புனித வெள்ளி

Good friday

திருச்சிலுவை ஆராதனைக்கு தேவையானவை


கோவில் முன்புறம்: திருவுடைகள் (சிகப்பு) மூடப்பட்ட சிறிய சிலுவை, மெழுகுதிரிகள், மரமணி.
பீடத்தின் முன் பகுதியில்: பாய், தலையணை விரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
பீடம்; திருப்பலி புத்தகம் வைக்கப்பட்டிருக்கும் வாசக மேடை துணியின்றி இருக்கும்.
சிறிய மேசையில்: திருமேனித்துகில், நற்கருணைத் தட்டு, சிலுவைகள், உண்டியல், துடைக்கத்துணி, திருப்பாடுகள் வாசிக்க மூன்று புத்தகங்கள், பாத்திரம்துடைக்க சிறிய துணி, குவளையில் தண்ணீர்.
குறிப்பு: திருச்சிலுவையை முத்தி செய்த பிறகு பீடத்தின் மீது துணி விரிக்கப்படும்.
இறுதியில் பீடத்தின் துணியும், சிலுவையை மூடியிருக்கும் துணியும் அகற்றப்படும்.

முன்னுரை:

தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு யாரிடமும் இல்லை என்று அன்புக்கு இலக்கணம் வகுத்த இயேசு, இதோ இன்று தன்னுயிரை நமது பாவங்களுக்கு கழுவாயாகக் கொடுத்து நாம் மீட்புப் பெற அழைப்பு விடுக்கின்றார். அன்பின் உச்சகட்டமே தன் உயிரைக் கொடுப்பதுதான் என்று வார்த்தைகளால் மட்டுமல்ல மாறாக வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி அவமானத்தின் சின்னமாக கருதப்பட்ட சிலுவையை, தம்முடைய தியாகப் பலியாக, மீட்பின் சின்னமாக மாற்றுகிறார். ஆம் இன்று திருபாடுகளின் புனித வெள்ளி.

பழைய ஏற்பாட்டில் பாலைவனத்தில் யாவே இறைவனுக்கு எதிராகப் பாவம் செய்து பாம்பின் கடியினால் இறந்தவர்கள், உயர்த்தப்பட்ட வெண்கலப் பாம்பை பார்த்து உயிர்பிழைத்தார்கள். அந்த முன் அடையாளத்தன்படி விண்ணிற்கும் மண்ணிற்கும் இடையில் சிலுவையில் பலியான செம்மறியாக உயர்த்தப்ட்டிருக்கிற இயேசுவைப் பார்த்து நாமும் மீட்பு பெற வரம் வேண்டி இன்றைய நாளிலே மன்றாடுவோம். இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் ஆழமாக சிந்தித்தவர்களாக வழிபாட்டிலே பக்தியோடு பங்கேற்போம்.

இன்றைய வழிபாடானது நான்கு பிரிவுகளை உடையதாக அமைந்துள்ளது
1. இறைவார்த்தை வழிபாடு
2. பொது மன்றாட்டுக்கள்
3. திருச்சிலுவை ஆராதனை
4. நற்கருணை விருந்து

குருவானவர் முகம் குப்புற விழுந்து செபிக்கும்போது:

இதோ குருவானவர் இயேசுவின் பாடுகளை நினைவுபடுத்தி செந்நிற உடை அணிந்து முகம் குப்புற விழுந்து நம் அனைவரோடும் சேர்ந்து செபிக்கிறார். இந்த நிகழ்வு கிறிஸ்துவின் மரணத்தால் வந்த துயரத்தையும், அவருக்கு முன்னால் நமது தகுதியில்லாத தன்மையையும் காட்டுகிறது. அதோடு நாம் அனைவரும் அவரைச் சார்ந்து வாழுகிறோம் என்பதையும் காட்டுகிறது. நாமும் மன்டியிட்டு அமைதியாக குருவோடு செபிப்போம்.

எழுந்தவுடன்:

இப்போது குரு இயேசுவின் பாடுகளால் கிடைத்த மீட்பின் பலனை நமக்கு கொடையாக கொடுத்தருளுமாறு தந்தையாம் இறைவனிடம் செபிப்பார். அனைவரும் எழுந்து நின்று செபிப்போம்.

1. இறைவாக்கு வழிபாடு

முதல்வாசக முன்னுரை

இயேசு கிறிஸ்து துன்புறும் ஊழியர் என்பதையும், அவர் வரும்போது எவ்வாறு பாடுபடப் போகிறார், துன்பங்களை ஏறகப்போகிறார், இவ்வுலகத்தை மீட்க கையளிக்கப் போகிறார் என்பதை இறைஏவுதலால் முன்னறிவிக்கிறார் எசாயா இறைவாக்கினர். எனவே வாசகத்தை கவனமுடன் கேட்போம்.

முதல்வாசகம்:

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52: 13- 53: 12

இதோ, என் ஊழியர் சிறப்படைவார்; அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார். அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்; அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது; மானிடரின் உருவமே அவருக்கு இல்லை. அவ்வாறே, அவர் பல பிற இனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்; அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்; ஏனெனில் தங்களுக்குச் சொல்லப்படாததை அவர்கள் காண்பர்; தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்துகொள்வர். நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?

இளந்தளிர்போலும் வறண்ட நில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்; நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை; நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை. அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; வேதனையுற்ற மனிதராய் இருந்தார்; நோயுற்று நலிந்தார்; காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்; அவர் இழிவுபடுத்தப்பட்டார்; அவரை நாம் மதிக்கவில்லை. மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்; நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம்.

அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். ஆடுகளைப்போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்; நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்; ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார். அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.

அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்; அவருக்கு நேர்ந்ததைப்பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில், வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார்; என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார். வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை; ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்; செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார்.

அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்; நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்; அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்துகொள்வார்.

ஆதலால், நான் அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்; அவரும் வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்; ஏனெனில், அவர் தம்மையே சாவுக்குக் கையளித்தார்; கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்; ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோருக்காகப் பரிந்து பேசினார்.

பதிலுரைப் பாடல்

திபா 31: 1,5. 11-12. 14-15. 16,24

பல்லவி: ‟தந்தையே உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.”

ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்; உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும். உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளினீர். - பல்லவி

என் பகைவர் அனைவரின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்; என்னை அடுத்திருப்போரின் பேரிழிவுக்கு ஆளானேன்; என் நண்பர்களுக்குப் பேரச்சம் வருவித்தேன்; என்னைத் தெருவில் பார்ப்போர் என்னிடமிருந்து விலகி ஓடுகின்றனர். இறந்தோர்போல் நினைவினின்று நான் அகற்றப்பட்டேன்; உடைந்துபோன மட்கலம்போல் ஆனேன். பல்லவி

ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; ‘நீரே என் கடவுள்’ என்று சொன்னேன். என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். - பல்லவி

ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; ‘நீரே என் கடவுள்’ என்று சொன்னேன். என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இயேசு கிறிஸ்து குருக்களிலெல்லாம் சிறந்த நித்திய தலைமைக்குரு. இயேசு கிறிஸ்து மற்ற குருக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். அதோடு பழைய ஏற்பாட்டின் பலிப்பொருளுக்கும், புதிய ஏற்பாட்டின் செம்மறி பலியாகிய கிறிஸ்துவுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை இப்போது வாசிக்க கேட்போம்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 14-16; 5: 7-9

வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும், அருள்நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார். அவர் இறைமகனாய் இருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

நற்செய்திக்கு முன் வசனம்

கிறிஸ்து சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

நற்செய்தி வாசகம் (யோவான் 18:1 - 19:42)

(மறையுரை)

2. பொதுமன்றாட்டுக்கள்:

அன்பார்ந்தவர்களே உலகின் தேவைகளுக்காகவும் திருச்சபையின் தேவைகளுக்காகவும், இயேசு தன்னை பலியாக்கிய இந்த நாளில் உருக்கத்தோடு மன்றாடுவோம். இப்போது குருவானவர் மன்றாட்டை வாசிக்கும்போது நின்றுகொண்டே ஒவ்வொரு மன்றாட்டுக்குப் பிறகும் ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் என்று சொல்லவும், பிறகு குருவானவர் செபிப்பார். அப்போது அனைவரும் மண்டியிட வேண்டும் செபித்து முடித்தவுடன் ஆமென் என்று பதில் கூறவும்.

3. திருச்சிலுவை ஆராதனை

இப்போது திருச்சிலுவை ஆராதனை ஆரம்பமாகிறது. இயேசு கிறிஸ்துவின் தியாக பலியால் சிலுவை வெற்றியின் சின்னமாக, மீட்பின் சின்னமாக, தியாகத்தின் சின்னமாக மாறியது.

சுமார் 4ம் நூற்றாண்டில் இயேசுவின் பாடுபட்ட சிலுவைக் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து திருச்சிலுவைக்கு ஆராதனை செய்து, முத்தி செய்யும் பழக்கம் உருவானது. அதன் அடிப்படையில் குருவானவர் மூடப்பட்டிருக்கும் திருச்சிலுவையை பீடத்தை நோக்கி பவனியாக கொண்டுவருவார். திருச்சிலுவை , பீடத்தை அடைந்தவுடன் குருவானவர் மூடப்பட்டிருக்கும் சிலுவையை சிறிது சிறிதாக அகற்றி திருச்சிலுவை மரமிதோ என்ற வரிகளை பாட நாம் அனைவரும் வருவீர் ஆராதிப்போம் என பாடுவோம். (இவ்வாறு மூன்று முறை பாடப்படும்). பிறகு முதலில் குருவானவர் முத்தி செய்வார் பிறகு அனைவரும் பக்தியோடு, வரிசையாக அமைதியாக வந்து முத்தி செய்வோம்.

4. நற்கருணை விருந்து

இப்போது பீடத்தின் மீது துணி விரிக்கப்படும், திருமேனித்துகிலும் திருப்பலிப் புத்தகமும் வைக்கப்படும், பின் குருவானவர் புனிதமிகு நற்கருணையை புது பீடத்திலிருந்து தலைமை பீடத்திற்கு கொண்டு வருவார். நாம் பக்தியோடு நமது வணக்கத்தைச் செலுத்தவோம். பின் இயேசு கற்றுக் கொடுத்த செபத்தை சொல்லிய பிறகு, நற்கருணை விருந்தில் பங்கெடுப்போம். நற்கருணை விருந்து முடிந்தபின் பீடத்தின் மீது விரிக்கப்பட்ட துணி மற்றப்பொருட்களும் அகற்றப்பட்டு வெறுமையாகப்படும்.

Good friday

இறுதியில்

கல்வாரிப் பலியும், சிலுவையும், இறை வல்லமையான அருளும், ஆசீரும் பொங்கி வருகின்ற சக்தியின் இருப்பிடம். எனவே ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் தியானித்து அருள் வாழ்விற்காய் உயிர்க்க வேண்டும். மேலும் நமக்கு மீட்பைக் கொணர்ந்த வெற்றியின் சின்னமாகிய சிலுவையையும், அதில் பலியான நம் மீட்பர் இயேசுவையும் தியானித்த வண்ணம் அமைதியாக வீடு செல்வோம்.


 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்