தொகுத்து வழங்குபவர்:- இரான்சம் அமிர்தமணி

டிசம்பர் 3 : திருவருகைக் காலம் முதல் ஞாயிறு
கடவுளை புறக்கணித்து, அவரை விட்டு விலகியிருத்தல்

வாசகங்கள்:

எசாயா 63:16,17,19, 64:2-7; 1 கொரிந்தியர் 1: 3-9: மாற்கு 13:33-37

அருள்மொழி:

ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்வதேன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எம் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியதேன்? (எசாயா 63:17)

சிந்தனை:

மனிதர்களாகிய நாம் கடவுளைப் புறக்கணிக்கிறோம், அலட்சியப்படுத்துகிறோம். இவ்வாறு நாம் செய்கின்ற அசட்டைத்தனங்களுக்காக கடவுள் மீதே நாம் பழி சுமத்துகிறோம் என்பது வேடிக்கை தான். “ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்வதேன்?” என்று இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கக் கேட்டோம். நமது இதயங்களை நாமே கடினப்படுத்திக் கொண்டு, கடவுளிடமிருந்து விலகி இருந்தாலும், குறும்பு செய்யும் குழந்தைகளை கண்டிக்கின்ற பெற்றோரைப் போல, கடவுள் நம் பின்னால் ஓடி வந்து நம்மைத் திருத்த வேண்டும் என நாம் நடந்து கொள்கிறோம். ஆனால், கடவுளுடைய அன்பு அவ்வாறு செயல்படுவதில்லை. நாம் தன்னிச்சையாக செயல்படுவதற்கும், சில நேரங்களில் அவரை புறக்கணித்து, அவரை விட்டு விலகிச் செல்வதை நாம் தேர்ந்தெடுப்பதற்கும் கூட கடவுள் அனுமதிக்கிறார்.

திருவருகைக் காலத்தின் பயணத்தைத் தொடங்குகின்ற இன்றைய நாளில், கடவுளை நம் வாழ்விலிருந்து புறந்தள்ளி ஒதுக்கிய தருணங்களை சிந்தித்துப் பார்ப்பதற்கு நமக்கு ஒரு வாய்ப்புத் தரப்பட்டுள்ளது. இன்று வாசிக்கக் கேட்ட மாற்கு நற்செய்தி, "கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள்" என்று எச்சரிக்கை செய்து, நமது ஆன்மீக வாழ்விலுள்ள முறைகேடுகளை சீர் செய்யவேண்டியதன் அவசியத்தை நமக்கு நினவூட்டுகிறது. எனவே, வருகின்ற நாள்களில் தன்னிச்சைபடி தனியாக நடக்க முயல்கிறோமா அல்லது நம்மை விட்டு விலகாமல் என்றும் நம்முடன் வருகின்ற கடவுளைப் பற்றிக்கொண்டு வாழப் போகிறோமா என்று சிந்திப்போம்.

இறைவேண்டல்:

எங்கள் அன்பான ஆண்டவரே! உமது வழிகாட்டுதலை கவனத்தில் கொள்ளாமலும், வாழ்வில் ஒவ்வொரு நாளும் நீர் செய்கின்ற நன்மைகளை நன்றியுடன் நினைவுகூராமலும் நடந்துகொள்வதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம். எங்கள் வாழ்நாளில் தன்னிச்சையாக, வழிதவறிச் செல்ல விடாமல், நீர் எந்நாளும் எம்மோடு இருக்கின்றீர் என்பதை நாங்கள் அறிந்து நடந்திட வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி