தொகுத்து வழங்குபவர்:- இரான்சம் அமிர்தமணி

டிசம்பர் 13 : திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் - புதன்கிழமை
ஆன்மீக பாதையில் சறுக்கலான எண்ணம்

வாசகங்கள்:

எசாயா 40:25-31, மத்தேயு 11:28-30

அருள்மொழி:

ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ஓடுவர்; களைப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார். (ஏசாயா 40:31)

சிந்தனை:

ஒரு ஆன்மீகப் பேச்சாளர் ஒரு இடத்தில் மறையுரை ஆற்றிக்கொண்டிருக்கும்போது, அவருக்குச் சமூக வலைதளங்களின் வழியாக நெருங்கிய தொடர்பில் இருந்த நண்பர் ஒருவரும் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார். கூட்டதின் முடிவில் அந்தப் பேச்சாளரைச் சந்தித்த நண்பர், வலைதளங்கள் வழியிலானத் தங்கள் அறிமுகத்தைக் குறிப்பிட்டு, இன்று இருவரும் நேரில் சந்திப்பது பற்றி மகிழ்ச்சி தெரிவித்தார். தாங்கள் இருவரும் வேறொரு நாள் மீண்டும் சந்திப்பதென முடிவு செய்தோம். அந்நேரத்தில் தனது பணித்திட்டங்களின் செயல்பாடுகளை நினைவில் கொண்டு உரையாடலில் கவனமின்றி அந்த ஆன்மீகப் பேச்சாளர் இருப்பதைக் கண்ட அந்த நண்பர், “நமது செயல்முறைகள் எல்லாம் சிறிய கருவிகளே! ஆனால், நாம் செல்லுகின்ற பாதை வேறு. இரண்டையும் எண்ணி தடுமாறாதீர்கள்” என்று சொல்லிவிட்டு, விடைபெற்றார்.

ஆழமான ஒரு கருத்தை வெகுசாதாரணமாக அந்த நண்பர் கூறிச் சென்றாலும், அந்த நண்பரின் சொல் பேச்சாளரின் நெற்றியில் அடித்தது போல இருந்தது. தன் எண்ண ஓட்டத்தை அறிந்து தான் அவர் சொன்னாரா என்று பேச்சாளர் ஆச்சரியப்பட்டாலும், அவருடைய அடுத்தடுத்த செயல்திட்டங்களுக்கு அந்த நண்பரின் வார்த்தை வலுவூட்டுவதாக அமைந்தது. விண்ணக வாழ்வை நோக்கிய நமது பயணத்தில் எத்தனையோ எதிர்பாராத இடையூறுகளும், ஏமாற்றங்களும், அவமானங்களும் நேரிடலாம்; எனவே, “நாம் செல்லும் பாதையில் ஒருமுகப்படுத்திச் செல்லாமல், நமது பார்வையை வேறெங்கோ திருப்பிக் கவனக்குறைவுடன் நடந்தால், அது நமக்கு ஆபத்தாகவே முடியும். நமது ஆன்மீக பயணத்தில் சறுக்கி விழவும் வழிவகுக்கும்” என்ற உணர்வு பேச்சாளருக்குப் புலப்பட்டது.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து தரப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகம், அந்தப் பேச்சாளரின் நண்பருடையக் கூற்றை விரிவாக நம் மனக்கண் முன்னே காட்டுகின்றது. நாம் சோர்வுற்று தளர்ந்து போகும்போது, கடவுள் நமக்கு வலிமையளித்து, ஊக்கம் பெருகச் செய்கிறார். ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கும்போது, கழுகைப் போல இறக்கை விரித்து உயரே பறந்து செல்லப் புதிய ஆற்றலை நமக்குத் தருகிறார். இவ்வாறு ஆண்டவருடைய வலிமை நமக்கு அருளப்படும் நேரத்தில், நமது பயணத்தின் பாதையும், நோக்கமும் தெளிவடைகின்றன. பலர் நமது வழியில் தடைகளையும், இடையூறுகளையும் ஏற்படுத்தலாம்; ஆயினும், அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளி, முன்னேறிச் செல்வதற்கான துணிவையும், அருளையும் கடவுள் நமக்குத் தருகிறார்.

இறைவேண்டல்:

தூய ஆவியாரே! எங்கள் வாழ்க்கைப் பயணத்தில் குழப்பமும், தடுமாற்றமும் ஏற்படுகின்ற நேரங்களில், நீர் எங்களோடு உரையாடவும், எங்களுக்கு வலுவூட்டவும் எங்கள் அருகிலேயே இருக்கிறீர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். அத்தகைய நேரங்களில், உலக மாயைகளின் தாக்கத்திலிருந்து விலகவும், மனதில் அமைதியை உண்டாக்கி உம்முடைய சொற்களுக்கு விருப்பமுடன் செவிசாய்க்கவும் எங்களுக்கு வரம் தந்தருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி