திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

11.12.2022 திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு

மேன்மையைக் கைக்கொள்ளுதல்

அருள்மொழி:

"மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரேயென நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" (மத்தேயு 11:11)

வார்த்தை வாழ்வாக:

நமது ஆண்டவர் இயேசு மொழிந்த மேற்கண்ட சொற்கள் நம்மைக் குறித்து அவர் கூறியதாக நாம் கற்பணை செய்து பார்க்கலாமா? ஆனால், உண்மையிலேயே இந்தச் சொற்களை அவர் நம்மைப் பார்த்துத் தான் கூறுகிறார். கிறிஸ்துவின் அருளில் பங்குபெற்று, மாட்சிமிகு அவருடைய இறையரசில் ஒரு உறுப்பினராக நாம் நிலைத்திடும்போது, நாமும் “விண்ணரசில் மிகச் சிறியவர்”களில் ஒருவராக இருக்கிறோம். இந்தவொரு திருநிலை, இறையருளால் நமக்குக் கிடைக்கவிருக்கின்ற பெரியதொரு மகத்துவம். இதனை நாம் புரிந்துகொண்டு, அதற்காக மகிழ்ச்சியடைய வேண்டும்.

திருமுழுக்கு யோவான் வாழ்ந்த காலத்தில், விண்ணகத்தின் கதவுகள் பாவத்தில் வீழ்ந்திருந்த மனித குலத்திற்கு இன்னும் திறக்கப்படாமலேயே இருந்தன. இயேசு தன் உயிரைப் பலியாகத் தந்து இறந்து, மூன்றாம் நாள் உயித்தெழுந்து, வானகம் சென்றபிறகு தான், தூயஆவியாரால் திருஅவை அர்ச்சிக்கப்பட்டு, விண்ணரசின் மாட்சியில் நாமெல்லாம் பங்கேற்பதற்கான அழைப்பைப் பெறுகின்ற வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், இன்று பாவநிலையில்லாத அருளோடு நாம் இறப்போமானல், விண்ணகத்தில் நுழைவதற்கான அழைப்பு நமக்குக் கொடுக்கப்படுகிறது. மேலும், இவ்வுலக வாழ்க்கைப் பயணத்தின் போதே விண்ணரசின் மாட்சியில் பங்கேற்பதற்கான அழைப்பும் நமக்குக் கிடைக்கிறது. இவ்வாறூ, இரண்டு வகையான இறைஆசீரை நமது வாழ்நாளிலேயே அடையும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம்.

மேற்கண்டவாறு நமது ஆண்டவர் சொல்லும்போது, ஒரு செய்தியைத் தெளிவாக்குகிறார்: கடவுளை நேருக்கு நேராகத் தரிசித்துக் கொண்டு, விண்ணகத்தின் நிறைவாழ்வை சுவைத்து கொண்டிருப்போர் எல்லாரும் மேன்மை அடைந்தவர்களே. ஆயினும், கடவுளோடு அண்மித்திருந்து மேன்மை நிலையைச் சுவைக்கும் அனுபவத்தை இவ்வுலகில் நாம் வாழ்கின்ற நாள்களிலேயே ஆரம்பிக்க முடியும்.

பல நேரங்களில் அர்த்தமற்றக் காரியங்களில் நமது அடையாளத்தை வெளிப்படுத்த முயலுகிறோம். நமது தனிப்பட்ட, சுயநல சாதனைகள், திறமைகள், தோற்றம், பொருளாதார நிலை ஆகியவற்றில் நாம் மேன்மை அடைவதை நாடுகிறோம். ஆனால், இவற்றில் எதுவுமே உண்மையான மேன்மைநிலைக்கு நம்மைக் கூட்டிச் செல்வதில்லை. கிறிஸ்துவின் மறையுடலாம் திருஅவையின் உறுப்பினராகவும், அதன் விளைவாக இறையரசின் உறுப்பினராகவும் நாம் இருக்கும்போது மேன்மைநிலையைக் கண்டுணர முடியும்.

இன்று நல்லதொரு எடுத்துகாட்டாகப் புனித திருமுழுக்கு யோவான் நம் முன்னே நிறுத்தப்படுகிறார். அவருடைய வாழ்க்கையை சிந்திக்கின்றபோது, அவருடைய போதனைகளையும் நாம் சிந்திக்க வேண்டும். யோவானுடைய போதனையின் மையக் கருத்து இருவகைப்படும். ஒன்று, ஒவ்வொருவரும் தத்தம் பாவங்களுக்காக வருத்தப்பட்டு மனமாற்றம் அடைய அழைப்பு விடுக்கிறார். திருமுழுக்கு யோவான் போதித்த நாள்களில் இந்தச் செய்தி மக்களின் மனங்களில் மாற்றத்தை உண்டாக்கும் விதமாக எந்த அளவுக்கு ஓங்கி ஒலித்ததோ, அதே அளவுக்கு இன்றும் நமது மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால், இயேசுவை நமக்குச் சுட்டிக் காட்டுவதே அவருடைய முக்கியமான இரண்டாவது செய்தியாகும். இயேசுவை உலகிறகு அடையாளம் காட்டுவதே திருமுழுக்கு யோவான் வாழ்க்கையின் முதலும் முடிவுமான நோக்கம். தன்னைப் பின்தொடர்ந்த சீடர்களுக்கு இயேசுவை அடையாளம் காட்டுவதோடு யோவனின் போதனை முற்றுபெறுகிறது.

சிந்தனை:

திருமுழுக்கு யோவான் இன்றைக்கும் தொடர்ந்து தனது செய்தியை நமக்குத் தருகிறார் என்பதை இன்று நமது சிந்தனைக்குக் கொண்டு வருவோம். மாட்சிமிக்க காலமாகிய கிறிஸ்து பிறப்பு விழா நாள்களை அணுகிக் கொண்டிருக்கின்ற வேளையில், மனஉளைச்சல் என்னும் போராட்டத்தில் நம்மை உள்ளாக்குகின்ற பாவநிலைகளைத் தவிர்ப்பதைக் குறித்து பரிசீலனை செய்வோம். பணிவோடும், நேர்மையோடும் அவற்றை ஏற்றுக்கொண்டு, இரக்கத்திற்கும், மன்னிப்பிற்கும் ஊற்றாகிய இயேசுவிடம் நம் கண்களைத் திருப்புவோம். கடவுளின் மகனாக, மகளாக மாறி மேன்மைநிலை அடைவதற்கு இயேசு விடுக்கின்ற அழைப்பிற்கு செவிமடுப்போம்.

இறைவேண்டல்:

மாட்சிமை மிகுந்த மன்னரே! எங்களுக்கு மனமாற்றத்தை போதிக்கவும், எங்களை உம்மை நோக்கி அழைத்துக் கொள்ளவும் புனித திருமுழுக்கு யோவானை எம்மிடம் அனுப்பிவைத்தீர். ஆண்டவரே, யோவானின் செய்தியைக் கேட்டு உள்வாங்கிட எனது உள்ளத்தையும், இதயத்தையும் திறந்தருளும். நாங்கள் அழைக்கப்பட்டிருக்கின்ற மேன்மையான நிறைவாழ்வில் பங்கேற்கும் வண்ணம் அவருடைய வார்த்தைகளுக்கு நாங்கள் செவிமடுக்க உதவி செய்தருளும். இயேசுவே, உம்மிடம் நம்பிக்கை வைக்கிறேன்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி