விண்ணப்பம் செய்தான் விண்ணகம் கண்டான்.
வாழ்க்கையை இரு முரண்களின் மோதல்களாக காணும் காட்சியை உலகியலில் காணலாம். விவிலிய பார்வையிலும் இருமுரண்களின் மோதல் உள்ளது. வாழ்க்கை நன்மை தீமைப் போரட்டமாகவே சித்தரிக்கின்றது. விவிலியம் தந்தையின் அன்பும் யூதர்களின் பொறாமையும் இயேசுவை மையப்படுத்தி போராடுகின்றன. மானுடமனஅரங்கில் கிளர்ந்தெழும் அரக்கதனத்துக்கும் தெய்வ கத்துக்கும் நிகழும் போராட்டம் அது. நிறைவில் மனிதம் பெறும் மீட்பு. தீமையின் அழிவுக்கு ஏற்படும் நன்மையின் நடம் அதாவது அன்பை சிலுவையில் அறையப்படும் பொழுது அவலம் சுரக்கிறது. இயேசுவின் வாழ்க்கையினை உன்னில் வடித்தெடுக்கும் போது உன் ஆன்ம நலத்திற்கு கல்வாரி நிச்சயம் உண்டு. பாவத்தின் அழிவிற்கும் இயேசுவின் மீட்பிற்கும் கல்வாரியின் திண்மை மிக முக்கியம்.
கல்வாரியிலே ஒரு காட்சி.
இயேசுவின் வலது பக்கத்திலே அறையப் படிருக்கும ஒரு கள்ளன். இவன் கதை
ஆச்சரியமானது. பலப்பல பரிமாணங்ளை தாங்கியது. மானிட தர்மத்தின் சரியான
இலக்கணம் என்ன என்பதை இவன் கதை நமக்கு உணர்த்துகிறது. கள்ளனின்
வாழ்வும் - அவன் பெற்ற தாழ்வும் - இறுதியில் மீள்வும் - அந்த மீள்வு கொடுத்த
விண்ணக மாண்பும் நினைத்தாலே ஆச்சரியம்.
அவன் தீயவன்.
பரபாஸ் போன்ற தீயசக்திகளுல் ஒன்றாக கருதப்பட்டு சிலுவை மரணத்தை
பெற்றவன்.
விவிலியப் பாத்திரங்களில் இயேசுவோடு பழகிய சீடர்கள், பெண்கள்
அனைவரையும் விட மிக அருகில் சிலுவையில் ஆறுமணிநேரம் அந்த பரமனோடு
வாழ்ந்தவன்
இவன் கதை விவிலியத்தில் மிகச்சிறியதாகப் பேசப்படுகிறது.
லூக்காஸ் தனது நற்செய்தியில் ஜந்து வசனங்களில் வடிக்கப்பட்ட சித்திரம் இவன்.
முதலில் வருபவனுக்கு மட்டுமே முக்தி எனும் முன்னுரிமை தரும் கடவுள்
கொள்கை இருப்பதாக முன்னுதாரணம் எதையும் நாம் அறிந்ததில்லை
கடை நிலையில் வாழ்ந்தவன்
பித்தளை தகடு ஒன்று பத்தரைமாற்று தங்கமாகின்ற நிகழ்வு
விவிலியம் மிகச்சிறந்த இறை இயலை கூறுகின்றது.
“‘நீ மெசியா அல்லவா ’ உன்னையும் எங்களையும் காப்பாற்று ” என்று ஒரு கள்ளன்
இயேசுவை பழிக்கின்ற பொழுது அதற்கு பதிலாக நல்ல கள்ளன் “கடவுள் மட்டில்
உனக்கு அச்சமே இல்லையா? ” என்கின்ற பொழுது தான் நாம் அவனை
பார்க்கின்றோம். தீயவனாக விலங்காக வாழ்ந்து மரணதண்டனை பெற்றவன்.
இப்பொழுது இயேசுவுக்காகப் பேசுகின்றான்.
கள்ளனின் அகமனதில் தூயஅறிவும் ஞானமும் தோன்றுகின்றன.
அருகில் இருப்பவர் சாதாரணமனிதன் அல்லன் கூறுகிறது அகமனம்.
புறமனத்தினால் பார்த்த கள்ளன் இயேசுவை ஏசுவது உண்மைதான்.
ஏசும்பொழுது அவன் அகமனம் விழிப்படையச் செய்கிறது.
அவ்விழிப்பு ஏற்பட்டவுடன் அவன் காணும் காட்சி முற்றிலும் மாறுப்பட்டதாக
அமைந்துவிடுகிறது.
அவன் வார்த்தையை கேட்போமா “கடவுள் மட்டில் உனக்கு அச்சம் இல்லையா? ”
கடவுளுக்கு பயப்படுவதே ஞானத்தின் முதல்படி.
கடவுளுக்கு பயப்படவேண்டும் என்ற ஞானத்தின் முதல்படியில் கால்
வைக்கின்றான்
எப்படி எங்கே அவன் மனமாற்றம் பெறுகிறன்? இவனே கூறுவான் “இவரோ ஒரு
குற்றமும் செய்யவில்லை ” என்று இயேசுவை குற்றமற்றவர் எனறு பிலாத்து
அறிந்திருந்தான் அவன் மனைவி அறிந்திருந்தாள் இப்பொழுது இந்த கள்ளனும்
உரைக்கின்றான்.
இயேசு தன்னை துன்புறுத்துவோர்க்காக மன்னிக்க மன்றாடுவதை இவன் தான்
வெகு அருகில் கேட்டிருப்பான்.
கள்ளன் கேட்டது - இயேசுவின் குரலை.
அவன் கண்டது - அவரின் திரு மேனியையும் சிலுவையில் உள்ள வாசகமும்.
அவனுக்கு தன் குற்றம் தெரிகிறது. நாம் தண்டிக்கப்படுவது இயற்கையே ஏனெனில்
நம் செயல்களுக்ககு தக்க பலனைப்பெறுகிறோம். குற்றவாளியே தன் குற்றங்ளை
ஒப்புக்கொள்கிறான் அந்த வாக்குமூலத்தை லுக்காஸ் விவிலியத்தில் பதிவு
செய்கிறார்.
இயேசுவின் மீது அவனையும் அறியாமல் ஏற்பட்ட பக்தி எனும் கண்கொண்டு
தொலைநோக்கு பார்வையாலேயே சிலுவையில் இறக்கின்ற இயேசுவை சரியாக
மதிப்பீடு செய்கின்றான்.
அவன் மனம் உருகுகிறது.
விலங்கு நிலையில் வாழ்ந்தவன் இயேசுவினால் மனமாற்றம் பெற்று மனிதநிலையில்
உயருகின்றான் சரணாகதி அவனிடம் தொடங்குகிறது. இயேசுவிடம் அளவற்ற
மதிப்பு அவனுக்கு இருந்தது யூதர்களின் அரசன் என்று நினைக்கிறான் தனக்கு
வந்த மரணத்தை அவன் பொருட்படுத்தவில்லை. இயேசு இறந்து விடுவார்
என்பதையும் அவன் அறிவான் இருப்பினும் அதையும் பொருட்படுத்தவில்லை.
அவர் அரசுரிமையோடு வரும்பொழுது வலமோ இடமோ முக்கிய பதவியோ
கேட்கவில்லை.
இருவருமே இறக்க போகிறார்கள்.
அப்படி இருந்தும் கள்ளனால் எப்படி ‘நினைவில் வையும்’ என்கின்றான்?.
நம்பிக்கை - முழுமையான நம்பிக்கை.
அந்த நம்பிக்கை பொய்த்துபோகாமல் ‘நினைவில் வையும் ‘ என்று
விண்ணப்பிக்கின்றான். வீடுபேற்றை அருளும் பரிசாக இன்றே என்னுடன்
பரகதியிருப்பாய் என்கின்றார் இயேசு.
அற்புதமான வார்த்தைகள் ……… “இன்றே ” என்பதோடு …….. “என்னுடனே ”
என்ற இயேசுவோடு வாழ்கின்ற நிலையை காண்கின்றோம்.
விண்ணப்பம் செய்தான் விண்ணகம் கண்டான்.
விலங்கு மனம் மனிதமனதாக மாறுகிறது.
பின் இந்த பரம்பொருளை அறிந்து கொள்ளும்பொழுது இறைவனோடு ஓப்புரவு
ஆகிறது.
மானுடம் வென்றது –
இறைவன் மீது வைத்த நம்பிக்கையால்.
ஒவ்வொரு வினையும் எதிர்வினை கொண்டதாகிறது
ஒவ்வொரு காரணமும் ஒரு காரியத்தில் விழைகிறது.
ஒவ்வொரு வருந்துதலும் மீட்புக்கு கதவு திறக்கிறது.
விவிலியத்தில் எத்துனை விதமான மனிதர்களை சந்திக்கின்றோம்.
பேதுருவோடு சேர்ந்து மறுதலிக்கிறோம். பின்பு மனம் திருந்துகிறோம்.
யூதர்களோடு கோபமடைகிறோம்..
.மரியாளோடு துன்பம் அடைகிறோம்.
தீய கள்ளனோடு ஏளனம் செய்கிறோம்.
நல்லகள்ளனோடு மனம் திரும்புகிறோம்.
எத்தனை எத்தனை பண்புகளோடு ஒட்டி நிற்கிறோம்.
எத்தனை எத்தனை அனுபவங்களை பெறுகிறோம்.
விவிலியம் வாசிக்கும் பொழுது உணர்ச்சி விசாலமும் அனுபவ அழுத்தமும்
நன்மை தீமை தெளிவும் பெற்று வாழும் மனிதர்களாக மாறுகிறோம்.
உண்மையாக அன்பாக வாழவும் சக்தி பெற்றுவிடுகிறோம்.
வாழ்க்கையின் உயரங்களுக்கும் ஆழங்களுக்கும் அழைத்துச்சென்று அனுபவ
செழுமை வழங்குமிடம் கல்வாரி.
நம்பிக்கை ஆண்டில் அங்கே நிற்கும் சிலுவையை சிந்தனை கொள்வோம்.
இதற்கு அடித்தளம் நம்பிக்கைதான்.
இந்த நம்பிக்கை வீடுபேற்றை அருளும் பரிசு என்னும் இறையியல்
தத்துவத்தைதான் கல்வாரியில் நிற்கும் கள்ளனின் வழியாக விவிலியம்
உணர்த்திவிடுகிறது.
பாரதிதாசன் வரிகள் நினைவிற்கு வருகின்றது.
"வானும் வசப்படவைக்கும் - இதில்
வைத்திடும் நம்பிக்கை வாழ்வை பெருக்கும்........... "
அ. அல்போன்ஸ் - பெங்களுர்