவம் செய்யும்பொழுது அவருடைய கடைசிதுளி இரத்தம் வரை சிந்தி அவரைச் சாகடிக்கிறோம். அன்று யூதாசு ஒரே ஒரு முறைக் காட்டிக் கொடுத்து மனம் நொந்து இறந்தான். இன்று நாம் எத்தனை முறை அவரைக் காட்டிக் கொடுக்கிறோம் என்று எண்ணிப் பார்ப்போம். மனம் திரும்புவோம். இயேசுவுடன் இணைவோம்.


 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்