செபம் செய்வோமா?

09 பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக


  • நம்மில் பலர் தமது சுய உருவத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. எதற்கெடுத்தாலும் விளக்கம் கூறும் கூட்டத்தினர் உண்டு. தவறு செய்வதை நியாயப்படுத்துபவர்களும் உண்டு.
  • மனிதர் என்ற முறையில் நம் எல்லோரிடமும் பலவீனங்கள் உண்டு. கோபப்படுவது ஒருவரது பலவீனமாக இருக்கலாம். பொய் பேசுவது இன்னொருவரது பலவீனமாக இருக்கலாம். பலவீனர்கள் என்ற முறையிலே நாம் எல்லாருமே பாவிகள். பாவிகள் மனம் திரும்ப வேண்டும்.
  • மனம் திரும்ப வேண்டுமென்றால் நான் பாவி என்ற உணர்வு வர வேண்டும். இன்று இந்த உணர்வு மறைந்து கொண்டே வருகிறது. எனவே தான் யாரும் தனது குற்றங்களை, பலவீனங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஆனால் ஏற்றுக்கொள்ளும்போது கற்றுக் கொள்கிறோம்.
  • "பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக" என்று வேண்டுவது கட்டாயத்தினாலோ அல்லது கடமைக்காகவோ சொல்வதாகி விட்டால் பலனில்லை. மாறாக, வாழ்க்கையின் அனுபவமாக வேண்டும்.
  • நாம் எல்லோரும் பாவிகள்

    நாம் ஒவ்வொருவரும் இருவிதங்களில் பாவிகள்.

  • ஒன்று, செய்த செயல்பாடுகளினால் விளைந்த குற்றங்களால் பாவிகள், கெட்ட நடத்தை, பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு அழுக்காறு. (கலா 5:19-21) போன்ற ஊனியல்பின் செயல்பாடுகள் அனைத்தும் நாம் செய்யும் குற்றங்கள்.
  • மற்றொன்று, நாம் செய்யத் தவறிய நல்ல செயல்பாடுகளின் விளைவாகவும் குற்றம் புரிகிறோம். உதாரணமாக, ஏழை இலாசர் - செல்வந்தர் உவமையைக் கூறலாம்.
  • குழந்தைகளே!

    நம் வார்த்தைகளால் செயல்களால் செய்யும் தவறுகளை நினைத்துப் பார்ப்போம்.

    • பெற்றோர் பெரியோர்களை மதிக்காமை, அவர்களுக்கு கீழ்ப்படியாமை...
    • வகுப்புத் தோழர்களைத் தேவையற்ற விதத்தில் விமர்சித்தல், கேலி செய்தல்...
    • கெட்ட வார்த்தைகளால் திட்டுதல், பொய் பேசுதல், திருடுதல்...
    • கடமைகளை சரிவர நிறைவேற்றாமல் சோம்பேறியாக இருத்தல்...
    • பள்ளிக் கூட பாடங்களை ஒழுங்காகக் கற்றுக் கொள்ளாதிருத்தல்...
    • தேர்வுகளில் காப்பியடித்தல்...
    • நேரத்தை நன்கு பயன்படுத்தாமை...

    இதுபோன்ற பிற தவறுகளையும் பட்டியலிட்டுத் திருத்திக் கொள்வது அவசியம்.

    நல்லது செய்யத் தவறுவதும் பாவமே!

    • பார்வையற்ற முதியவர் பாதையைக் கடக்க முடியாமல் திணறும் வேளையில் கண்டும் காணாமல் சென்று விடாது.
    • வகுப்புத் தோழன் அல்லது தோழிக்கு குறிப்பிட்ட பாடம் நன்கு புரியாத போது அவற்றை விளக்கிச் சொல்லிக் கொடுக்க நேரம் ஒதுக்காதது.
    • வீட்டில், அண்டை வீட்டிலுள்ள முதியவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்து கொடுக்கத் தவறுவது.
    • ஆலயத்திற்கு வருவதற்கு ஏற்ற சூழல்கள் இருப்பினும் வழிபாடுகளில் பங்கெடுக்காமல் இருப்பது.
    • வீட்டில் தனி செபம், குடும்ப செபம் செய்யத் தவறுவது.

    குழந்தைகளே! கற்க! நிற்க!

    பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக என்று வேண்டுகிறபோது பின்வருவனவற்றை நாம் நினைவில் கொண்டு மாற்றம் பெறுவோம்.

    • நாம் எல்லாருமே பாவிகள், பாவிகள் மனம் மாற வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம், கடவுளின் இந்த விருப்பத்தைச் செயல்படுத்த நமக்குத் தேவை இறையருள். இறையருளைப் பெற்றுத் தருகின்ற ஊடகமாகச் செயல்படுபவர் நம் அன்னை.
    • நாம் செய்த தவறுகளையும், செய்யத் தவறிய நல்ல செயல்பாடுகளையும் நினைத்து மனம் வருந்த வேண்டும். மனம் வருந்துதலின் அடையாளமாக ஒப்புரவு அருட்சாதனத்திலே தக்க தயாரிப்போடு பங்கெடுக்க வேண்டும்.
    • இறைவனின் மன்னிப்பைப் பெற்ற அனுபவத்தோடு புதுவாழ்வைத் தொடர வேண்டும். நல்ல பழக்கவழக்கங்களை நாளும் பின்பற்ற வேண்டும்.