தொகுத்து வழங்குபவர்:- இரான்சம் அமிர்தமணி

டிசம்பர் 12 : திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் - செவ்வாய்க்கிழமை
வழிதவறி அலையும் ஆடுகள்

வாசகங்கள்:

எசாயா 40:1-11, மத்தேயு 18:12-14

அருள்மொழி:

“ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்று ஒன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா? (மத்தேயு 18:12)

சிந்தனை:

இன்றைய நற்செய்தி வாசகம் மிகச் சிறியதாக இருந்தாலும், இந்த மூன்று வசனங்களில் மிகவும் வலுவான ஒரு செய்தியை இயேசு எடுத்துரைக்கிறார். ஒரு ஆயன் மேய்த்துக் கொண்டிருக்கின்ற நூறு ஆடுகளில் ஒன்று வழிதவறி எங்கோ சென்றுவிட்டது. எனவே, ஒன்றாக இருக்கின்ற தொண்ணூற்று ஒன்பது ஆடுகளையும் அங்கேயே விட்டுவிட்டு, தொலைந்து போன ஆட்டைத் தேடிச் செல்கிறார் ஆயன். இந்த உவமையில் வருகின்ற ஆயர் இயேசு தான் என்பதும், மந்தையில் இருக்கின்ற ஆடுகள் நாம் தான் என்பதும் நமக்குத் தெரியும்.

நமது வாழ்க்கையில் பல நேரங்களில், நாமும் ஆயரை விட்டு விலகி, மந்தையிலிருந்து பிரிந்து வழிதவறிச் செல்கிறோம். அவ்வாறு இயேசுவை விட்டு நாம் விலகியிருந்த தருணங்களையும், அப்போது நமக்கு நேரிட்ட இடர்பாடுகளையும், அவற்றின் விளைவுகளையும் இப்போது நினைத்துப் பார்ப்போம். அந்த நேரங்களில் இயேசுவும் நம்மைத் தேடிக் கொண்டு நம் பின்னே இருந்தார் என்பதை மனதில் கொள்வோம். நாம் வழிதவறிச் சென்ற சமயங்களில், இயேசுவின் உடனிருப்பை நமது நினைவில் கொண்டிருந்தோமா என்பது சந்தேகமே! இன்றைய நற்செய்தியை மீண்டும் வாசித்துப் பார்த்தால், வழிதவறிய ஆட்டைக் கண்டுபிடித்த ஆயன், அந்த ஆட்டைக் கடிந்து கொள்ளவில்லை; தண்டனை ஏதும் தரவும் இல்லை. அதனைத் தன் மந்தையோடு சேர்த்துக் கொண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.

தன் மந்தையில் தொண்ணூற்று ஒன்பது ஆடுகள் பாதுகாப்பாக இருக்கும்போது, காணாமல் போன ஒரே ஒரு ஆட்டைத் தேடிச் செல்வதை எந்த ஆயனும் பொதுவாக ஒரு சிக்கலாகவே நினைப்பார். ஆனால், நல்லாயனாம் இயேசு அவ்வாறு நினைக்கவில்லை. இன்றைக்கும் இயேசு நம்மோடு உடனிருக்கிறார்; நாம் அவரை விட்டுப் பிரிந்து சென்றாலும், நம்மை அவரோடு சேர்த்துக் கொள்ளக் காத்திருக்கிறார். அவருடைய மந்தைக்கு நம்மையும் கூட்டிச் செல்ல நாமும் தயாராக இருப்போம்.

இறைவேண்டல்:

கருணையும், கனிவும் மிகுந்த இறைவா! எங்கள் தவறுகளை மன்னித்து, எங்களை உம்மோடு சேர்த்து கொள்கின்ற உமது அருள்கொடைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். மனமாற்றம் பெறும்போது கிடைக்கின்ற மகிழ்ச்சியால் எங்களை நிறைத்தருளும். தவறுகளுக்காக வருந்தி, உம்மோடு இணைகின்ற பேரின்ப வாழ்வில் எங்களைப் பங்குபெறச் செய்தருளும். தவறுகளுக்காக மனம் வருந்தி, நன்னெறியில் வாழும் வரத்தை எங்களுக்கு அளித்தருளும். உணமையாகவே உமது அருள்நலமும், பேரன்பும் வாழ்நாளெல்லாம் எங்களைத் தொடர்ந்து வரச் செய்தருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி