மரியம் - யசப்

அருட்தந்தை யேசு கருணாநிதி
MaryJoeshp


நற்செய்தியில் மரியா, யோசேப்பு என்ற இரண்டு பெயர்களை வாசிக்கின்றோம்.

இந்தப் பெயர்களை வைத்து இன்று சிந்திப்போம்.

'மரியா' என்பதை எபிரேயத்தில் 'மரியம்' என்றும், 'யோசேப்பு' என்பதை 'யசப்' என்றும் எழுதுவர்.

எபிரேயத்தில் 'ம' (mēm) என்ற எழுத்துக்கு இரண்டு வடிவங்கள் உண்டு. வார்த்தையின் தொடக்கத்தில் அல்லது இடையில் வந்தால் அதை 'מ' என்றும், வார்த்தையின் இறுதியில் வந்தால் 'ם' என்றும் எழுதுவர். முதலில் வரும் 'מ'ல் கீழ்ப்பகுதி விரிந்து இருக்கும். இறுதியில் வரும் 'ם'ல் எல்லாம் முழுமையாக இருக்கும். மேலும் முதல் 'מ' பேறுகாலப் பெண்ணின் வயிறு போன்றும், இறுதி 'ם' மூடிய வட்டம் போலவும் இருக்கும் என்றும் சொல்லலாம்.

'மரியம்' என்ற வார்த்தையில் இந்த இரண்டு 'ம' (מ...ם) வருவது ஆச்சர்யம். முதல் 'מ' போல மரியாள் இயேசுவைச் சுமந்து இந்த உலகிற்கு தருகிறாள். இரண்டாம் 'ם' போல பாவம் இல்லாமல் வந்து, பாவமில்லாமலேயே மறைந்து போகிறார்.

'யசப்' என்ற வார்த்தையின் முதல் எழுத்து 'yōd'. இதுதான் எபிரேய எழுத்துருக்களில் மிகவும் சிறிய வடிவம் பெற்றது. 'இறைவார்த்தையின் ஒரு யோத்தாவும் கூட அழியாது' என்று இயேசு சொன்னபோது, அவர் சுட்டிக்காட்டியது இந்த எழுத்தைத்தான். 'யாவே' என்ற கடவுளின் பெயரை எழுத, '׳' என்ற இந்த எழுத்தைத்தான் இரண்டுமுறை எழுதுவர். இந்த எழுத்துக்கு 'கை' என்ற பொருளும் உண்டு. ஆக, இது வல்லமை அல்லது ஆற்றலைக் குறிக்கும். என்ன ஒரு முரண் பார்த்தீர்களா? இருப்பதிலேயே வலுவற்ற எழுத்துதான் வலிமையைக் குறிக்கப் பயன்படுத்துகிறது. மேலும், இந்த எழுத்து எண் எபிரேய எண் வரிசையில் 10ஐக் குறிக்கிறது. இன்றும் கூட கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டுக்களில் சிறந்தவரே 10 எண் கொண்ட டிசர்ட் அணிய முடியும் - டெண்டுல்கரின் டிசர்ட் எண் 10. மேலும், எபிரேயத்தில் தொடக்கத்தில் உயிர் எழுத்துக்கள் இல்லாதபோது, இந்த எழுத்தே எல்லா உயிரெழுத்தின் இடத்திலும் பயன்படுத்தப்பட்டது.

இத்தணை குணங்கள் கொண்ட 'yōd' என்ற எழுத்தைக் கொண்டுதான் இரண்டாம் ஏற்பாட்டு நாயகன் இயேசுவின் பெயரும் தொடங்குகிறது.

மரியாவின் 'מ...ם' மற்றும் யோசேப்பின் '׳' (yōd) சேர்த்து எழுதினால் வரும் வார்த்தை 'מ׳ם' (மயிம்).

இந்த வார்த்தைக்கு 'கடல்' அல்லது 'தண்ணீர்' என்று பொருள்.

ஆம், மரியாவும், யோசேப்பும் கடல். அளந்து பார்க்க நினைத்தாலும் முடியாது.

அவர்கள் தண்ணீர். பிடித்துப் பார்க்க நினைத்தாலும் விரலிடுக்குகளில் நழுவி விடுவர்.

இவர்கள் வழியாகவே, இயேசு என்னும் ஊற்று மனுக்குலத்தின் தாகம் தீர்க்க வந்தது.