மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

தூய்மைமிகு மூவொரு கடவுள் பெருவிழா
2-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
இணைச்சட்டம் 4: 32-34, 39-40|உரோமையர் 8: 14-17|மத்தேயு 28: 16-20

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


ஒரு நாட்டைப்‌ பேரரசன்‌ ஒருவன்‌ ஆண்டு வந்தான்‌. அவனுக்கு ஏழைகள்‌ என்றால்‌ உயிர்‌. அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும்‌ செய்து வந்தான்‌. அவனது பிறந்த நாள்‌ வந்தது. அவன்‌ ஒரு வினோதமான பரிசை அளிப்பதாக அறிவித்தான்‌. என்‌ பிறந்த நாள்‌ அன்று யார்‌ எனக்குப்‌ பரிசு கொடுத்தாலும்‌ அதை போல பத்து மடங்கு அவகளுக்குப்‌ பரிசு கிடைக்கும்‌. ஆனால்‌ அரை மணி நேரம்தான்‌ அரசனால்‌ பரிசுகள்‌ ஏற்றுக்கொள்ளப்படும்‌ என்று அறிவித்தான்‌.

பிறந்த நாளில்‌ அரண்மனைக்கு முன்னாள்‌ ஆயிரக்கணக்கான மக்கள்‌ பரிசுகளோடு காத்திருந்தார்கள்‌. பெரிய பெரிய பணக்காரர்கள்‌ அத்தனை பேரும்‌ அரண்மனைக்குள்‌ நுழைந்தனர்‌. ஏழைகள்‌ அரண்மனைக்குள்‌ நுழைய முடியவில்லை. அரை மணி நேரத்திற்குப்‌ பிறகு கதவு சாத்தப்பட்டது. அரசனின்‌ அரியணையை எளிதில்‌ அடைய முடியாது. ஏனெனில்‌ பல தடுப்புச்‌ சுவர்கள்‌ உண்டு. பணக்காரர்கள்‌ இறுதியாக சிம்மாசனத்தை அடைந்தனர்‌. ஆனால்‌ அரசன்‌ இல்லை. அங்கே சேவகன்‌ மட்டும்தான்‌ இருந்தான்‌. அரசனோ வெளியில்‌ நின்று ஏழைகளிடம்‌ பரிசு பெற்றுக்கொண்டிருந்தான்‌. இதை அறிந்த பணக்காரர்‌ கதவை நோக்கி ஓடினர்‌. ஆனால்‌ ஏழைகள்‌ பரிசு கொடுத்தப்‌ பின்தான்‌ கதவு திறக்கப்பட்டது. பணக்காரரோ எங்களை ஏமாற்றிவிட்டீர்‌ என அரசனிடம்‌ சொன்னார்கள்‌. அரசனோ! நீங்கள்‌ என்னைப்‌ புரிந்து கொள்ளவில்லை. நான்‌ எப்போதும்‌ ஏழைகள்‌ பக்கம்தான்‌ நிற்பேன்‌ என்பது உங்களுக்குத்‌ தெரியாதா! இந்தக்‌ கதையில்‌ வந்த அரசன்‌ போன்றவர்தான்‌ நம்‌ மூவொரு தெய்வம்‌. பால்‌ குடிக்கும்‌ தன்‌ மகனைத்‌ தாய்‌ மறப்பாளோ. கருத்தாங்கியவள்‌ தன்‌ பிள்ளை மீது இரக்கம்‌ காட்டாதிருப்பாளோ? இவர்கள்‌ மறந்தாலும்‌ நான்‌ உன்னை மறக்கமாட்டேன்‌ (எசா. 49:15) என்கிறார்‌ இந்த மூவொரு தேவன்‌. புதிய ஏற்பாட்டிலே இறைவனின்‌ அன்பின்‌ மேலான வாக்குறுதியைக்‌ காண்கிறோம்‌. தன்‌ ஏக மகன்‌ மீது நம்பிக்கைக்‌ கொள்ளும்‌ எவரும்‌ அழியாமல்‌ நிலைவாழ்வு பெரும்‌ பொருட்டு அந்த மகனையே அளிக்கும்‌ அளவுக்குக்‌ கடவுள்‌ உலகின்‌ மீது அன்புகூர்ந்தார்‌ (யோவா. 3:16).

  1. ஆம்‌ அந்த மூவொரு தேவன்‌ அன்பே உருவானவர்‌. எனவேதான்‌ புனித யோவான்‌ கூறுகிறார்‌: கடவுள்‌ அன்பாய்‌ இருக்கிறார்‌ (1 யோவா. 4:8)
  2. எகிப்தில்‌ இருந்து விடுவித்தார்‌. அன்று பாலைவனத்தைக்‌ கடக்க சோலை வனத்திற்கு அழைத்துச்‌ சென்றார்‌. ஆம்‌, இதில்‌ அன்பின்‌ வடிவம்‌ வெளிப்படுத்தப்படுகிறது.
  3. இயேசு யோர்தான்‌ தண்ணீரை விட்டு வெளியேறும்போது வானம்‌ திறக்கப்படுகிறது (மத்‌. 3:16, 17).
  4. குரல்‌ வடிவில்‌ தந்தை தன்னை வெளிப்படுத்துகிறார்‌.
  5. மனித வடிவில்‌ மகன்‌ காட்சித்‌ தருகிறார்‌.புறா வடிவில்‌ பரிசுத்த ஆவியைக்‌ காண்கிறோம்‌.

முடிவரை

இப்படிப்பட்ட மூவொரு தெய்வத்தின்‌ அன்பைப்‌ பெற நாம்‌ என்ன தகுதியைப்‌ பெற்றிருக்க வேண்டும்‌?

  1. முதலாவதாக நமது வாழ்வை நாம்‌ சீர்திருத்த வேண்டும்‌. பாவ வாழ்வைவிட்டுப்‌ புதிய வாழ்வுக்குக்‌ கடந்து செல்ல வேண்டும்‌.
  2. இறைவார்த்தைக்கு நாம்‌ செவிமடுக்க வேண்டும்‌.
  3. பகைமை நீக்கி ஒருவர்‌ ஒருவரை மன்னித்து சமாதானத்தைப்‌ பெற்றுக்கொள்ள வேண்டும்‌. ஏனெனில்‌ இயேசுவின்‌ அன்பு முடிந்த கதையல்ல. சிறுகதையும்‌ அல்ல. அது ஒரு தொடர்‌ கதை.
  4. மன ஒற்றுமையைப்‌ பெற வேண்டும்‌ - எப்படி ?

கதை

நீல நிறம்‌ கலந்த தண்ணீரைப்‌ பாருங்கள்‌. அதில்‌ தண்ணீரை ஊற்றிக்‌ கொண்டே இருந்தால்‌ அங்கே என்ன நடக்கும்‌. ஓர்‌ சங்கமம்‌ நிகழும்‌. ஊற்றப்படும்‌ தண்ணீரின்‌ அளவு அதிகரிக்க அதிகரிக்க பாத்திரத்தில்‌ உள்ள நீல நிறம்‌ மறைந்து, நிறமற்ற நிலையை அடையும்‌. இதேபோல்‌ அன்பே உருவான இறைவன்‌ தரும்‌ ஆவியின்‌ அருளை நம்மில்‌ ஊற்ற, நம்‌ இதயம்‌ மாற்றம்‌ பெறும்‌. தூய ஆவியின்‌ இதயம்‌ பெறுவோம்‌.

கல்லான இதயம்‌ எடுக்கப்பட்டு, கனிவுள்ள, உணர்வுள்ள இதயம்‌ பெறுவோம்‌ (எசே. 36:26).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மூவொரு இறைவன் யார்?

மோசே காலத்தில் மாபெரும் செயல்களைப் புரிந்தவரே தந்தை இறைவன் (முதல் வாசகம்).
எப்படிப்பட்ட கட்டளைகளைப் பின்பற்றி வாழவேண்டும் என்பதைக் கற்பித்தவர் மகன் இயேசு (நற்செய்தி).
நம்மைக் கடவுளின் பிள்ளைகளாக்கி, இன்று வழிநடத்தி வருபவர் தூய ஆவியார் (இரண்டாம் வாசகம்).
மூவொரு இறைவனால் நமக்குக் கிடைக்கும் வரங்கள் யாவை?

1. நமக்குள் அதிசயங்கள் நிகழும்.
2. நாம் எப்படி வாழவேண்டும் என்ற உண்மை நமக்கு விளங்கும்.
3. நாம் கடவுளின் மக்களாகும் பேற்றினைப் பெறுவோம்.

மூவொரு இறைவனைப் பற்றிய அறிவை எப்படிப் பெறுவது?
பட்டாம்பூச்சியும், தட்டாம்பூச்சியும் ஒருநாள் சந்தித்துக்கொண்டன. தட்டாம்பூச்சி பட்டாம்பூச்சியைப் பார்த்து : பூப்பூவா பறந்துபோகும் பட்டுப்பூச்சி அக்கா ... நீ பளபளன்னு போட்டிருப்பது யாருகொடுத்த சொக்கா? என்றது!

மேலும் ஒரு கேள்வி ! என் சிறகுகள் வெள்ளையாக இருக்கின்றன! ஆனால் உன்னுடைய சிறகுகள் மட்டும் எப்படி இப்படி கலர் கலரா இருக்கின்றன? என்றது தட்டாம்பூச்சி!

அதற்கு பட்டாம்பூச்சி: நீ உன் தாயின் வயிற்றிலிருந்து நேரடியாக வந்துவிடுகின்றாய்! நான் அப்படி அல்ல. பிறக்கும்போது புழுவாகப் பிறந்து, பிறகு கூட்டுப்புழுவாகி, கூட்டுக்குள் நாற்பது நாள்கள் கடும் தவம் செய்தேன். தவத்தின் முழுமையை அடைந்தபோது கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வந்தேன். தவமின்றி அழகில்லை; வரமில்லை என்றது.

நமது அறிவு அழகுள்ளதாகி அழகே உருவான மூவொரு இறைவனின் பாதங்களை அடைய விரும்பினால் நாம் தவம் செய்யவேண்டும். அதாவது அமைதியான இடத்திலே அமர்ந்து தியானம் செய்யவேண்டும்.

தியானத்திற்குக் கீழ்க்கண்ட விவிலியப் பகுதிகளைப் பயன்படுத்தலாம் :

மத் 3:11, 12:32, 28:19, மாற் 13:11, 14:36, லூக் 4:1, 6:36, 10:21, 11:13, யோவா 1:33, 3:35, 6:44, 8:41, 10:30, 14:26, 20:22.

மேலும் அறிவோம் :

உற்றநோய் நோன்றல் உயிர்க்(கு)உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்(கு) உரு (குறள் : 261).

பொருள் :
தமக்கு நேரும் துன்ப துயரங்களைத் தாங்கிக் கொள்வதும், பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதுமே தவத்திற்குரிய வடிவமாகும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வேதியர் ஒருவர் திருமண ஒலை எழுதுவதற்கு வந்த மாப்பிள்ளைக்குத் தேவையான மந்திரங்களைக் கற்றுக் கொடுத்து, அவரைப் பங்குத் தந்தையிடம் அழைத்துச் சென்றார். வேதியர் பங்குத் தந்தையின் பின்புறம் நிற்க, மாப்பிள்ளை பங்குத் தந்தையின் முன்புறம் நின்றார். பங்குத் தந்தை மாப்பிள்ளையிடம், "ஒரே கடவுள் எத்தனை ஆட்களாக இருக்கிறார்? என்று கேட்டார். மாப்பிள்ளை பதில் கூறமுடியாமல் மேலும் கீழும் விழித்தார். பங்குத் தந்தையின் பின்புறம் நின்று கொண்டிருந்த வேதியர் மூன்று விரலைக் காட்டினார். அதைப் பார்த்த மாப்பிள்ளை பங்குத் தந்தையிடம், "சாமி! வேதியர் ஏற்கெனவே என்னிடமிருந்து மூன்று ரூபாய் வாங்கிக் கொண்டார். இப்போது மறுபடியும் மூன்று ரூபாய் கேட்கிறார். இது சரியா?" என்றார்!

கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதைப் பகுத்தறிவுள்ள எவரும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். ஆனால், ஒரே கடவுள் மூன்று ஆள்களாக, அதாவது, தந்தை, மகன், தூய ஆவியராக இருப்பதைப் பகுத்தறிவால் மட்டும் அறிய இயலாது. அதற்கு இறை வெளிப்பாடு தேவை, "கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை), தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள் தன்மை கொண்டவருமால் ஒரே மகளே அவரை வெளிப்படுத்தினார்" (யோவா 1:18) "தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியாம் , மகனும், அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமின்றி, வேறு எவரும் தந்தையை அறியார்" (மத் 11:27).

கிறிஸ்துவே மூவொரு கடவுளை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். தாம் தந்தையிடமிருந்து வந்ததாகவும், தந்தையிடம் திரும்பிப் போவதாகவும், விண்ணகம் சென்றபின் தூய ஆவியாரை அனுப்ப இருப்பதாகவும் சீடர்களுக்கு அவர் தெள்ளத் தெளிவாகக் கூறினார் (யோவா 14:13-16). இன்றைய நற்செய்தியில், உயிர்த்த ஆண்டவர் விண்ணகம் செல்லுமுன் தம் சீடர்களிடம், "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் என் சீடராக்குங்கள். தந்தை மகள் தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்" (மத் 28:19) என்று கூறுகிறார்.

எனவே, கிறிஸ்துவே அதை நமக்கு வெளிப்படுத்தியால், கடவுளைப் பொருத்தமட்டில் 'ஆள் வகையில் தனித் தன்மையையும், இறையியல்பில் ஒருமையையும், மகத்துவத்தில் சமத்துவத்தையும் ஏற்றுக் கொண்டு, இருந்தவரும், இருக்கிறவரும் வரவிருக்கிறவருமான (திவெ 1:18), தந்தை, மகன், தூய ஆவியாரை ஆராதித்து மகிமைப்படுத்துவோம்.

மூவொரு கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவை திருத்தூதர் பவுல் தமது வாழ்த்துரையில் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்: "ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக" (2கொரி 13:13), இந்த வாழ்த்துரையைத் தான் திருச்சபையும் திருப்பலியின் ஆரம்பத்தில் நமக்கு வழங்குகிறது.

தந்தையின் தனிப்பண்பு அன்பு: மகனின் தனிப்பண்பு அருள்; தூய ஆவியாரின் தனிப்பண்பு நட்புறவு, தந்தை நம்மை அன்பு செய்து, நம்மைத் தொடர்ந்து பாதுகாக்கின்றார். கிறிஸ்து தமது அருளால் நம்மை மீட்டுக் கொண்டிருக்கிறார். தூய ஆவியார் தமது நட்புறவால் நம் உள்ளத்தில் குடியிருந்து நமக்குப் புத்துயிர் அளித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு மூவொரு கடவுளோடு நமது வாழ்வு என்றுமே பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது.

மூவொரு இறைவன் நாம் வணங்குவதற்குரிய மறைபொருள் மட்டுமல்ல, நமது அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய மறைபொருளுமாவார், தந்தை தமது மகனை முழுமையாக அன்பு செய்து, அவருக்குத் தம்மை முழுமையாக கையளிக்கிறார், அவ்வாறே மகனும் தந்தையை அன்பு செய்து, அவருக்குத் தம்மை முழுமையாகக் கையளிக்கிறார். இவர்களுடைய பரஸ்பர அன்பிலிருந்து பிறப்பவர்தான் தூய ஆவியார். மூவொரு இறைவனின் அன்பு வாழ்வைக் குடும்ப வாழ்வும் பிரதிபலிக்கிறது. கணவனும் மனைவியும் ஒருவர் மற்றொருவரை அன்பு செய்து தங்களை முழுமையாகக் கையளிக்கின்றனர். இவ்விருவரின் பரஸ்பர அன்பின் கனிதான் குழந்தை. எனவே ஒவ்வொரு குடும்பமும் மூவொரு இறைவனின் குடும்பத்தை அடித்தளமாகக் கொண்டுள்ளது என்றால் அது மிகையாகாது.

மேலும், மூவொரு கடவுள், தந்தை மகன் ஆவியார், ஒருவர் மற்றவருடைய தனித்தன்மையை மதிக்கின்றனர். ஒருவர் மற்றவரை மகிமைப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றனர். தத்தை மகனையும், மகன் தந்தையையும். தூய ஆவியார் மகனையும் மகிமைப்படுத்துகின்றனர்.

இம்மூவொரு கடவுளைப் பின்பற்றி நமது குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் ஒருவர் மற்றவருடைய தனித்தன்மையை ஏற்று, மதித்து, நமது மகிமையைத் தேடாமல் மற்றவர்களின் மகிமையைத் தேடி, பிறர்க்கு நம்மை முழுமையாகக் கையளித்து ஒருவருக்கொருவர் 'அன்பின் அடிமைகளாக' (கலா 5:13) வாழக்கற்றுக் கொள்ளலாம்.

ஒரு வறண்ட ஆற்றில், ஒரு சிறிய குழியில் மட்டும் சிறிதளவு தண்ணீர் இருந்தது. அதில் ஒரு பெரிய மீன் ஆனந்தமாக நீந்திக் கொண்டிருந்தது. அதைப்பார்த்த ஒரு குரங்கு, மீன் தண்ணீரில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்று திளைத்து, அதற்கு முதல் உதவி செய்யும் எண்ணத்துடன், அதைத் தண்ணிரிலிருந்து வெளியே எடுத்துத் தரையில் போட்டது. சிறிது நேரத்தில் மீன் துடிதுடித்து செத்துவிட்டது. அதைக்கண்ட குரங்கு, “மீன் சாக வேண்டிய நேரம் வந்து விட்டதால், அது செத்துவிட்டது. ஆனால், அது மறையுரை மொட்டுக்கள்.

தண்ணீரில் மூச்சுத் திணறிச் சாகாமல், தரையில் நிம்மதியாகச் சாக, நான் உதவி செய்துள்ளேன்" என்று தன்னைத்தானே பாராட்டிக் கொண்டது. குரங்கு மீனை அன்பு செய்தால், அம்மீனைத் தண்ணீரில் வைத்துத் தான் அன்பு செய்திருக்க வேண்டும். மாறாக, தானிருப்பது போலவே மீனும் தரையில் இருக்க வேண்டும் என்று விரும்பி, அதை அதன் இயல்பான சூழலிலிருந்து வெளியே கொண்டு வந்து சாகடித்திருக்கக்கூடாது.

நாமும் மற்றவர்களை அன்பு செய்யும் போது. அவர்களுடைய தனித்தன்மையை, விருப்பு வெறுப்புக்களை மதித்து அன்பு செய்ய வேண்டும், அதற்கு மாறாக, அவர்களை நம்மைப்போலாக்க முயற்சிப்பது அவர்களது ஆளுமையைக் கொலை செய்வதற்கு ஒப்பாகும். பிறருடைய தனித்தன்மையை மதித்தும், பிறருடன் இணைத்தும் செயல்படும்போது | மூவொரு கடவுளை நம் வாழ்வில் பிரதிபலிக்கிறோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஓதற்கு அரியவன் இறைவன்

திரினிடாட் (Trinidad) என்ற தீவு ஒன்று உண்டு. திரித்துவத்தின் (மூவொரு கடவுளின்) பெயரால் அழைக்கப்படுகிறது அத்தீவு. அத்தீவிற்கு அப்பெயரைச் சூட்டியவர் கிறிஸ்டோபர் கொலம்பஸ். எந்த ஒரு வேலையைத் தொடங்கு முன்னும், எந்த ஒரு கடிதத்தை எழுதுமுன்னும் தூய திரித்துவத்தின் பெயரால்' என்று தான் தொடங்குவார். புதிய உலகைக் கண்டுபிடிக்கும் தனது திட்டம் பற்றி அறிவியல் அறிஞர்கள், இறையியல் வல்லுனர்கள் கூடியுள்ள குழுவில் விளக்கும் போது "மூவொரு கடவுளின் பெயரால் உங்கள் முன்னே நிற்கிறேன்" என்றார். 1598 ஆம் ஆண்டில் தனது மூன்றாம் கடற்பயணத்தைத் தொடங்கினார். "தான் கண்டுபிடிக்கும் முதல் இடத்தைத் திரித்துவத்திற்கு அர்ப்பணிப்பேன்" என்று நேர்ந்தார். அவ்வாறு முதல்முதலில் அவர் கண்டுபிடித்த இடத்திற்கு அவர் இட்ட பெயர்தான் திரினிடாட்.

மூவொரு கடவுளின் வெளிப்பாடு கிறிஸ்தவ வாழ்வின், நம்பிக்கையின் மையம். நியூட்டன் போன்ற மேதைகள் மூவொரு கடவுளின் மீது வைத்திருந்த பற்று, பக்தி, நம்பிக்கை ஆழமானது. விவிலியத்திலும் வாழ்விலும் தம்மை வெளிப்படுத்திய மூவொரு இறைவனை அனுபவித்து உணர்ந்தவர்கள். அன்பு மயமான இறைவனின் அன்பிற்குள் மூழ்கித் திளைத்துத் தம் வாழ்வின் ஆழத்தைக் கண்டு பிடித்தவர்கள்.

தூய தாமஸ் அக்குவினாஸ் கடவுளைப் பற்றிய தன்னுடைய சிந்தனைகள், புரிதல்களை “Summa Theologica” என்ற தலைப்பில் மூன்று பகுதிகளாக எழுதியிருக்கிறார். முதலிரண்டு பகுதிகளை முடித்து விட்டு மூன்றாவது பகுதியை எழுதிக் கொண்டிருந்த நேரம், 1273 டிசம்பர் 6ஆம் நாள் நேப்பிள்ஸ் நகரில் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது இறையனுபவத்துக்கு ஆட்பட்டு விடுகிறார். இந்த இறையனுபவத்துக்கு ஆட்பட்ட பின்பு, தனது நூலின் மூன்றாவது பகுதியைத் தொடர்ந்து எழுத ஆர்வம் காட்டவில்லை. மூன்றாவது பகுதியை விரைவில் முடித்து விடுவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது சபையினருக்கு இது ஏமாற்றமாக இருந்தது.

எனவே அவரைக் கட்டாயப்படுத்தி அவரது அறையில் அமர வைத்து எழுதச் சொல்லியும் அவர் எழுத ஆர்வம் காட்டவில்லை. கடைசியாக, சபைத் தலைவர் "கீழ்ப்படிதல் என்ற வார்த்தைப் பாட்டின் பெயரால் நீர் எழுதத் தொங்கிய அந்த நூலை முடிக்கும்படி உமக்கு நான் ஆணையிடுகிறேன் என்று சொன்னபோது தாமஸ் அக்குவினாஸ் இவ்வாறு பதிலளித்தாராம்: "தலைவர் தந்தை அவர்களே, என்னை ஆட்கொண்ட அந்தக் குறுகிய கால இறைஅனுபவத்தோடு ஒப்பிடும் போது, நான் கடவுளைப் பற்றி எழுதியவை அனைத்தும் ஒன்றுமில்லாமைக்குச் சமம் - எல்லாம் தூசும் வைக்கோலும் போல.

எப்படி மூன்று ஆட்கள் ஒரே கடவுளாக இருக்க முடியும் என்று புரிந்து கொள்ள முயற்சி செய்வதனாலோ, விவாதிப்பதனாலோ நாம் கடவுளைப் புரிந்து கொள்ளப் போவதில்லை, மாறாக, செபம் மற்றும் தியானம் வழியாக இறைவனால் ஆட்கொள்ளப்படும் போது, இறைவனை அனுபவப் பூர்வமாக உணரும் போது, நம்முடைய அறிவுப் பூர்வமான குழப்பங்கள் நம்மை விட்டு அகல ஆரம்பிக்கின்றன.

மூவொரு கடவுள் ஆய்வுக்குரியவரல்லர். அனுபவத்துக்குரியவர். தூய தாமஸ் அக்குவினாஸ் சொல்வார்: “கடவுளைப் பற்றிப் பேசாமல் நம்மால் இருக்க முடியாது. ஆனால் அவ்வாறு பேசும் போது, நம்மால் உளறத்தான் முடியுமேயொழிய தெளிவாகப் பேச முடியாது'.

வாய் வார்த்தைகளால் கடவுளை நிரூபிப்பது கடினம். ஏன் அப்படி? அது, நிழல் என்றால் என்ன என்று ஒரு பார்வையற்றவருக்கு விளக்க முயற்சி செய்வது போன்ற செயல். பார்வையற்றவர் வெளிச்சத் தையே பார்த்திராதவர் அல்லவா! எனவே அவருக்கு ஒளி என்றாலே என்னவென்று தெரியாது. அப்படியிருக்கும்போது ஒளி உருவாக்கும் நிழலைப் பற்றி அவருக்கு எப்படி விளக்குவது? கடவுளின் படைப்பையே வார்த்தைகளால் விளக்கி விவரிக்க முடியாதெனில், அதைப் படைத்த கடவுளை எப்படி விவாதத்தால் வார்த்தைகளால் புரிய வைக்க முடியும்? அதனால்தான் "உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் இறைவன்" என்கிறது பெரிய புராணம்.

உச்சரிப்புக்கு அடங்காத உயிர் மூச்சு ஒன்று ஆன்மாவின் ஆழத்தில் ஊன்றப்பட்டுள்ளது. அதற்குப் பெயர்தான் அனுபவம் ஆராய்ச்சியைக் கடந்தது.

அன்பு என்றால் என்ன? பதில் சொல்லுங்கள்! அறிவுக்கோ விளக்கத்துக்கோ உரிய பொருள் அல்ல அது. அனுபவத்திற்குரிய பொருள். அழகும் அவ்வாறே. கற்பும் அவ்வாறே.

கடவுளும் அத்தகையவரே! ஆராய்ந்து அல்ல, அனுபவித்து உணரப்பட வேண்டியவர். “நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது" (யோவான் 16:12). கடவுள் ஒருமறைபொருள் என்பதே அதன் பொருள். எனவே இயேசு தொடர்ந்து சொல்வார்: “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி வழிநடத்துவார்” (16:13).

"அம்மையப்பன்” ''சத்(உண்மை ) சித் (அறிவு) ஆனந்தன் (இன்பம்)” இவையெல்லாம் கடவுள் பற்றிய மனிதக் கண்ணோட்டங்கள். இறைவன் தாமே தன்னைப் பற்றி வெளிப்படுத்தியது: "தந்தை, மகன், தூய ஆவி' என்ற திரித்துவத் தத்துவம்.

ஜூனாய்டு என்ற ஞானியிடம் சீடன் ஒருவன் வந்து கேட்டான் "உங்களிடம் கடவுள் ஞானம் என்கிற முத்து இருப்பதை உணர்கிறேன். மற்றவர்களும் அதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அந்த முத்து எனக்குக் கொஞ்சம் தேவை. அதை எனக்கு விலைக்கோ அல்லது இலவசமாகவோ கொடுங்கள்'' ஞானி என்ன பதில் சொன்னார் தெரியுமா?

''சீடனே, உனக்கு நான் அதை விற்க முடியாது. ஏனென்றால் அதன் விலையை உன்னால் கொடுக்க முடியாது. இனாமாகக் கொடுக்கலாம் என்றால், அதை நீ மதிக்க மாட்டாய். அதனால் என்னைப் போலவே நீயும் கடவுள் என்ற அந்த ஆழ்கடலில் மூழ்கி எழுந்திரு. நீயும் ஒரு முத்து எடுத்து வரலாம் என்றார்.

14ஆம் நூற்றாண்டில் மெய்ஸ்டர் எக்ஹார்ட் என்ற துறவி சுவைத்துச் சொன்னார்:"கடவுள் சிரித்தார். திருமகன் பிறந்தார் தந்தையும் மகனும் சிரித்தார்கள். தூய ஆவி பிறந்தார்.

தந்தை மகன் தூய ஆவி மூவரும் சிரித்தார்கள். இந்த உலகம் பிறந்தது''.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மூவொரு இறைவன் பெருவிழா

மழலையர்பள்ளி ஒன்றில் குழந்தைகள் அனைவரும் மிக மும்முரமாக வரைந்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரின் ஓவியத்தையும் ஆசிரியர் பார்த்து இரசித்தபடியே சுற்றி வந்துகொண்டிருந்தார். மிக, மிக ஆழ்ந்த கவனத்துடன் எதையோ வரைந்து கொண்டிருந்த ஒரு சிறுமியை ஆசிரியர் அணுகி, "என்ன வரைந்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். தன் ஓவியத்திலிருந்து கவனத்தைச் சிறிதும் திருப்பாமல், "நான் கடவுளை வரைந்து கொண்டிருக்கிறேன்" என்று பதில் சொன்னாள் அக்குழந்தை. உடனே ஆசிரியர், "கடவுள் எப்படியிருப்பார் என்று யாருக்குமே தெரியாதே!" என்று கூறினார். அக்குழந்தை ஆசிரியரை நிமிர்ந்துபார்த்து, "கொஞ்சம் பொறுங்கள்... இன்னும் சிறிது நேரத்தில் அவர் எப்படியிருப்பார் என்று தெரிந்துவிடும், பாருங்கள்!" என்று புன்சிரிப்புடன் பதில் சொன்னாள்.

"இறைவனை யாரும் பார்த்ததில்லை" என்பது வளர்ந்துவிட்ட ஆசிரியரின் கணிப்பு. "இறைவனை என்னால் எளிதில் காட்டமுடியும்" என்பது குழந்தையின் நம்பிக்கை. குழந்தையின் வடிவில் இறைவனைக் காணமுடியும் என்பதை ஏறத்தாழ எல்லா மதங்களும் கூறுகின்றன. உலகில் பிறக்கும் குழந்தைகள், இறைவனின் அற்புத வெளிப்பாடாக, இறைவன் என்ற பேரொளியின் சிறு பொறிகளாக, இவ்வுலகிற்கு வருகின்றனர். வயது வளர வளர, இந்த ஒளி மங்கி, மறைந்துவிடுகிறது.

அன்று, புனித அகுஸ்தின், அக்குழந்தையிடம் கற்றுக்கொண்டது, மூவொரு கடவுளைப் பற்றிய உண்மை அல்ல. தன்னைப் பற்றிய உண்மை. அக்குழந்தையிடம் கற்றுக்கொண்ட பாடம், புனித அகுஸ்தினை வாழ்நாள் முழுவதும் பணிவுடன் வாழவைத்தது. முக்கியமாக, கடவுளைப்பற்றியச் சிந்தனைகளை, பணிவுடன் கற்றுக்கொள்ள வைத்தது. ஞானிகளுக்கும், அறிஞர்களுக்கும் மறைக்கப்பட்ட உண்மைகள், குழந்தைகளுக்கு வெளிப்படுத்தப்பட்டன என்று இயேசு சொன்ன வார்த்தைகளின் (மத். 11: 25; லூக். 10: 21) முழுப் பொருளையும் புனித அகுஸ்தின் தன் அனுபவப் பள்ளியில் பயின்றார். வாழ்க்கை என்ற பள்ளியில் நாம் பணிவுடன் காலடி எடுத்துவைத்தால், நம்மைப்பற்றி, உலகைப்பற்றி, கடவுளைப்பற்றி பல அழகான உண்மைகளைக் கற்றுக்கொள்ள முடியும். இந்தப் பணிவு குழந்தைகளுக்கு இயல்பாகவே உள்ளது. எனவேதான், அவர்கள் பல ஆழமான உண்மைகளை எளிதாகப் புரிந்து கொள்கிறார்கள்.

குழந்தைகளைப் போல மாறாவிடில் விண்ணரசில் நுழையமுடியாது என்று இயேசு சொன்னது விளையாட்டுக்காக அல்ல; குழந்தைகளைப் போன்ற மனம் கொண்டிருந்தால் மட்டுமே, இறைவனைப் பற்றியும், இறையரசைப் பற்றியும் புரிந்துகொள்ள முடியும் என்பதை, இயேசு ஆணித்தரமாக நம்பினார். எனவேதான், அவர், இறைவனைப் பற்றியும், இறையரசைப் பற்றியும் நீண்ட இறையியல் விளக்கங்களைத் தருவதற்குப் பதில், குழந்தைகளும், குழந்தைமனம் கொண்டோரும் புரிந்துகொள்ளும் வகையில், எளிய கதைகள் வழியே விளக்கினார்.

நம் இறைவன், தனிமையில், தானாய் உறைந்திருக்கும் ஒருவராக அல்ல, மாறாக, மூவராக உறவுகொண்டிருப்பவர் என்ற பாடத்தை நமக்குச் சொல்லித் தந்தவர், இயேசு. அவர் இவ்விதம் இறைவனை அறிமுகம் செய்தது, பலரை வியப்பில் ஆழ்த்தியது. வேறு பலரை கோபத்தில் ஆழ்த்தியது. இயேசுவின் காலம்வரை, இஸ்ரயேல் மக்கள் நம்பி, தொழுதுவந்த கடவுள், தானாக இருக்கும், தனித்திருக்கும், தனித்து இயங்கும் ஒரு கடவுள். தனித்திருக்கும் கடவுளை ஒரு கூட்டு உறவாய், குடும்பமாய் அறிமுகம் செய்தவர் இயேசு.

உறவே இறைவனின் உயிர்நாடி என்று இயேசு சொன்னதைப் புரிந்துகொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் இஸ்ரயேல் மக்களும், மதத் தலைவர்களும் மறுத்தனர். அவர்கள் செய்தது தவறு என்று, நாம், வழக்கம்போல், தீர்ப்பிட துடித்துக் கொண்டிருந்தால், ஓர் ஆன்ம ஆய்வை மேற்கொள்வோம். இயேசு சொல்லித்தந்த மூவொரு இறைவனை நாம் எவ்விதம் புரிந்துகொள்கிறோம்? ஏற்றுக்கொள்கிறோம்? என்ற கேள்விகளை இன்று எழுப்புவது நல்லது.

வழிபாட்டு ஆண்டின் 'பொதுக் காலத்'தை நாம் ஆரம்பித்துள்ளோம். 'பொதுக்காலம்' என்று சொல்லும்போது, இதுவரை நாம் கடந்துவந்தது ஒரு சிறப்புக் காலம் என்பதைச் சொல்லாமல் சொல்கிறோம். ஆம், நாம் கடந்துவந்தது, ஒரு சிறப்புக் காலம்தான். கடந்த ஆறு வாரங்களாக, ஒன்றன்பின் ஒன்றாக நாம் பெருவிழாக்களைக் கொண்டாடிவந்தோம். இந்த விழாக்காலத்தின் சிகரமாக இன்று மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். திருஅவையில் நாம் கொண்டாடும் அனைத்து விழாக்களும், பிறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம், விண்ணேற்பு என்ற வரிசையில், ஒரு நிகழ்வை மையப்படுத்தியவை, அல்லது, கிறிஸ்து, மரியா, யோசேப்பு, திருமுழுக்கு யோவான் என்ற வரிசையில், ஒரு நபரை மையப்படுத்தியவை. மூவொரு இறைவன் என்ற இந்த விழா மட்டுமே, அறிவு சார்ந்த ஒரு கருத்தை மையப்படுத்திய விழாவோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதற்குப் பின்னணியில் புதைந்திருக்கும் மற்றொரு முக்கியமான கேள்வி... மூவொரு இறைவன், உயிரோட்டமுள்ள உறவாக நம் மத்தியில் வாழ்கிறாரா? அல்லது, வெறும் அறிவுப் பசிக்கு உணவிடும் கருத்தாக வலம் வருகிறாரா?

திருஅவை வரலாற்றைப் புரட்டும்போது, மூவொரு இறைவன் என்ற பேருண்மை, பெரும்பாலும் ஏட்டளவு சிந்தனையாக, இறையியல் நூல்களின் பக்கங்களையும், பல்வேறு திருச்சங்க ஏடுகளையும் நிறைத்து விட்டனவோ என்ற நெருடல் நம் உள்ளங்களில் எழுகின்றது. மூவொரு இறைவனை, உயிரோட்டமுள்ள ஓர் உறவாக இயேசு நமக்குத் தந்தார். நாமோ அவரை ஒரு கருத்தாக மாற்றி, நூல்களிலும், கோவில்களிலும் பாதுகாத்து வருகிறோமோ என்று சிந்திக்கும்போது, ஆப்ரிக்காவில் சொல்லப்படும் கதையொன்று நினைவுக்கு வருகிறது.

ஒரு நாட்டின் பழங்குடியினரிடையே மறைபரப்புப் பணியாற்றிவந்த ஓர் அருள்பணியாளர், விடுமுறைக்கு, தன் தாயகம் திரும்பிச் சென்றார். அங்கு அவர் 'சூரிய மணிகாட்டி' (Sun dial) என்ற அற்புதப் படைப்பைக் கண்டார். அதன் பயனை, தன் மக்கள் புரிந்து, பயன்படுத்தவேண்டும் என்ற ஆவலுடன், அருள்பணியாளர், தன் விடுமுறை முடிந்து திரும்பும்போது, சூரிய மணிகாட்டி ஒன்றை வாங்கிச் சென்றார்.
அவர் கொண்டுவந்திருந்த சூரிய மணிகாட்டியைக் கண்ட பழங்குடியினர், ஆச்சரியமும், ஆனந்தமும் அடைந்தனர். சூரிய மணிகாட்டியின் பயனை, தன் மக்கள் புரிந்துகொண்டனர் என்ற மகிழ்வில், அருள்பணியாளர், அதை அவ்வூருக்கு நடுவே ஒரு பொதுவான இடத்தில் பொருத்தி வைத்தார்.
அடுத்தநாள் காலை, அருள்பணியாளர் அவ்விடம் சென்றபோது அதிர்ச்சி அடைந்தார். அவ்வூர் மக்கள், சூரிய மணிக்காட்டிக்கு மேல் கூரை ஒன்றை அமைத்திருந்தனர். வெயில், மழை இவற்றால் சூரிய மணிகாட்டி பாதிக்கப்படாமல் காக்கும்பொருட்டு அந்தக் கூரையை அமைத்ததாக, அம்மக்கள், அருள்பணியாளரிடம் கூறினர்.

மூவொரு இறைவன் என்ற மறையுண்மையை சூரிய மணிகாட்டியாகவும், நம்மை, அந்தப் பழங்குடியினராகவும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். தந்தை, மகன், தூய ஆவியார் என்ற மூவொரு இறைவனின் மறையுண்மை, நமக்கு வழங்கப்பட்டுள்ள அற்புதமான கொடை. இக்கொடையைப் பெற்றுள்ள நாம், இம்மறையுண்மையை நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இதைப் பாதுகாப்பாக வைக்கவேண்டுமென்ற ஆர்வத்தில், அழகியக் கோவில்களை எழுப்பி, அல்லது, மூவொரு இறைவனை, இறையியல் கருத்துக்களாக நூல்களில் எழுதி, அவற்றில், இம்மறையுண்மையை ஒரு காட்சிப் பொருளாக வைத்து, அழகுபார்க்கிறோம். இம்மறையுண்மையை வழிபாட்டிற்குரிய ஓர் உண்மையாக மட்டுமே வணங்குகிறோமே தவிர, நம் வாழ்வின் ஆதாரமாகப் பயன்படுத்தத் தயங்குகிறோம்.

இயேசு அறிமுகம் செய்துவைத்த மூவொரு இறைவனின் இலக்கணம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? நாம் வழிபடும் இறைவனின் இலக்கணமே உறவு. நம் இறைவன் உறவுகளின் ஊற்று. அப்படியிருக்க, நாமும் உறவுகளுக்கு முதன்மையான, முக்கியமான இடம் தரவேண்டும் என்பதுதானே அந்தப் பாடம்? உறவுகளுக்கு நம் வாழ்வில் முதன்மையான இடத்தைத் தந்திருக்கிறோமா என்பதை ஆராய்ந்து பார்க்க இன்று நாம் கொண்டாடும் மூவொரு இறைவன் பெருவிழா நல்லதொரு தருணம். உறவுகளை வளர்ப்பதைவிட, செல்வம் சேர்ப்பது, புகழ் தேடுவது, போலியான கொண்டாட்டங்களில் ஈடுபடுவது என்ற மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை, உறவுகளின் ஊற்றாய் விளங்கும் மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித்தர வேண்டும் என்று இன்று சிறப்பாக மன்றாடுவோம்.

நாமும் நமது தலைமுறைகளும் இறைவன் காட்டும் வழியில் நடக்கும்போது, அவரது அசீரால் நிறைவோம் என்பதை மோசே இன்றைய முதல் வாசகத்தில் கூறுகிறார். மோசே தரும் ஆசி மொழிகளுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்: இணைச்சட்டம் 4: 40

நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

“நாம்‌ நம்புகிற கடவுள்‌ ஒரே கடவுள்‌ ஆனால்‌ மூன்று ஆள்களாய்‌ இருக்கிறார்‌”. இந்த நம்பிக்கை பல வேளைகளில்‌ மறைபொருளாகத்‌ தான்‌ இருக்கிறது. இயேசு தம்‌ சீடர்களுக்கு மூன்று பணிகளைச்‌ செய்ய அழைப்பு விடுகிறார்‌. ஒன்று எல்லா மக்களையும்‌ சீடராக்க வேண்டும்‌, இரண்டாவது மூவொரு இறைவனின்‌ பெயரால்‌ திருமுழக்கு வழங்க வேண்டும்‌. மூன்று இயேசுவின்‌ கட்டளைகளைக்‌ கற்பிக்க வேண்டும்‌. இம்மூன்று பணியிலும்‌ மூவொரு இறைவனின்‌ பாதுகாப்பும்‌, பராமரிப்பும்‌ நிறைவாய்‌ உண்டு என்பதை வெளிப்படுத்தவே இன்று நாம்‌ மூவொரு இறைவனின்‌ விழாவைக்‌ கொண்டாடுகிறோம்‌. படைப்பின்‌ தொடக்கத்தில்‌ இருந்தே மூவொரு இறைவனின்‌ உடனிருப்பைக்‌ காண முடிகிறது.

பழைய ஏற்பாட்டில்‌ கடவுளின்‌ பெயரை “Elohim” (எலோஹிம்‌) என்று ஹீப்ரு மொழியில்‌ பயன்படுத்துகிறார்கள்‌. “எல்‌” என்றால்‌ ஒருமை. எலோஹீம்‌” என்றால்‌ பன்மை. இங்கு கடவுளின்‌ மூவொரு இறைவனின்‌ முழுமையை குறிக்கிறது. இது ஆபிராகமை சந்திக்க வந்த மூன்று பேர்‌ (18:1-5) மூவொரு இறைவனின்‌ வெளிப்பாடு, இயேசுவும்‌ தனது உயிர்ப்புக்குபின்‌ சீடர்களைச்‌ சந்தித்து. தந்தை, மகன்‌, தூய ஆவியார்‌ பெயரால்‌ திருமுழுக்கு கொடுங்கள்‌ (மத்‌ 28:19) என்கிறார்‌. இவ்வாறு மூவொரு இறைவனின்‌ உடனிருப்பை என்றும்‌ நமக்கு உணர்த்துகிறது. இறைத்தந்தை உணர்த்திய உடனிருப்பும்‌, இறைமகன்‌ வெளிபடுத்திய தியாக அன்பும்‌, தூய ஆவி பகிர்ந்த தோழமை உணர்வும்‌; நமது குடும்பங்களில்‌ நிலை பெற்றிருந்தால்‌ நமது குடும்பங்கள்‌ மூவொரு இறைவனில்‌ சங்கமமாகும்‌. நம்‌ நம்பிக்கைக்கு கடவுள்‌ யார்‌ ? நம்முடைய செயல்கள்‌ உணர்த்தும்‌ கடவுள்‌ யார்‌?

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மூவொரு கடவுள் பெருவிழா

வெளிப்பாடு – வாழ்வு – வழிநடத்துதல்

இன்று நாம் நம் கடவுளை மூவொரு இறைவன் என்று கொண்டாடி மகிழ்கின்றோம். இந்த மறைபொருள் பற்றி புனித அகுஸ்தினார் சிந்தித்துக் கொண்டே கடற்கறையில் நடந்துகொண்டிருந்தபோது, அங்கே தோன்றிய குழந்தை, ‘கடல் தண்ணீரை ஒரு சிறிய குழிக்குள் நிரப்ப முயல்வது எவ்வளவு மதியீனம்!’ என்று கேட்டுவிட்டு மறைந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால், புனித அகுஸ்தினாரைத் தவிர வேறு யாரும் இந்த மறைபொருள் பற்றி அதிகம் பேசவில்லை. பேசிய மற்றவர்கள் எல்லாம் அகுஸ்தினார் பேசியதைத்தான் வேறு வார்த்தைகளில் சொன்னார்கள்.

அகுஸ்தினார், ‘அன்பு’ என்ற உணர்வை இங்கே ஓர் உருவகமாகக் கையாண்டு தமதிருத்துவத்தின் (மூவொரு கடவுளின்) பொருளைப் புரிந்துகொள்ள விழைகின்றார். அன்பில் மூன்று பகுதிகள் உள்ளன: (அ) அன்பு செய்பவர், (ஆ) அன்பு செய்யப்படுபவர், (இ) இருவருக்கிடையே பரிமாறப்படும் அன்பு. அன்பு என்ற ஒன்றே இந்த மூன்று பகுதிகளையும் இணைத்தாலும், மூன்றும் தனித்தனியாக இருக்கின்றன என்பதை நாம் மறுப்பதில்லை.

மூவொரு கடவுள் பற்றிய புரிதலில் இதுவே முதன்மையானது. அதாவது, இவர்கள் மூவரும் ஒன்று என்றாலும், இவர்கள் வேறு வேறான நபர்கள்.

அகுஸ்தினார் இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வு பற்றி ஓரிடத்தில் மறையுரை வைக்க வேண்டிய தேவை இருந்தது. இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வில், ‘மகன் வேறு,’ ‘தந்தை வேறு,’ ‘தூய ஆவியார் வேறு’ என்று நம்மால் எளிதில் பிரித்துப் பார்க்க முடியும். மகன் தண்ணீருக்குள் இருக்கிறார். தந்தை வானத்தில் இருக்கிறார். தூய ஆவியார் இரண்டுக்கும் நடுவில் ஆகாயத்தில் இருக்கிறார். மூன்று பேரும் தனித்தனியாக அவர்கள் பிரிந்துதானே இருக்கிறார்கள். அப்படி இருக்க, அவர்கள் எப்படி ஒரே கடவுள் என்றும், பிரிக்க இயலாதவர்கள் என்றும் சொல்ல முடியும்? என்று அவருடைய மூளை கேள்வி கேட்கிறது. (அகுஸ்தினாரின் கேள்வி கேட்கும் திறன் நம்மை வியப்புக்கு உள்ளாக்குகிறது). இந்த இடத்தில் அவர் இன்னொரு உருவகத்தைக் கண்டுபிடிக்கின்றார்: நினைவு, புரிதல், விருப்பம்.

ஒரு கதையை நாம் நினைவில்கொள்ள வேண்டுமெனில், அந்தக் கதையைப் புரிந்துகொள்ளவும், நினைவில் வைத்திருக்க விருப்பம் கொள்ளவும் வேண்டும். ஒரு கதையைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், அவற்றின் வார்த்தைகளை நினைவில்கொள்ளவும், அவற்றை எண்ணிப்பார்க்க விருப்பம் கொள்ளவும் வேண்டும். ஒரு கதையை நாம் விரும்ப வேண்டுமெனில், அதை நினைவில் கொள்ளவும், புரிந்துகொள்ளவும் வேண்டும். மூன்றையும் செய்யக் கூடியது மூளைதான். ஆனால், மூன்றையும் வேறு வேறு செயல்களாகச் செய்கிறது. ஆக, அவற்றைப் பிரிக்க முடிவது போலத் தெரிந்தாலும், பிரிக்க இயலாதவையாக அவை இருக்கின்றன.

அப்படியே, கடவுளும், தந்தை-மகன்-தூய ஆவியாரும் என்கிறார் அகுஸ்தினார்.

மூவொரு கடவுள் மறைபொருளை இன்று நாம் எப்படிப் புரிந்துகொள்வது? மூவொரு கடவுள் தங்களிலேயே உறவு நிலையில் இருக்கின்றார்கள் என்றும், அவர்களுக்கென்று ஒவ்வொருவருக்கும் ஒரு பணி இருக்கிறது என்றும் வரையறுக்கிறது நம் கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி (காண். எண்கள் 267, 255).

மூவொரு கடவுளைப் பற்றிய புரிதலை இயேசுவே நமக்குத் தருகிறார்:

(அ) தந்தை வெளிப்படுத்துகிறார்: ‘விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்’ (மத் 16:17)

(ஆ) மகன் விடுதலை தருகிறார்: ‘மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலேயே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள்’ (யோவா 8:36)

(இ) தூய ஆவியார் வழிநடத்துகிறார்: ‘தூய ஆவியார் வரும்போது முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்’ (யோவா 16:13)

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு மிக நெருக்கமாக வந்ததையும், அவர்களுக்கு அரும்பெரும் செயல்கள் நடத்தி அவர்களை மீட்டதையும் எடுத்துரைக்கிறார் மோசே. தூய ஆவியார் நம் உள்ளத்தின் குரலாக அமர்ந்துகொண்டு கடவுளை, ‘அப்பா, தந்தையே’ என அழைக்கிறார். தம் திருத்தூதர்களைப் பணிக்கு அனுப்புகிற இயேசு, ‘தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால்’ என கடவுளுக்குப் பெயரிடுகிறார்.

இன்றைய நாள் நமக்குத் தரும் செய்தி என்ன?

தன் சகோதரன் ஏசாவிடமிருந்து தப்பி ஓடுகிற யாக்கோபு, பெத்தேலில் கனவு கண்டபோது, ‘உண்மையாகவே ஆண்டவர் இவ்விடத்தில் இருக்கிறார். நானோ இதை அறியாதிருந்தேன்’ (காண். தொநூ 29:16) என்றார். பின்னர் ஏசாவுடன் ஒப்புரவாகிற நிகழ்வில், ‘உமது முகத்தைக் காண்பது கடவுளின் முகத்தைக் காண்பதுபோல இருக்கிறது’ (காண். தொநூ 33:10) என்கிறார். ஒரு பக்கம் கடவுளின் இருத்தலை நாம் அறியாமல் இருக்கிறோம். இன்னொரு பக்கம் அனைவரிலும் அனைத்திலும் கடவுளைக் காண்கிறோம்.

கடவுள் என்பவர் நமக்கு ஓர் அனுபவமாக இருக்கிறார்.

இரண்டாவதாக, ‘எப்படி மூவொரு கடவுள்?’ எனக் கேட்பதை விடுத்து, ‘ஏன் மூவொரு கடவுள்?’ என்று நாம் கேள்வியை மாற்றிக் கேட்க வேண்டும். கடவுள் பற்றிய மறையுண்மை பற்றிய புரிதல்களில் எப்படி என்னும் கேள்வியை விட, ஏன் என்ற கேள்விக்கு மட்டுமே விடை உண்டு.

மூவொரு இறைவன் உறவின் இறைவனாக இருக்கிறார். அவருடைய சாயலில் படைக்கப்பட்டுள்ள நாம் உறவுக்குப் படைக்கப்பட்டுள்ளோம்.

மூன்றாவதாக, இந்த உறவு நம் குழுமத்திலும் மலர்கிறது. அன்பு, ஒன்றிப்பு, மாண்பு என்ற நிலையில் ஒருவர் மற்றவரோடு உறவாடுகிற குழுமம் மூவொரு இறைவனைப் பிரதிபலிக்கிறது.

இந்த நாள் ‘மறைபொருள்’ ஏனெனில், இந்த மறைபொருளில் நாமும் பங்கேற்கிறோம்.

நிற்க.

இன்றைய நாளை, ‘அகில உலக குழந்தைகள் நாள்’ எனக் கொண்டாட அழைக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். ‘நீங்கள் மதிப்புக்குரியவர்கள்’ (காண். எசா 43:4) எனக் குழந்தைகளை நோக்கிக் கூறி, அவர்கள் மதிப்புக்குரியவர்கள் என்பதை நமக்கும் நினைவூட்;டுகிறார்.

மூவொரு கடவுள் இயேசுவில் குழந்தையாக மனுவுரு எடுத்து குழந்தைப் பருவத்தை ஆசிர்வதித்தார். குழந்தைகள் என்றும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

பதிலுரைப்பாடலின் ஆசிரியர் (திபா 33) நாம் அவரையே பற்றிக்கொள்வோம்: ‘ஆண்டவர் நம் உயிரைச் சாவினின்று காக்கின்றார். அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். நாம் ஆண்டவரையே நம்பியிருக்கின்றோம். அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார் … உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எம்மீது இருப்பதாக!’

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மூவொரு கடவுளின் உறவுகளா நாம்!

இன்றைய நாளில் நம்முடைய தாய்த் திருஅவையோடு இணைந்து மூவொரு கடவுள் பெருவிழாவினை மிகச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றோம். மூவொரு கடவுள் பெருவிழா ஒரு மறையுண்மை கொண்டாட்டமாகும். கடவுள் மூன்று ஆட்களாக இருக்கிறார் என்பது நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கையின் மறைபொருள். மூவொரு கடவுள் மூன்று ஆட்களாக இருந்தாலும் ஒரே உள்ளம் கொண்டவர்கள். தந்தையாம் கடவுள் படைத்தவராகவும் ஆண்டவர் இயேசு நம்மை பராமரிப்பவராகவும் தூய ஆவியார் நம்மைப் பலப்படுத்தப்படுத்துபவராகவும் இருக்கின்றனர். படைப்பின் தொடக்கத்திலேயே மூவொரு இறைவனின் செயல்பாட்டைக் காணமுடிகின்றது.

தந்தையாம் கடவுள் படைப்பின் தொடக்கத்தில் படைத்தவராகவும் வார்த்தை வடிவில் மகனாகிய இறைவனும் நீரின் மீது அசைவாடிய தூய ஆவியாகிய இறைவனும் பிரசன்னமாகியிருந்தனர். மூவொரு கடவுளால் இந்த உலகம் ஆற்றலோடு படைக்கப்பட்டது.

பழைய ஏற்பாட்டில் ஆபிரகாமுக்கு மூன்று மனிதர்கள் காட்சியளித்தனர். இந்த மூன்று ஆட்களையும் மூவொரு கடவுளோடு விவிலிய அறிஞர்கள் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். புதிய ஏற்பாட்டிலே ஆண்டவர் இயேசு திருமுழுக்கு பெறும்போது தந்தை மகன் தூய ஆவியாரின் ஒன்றிப்பு அங்கு நடைபெற்றது. இயேசு தம் சீடர்களை நற்செய்திப் பணி செய்ய அனுப்பும் பொழுது "தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள் "என்று அறிவுறுத்தி அனுப்பினார். இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். திருத்தூதர் பவுல் மூவொரு கடவுளின் ஆசிரை கொரிந்தியருக்கு எழுதப்பட்ட திருமடலில் " ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக " (2கொரி: 13: 13) என்று வாழ்த்தியுள்ளார். இவ்வாறாக மூவொரு கடவுளின் முக்கியத்துவத்தை திருவிவிலியத்தில் பல சான்றுகளைக் கொண்டு காணமுடியும்.

மூன்று என்பது கிறிஸ்தவத்தில் முக்கியமான எண்ணாக கருதப்படுகின்றது. விவிலியத்தில் மூன்று என்பது முழுமையை சுட்டிக்காட்டும் எண்ணாக கருதப்படுகின்றது. கடவுள் மூன்று ஆட்களாய் இருக்கின்றார். இயேசு மூன்று முறை சோதிக்கப்பட்டார். இயேசு மூன்று முறை சோதிக்கப்பட்டதற்கு காரணம் இயேசு சோதனைகளை முழுமையாக வென்றவர் என்பதைச் சுட்டிக்காட்டவே.
இயேசுவுக்கு நெருங்கிய மூன்று சீடர்கள் இருந்தனர். இதற்கு முக்கிய காரணம் முழுமையை சுட்டிக் காட்டுவதற்காகவே ஆகும். கடவுள் தாவீதுக்கு மூன்று வாய்ப்புகளைக் கொடுத்தார். இயேசு இந்த உலக மீட்பிற்காக சிலுவையில் அறையப்பட்டு இறந்து மூன்றாம் நாள் மாட்சியோடு உயிர் பெற்று எழுந்தார். இது முழுமை நிறைந்த வெற்றியை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. இவ்வாறாக மூன்று என்ற எண் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது.

மூவொரு கடவுள் விழா நமக்கு சுட்டிக்காட்டும் செய்தி என்னவென்று சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். முதலாவதாக உண்மையான ஒற்றுமையின் அடையாளமாக இருக்கின்றனர். ஒரே கடவுள் மூன்று ஆட்களாக தங்கள் கடமைகளைச் செய்கின்றனர். மூன்று ஆட்களாக இருந்தாலும் ஒரே கடவுள் தான். ஏனெனில் அவர்கள் ஒரே திருவுளம், ஒரே இலக்கு, ஒரே மனநிலையைக் கொண்டுள்ளனர். மூவொரு கடவுளின் ஒன்றிப்பு மனநிலை ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகின்றது. குறிப்பாக குடும்ப வாழ்வில் இணைந்துள்ள கணவனும் மனைவியும் மூவொரு இறைவனின் மனநிலையை கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் இன்றைய காலச் சூழலில் குடும்பங்களில் அதிகமான பிரச்சனை இருப்பதற்குக் காரணம் மூவொரு இறைவனின் மனநிலையை கொண்டிருக்காமல் இருப்பதாகும். ஒரே சிந்தனையையும் ஒன்றிப்பையும் தங்கள் குடும்ப வாழ்வில் கொண்டிருக்கும் பொழுது அவர்களின் வாழ்வு மகிழ்வும் அன்பும் நிறைந்ததாக இருக்கும்.

இரண்டாவதாக, மூவொரு கடவுள் கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளமாக இருக்கின்றனர். ஏழு அருள்சாதனங்களும் மூவொரு கடவுளின் அருளையும் ஆசியையும் ஒன்றிப்பையும் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. திருமுழுக்கின் வழியாக மூவொரு கடவுளின் ஆசீர் கிடைக்கின்றது. இதன் வழியாக முதல் பெற்றோர் வழியாக வந்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு திருஅவையின் உறுப்பினர்களாக மாற வாய்ப்பு கிடைக்கின்றது. ஒப்புரவு அருள்சாதனத்திலும் மூவொரு கடவுளின் வழியாக மன்னிப்பு கிடைக்கின்றது.

நற்கருணையும் மூவொரு கடவுளின் ஆசியால் நம் உழைப்பின் பயனான சாதாரண அப்பத்திலிருந்தும் இரசத்திலிருந்தும் நமக்கு ஆன்ம உணவு கிடைக்கின்றது. உறுதிப்பூசுதல் அருள் சாதனத்திலும் மூவொரு கடவுளின் அருளால் தூய ஆவியின் கொடைகளும் கனிகளும் கிடைக்கின்றது. திருமணம் என்னும் அருள்சாதனத்திலும் மூவொரு கடவுளின் ஆசியால் திருமண உடன்படிக்கை நடைபெறுகின்றது .குருத்துவ அருள்பொழிவிலும் மூவொரு கடவுளின் அருள்பொழிவால் சாதாரண மனிதர் இயேசுவின் பிரதிநிதியாக அருள்பொழிவு செய்யப்படுகிறார். நோயில் பூசுதல் அருள்சாதனத்திலும் நோய்வாய்ப்பட்டிருக்கும் மனிதர் நலம் பெறுகிறார். இவ்வாறாக ஏழு அருள்சாதனத்திலும் மூவொரு கடவுளின் முக்கியத்துவத்தை காணமுடிகின்றது.

மூன்றாவதாக, மூவொரு கடவுள் உண்மையான உறவுக்குச் சான்று பகர்கின்றனர். கடவுள் மூன்று ஆட்களால் செயல்பட்டு உறவில் ஒரே உள்ளத்தால் நிறைந்திருந்தனர். நம்முடைய அன்றாட வாழ்விலும் உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். பிறருடைய துன்பத்திலும் இன்பத்திலும் பங்குகொள்ளவும் உடனிருக்கவும் முயற்சி செய்வோம். அவ்வாறு வாழ்கின்ற பொழுது நாமும் மூவொரு கடவுளின் உறவுகளாக மாறுவோம்.

இறைவேண்டல் :

மூவொரு கடவுளே! உம்மைப் போல நாங்களும் ஒற்றுமையிலும் அருளிலும் உறவிலும் ஒரே திருவுளத்திலும் இணைந்திருக்க அருளைத் தாரும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser