அருள்வாக்கு இன்று

ஜூலை 22-திங்கள்

இன்றைய நற்செய்தி

யோவான் 20.1,11-18

இன்றைய புனிதர்


புனித மகதலா மரியா

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

புனித மகதலா மரியா
அருள்மொழி:

மகதலா மரியா சீடரிடம் சென்று நான் ஆண்டவரைக் கண்டேன் என்றார். தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார். யோவான் 20.18

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் மகதலா மரியா இயேசுவைக் கண்டேன் என்று உண்மைக்குச் சான்று பகர்கின்றார். இன்று மகதலா மரியாவின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். அவர் இயேசுவோடு கொண்டிருந்த நட்பு மகத்தானது. உயர்வானது. தன் வாழ்க்கையில் தடம் புரண்டுப் போன மக்களுக்கு இவர்களது உறவு ஒரு பாடமாக அமையும். இயேசுவின் பாதங்களைப் பரிமளத் தைலத்தால் பூசித் தன் பாவங்களை உணர்ந்துப் பாவ மன்னிப்புப் பெற்றவர். எப்படிபட்டவர்களாக இருந்தாலும், மனம் வருந்தித் திருந்தி மீண்டும் பாவக் குழியில் விழமாட்டேன் என்று உறுதியோடு வாழ்பவருக்கு மகதலா மரியா ஒரு சான்றாக அமைகின்றார். அத்தகைய மகதலாவுக்குத் தான் ஆண்டவரின் உயிர்த்தக் காட்சி முதலாக அமைந்தது. எனவே அன்பார்ந்தவர்களே! நாமும் வாழ்க்கையில் தடம் புரண்டாலும் செய்தப் பாவங்களுக்காக உண்மையான மனஸ்தாபம் பெறுவோமாகில் நாமும் இந்த மகதலா மரியா போல் இயேசுவின் சாட்சி ஆவோம்.

சுயஆய்வு

  1. நான் தவறு செய்யும்போது என் நிலையை உணர்கின்றேனா?
  2. அப்படி உணர்ந்து மனமுருகி மன்னிப்புக் கோருகின்றேனா?

இறைவேண்டல்

இறை வேண்டல்: அன்பு இயேசுவே! என்னில் வாரும். உம்மைக் காணும் பேற்றினை அருளி என்னை வழி நடத்தும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு