திருச்சிலுவையின் மகிமை

அருள்பணி ஏசு கருணாநிதி- இனி எல்லாம் சுகமே!

holy cross

இன்று நாம் அருவருப்பான ஒன்றைப் பார்த்தால் 'ஹாரிப்ல்' என்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உரோமையர்கள் 'எக்ஸ் க்ருசே' ('சிலுவையிலிருந்து') என்பார்கள். மனிதர்கள் பார்வையில் அருவருப்பான ஒன்றை இன்று நாம் மகிமையின் சின்னமாகக் கொண்டாடுகிறோம்.
சிலுவை நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. எங்கு பார்த்தாலும் சிலுவை நம் கண்முன் நிற்கிறது.
கணிதத்தில் க்ராஸ் என்பது கூட்டல் அல்லது பெருக்கல்
அல்ஜிப்ராவில் க்ராஸ் என்பது வெறுமை.
டிராஃபிக்கில் க்ராஸ் என்றால் ஆம்புலன்ஸ்.
பேட்டரியிலும், இரத்த வகையிலும் க்ராஸ் என்பது பாஸிட்டிவ்.
அடையாளங்களில் க்ராஸ் என்றால் 'தடை செய்யப்பட்டது'
ஏ பி சி டி இயில் க்ராஸ் என்றால் எக்ஸ்
சாலைகளில் க்ராஸ் என்றால் சந்திப்பு
உரோமை எழுத்தில் க்ராஸ் என்றால் பத்து
விடைத்தாளில் க்ராஸ் என்றால் தவறு
ஏடிஎம் பின்னை பதிவு செய்யும் போது க்ராஸ் என்றால் சீக்ரெட்
இப்படி திரும்பும் எல்லாப் பக்கமும் தெரியும் க்ராஸ் நமக்குச் சொல்வது என்ன?
'சிலுவை' என்றால் என்னைப் பொறுத்தவரையில் 'வாழ்வின் அடுத்த பக்கம்.'
இளமையிலிருந்து பார்க்கும் அதன் அடுத்த பக்கம் முதுமை சிலுவை.
பிறப்பின் சிலுவை இறப்பு.
விருப்பின் சிலுவை வெறுப்பு.
உடல்நலத்தின் சிலுவை நோய்.
நாம் ஒன்றை எடுக்கும்போதே அதன் அடுத்த பக்கமும் வருகிறதே. அந்த அடுத்த பக்கம்தான் சிலுவை. ஒரு புத்தகத்தின் முதல் பக்கத்தை திறக்கும் நாம் அதன் கடைசி பக்கத்தில் அதை மூடித்தான் வைக்க வேண்டும். திரைப்படத்தின் தொடக்கத்தைப் பார்க்கும் நாம் அதன் முடிவையும் வாசிக்க வேண்டும். ஒன்றைத் தொடங்கும்போது அதன் முடிவும் நம் முன் வந்துவிடுகிறது. அந்த அடுத்த பக்கம்தான் சிலுவை.
சிலுவை என்றால் நம் நொறுங்குநிலை.
சிலுவை என்றால் நம் உறுதியில்லாத நிலை.
சிலுவை என்றால் நம் உடையும்நிலை.
சிலுவையை நோக்கிய நம் பார்வையை மூன்று நிலைகளில் விவிலியம் பதிவு செய்கிறது:
அ. 'இந்தச் சிலுவை உமக்கு வேண்டாம்' என இயேசுவிடம் சொல்கிறார் பேதுரு.
சில நேரங்களில் நாமும் சிலுவை வேண்டாம் என நினைக்கிறோம். ஆனால் இது எதார்த்தம் அல்ல.
ஆ. 'இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கும்' என்கின்றனர் வழிப்போக்கர்கள்.
இந்நிலையில் நாம் சிலுவையிலிருந்து பாதியிலிருந்து ஓடிவிட நினைக்கிறோம்.


இ. 'நீர் அரசுரிமை பெற்று வரும்போது என்னை நினைவுகூறும்' என்கிறார் நல்ல கள்வன்.

இவர்தான் சிலுவையை சரியாகப் புரிந்தவர். சிலுவையை அரியணையாகவும், இயேசுவை அரசராகவும், அவரின் முள்முடியை அரச கிரீடமாகவும், கையின் ஆணிகளை ஆயுதங்களாகவும் பார்க்க இவரால் மட்டுமே முடிந்தது.

ஆக, சிலுவையின் மறுபக்கத்தையே பார்க்க வைத்தவர் இவரே.

வாழ்வின் மறுபக்கம்தான் சிலுவை.

.