லூக்கா நற்செய்தி அதிகாரம் - 3

அதிகாரங்கள்



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24

அதிகாரம் 3

1 திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர்.

2 அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர். அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார்.

3 “பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்” என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றிவந்தார்.

4 இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:”பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: “ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்:

5 பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்: மலை, குன்றுயாவும் தாழ்த்தப்படும்: கோணலானவை நேராக்கப்படும்: கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.

6 மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்'. ”

7 தம்மிடம் திருமுழுக்குப் பெறப் புறப்பட்டு வந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு யோவான், “விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்?

8 மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்: ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை என உள்ளத்தில் சொல்லத் தொடங்காதீர்கள். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் செல்கிறேன்.

9 ஏற்கெனவே மரங்களின் வேர் அருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தரா மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்” என்றார்.

10 அப்போது, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர்.

11 அதற்கு அவர் மறுமொழியாக, “இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்: உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்” என்றார்.

12 வரி தண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, “போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று அவரிடம் கேட்டனர்.

13 அவர், “உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்” என்றார்.

14 படைவீரரும் அவரை நோக்கி, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர். அவர், “நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்: யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்: உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்” என்றார்.

15 அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.

16 யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்: ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.

17 அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்: பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்” என்றார்.

18 மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.

19 குறுநில மன்னன் ஏரோது தன் சகோதரன் மனைவியாகிய ஏரோதியாவை வைத்திருந்ததன் பொருட்டும் அவன் இழைத்த மற்ற எல்லாத் தீச்செயல்கள் பொருட்டும் யோவான் அவனைக் கண்டித்தார்.

20 எனவே அவன் தான் செய்த தீச்செயல்கள் எல்லாம் போதாதென்று அவரைச் சிறையிலும் அடைத்தான்.

21 மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது.

22 தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

23 இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது: அவர் யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார். யோசேப்பு ஏலியின் மகன்:

24 ஏலி மாத்தாத்தின் மகன்: மாத்தாத்து லேவியின் மகன்: லேவி மெல்கியின் மகன்: மெல்கி யன்னாயின் மகன்: யன்னாய் யோசேப்பின் மகன்:

25 யோசேப்பு மத்தத்தியாவின் மகன்: மத்தத்தியா ஆமோசின் மகன்: ஆமோசு நாகூமின் மகன்: நாகூம் எஸ்லியின் மகன்: எஸ்லி நாகாயின் மகன்:

26 நாகாய் மாத்தின் மகன்: மாத்து மத்தத்தியாவின் மகன்: மத்தத்தியா செமேயின் மகன்: செமேய் யோசேக்கின் மகன்: யோசேக்கு யோதாவின் மகன்:

27 யோதா யோவனானின் மகன்: யோவனான் இரேசாவின் மகன்: இரேசா செருபாபேலின் மகன்: செருபாபேல் செயல்தியேலின் மகன்:

28 செயல்தியேல் நேரியின் மகன்: நேரி மெல்கியின் மகன்: மெல்கி அத்தியின் மகன்: அத்தி கோசாமின் மகன்: கோசாம் எல்மதாமின் மகன்: எல்மதாம் ஏரின் மகன்: ஏர் ஏசுவின் மகன்:

29 ஏசு எலியேசரின் மகன்: எலியேசர் யோரிமின் மகன்: யோரிம் மாத்தாத்தின் மகன்: மாத்தாத்து லேவியின் மகன்:

30 லேவி சிமியோனின் மகன்: சிமியோன் யூதாவின் மகன்: யூதா யோசேப்பின் மகன்: யோசேப்பு யோனாமின் மகன்: யோனாம் எலியாக்கிமின் மகன்: எலியாக்கிம் மெலேயாவின் மகன்:

31 மெலேயா மென்னாவின் மகன்: மென்னா மத்தத்தாவின் மகன்: மத்தத்தா நாத்தானின் மகன்: நாத்தான் தாவீதின் மகன்:

32 தாவீது ஈசாயின் மகன்: ஈசாய் ஓபேதின் மகன்: ஓபேது போவாசின் மகன்: போவாசு சாலாவின் மகன்: சாலா நகசோனின் மகன்: நகசோன் அம்மினதாபின் மகன்:

33 அம்மினதாபு அத்மினின் மகன்: அத்மின் ஆர்னியின் மகன்: ஆர்னி எட்சரோனின் மகன்: எட்சரோன் பெரேட்சின் மகன்: பெரேட்சு யூதாவின் மகன்: யூதா யாக்கோபின் மகன்:

34 யாக்கோபு ஈசாக்கின் மகன்: ஈசாக்கு ஆபிரகாமின் மகன்: ஆபிரகாம் தெராகின் மகன்: தெராகு நாகோரின் மகன்.

35 நாகோர் செரூகின் மகன்: செரூகு இரகுவின் மகன்: இரகு பெலேகின் மகன்: பெலேகு ஏபெரின் மகன்: ஏபேர் சேலாவின் மகன்:

36 சேலா காயனாமின் மகன்: காயனாம் அர்பகசாதின் மகன்: அர்பகசாது சேமின் மகன். சேம் நோவாவின் மகன்: நோவா இலாமேக்கின் மகன்:

37 இலாமேக்கு மெத்துசேலாவின் மகன்: மெத்துசேலா ஏனோக்கின் மகன்: ஏனோக்கு எரேதின் மகன்: எரேது மகலலேலின் மகன்: மகலலேல் கேனானின் மகன்: கேனான் ஏனோசின் மகன்:

38 ஏனோசு சேத்தின் மகன் : சேத்து ஆதாமின் மகன்: ஆதாம் கடவுளால் உண்டானவர்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  திருவிவிலியம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com